being created

அம்ரிதா ப்ரீத்தம்

From Tamil Wiki
Revision as of 05:59, 6 February 2024 by Ramya (talk | contribs) (Created page with "அம்ரிதா ப்ரீத்தம் == வாழ்க்கைக் குறிப்பு == 20-ஆம் நூற்றாண்டின், பஞ்சாபி மொழியின் தன்னிகரில்லாக் கவிஞராகவும் எழுத்தாளராகவும் கொண்டாடப்படுபவர் அம்ரிதா ப்ரீத்தம். இந்திய சுதந்தி...")
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அம்ரிதா ப்ரீத்தம்

வாழ்க்கைக் குறிப்பு

20-ஆம் நூற்றாண்டின், பஞ்சாபி மொழியின் தன்னிகரில்லாக் கவிஞராகவும் எழுத்தாளராகவும் கொண்டாடப்படுபவர் அம்ரிதா ப்ரீத்தம். இந்திய சுதந்திரத்துக்கு முன் 1919-ல், பிரிக்கப்படாத பஞ்சாபின் குஜ்ரன்வாலா எனும் சிற்றூரில் (தற்போது பாகிஸ்தான்), சீக்கியக் குடும்பத்தில் ஒரே குழந்தையாக, அம்ரிதா கௌர் எனப் பிறந்தவர். அப்பா பள்ளிஆசிரியராகவும், சீக்கிய மதப்பிரச்சாரகராகவும் வாழ்க்கை நடத்தினார். கொஞ்சம் கவிதையும் எழுதியிருக்கிறார். பிற்காலத்தில் அப்பாவை விட்டுவிட்டு மகளைப் பிடித்துக்கொண்டுவிட்டாளோ கவிதாதேவி? தன் 11-ஆவது வயதில் அம்மாவை இழந்தார் அம்ரிதா. அப்பா தன் மகளைக் கூட்டிக்கொண்டு லாகூருக்கு இடம் மாறினார். சிறுவயதிலிருந்தே வீட்டுவேலையே அம்ரிதாவுக்கு சரியாக இருந்தது. தோழியரில்லை; போக்கிடம் தெரியவில்லை. தனிமையின் நிழல் எப்போதும் அவர்மீது படிந்திருந்தது. ஏகாந்தச் சிந்தனைகள் அவரிடம் எழுத்துவடிவம் பெற்றன. கவிதை புனைய ஆரம்பித்தார் அம்ரிதா. 16-ஆவது வயதில் அவரது முதல் கவிதைத்தொகுப்பு ‘அமிர்த அலைகள்’ வெளியானது. தன் 17-ஆவது வயதிலே, ப்ரீத்தம் சிங் என்பவரை திருமணம் செய்ய நேரிட்டது. அம்ரிதா ப்ரீத்தம் என்கிற பெயரில் எழுதுவதைத் தொடர்ந்தார். முதல் ஏழெட்டு வருடங்களுக்குள் சில கவிதைத் தொகுப்புகள் வெளியாகின. இரண்டு குழந்தைகள் தந்த மணவாழ்வு இனிக்கவில்லை அம்ரிதாவுக்கு.

