அழகியநாயகி அம்மாள்

From Tamil Wiki
Revision as of 10:54, 16 February 2022 by Thangapandiyan (talk | contribs)
அழகிய நாயகி அம்மாள்

அழகிய நாயகி அம்மாள் (1925 - 2008) தன்வரலாற்று நாவலாசிரியர்.  அழகிய நாயகி அம்மாளின் ’கவலை' நாவல் தமிழில் எழுதப்பட்ட தன்வரலாறுகளில் முக்கியமான ஓர் இலக்கிய ஆவணம்.

பிறப்பு, கல்வி

அழகிய நாயகி அம்மாள் 1925ல் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்,  ஈத்தாமொழி கிராமத்தில் பிறந்தவர். தந்தை இளையநாடன். ஒரு அண்ணனும் ஒரு தங்கையும் உடன்பிறந்தவர்கள். அழகிய நாயகியின் சிறு வயதிலேயே அவரது தாய் இறந்துவிட்டார். பள்ளியில் ஏழாவது வரை படித்தவர். துகிலுரிதல், அல்லி அரசாணி மாலை, பவளக்கொடி மாலை, முத்துப்பட்டன் மாலை ஆகிய நாட்டுப்புற கலை இலக்கிய நூல்களைப் படித்தவர். மலையாளத்தில் ஓரளவு தேர்ச்சிப்பெற்றவர்.

தனிவாழ்க்கை

நாகர்கோவில், ஈத்தாமொழி கிராமத்திற்கு அருகிலுள்ள மணிக்கட்டி பொட்டலூரில் அம்மம் கொண்டாடியார் குடும்பத்தைச் சேர்ந்த  சிவ. பொன்னீலவடிவு என்பவருடன் அழகிய நாயகிக்கு திருமணமானது. கணவர் ஆசிரியர், காந்தியவாதி. சைவப் பின்னனி கொண்ட குடும்பம். தனது சொத்தையும் பணத்தையும் கொடுத்து பொட்டலூரில் உயர்நிலைப் பள்ளி கொண்டுவந்தவர். ஒரு மகன் பக்தவச்சலம் ( எழுத்தாளர் பொன்னீலன்). மருமகள் கனி, அழகிய நாயகியின் சொந்த அண்ணன் மகள். அழகிய நாயகியின் இரண்டு மகள்களும் திருமண வயதில் இறந்துவிடுகின்றனர். தன்னுடைய நடுவயதில் கணவரை இழந்தவர்.

நாவல் வரலாறு

அழகிய நாயகி அம்மாள் ’கவலை’ நாவலை ஜூன் 1976 முதல் மே 1977 வரை எழுதினார். அழகிய நாயகியின் குடும்பத்தின், சமூகத்தின் மூன்று தலைமுறை வரலாற்றையும், பெண்கள் மீது குடும்ப ஆண்கள் செலுத்திய வன்முறை, உறவினர்களிடம் பட்ட சிறுமை ஆகியவற்றைப் பற்றியும் இந்நாவல் பேசுகிறது. ”என் வாழ்க்கை பூராவுமே கவலையும் கஷ்டமும் கண்ணீருமாகக் கழிந்ததனால் இந்தக் கதைக்குக் கவலை என்ற பெயரை வச்சி எழுதினேன்” என அழகிய நாயகி அம்மாள் கூறுகிறார்.

கவலை நாவல் உருவானதைப் பற்றி அழகிய நாயகி அம்மாளின் மகன் பொன்னீலன் இவ்வாறு கூறுகிறார் “இந்த நூல் வெளியிடப்படுவதற்காக எழுதப்பட்டதல்ல. எங்கள் குடும்பங்களின் முன்னோர்களைப் பற்றி அடிக்கடி என்னிடம் பேசிக்கொண்டிருப்பார்கள் என் அம்மா. அந்தச் செய்திகள் ஒரு அற்புதமான நாவலின் பக்கங்களைப் போல் எனக்குத் தோன்றும். என் குடும்பத்தின் கதையாக மட்டுமல்லாமல், தமிழ் மக்களின் கதையின் ஒரு பகுதியாகவும் நான் அதனைக் கண்டேன். முழுவதையும் மனதில் தேக்கிக்கொள்ளவோ, உடனுடன் பதிவு செய்யவோ வாய்ப்பில்லாத நிலையில், 1976இல் அதை எழுதித் தரும்படிக் கேட்டேன். அறுபதைக் கடந்துவிட்ட நிலையிலும், கிட்டத்தட்ட ஓராண்டு காலத்தில் அவர்கள் இதை எழுதி முடித்தது எனக்குப் பெருவியப்பு”.

