under review

அ.க. நவநீதகிருட்டிணன்

From Tamil Wiki
Revision as of 23:19, 7 October 2022 by ASN (talk | contribs) (spelling mistakes corrected. Final Check.)
அ.க. நவநீதகிருட்டிணன்

அ.க. நவநீதகிருட்டிணன் (அங்கப்பப்பிள்ளை கங்காதார நவநீதகிருஷ்ணன்: 1921-1967) கவிஞர், சொற்பொழிவாளர், தமிழாய்வாளர், எழுத்தாளர், ஆசிரியர் என்று பல களங்களில் செயல்பட்டார். தனது இலக்கியப் பணிகளுக்காக ‘செஞ்சொற் புலவர்’, ‘திருக்குறள் மணி’, ‘தமிழ்க் கொண்டல்’ எனப் பல பட்டங்கள் பெற்றார். திருநெல்வேலி திருவள்ளுவர் கழகத்தின் தலைவராகப் பணியாற்றினார்.

பிறப்பு, கல்வி

அ.க. நவநீதகிருட்டிணன், ஜூன் 15, 1921-ல், திருநெல்வேலி மாவட்டத்தின் அம்பாசமுத்திரத்தில் உள்ள ஊர்க்காட்டு கிராமத்தில், புலவர் அங்கப்பப் பிள்ளை - மகாலட்சுமி தம்பதியருக்கு இளைய மகனாகப் பிறந்தார். தந்தை தமிழ்ப் புலவர். ஜோதிடர். ஊர்க்காட்டு ஜமீனின் அரசவைப் புலவர். ஊர்க்காட்டில் இருக்கும் ராஜ பாஸ்கர சேதுபதிப் பள்ளியின் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். அப்பள்ளியில் சேர்ந்து படித்தார் நவநீதகிருட்டிணன். தந்தையிடமிருந்து இலக்கண, இலக்கியங்களை கற்றுக் கொண்டார். மேற்கல்வியை அம்பாசமுத்திரத்தில் உள்ள தீர்த்தபதி உயர்நிலைப் பள்ளியில் நிறைவு செய்தார். ‘வித்துவான்’ படிப்பை அண்ணாமலை பல்கலையில் முடித்தார். பிற்காலத்தில் அரசியல்வாதிகளாகச் செயல்பட்ட நெடுஞ்செழியனும், அன்பழகனும் இவருடன் அங்கு உடன் பயின்றவர்கள்.

தமிழ்ப் பற்றால், கங்காதார நவநீதகிருஷ்ணன் என்னும் தன் பெயரை அ.க. நவநீதகிருட்டிணன் என்று தனித்தமிழில் மாற்றிக் கொண்டார்.

தனி வாழ்க்கை

அ.க. நவநீதகிருட்டிணன், படிப்பை முடித்ததும் திண்டுக்கல்லில் உள்ள புனித சூசையப்பர் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். சில வருடங்களுக்குப் பின் ராஜபாளையம் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். அ. க. நவநீதகிருட்டிணனின் 23-ம் வயதில் பிச்சம்மாளுடன் திருமணம் நிகழ்ந்தது. இவர்களுக்கு ஐந்து ஆண் பிள்ளைகள்: மூன்று பெண் பிள்ளைகள். அ.க.நவநீதகிருட்டிணன், திருநெல்வேலியில் உள்ள மந்திரமூர்த்தி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்ற வந்த வாய்ப்பை ஏற்றுக் கொண்டார். சுமார் ஒன்பதாண்டு காலம் அங்கு பணிபுரிந்தார். அதன் பின் மதுரை திரவியம் தாயுமானவர் இந்துக் கல்லூரியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். மாணவர்களுக்கு தமிழோடு சைவத்தின் பெருமையையும் உயர்வையும் போதித்தார். பலருக்குத் தமிழார்வமும், இலக்கிய ஆர்வமும் ஏற்படக் காரணமானார். அங்கு இவரிடம் பயின்றவர்களுள் வில்லிசைக் கலைஞர் சுப்பு ஆறுமுகமும் ஒருவர்.

இலக்கிய வாழ்க்கை

அ.க. நவநீதகிருட்டிணன் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது தனது பெரும்பாலான நேரங்களை நூலகத்தில் செலவிட்டார். தொடர் வாசிப்பு எழுத்தார்வத்தைத் தூண்டியது. கவிதை, கட்டுரைகளை இதழ்களுக்கு எழுத ஆரம்பித்தார். ‘செந்தமிழ்ச் செல்வி’ போன்ற அக்காலத்தின் இலக்கிய இதழ்கள் சிலவற்றுக்குக் கட்டுரைகள் எழுதினார். ஆசிரியராகப் பணிபுரிந்தபோதும் அவரது எழுத்துப் பணி தொடர்ந்தது.

