being created

அவள் பிரிவு

From Tamil Wiki
Revision as of 23:17, 7 July 2022 by ASN (talk | contribs) (Para Created, Images Added)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அவள் பிரிவு - வெ.சாமிநாத சர்மா

எழுத்தாளர் வெ. சாமிநாத சர்மா, தனது மனைவி மங்களம் மறைந்ததை ஒட்டி, தனது துயரங்களை, நினைவுகளை, தனது நண்பரும், பதிப்பாளருமான ஆர். சொக்கலிங்கம் செட்டியாருக்குக் கடிதங்கள் மூலம் பகிர்ந்து கொண்டார். அந்தக் கடிதங்கள் சிலவற்றின் தொகுப்பே ‘அவள் ‘பிரிவு’ என்னும் தலைப்பில் பின்னர் நூலாக வெளியானது.

எழுத்து, பிரசுரம்

பர்மாவில் வெ.சாமிநாத சர்மா வசித்தபோது அவர் ‘தன வணிகன்’ உள்ளிட்ட இதழ்களில் எழுதிய கட்டுரைகளால், அதன் எளிய மொழிநடையால் ஈர்க்கப்பட்டார், முறையூர் அரு. சொக்கலிங்கம் செட்டியார். இவர், சாமிநாத சர்மாவின் நூல்களை வெளியிடுவதற்காகவே ‘பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம்’ என்னும் பதிப்பகத்தை பர்மாவில் நிறுவினார். பிரசுரத்தின் முதல் நூலாக ‘முசோலினி’ வெளியானது. பின்னர் பல நூல்கள் வெளியாகின. இரண்டாம் உலகப் போருக்குப் பின், பிரபஞ்ச ஜோதி பிரசுராலயம், புதுக்கோட்டைக்கு மாற்றப்பட்டது. பிரபஞ்ச ஜோதி பிரசுராலயத்தின் 40-வது வெளியீடு ‘அவள் பிரிவு’ நூல். மார்ச், 1957-ல் இந்த நூல் வெளியானது.

இந்த நூல் பதிப்பு குறித்து பதிப்பாளர் முறையூர் அரு. சொக்கலிங்கம் செட்டியார் தனது முன்னுரையில், “சர்மாஜி அவர்களின் தமிழ்ப்பணிக்கு சக ஊழியராகவும், அவர்களுக்கு ஒரு சிஷ்யை போலவும், அவர்களை எழுதத் தூண்டிக் கொண்டிருந்த தூண்டுகோலாகவும், அவர்களின் உடம்பைப் பேணிக்காப்பதில் தாதியாகவும், இல்லற வாழ்க்கையை நடத்திக்காட்டிய குடும்ப விளக்காகவும் நாற்பத்திரண்டு ஆண்டுகள் இணைபிரியாதிருந்த இலட்சிய மனைவியராகவும் வாழ்ந்த எங்கள் அம்மையாரின் மறைவு, சர்மாஜியின் வாழ்க்கையை துண்டித்ததோடு மட்டுமல்லாமல், ஒரு சில நாட்களிலே அவர்களுக்குத் தனிமையை உணர்த்தத் தலைப்பட்டுவிட்டது. அந்தச் சமயத்தில் அம்மையார் அவர்கள் மறைந்த சில நாட்களில் உணர்ச்சி வசத்தால் உந்தப்பட்டு அவர்கள் எழுதிய கடிதங்களே இந்நூலாக மிளிர்கிறது.

இக்கடிதங்கள் ஆரம்பத்தில் பிரசுரத்திற்காகவென்று எழுதப்பட்டவையல்ல. அம்மையார் அவர்களின் பன்மொழிப் புலமை, சீரிய பண்பு, தமிழ்த்தொண்டில் அவர்களுக்கிருந்த ஆர்வம் இவைகளைப்பற்றிச் சிறிதளவாவது வாசகர்கள் அறிந்து கொள்வதற்கான வசதியை இந்நூல் ஏற்படுத்திக் கொடுக்குமென நினைத்து, பிரசுரிக்க அனுமதி கோரினோம். அதோடு  ‘அவள் பிரிவு’ என்ற இந்நூலின் தலைப்புப் பற்றியும் சர்மாஜியின் சம்மதத்தைக் கோரி, பெற்றோம். எங்கள் வேண்டுகோளுக்கு இசைந்த அவர்களுக்கு எமது நன்றி.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நூல் சுருக்கம்

வெ.சாமிநாத சர்மா - மங்களம்

வெ.சாமிநாத சர்மா - மங்களம் இருவருக்குமே இளம் வயதிலேயே திருமணம் நிகழ்ந்து விட்டது என்பதால் இருவரும் ஒருவர் மீது ஒருவர் மிகுந்த அன்பு வைத்திருந்தனர். 42 ஆண்டுகள் இணைபிரியாது வாழந்தனர். வயதாகியும் ஒருவருக்கொருவர் உறுதுணையாய் இருந்தனர். 1956-ல், புற்றுநோயால் உடல் நலிவுற்று மங்களம் காலமானார். சாமிநாத சர்மாவால் அந்தச் சோகத்தைத் தாங்க இயலவில்லை. தனது நினைவுகளை தன் நண்பருக்குக் கடிதங்களாக அனுப்பினார். உருக்கமான பல நிகழ்வுகளை அக்கடிதங்களில் விவரித்து ஆறுதலைடைந்தார்.