அவருடைய இளம் பருவம் இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை என்கிற கொடூர சரித்திரத்தை நேரிடையாக எதிர்கொண்டது. அது அவரது வாழ்வில் பெரும் மனஅழற்சியை உண்டுபண்ணிவிட்டது எனத் தெரிகிறது. ஆகஸ்டு 14-ல் பிறந்தது பாகிஸ்தான். அந்தநாள் அங்கு இதுகாறும் வாழ்ந்துவந்த இந்துக்களுக்கும், சீக்கியர்களுக்கும் கொடும்நாளாய் மாறிவிட்டது. அமைதியான வாழ்வு நொடியில் துவம்சமானது. ஹிந்து, சீக்கியக் குடும்பங்களின் சொத்துபத்துக்கள் இரவோடு இரவாகப் பிடுங்கப்பட்டு அவர்கள் ஹிந்துஸ்தானுக்கு விரட்டியடிக்கப்பட்டனர். அனைத்தையும் ஒரேயடியாக விட்டுவிட்டு அம்போ என்று, தங்கள் உயிரைக் காப்பாற்றிக்கொண்டால் போதுமென்று ஹிந்துக்களும், சீக்கியர்களும் அகதிகளாய் ஹிந்துஸ்தானை நோக்கி ஓடிவந்தனர்.. பிரிவினையின் தவிர்க்கமுடியாத விளைவான இனக்கலவரம் வெடித்தது. சாமானியமக்களின் வாழ்வை சிலதினங்களிலேயே பலிகொண்டது. பெண்கள் சீரழிக்கப்பட்டனர். கால்நடையாகவும், மாட்டுவண்டிகளிலும் ஹிந்துஸ்தான் நோக்கி ஓடிவந்தவர்களில் பலர் வருகிற வழியிலேயே அதிர்ச்சியாலும், நோய்வாய்ப்பட்டும் இறந்துபோயினர்; கொடூரமாகத் தாக்கி அழிக்கப்பட்டனர். தன் உயிருக்கு உயிரான பஞ்சாப் பிரதேசம், தன் கண்முன்னாலேயே பிளக்கப்பட்டு சிதைவதைக் கண்டு துடித்தார் அம்ரிதா. லாகூரிலிருந்து இந்திய பஞ்சாபிற்கு விரட்டப்பட்ட அம்ரிதா நல்லவேளை, தாக்கப்படாமல் தந்தையுடன் பாதுகாப்பாக இந்தியா வந்துசேர்ந்துவிட்டார்.


கொடூரக் கதையாகிவிட்ட பஞ்சாப் பிரிவினையின் தாங்கவொண்ணா அவலத்தைக் குறிப்பிடுகிறது ‘ வாரிஸ் ஷா! நான் உனை அழைக்கிறேன் !’ எனும் அம்ரிதா ப்ரீத்தமின் புகழ்பெற்ற கவிதை ஒன்று. அம்ரிதாவின் இலக்கிய வருகைக்கு முன்பே, 18-ஆம் நூற்றாண்டில் பஞ்சாபின் சிறந்த கவியாகப் புகழ்பெற்றிருந்தவர் வாரிஸ் ஷா. ஹீர்-ராஞ்சா காதல் காவியத்தை பஞ்சாபி இலக்கியத்துக்கு வழங்கிய மகாகவி. அம்ரிதா அவரை தன் ஆதர்ஷ கவியாக மனதில் கொண்டிருந்தார். இளம் வயதில் விதவையாகிப்போன, சிதைக்கப்பட்ட பஞ்சாபிப்பெண்களின் துக்கத்தைத் தாளமாட்டாது வாரிஸ் ஷாவை அழைத்து முறையிடுவதாக அமைந்திருக்கிறது அம்ரிதா ப்ரீத்தமின் புகழ்பெற்ற அந்தக் கவிதை.

தனிவாழ்க்கை

இந்தியா திரும்பிவிட்ட அம்ரிதாவின் மணவாழ்க்கை நாளுக்குநாள் அர்த்தமின்றி ஓடிக்கொண்டிருந்தது. சோககீதமே தன்னுடைய வாழ்வின் அடிநாதமாக ஆகிவிட்டிருந்ததை சின்னவயதிலிருந்தே உணர்ந்திருந்தார் அம்ரிதா. நெடும்வாழ்வில் தொடர்ந்த காதல் அம்ரிதாவைக் கொஞ்சம் ஸ்பெஷலாகவே கவனித்து அவரை சோக இளவரசியாய் மாறிவிட்டிருந்தது.