பாட நூல்கள் உருவாக்கம்

அ.க. நவநீதகிருட்டிணன், திருநெல்வேலி, மந்திரமூர்த்தி உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றும்போது, வித்துவான் க. முருகேச முதலியாருடன் இணைந்து ’பொதிகை வாசகம்’ என்ற தலைப்பில் பள்ளி மாணவர்களுக்கான பாட நூலை எழுதினார். இதனை அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் லெப. கரு. இராமநாதன் செட்டியார், கண்டனூர் வெள்ளையன் பதிப்புக் கழகத்தின் மூலம் பதிப்பித்தார். தொடர்ந்து திருநெல்வேலி சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், பள்ளி மாணவர்களுக்கான பல பாட நூல்களை வெளியிட முன் வந்தது. அப்பணி நவநீதகிருட்டிணனுக்கு வழங்கப்பட்டது. 1957-ல், நவநீதகிருட்டிணன் எழுதிய பாட நூலான ‘காவியம் செய்த மூவர்’ வெளியானது. தொடர்ந்து ‘முதல் குடியரசுத் தலைவர்’, ‘கோப்பெருந்தேவியர்’, ‘சங்க கால மங்கையர்’ எனப் பல நூல்களை எழுதினார்.

திருக்குறள் பணிகள்

அ.க.நவநீதகிருட்டிணன், திருக்குறள் மீது மிகுந்த பற்றுக் கொண்டவர். பள்ளி மாணவர்களுக்குத் தினந்தோறும் ஒரு திருக்குறளை விளக்கத்துடன் சொல்லிக் கொடுப்பது அவர் வழக்கமாக இருந்தது. வள்ளுவரின் குறள் குறித்து மிக விரிவான ஆய்வுகளை மேற்கொண்டு ‘வள்ளுவர் சொல்லமுதம்’ என்ற தலைப்பில் நூல்களை எழுதினார். அவை நான்கு பகுதிகளாக தென்னிந்திய சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் மூலம் வெளியாகின. ‘துறவும் உணர்வும்’, ’களவும் காமமும்’, ’நன்றியும் நடுவும்’, ‘பெண்மையும் திண்மையும்’ ’ஊழும் தாளும்’, ’அரணும் உரனும்’ எனப் பல்வேறு தலைப்புகளில் அவர் அந்நூலில் குறளின் சிறப்பை விளக்கியுள்ளார்.

அ.க. நவநீதகிருட்டிணன், திருநெல்வேலி திருவள்ளுவர் கழகத்தின் தலைவராகப் பனிரண்டு ஆண்டுகள் பணியாற்றினார். நெல்லை அருணகிரி இசைக்கழகம் மூலம் திருக்குறள் வளர்ச்சிப் பணிகளை மேற்கொண்டார். திருநெல்வேலி தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில் நடந்து வந்த திருவள்ளுவர் செந்தமிழ்ப் புலவர் கல்லூரியில் மாலை நேரத்தில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

வில்லுப் பாட்டு நூல்கள்

தமிழின் மீது மிகுந்த பற்றுக் கொண்டிருந்த நவநீதகிருட்டிணன், தமிழின் சிறப்பை, பெருமையை, வளர்ச்சியை, ‘தமிழ் வளர்ந்த கதை’ என்ற தலைப்பில் நூலாக்கினார். இதன் முக்கிய சிறப்பு இது ‘வில்லுப்பாட்டு’ வடிவில் எழுதப்பட்டதுதான். இதுபற்றி நவநீத கிருட்டிணன், “பண்டுதொட்டு இவ்வில்லிசையில் சிறு தெய்வக் கதைகளே பயின்று வந்தன. சிறந்த வரலாறுகளை இவ்வில்லிசையில் அமைத்துப் பாடினால் கல்லார்க்கும் கற்றவர்க்கும் நல்ல கருத்துக்கள் எளிதில் உள்ளத்தில் பதியும் என்னும் எண்ணத்தால் ‘தமிழ் வளர்ந்த கதை’ என்னும் இவ்வில்லிசைப் பாடலை இயற்றினேன்” என்று நூலின் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். இது, பல சபைகளில் மக்கள் முன் அரங்கேறி, மிகுந்த வரவேற்பைப் பெற்றது. பின் நூலாகவும் வெளிவந்தது. தொடர்ந்து பல நூல்களை வில்லுப்பாட்டில் பாடும் வகையில் வெளியிட்டார் நவநீதகிருஷ்ணன்.

‘செந்தமிழ்ச் செல்வி’, ‘தமிழ்த்தென்றல்’, ‘தமிழ்ப்பொழில்’, ‘ஞானசம்பந்தம்’, ‘அருள் ஒளி’ போன்ற இதழ்களில் தமிழ் குறித்தும் சைவம் குறித்தும் தொடர்ந்து பல கட்டுரைகளை எழுதினார்.