கணவனும் மனைவியும் எப்படி ஒருமித்து ஒரே மனதினராய் வாழ்ந்தனர் என்பதைப் பல சம்பவங்கள் மூலம் அக்கடிதங்களில் விளக்கியிருக்கிறார் வெ.சாமிநாத சர்மா. ஆங்காங்கே சில அனுபவ மொழிகளும் பொன் மொழிகளும் காணக்கிடைக்கின்றன.

நூலிலிருந்து ஒரு சிறு பகுதி

“எனக்கு அவள் சிச்ருஷை செய்துவந்ததைப் போல் அவளுக்கு நான் சிச்ருஷை செய்துவந்தேன். மனைவிக்குக் கணவன் சிச்ருஷை செய்வதை நான் கண்ணியக் குறைவாகக் கருதவில்லை. அவள் எனக்கு எப்படிக் கடமைப்பட்டவளோ அப்படியே நான் அவளுக்குக் கடமைப் பட்டவனல்லவா? எனக்கு அவள் எப்படிப் பந்தகப்பட்டவளோ அப்படியே அவளுக்கு நான் பந்தகப்பட்டவனல்லவா? என்னிச்சைப்படி அவள் நடக்க வேண்டுமென்று நான் எதிர்பார்ப்பதுபோல் அவள், தன்னிச்சைப்படி நான் நடக்க வேண்டுமென்று எதிர்பார்க்க மாட்டாளா? அப்படி எதிர்பார்க்க அவளுக்கு உரிமையில்லை யென்று சொல்லமுடியுமா? கணவன்மார் அநேகர் இந்தமாதிரியெல்லாம் எண்ணுவதேயில்லை.

எங்களைப் பொறுத்தமட்டில் நாங்கள் இருவரும் சம அந்தஸ்திலேயே பழகினோம். எங்களுக்குள் ஏற்றத் தாழ்வுகளே கிடையாது. இதனால் எங்களுடைய தன்மதிப்பு உணர்ச்சிக்கு ஒருபோதும் பங்கம் ஏற்பட்டதில்லை. நாங்களிருவரும் ஒரேமாதிரி எண்ணினோம்; செயலும் அப்படித்தான். நான் எதைச் செய்தால் நன்றாயிருக்குமென்று அவள் எதிர்பார்ப்பாளோ அதையே நான், அவள் சொல்லாமலே செய்து முடித்திருப்பேன். அப்படியே நானும், இன்ன பதார்த்தத்தைச் சுவைத்துச் சாப்பிடலாம் போல் இருக்கிறதென்று எண்ணுவேன். அப்படியே அவள் நான் சொல்லாமலே அந்தப் பதார்த்தத்தைப் பக்குவம் செய்து வைத்திருப்பாள். கருத்தொருமித்து வாழ்தல் என்பது எங்களுக்கு மிகவும் சகஜமாகவே இருந்தது. இதனால் நாங்கள் அதிகமாகப் பேசமாட்டோம். ஏனென்றால் அப்படிப் பேசவேண்டியதற்கு அவசியமில்லை. ஒருவர் மனமறிந்து மற்றொருவர் நடந்து கொள்கிறபோது, வாய்ப்பேச்சுக்கு அதிக இடம் இல்லையல்லவா? (பக்கம் : 75)

தனது இறுதிக் கடிதத்தை பின்வருமாறு எழுதி முடித்திருக்கிறார், சாமிநாத சர்மா. “உண்மையில் நண்பரே! என் மனைவி இறந்து விட்டதாக என்னால் எண்ண முடியவில்லை ; இருப்பதாகவே என் நினைப்பு. எங்கோ அயலூருக்குப் போயிருப்பதாகவும், திரும்பி வந்து விடுவாளென்றுமே என் மனம் கருதுகிறது. எப்பொழுதும் அவள் என்னோடு இருக்க வேண்டுமென்பது தான் என் பிரார்த்தனை. இப்பிறவியில் மட்டுமல்ல; எப்பிறவியிலும்.”

இலக்கிய இடம்

கடித இலக்கிய வகையில் நினைவிலக்கியம் என்ற வகைமையில் ‘அவள் பிரிவு’ நூல் முக்கிய இடம் பெறுகிறது.

உசாத்துணை



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.