இளம் கவியான சாஹிர் லூதியான்வி (லூதியானா, பஞ்சாபின் ஒரு சிறுநகரம்.அங்கே பிறந்தவராதலால் சாஹிர் லூதியான்வி- நம்ம பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்போல) புகழின் வாசலுக்கு வந்திருந்த சமயம். அம்ரிதா சாஹிரைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தார். அம்ரிதாவின் கவிதைத் தொகுப்புகள் சிலவும் ஏற்கனவே வெளிவந்திருந்தன. 1944-ல் பஞ்சாபின் கிராமம் ஒன்றில் ஒரு மாலையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முஷாய்ராவில் (Mushaira-கவியரங்கு) இருவரும் முதன்முதலாக சந்தித்துக்கொண்டனர். சாஹிர் லூதியான்வி தீவிரமும், லட்சியநோக்கும் கொண்ட இளம் கவி. வார்த்தைவீச்சு, கருத்தாழமிக்க தன் கவிதைகளுக்காக அறியப்பட்டிருந்த இளம்பெண் அம்ரிதா. கண்டதும் காதலோ? அப்படித்தான் தோன்றுகிறது. இரவின் நிழலில், மெல்லொளியில் அவர்கள் கண்கள் அடிக்கடி சந்தித்து மீண்டன. ஆயினும் அந்த சந்திப்பில் வார்த்தைப் பரிமாற்றம் என்பதாகப் பெரிதாக ஒன்றும் நிகழ்ந்துவிடவில்லை. சாஹிர் பொதுவாகத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ளத் தயங்குபவர். இந்த விஷயத்தில் பஞ்சாபிகளுக்கு நேரெதிரான குணம் கொண்டவர்!

அந்த நாசூக்கான மாலைச்சந்திப்புக்குப்பின் இருவரிடையே கடிதப் பரிமாற்றம் நிகழ்ந்தது. லாகூரில் லூதியான்வியும் டெல்லியில் அம்ரிதாவும் இருந்த காலமது. தன் கடிதங்களில் அம்ரிதா ப்ரீத்தம், சாஹிர் லூதியான்விமீது தான் கொண்டிருக்கும் காதலைத் தெளிவாக்குகிறார். ’என் கவியே!’ என்கிறார். ’தேவதையே!’ என்கிறார். வரிக்குவரி ‘காதலனே, கடவுளே…’ என்றெல்லாம் உருகுகிறார் அம்ரிதா. கனல்பறக்கும் காதலில் தன்னைக் கரைத்துக் காணாமற்போகிறார் அவர். எவ்வளவுக்கெவ்வளவு அம்ரிதா தன்னை வார்த்தைகளாக வெளிப்படுத்திக்கொண்டாரோ, அவ்வளவுக்கவ்வளவு சாஹிர் லூதியான்வியிடமிருந்து வெளிப்பட்டது ஆழ்ந்த அமைதி! வார்த்தைகளுக்கு வேலை இல்லை என நினைத்தாரோ? Platonic love ?

இருவரும் அவ்வப்போது காதல்கடிதங்களை எழுதிக்கொண்டார்கள். தன் குடும்பத்தினருடன் டெல்லியில் வசித்தார் அம்ரிதா. அங்கே ஒரு அறிவுஜீவியாக, கவிஞராகப் புகழடைந்துகொண்டிருந்தார். சாஹிர் லூதியான்வி பம்பாய் வந்து திரைப்படங்களில் பாடல்கள் எழுத ஆரம்பித்த காலகட்டம். சாஹிருக்காகத் தன் கணவரைத் துறக்கத் தயாராக இருந்தார் அம்ரிதா. ஆனால் சாஹிரிடமிருந்து உறுதியாக எந்த ஒரு பதிலும் இல்லை. இருவரும் அவ்வப்போது சந்திக்கும் வாய்ப்புகள் வந்தன. அப்போதும் இருவரது கண்களும் மட்டுமே மும்முரமாய் இருந்தன. உதடுகளுக்கு வேலை இருந்திருக்கவில்லை! மொழி என்பது அவர்களிடையே தலைகாட்டவில்லை. இருவரும் மௌனமே சாட்சியாக ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்க, சாஹிர் புகைத்துத் தள்ளுவாராம். பின்னர் ஒன்றுமே நடக்காததுபோல் எழுந்துபோய்விடுவாராம். அவர் போனபின் அவர் புகைத்துபோட்ட சிகரெட் துண்டுகளை எடுத்துத் தன் உதட்டில் பொருத்தி புகைப்பாராம் அம்ரிதா! அப்படி ஒரு கண்மண் தெரியாக் காதல் அம்ரிதாவுக்கு. இதனைப்பற்றி அவரே தன் சுயசரிதமான ‘ரசீதி டிக்கெட்’’(Rasidi Ticket-ரெவின்யூ ஸ்டாம்ப்)-இல் எழுதியுள்ளார். அவருடைய வாழ்வின் அவஸ்தைகள், நிறைவேறாக்காதலின் சோகம் ததும்பும் படைப்பு இது.