பல நூறு பக்கங்கள் கொண்ட இந்தக்  குறிப்புகளைப் படித்த சுந்தர ராமசாமி இதை அப்படியே வெளியிடும்படிச் சொன்னார். படிக்கச் சிரமமான அந்தக் கையெழுத்துப் பிரதியை பூங்குணம் சேகர் முழுமையாக நகல் எடுத்தார். சி.மோகன் அழகிய நாயகி அம்மையாரின் பதிவுகளை சீர் செய்து ஒரு நாவலாக செம்மைப் படுத்தினார். செப்டம்பர் 1998ல் தூய சவேரியார் கல்லூரியின் நாட்டார் வழக்காற்று மையம் ‘கவலை’ நாவலை வெளியிட்டார்கள். 

கவலை நூலுக்கு முன்னுரை எழுதிய தூத்துக்குடி பேராசிரியர் ஆ. சிவசுப்பிரமணியன் ஆலோசனையின்படி மூலக் கையெழுத்துப் பிரதியை பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் ஆவணக் காப்பகத்தில் ஒப்படைத்துவிட்டனர்

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கவலை நாவலை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிடுவதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது.

இந்நாவலில் காந்தியவாதியான, ஜீவா போன்ற பொதுவுடமைக் கட்சியின் தலைவர்களின் தோழரான, பெண்களை பெரிதும் மதிக்கும் கணவரான சிவ. பொன்னீலவடிவு கூட அழகிய நாயகியின் பார்வையில் இருட்டடிப்பு செய்யப்பட்டு இழிவுபடுத்தப் படுகிறார்.

11.png

இலக்கிய அழகியல்

கவலை நூல் சென்ற நூற்றாண்டின் நாகர்கோவில் பகுதி நாடார் சமூக பெண்களின் வாழ்க்கையைப் பற்றி  முதன்முறையாகப் பதிவுசெய்துள்ளது. அதுவரை பதிவு செய்யப்படாத மொழியும், பழமொழிகளும், சொலவடைகளும், கதைகளும், கிளைக் கதைகளும், தொன்மங்களும், பழைய மரபுக் கதைகளும் கொண்டது இந்நாவல்.

அழகிய நாயகி வரலாறு அற்ற பெண்களின் வரலாற்றை எழுதியவர். தன் வாழ்க்கை வரலாறு, தலைமுறை வரலாறு, அனுபவங்கள் ஆகியவற்றைக் கொண்ட ’கவலை’ நாவல் இனவரைவியல் சார்ந்த முக்கியமான ஆவணப்பதிவு. அழகிய நாயகி அம்மையாரின் பதிவுகள் எளிமையானவை என்றாலும் கூட துணிவும் நேர்மையும் கொண்ட கலகத்தன்மை உடையவை.  தன்னிச்சையாக வாழ்வியல் கூறுகளை நுணுக்கமாகப் பேசி தனது வலியைப் பதிவு செய்துள்ளார் அழகிய நாயகி.

பெண்மை, மானுடவியல், பெண்களின் வரலாறு, வழக்காறு,  பெண்களின் உச்சகட்ட துயர நிலை உள்ளிட்ட பல கூறுகளை கவலை நாவல் அலசுகிறது. நாடார்களின் திருமணம் பனை ஓலையில் முகூர்த்த சாத்து எழுதுதல், சீர் கொடுத்தல், மணமக்கலை வாழவிடும் சடங்கு, மாப்பிள்ளைக்கு எதிர்மாலை போடுதல், சுருள் வைத்தல், மறுவீடு காணுதல், விருங்து உபசரிப்பு என பண்பாட்டு அடையாளத்துடன் நடைபெறுவதை கவலை நாவல் விரிவாக காட்சிபடுத்துகிறது

தமிழில் எழுதப்பட்ட தன்வரலாறுகளில் முக்கியமான ஓர் இலக்கிய ஆவணம் ’கவலை’ என ஜெயமோகன் குறிப்பிடுகிறார் [1]. கணவர் மூலமாக எழுத்தறிவையும் காந்தியின் சுயசரிதையையும் அறிந்து கொண்டதன் வழியாக ஒரு வகையான அகவிடுதலையை அடைந்த பெண்ணின் வாழ்வை அழகிய நாயகி அம்மாளின் ’கவலை’ நூல் காட்டுகிறது

மறைவு ( சரிபார்ப்பு தேவை)

அழகிய நாயகி அம்மாள் தனது 83வது வயதில் 2008ல் காலமானார்.

நினைவு விருது

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றமும் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனமும் இணைந்து சிறந்த நாவலுக்கான பரிசாக அழகிய நாயகி அம்மாள் நினைவுப் பரிசினை வழங்கிவருகிறார்கள்.

எஸ்.அர்ஷியா - 2010, ஏழரைப்பங்காளி வகையறா நாவல்

வவுனியூர் இரா.உதயணன் - 2010, நூல் அறுந்த பட்டங்கள் நாவல்

மேலாண்மை பொன்னுச்சாமி - 2013, உயிர்நிலம் நாவல்

உசாத்துணை

அவ்வையாரான அழகிய நாயகி அம்மாள் - சமுத்திரம் கட்டுரைகள், 1999

கவலை: (எங்கள் கதை) (Tamil Edition) Kindle Edition