சொற்பொழிவுகள்

தமிழ் மற்றும் சைவ இலக்கியங்கள் குறித்துச் சொற்பொழிவாற்றுவதிலும் ஈடுபட்டிருந்தார் நவநீத கிருட்டிணன். மிகச் சிறப்பாகப் பேசக் கூடியவர் என்பதால் தமிழகமெங்கும் பயணம் செய்து பல கருத்தரங்குகளிலும், சொற்பொழிவுகளிலும் கலந்து கொண்டார். அவரது சொற்பொழிவுகள் பின்னர் தொகுக்கப்பட்டு, நூல்களாக வெளிவந்தன.

அ.க. நவநீதகிருட்டிணன்  டாக்டர் மு.வ., ஔவை துரைசாமிப் பிள்ளை, கி.ஆ.பெ. விசுவநாதம், டாக்டர் வ.சுப. மாணிக்கம், சைவ சித்தாந்தக் கழக நிறுவனர் வ. சுப்பையா பிள்ளை, குன்றக்குடி அடிகளார் போன்றோருடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார்.

விருதுகள்

  • அ.க. நவநீதகிருட்டிணனின் தமிழ் மற்றும் சைவப் பணிகளுக்காக தருமபுர ஆதினம் இவருக்கு ‘செஞ்சொற் புலவர்’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தார்.
  • மதுரை ஆதினம் ‘தமிழ்க் கொண்டல்’ என்ற பட்டத்தை வழங்கிப் பாராட்டினார்.
  • நெல்லைத் திருக்குறள் கழகம், அ.க. நவநீதகிருட்டிணனின் திருக்குறள் பணிகளைப் பாராட்டி, ‘திருக்குறள் மணி’ என்ற பட்டத்தை வழங்கிச் சிறப்பித்தது.

மறைவு

1967, ஏப்ரல் 14-ல், தமிழ்ச் சித்திரைப் புத்தாண்டு அன்று நிகழ்ந்த கைத்தறிப் பொருட்காட்சியில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிக் கொண்டிருந்த அ.க. நவநீதகிருட்டிணன், குருதிக் கொதிப்பால், மேடையிலேயே காலமனார். அப்போது அவருக்கு வயது 47.

ஆவணம்

அ.க. நவநீதகிருட்டிணனின் தமிழ்ப் பணிகளைக் கௌரவிக்கும் வகையில் தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுமை ஆக்கியுள்ளது.

இலக்கிய இடம்

அ.க. நவநீதகிருட்டிணன், இலக்கிய நூல்கள் பலவற்றை எளிய தமிழில் எழுதியவர். திருக்குறள் மீது மாணவர்களுக்கு ஆர்வமூட்டியவர். வில்லுப்பாட்டு வடிவில் திருவள்ளுவர், சிவஞான முனிவர், மெய்கண்டார், திருஞானசம்பந்தர்,  மாணிக்கவாசகர், ஔவையார், கண்ணகி போன்றோர் பற்றி எழுதியதும், மாணவர்களுக்கு எளிய தமிழில் பாட நூல்களைத் தந்ததும் இவரது முக்கிய இலக்கியப் பணியாக மதிப்பிடப்படுகிறது.

நூல்கள்

இலக்கியம் மற்றும் பொது நூல்கள்
  • பொதிகை வாசம்
  • பத்துப்பாட்டுச் சொற்பொழிவுகள்
  • பரிபாடல் சொற்பொழிவுகள்
  • பதினெண்கீழ்க்கணக்குச் சொற்பொழிவுகள்
  • சிற்றிலக்கியச் சொற்பொழிவுகள்
  • வள்ளுவர் சொல்லமுதம் - தொகுதி 1
  • வள்ளுவர் சொல்லமுதம் - தொகுதி 2
  • வள்ளுவர் சொல்லமுதம் - தொகுதி 3
  • வள்ளுவர் சொல்லமுதம் - தொகுதி 4
  • அறநூல் தந்த அறிவாளர்
  • இலக்கிய அமைச்சர்கள்
  • இலக்கியத் தூதர்கள்
  • ஔவையார் கதை
  • கண்ணகி கதை
  • காவியம் செய்த மூவர்
  • கோப்பெருந்தேவியர்
  • தமிழ் காத்த தலைவர்கள்
  • தமிழ் வளர்த்த நகரங்கள்
  • தமிழ் வளர்த்த கதை
  • நாடகப் பண்புகள்
  • பாரதியார் குயிற்பாட்டு
  • முத்தமிழ் வளர்த்த முனிவர்கள்
  • முதல் குடியரசுத்தலைவர் - டாக்டர் இராசேந்திர பிரசாத்
  • வள்ளலார் யார்?
வில்லுப் பாட்டு நூல்கள்
  • திருவள்ளுவர் வரலாறு
  • சிவஞான முனிவர் வரலாறு
  • மெய்கண்டார் வரலாறு
  • திருஞானசம்பந்தர் வரலாறு
  • மாணிக்கவாசகர் வரலாறு
  • கண்ணகி கதை
  • ஔவையார் கதை
  • பத்துப்பாட்டின்பம்

உசாத்துணை


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.