சாஹிர் உள்ளூர அம்ரிதாவின் மீது ப்ரேமையாகியிருந்திருக்கிறார். ஏனோ அதனை அடுத்தகட்டத்துக்கு அவர் நகர்த்தவில்லை. அல்லது அவரால் முடியவில்லை. ஒருமுறை அம்ரிதா தன் வீட்டுக்கு வந்தசென்றபின், தன் தாயிடம் (கணவரிடமிருந்து பிரிந்த தாய்தான் சாஹிரை வளர்த்து ஆளாக்கியவர்), சாஹிர் லூதியான்வி சொன்னாராம்: ‘அம்மா! அதுதான் அம்ரிதா ப்ரீத்தம்! உன் மருமகளாக வரக்கூடியவள்!’ அம்ரிதாவுக்கு மிகவும் அருகில் வந்த சாஹிர் லூதியான்வியின் நிலை இதுதான்! அம்ரிதா, தான் முதன்முதலாக சாஹிரை சந்தித்ததைக் கருவாகக்கொண்டு ஒரு சிறுகதையும் எழுதியிருக்கிறார். அதனைப் படித்தபின்பாவது ஏதாவது சொல்வாரா சாஹிர் லூதியான்வி என்று எதிர்பார்த்திருக்கிறார் அம்ரிதா. ஆனால் அவரிடமிருந்து எந்த ஒரு எதிர்வினையும் இல்லை. அதிலும் ஏமாற்றம்தான் அம்ரிதாவுக்கு. சாஹிர் லூதியான்விக்கு என அவர் நினைத்து எழுதிய சிறுகடித வடிவிலான கவிதைகளின் தொகுப்பு ‘சுனேஹ்ரே’(Sunehre –messages) சாஹித்ய அகாதமியின் விருது பெற்றது. யாருக்காக எழுதினேனோ அவர் பார்த்ததாகத் தெரியவில்லை, உலகம் பார்த்திருக்கிறது – என்று மனம் கனத்ததாம் அம்ரிதாவுக்கு. அது நிகழுகிறவிதமாக நிகழட்டும்; எந்த எதிர்பார்ப்பும் இல்லாமலே காதல் இருந்துவிட்டுப்போகட்டும், அதன் சக்தியை, அதன் போக்கை உள்வாங்கிக்கொள்ளலாம்; வேறென்ன நாம் செய்துவிடமுடியும் என்கிற முடிவுக்கு அம்ரிதா வந்திருக்கக்கூடும். அவருடைய கவிதைகளில் இந்த நிதர்சனம், தொடரும் ஏக்கம் ஆகியவை வெளிப்படுகின்றன. பிற்காலத்தில் தன்னைவிட இளையவரான பஞ்சாபி ஓவியரும், கவிஞருமான இம்ரோஸ்(Imroz) மீது அம்ரிதாவுக்கு ஒரு இனந்தெரியாப் பிடிப்பு ஏற்பட்டது. ஒரு ஆன்மநெருக்கம் என்று அதனைக் குறிப்பிடலாமோ? அது கிட்டத்தட்ட 40 ஆண்டுகாலம் அம்ரிதாவை அம்ரோஸின் அருகாமையில் வைத்திருந்தது. அந்த சமயத்தில் தன் கணவரிடமிருந்து அம்ரிதா பிரிந்துவந்துவிட்டார் எனினும், அம்ரோஸ்-அம்ரிதா இடையேயான நட்பு, நெருக்கம் அவர்களை திருமணம் என்கிற பந்தம்வரை கொண்டுசெல்லவில்லை. இம்ரோஸ் தாங்களிருவரும் ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில், நண்பர்களாய் வாழ்ந்ததாகக் குறிப்பிடுகிறார். சமூகம் என்ன நினைக்கும் என்கிற கவலை இருவருக்கும் இருந்ததில்லை. தெற்குடெல்லியின் ஹோஸ்-காஸ் எனும் இடத்தில் இருக்கும் ஓவியர் இம்ரோஸின் வீட்டில், முகப்பறை, வாசிப்பு அறை என எங்கு பார்த்தாலும் அம்ரிதாவின் படங்கள்தான். ‘என் வீட்டில் அம்ரிதா இல்லாத இடமில்லை!’ என்று இன்றும் மகிழ்ச்சியோடு கூறுகிறார் இம்ரோஸ். இருவரிடையேயான ஏக்கம், மனநெருக்கம் இவற்றை வெளிப்படுத்தும் ‘இம்ரோஸ்-அம்ரிதா கடிதங்கள்’ புத்தகவடிவில், முதலில் பஞ்சாபி ஒரிஜினலாகவும், பிற்பாடு ஹிந்தி பதிப்பாகவும் வெளியாகியது. ‘Amrita-Imroz : In the times of Love and Longing’ என்கிற ஆங்கிலப் பதிப்பாகவும் இது வெளியாகியுள்ளது.

