first review completed

அ. சிதம்பரநாதன் செட்டியார்

From Tamil Wiki
Revision as of 13:15, 30 January 2022 by Anandsudha (talk | contribs) (dates corrected)
A chidambaranathan chettiar.jpeg

அ. சிதம்பரநாதன் செட்டியார் (ஏப்ரல் 3, 1907 - நவம்பர் 22, 1967) தமிழில் புதிய கலைச்சொற்களை உருவாக்கிய குழுவின் தலைமை பதிப்பாசிரியர். மதுரை தியாகராசர் கல்லூரி முதல்வராகவும், சென்னை அரசு கலைக்கல்லூரி மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்/விரிவுரையாளராக பணியாற்றியவர். தமிழக மேல்சபைக்கு இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தமிழ் ஆராய்ச்சிக்காக முனைவர் பட்டம் பெற்ற முதல் மாணவர் இவரே. 2009-ல் இவரது புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

வாழ்க்கைக் குறிப்பு

சிதம்பரநாதன் செட்டியார் கும்பகோணத்தைச் சேர்ந்த அமிர்தலிங்கம் செட்டியார், பார்வதியம்மாள் தம்பதியினருக்கு ஏப்ரல் 3, 1907 அன்று பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரிகளும், இரண்டு சகோதரர்களும் உண்டு. கும்பகோணம் பேட்டையிலுள்ள தொடக்கப் பள்ளியிலும், பின்னர் நேடிவ் உயர்நிலைப் பள்ளியிலும் இறுதி வகுப்பு வரை படித்துத் தேறினார். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் தமிழ் இளங்கலைப் படிப்பில் (B.A.) மாநிலத்திலேயே முதலாவதாக தேறி டாக்டர் ஜி.யு. போப் நினைவு தங்கப் பதக்கம் பெற்றார்.

1928-ல் சென்னை பல்கலைக்கழக அலுவலகத்தில் எழுத்தராகச் சேர்ந்தார். பின்னர் தலைமைச் செயலகத்திலும் எழுத்தராகப் பணியாற்றினார். அப்போது அரசு நடத்திய வருவாய்த்துறைத் தேர்விலும், வரவுசெலவு கணக்குத் தேர்விலும் முதலிடம் பெற்றார். அன்றைய அரசு அவரை சென்னை அரசாங்க முகமதியக் கல்லூரியில் (அண்ணா சாலையிலுள்ள இன்றைய அரசு கலைக் கல்லூரி) தமிழாசிரியராக நியமித்தது. மூன்று ஆண்டுகள் கலைக் கல்லூரியில் பணியாற்றிய பின் பாலக்காடு அரசினர் கல்லூரியில் தமிழாசிரியராகப் பொறுப்பேற்றார்.

1933-ல் பெரியநாயகியை மணந்தார்.

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் 1933-ல் தமிழ் முதுகலை (M.A.) வகுப்பில் சேர்ந்து 1935-ல் முதலிடத்தில் தேறினார். மீண்டும் சென்னை அரசு கலைக் கல்லூரியில் விரிவுரையாளரானார். பிறகு தான் படித்த அண்ணாமலை பல்கலைக்கழகத்திலேயே விரிவுரையாளராக பொறுப்பேற்றார்.

பிறகு முனைவர் படிப்பு. தமிழ் ஆராய்ச்சியில் முதன்முதலாக முனைவர் பட்டம் பெற்றவர் இவர்தான்.

1946-ல் கலைச்சொல் உருவாக்க ஆலோசனைக் குழுவில் உறுப்பினராகவும் பிறகு கலைச்சொல் உருவாக்க குழுவின் தலைமை பதிப்பாசிரியராகவும் பொறுப்பேற்றார். ஆங்கில - தமிழ் சொற்களஞ்சியம் நூல் இவரது தலைமையில் வெளியிடப்பட்டது.

1958-ல் சட்டசபை மேலவைக்கு போட்டியிட்டு வென்றார். இரண்டு முறை மேலவை உறுப்பினராக இருந்திருக்கிறார்.

1965-ல் மதுரை தியாகராசர் கல்லூரி முதல்வராக நியமிக்கப்பட்டார். நவம்பர் 22, 1967-ல் மறைந்தார்.