சிலகாலம் உடல்நலம் இல்லாதிருந்த அம்ரிதா ப்ரீத்தம், 2005 அக்டோபரில் டெல்லியில் காலமானார். தன் கடைசி வருடங்களில் ஷிர்டி பாபாவின் பக்தராக அவர் இருந்ததாகத் தெரிகிறது. ஒரு அதிகாலையில் பாபாவின் உருவப்படத்துக்கு முன்பு அகர்பத்தி ஏற்றிக் காண்பிக்கையில் தனக்கு அந்த அனுபவம் உண்டானதாகக் குறிக்கிறார் அம்ரிதா. அகர்பத்தி புகையை பாபாவுக்குக்காட்டி கண்முடி தியானித்திருக்கையில் தான் தானாக இல்லாமல், அந்த வாசனைப்புகையாகவே மாறி பரவியிருந்ததாக உணர்ந்திருக்கிறார் அவர். சீக்கியர்கள் ஹிந்துக்களைப்போலவே மறுபிறப்பில் நம்பிக்கை உடையவர்கள். தன் இறுதிக்காலம் நெருங்குகிறது என்பதை உணர்ந்த அம்ரிதா, இம்ரோஸை இனி எங்கு, எப்போது காண்போம் என ஏங்கியிருக்கவேண்டும். இம்ரோஸ்பற்றிய சிந்தனையில் அவர் இப்படி எழுதுகிறார்:

இலக்கிய வாழ்க்கை

தேசப்பிரிவினை பெண்களுக்கு இழைத்த கொடூரம்பற்றிய தாக்கத்தில் பஞ்சாபி மொழியில் அம்ரிதா 1950-ல் எழுதிய நாவல் ‘பிஞ்சர்’ (எலும்புக்கூடு). இந்தியப் பிரிவினைபற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த படைப்பாக இது கருதப்படுகிறது. பிஞ்சர் என்ற பெயரிலேயே ஒரு ஹிந்தி படமாகவும் பின்னர் இது வெளிவந்தது.

விருதுகள்

நூல் பட்டியல்

உசாத்துணை


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.