பங்களிப்பு

  • 1946-ல் அன்றைய கல்வி அமைச்சர் டி.எஸ். அவினாசிலிங்கம் செட்டியார் தமிழில் கலைச்சொல் உருவாக்கத்திற்கு புதிய ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குழுவில் இருந்த சில உறுப்பினர்கள் ரா.பி. சேதுப்பிள்ளை, தேவநேயப் பாவாணர், தெ.பொ. மீனாட்சிசுந்தரம், சிதம்பரநாத செட்டியார் (உறுப்பினர்களின் முழுமையான பட்டியல் கிடைக்கவில்லை) இதற்கு முன்னும் வி.எஸ். ஸ்ரீனிவாச சாஸ்திரி தலைமையில் இதற்காக ஒரு குழு அமைக்கப்பட்டிருந்தது. அந்தக் குழு சுலபமாக புரிய வேண்டும் என்பதற்காக ஆங்கில வார்த்தைகளை அப்படியே தமிழில் கையாளலாம் என்றும் தேவைப்பட்டால் சமஸ்கிருத வேர்ச்சொல்லைக் கொண்டு புதிய கலைச்சொற்களை உருவாக்கலாம் என்றும், அப்படி சமஸ்கிருத வேர்ச்சொல்லை பயன்படுத்துவது பிற இந்திய மொழிகளோடு பொதுத்தன்மையை உருவாக்கும் என்றும் பரிந்துரைத்திருந்தது. புதிய குழு அந்தப் பரிந்துரையை நிராகரித்து தமிழில் புதிய கலைச்சொற்களை கட்டமைக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது. புதிய பதிப்புக் குழுவின் தலைமை பதிப்பாசிரியராக சிதம்பரநாதன் செட்டியார் பொறுப்பேற்று ஆங்கில - தமிழ் சொற்களஞ்சியம் என்ற தொகுப்பை வெளியிட்டார்.
  • தமிழ்ச் செய்யுள் இலக்கணத்தில் (Advanced Studies in Tamil Prosody) ஆராய்ச்சி புரிந்து அதன் மூலம் தமிழுக்கான முதல் முனைவர் பட்டம் பெற்றார்.
  • இருபதுக்கும் மேலான நூல்களையும், பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் ஆங்கிலத்திலும் தமிழிலும் எழுதினார்.
  • இவரது முதல் தமிழ் நூல் இந்திய சரித்திர மாலை (1930)
  • செந்தமிழ்ச் செல்வி என்ற மாத இதழுக்கு ஆசிரியராகவும் பணியாற்றினார்.
  • 2009-ல் இவரது படைப்புகள் நாட்டுடமை ஆக்கப்பட்டன.

நூல் பட்டியல்

  • இந்திய சரித்திர மாலை (1930)
  • கட்டுரைக் கொத்து (1933)
  • காக்காய் பிடித்தலும் குருவி பிடித்தலும் (சிற்றிலக்கண நூல் – 1940)
  • பெரியார் மன்றோ (1941)
  • Advanced Studies in Tamil Prosody (Doctoral thesis – 1942)
  • உழைப்பால் உயர்ந்த ஒருவர் (புக்கர் வாஷிங்டன், 1952)
  • முன்பனிக்காலம் (இலக்கியக் கட்டுரைகள் – 1951)
  • சிறுகதையும் அதன் வளர்ச்சியும் (1954)
  • தமிழோசை (1956)
  • Silappadhikaram: The Earliest Tamil Epic (1956)
  • தமிழ் காட்டும் உலகு (இலக்கியக் கட்டுரைகள் – 1957)
  • வீட்டுத் திருமகள் (கட்டுரைகள் – 1958)
  • மன்னுயிர்க்கன்பர் (ஆல்பர்ட் சுவைட்சர் – 1958)
  • Introduction to Tamil Poetry (1958)
  • சிறுகதைக் களஞ்சியம் (தொகுப்பாசிரியர் – 1959)
  • Indian Words in English Dictionary (1964)
  • ஆங்கிலம் தமிழ்ச் சொற்களஞ்சியம் (தலைமைப் பதிப்பாசிரியர்)
  • மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆயிரந்திரு நாம அர்ச்சனை (1967)
  • இளங்கோவின் இன்கவி (சிலப்பதிகாரத் திறனாய்வுக் கட்டுரைகள் – 1972)
  • செங்கோல் வேந்தர் (1977)
  • தமிழில் சிறுகதையின் தோற்றமும் வளர்ச்சியும் (1977)
  • ஒதெல்லோ (ஆங்கில நாடகத் தமிழ் மொழி பெயர்ப்பு – சாகித்ய அகாதெமிக்காக)
  • Ancient Tamil Kings – Their High Ideals

இவற்றில் பல மின்னூல்களாக ஆர்க்கைவ் தளத்திலும் மற்றும் தமிழ் மெய்நிகர் பல்கலைக்கழகம் தளத்திலும் கிடைக்கின்றன.

தரவுகள், இணைப்புகள்

  • ந. வேலுசாமி எழுதிய இந்திய இலக்கியச் சிற்பிகள்: அ. சிதம்பரநாதச் செட்டியார் (சாகித்ய அகாதெமி முதல் பதிப்பு – 2005)
  • சிலிகன்ஷெல்ஃப் பதிவு



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.