under review

அமலை

From Tamil Wiki
Revision as of 14:34, 3 July 2023 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected text format issues)

அமலை: போரின்போதும் போருக்குப்பின்னரும் வீரர்கள் ஆடும் வெற்றிக்களிப்பு ஆட்டம். வாள் முதலிய படைக்கலங்களுடன், கள்ளுண்டு இதை ஆடுவார்கள். போரில் தோற்ற எதிரி மன்னனைச் சூழ்ந்து இந்த ஆடலை ஆடுவதுண்டு. உண்டாட்டு என்னும் உணவுக்களியாட்டும் இதனுடன் இணைவதுண்டு.

சொற்பொருள்

திவாகர நிகண்டு அமலை என்னு சொல்லுக்கு மிகுதி என்று பொருள் அளிக்கிறது. முதன்மையாக மிகுதியான சோறு என்னும் பொருளிலேயே அமலை என்னும் சொல் சங்கப்பாடல்களில் இடம்பெறுகிறது.

  • ’வெண்ணெறந் தியற்றிய மாக்க ணமலை (மலைபடுகடாம். 441). வெண்ணிறமான சோற்றுக்குவியல்
  • ’உழுந்து தலைப்பெய்த கொழுங் களி மிதவை பெருஞ் சோற்று அமலை’ நல்லாவூர் கிழார் (அகநானூறு 86 )உளுந்து போட்டு சமைத்த சோற்றை மிகுதியாக உண்டுவிட்டு ஆடுதல் என்று புறநாநூறு அமலையை குறிப்பிடுகிறது.
  • ’அவைப்பு மாண் அமலைப் பெருஞ்சோறு’ (சிறுபாணாற்றுப்படை 194)
  • ’பழஞ்சோற்று அமலை முனைஇ (பெரும்பாணாற்றுப்படை 224)
  • ’பெருஞ்சோற்று அமலை நிற்ப’ (அகநாநூறு 86)
  • 'ஆம்பல் அகல் இலை அமலை வெஞ்சோறு (அகநாநூறு 196)
  • ’ஊன்சோற்று அமலை பாண்கடும்பு அருத்தும்’ (புறநாநூறு 33)
  • 'அமலை கொழுஞ்சோறு ஆர்த்த பாணர்க்கு’ ( புறநாநூறு 34)
  • ’செந்நெல் அமலை வெண்மை வெள் இழுது’ (குறுந்தொகை 277)
  • ’வெண் எறிந்து இயற்றிய மாக்கண் அமலை (மலைபடு கடாம் 443)
  • ’அல்கு அறைகொண்டு ஊண் அமலை சிறுகுடி’ (கலித்தொகை 50)
  • ’பைஞ்ஞிணம் பெருத்த பசுவெள் அமலை’ ( புறநாநூறு 177)

மிகுதியான ஓசை, ஆரவாரம் என்னும் பொருளும் உண்டு. ’வீரர் ஆர்க்கும் அமலையை (நைடதம். நாட்டுப்படலம் 13) படைத்திரள், உணவுக்குவியல், ஆராவாரம் என்னும் மூன்று பொருள்களும் இணைந்து அமலையாடுதல் என்பது மிகுதியான சோற்றை உண்டுவிட்டு ஆர்ப்பரித்து ஆடுவது என்னும் பொருளை பின்னர் அடைந்தது.

திணை

சங்கப்பாடல்கள் வீரர்கள் ஆடும் பலவகையான ஆடல்கள் பேசப்படுகின்றன. வெட்சி சூடி ஆநிரை கவர்வோரும், கரந்தை சூடி அந்த ஆநிரையை மீட்பவர்களும், உழிஞை சூடி போரில் மதிலைக் கைப்பற்றுவோரும் வெற்றிக் களிப்பில் ஆடுவார்கள். தும்பைத் திணையிலும் அவ்வாறான ஆட்டம் உண்டு. தும்பைத் திணை என்பது போர்க்களத்தில் ஆடும் வெற்றி க்களிப்பு . வெற்றிபெற்ற அரசனின் தேருக்கு முன்னரும் பின்னரும் வாட்களையும் வேல்களையும் வீசி ஆடுவது இது. வீழ்ந்துபட்ட மன்னனைச் சுற்றி நின்றும் ஆடுவதுண்டு.

துறை

தும்பைத் திணைக்குள் முன்தேர்க் குரவை, பின்தேர்க்குரவை, பேய்க் குரவை, களிற்றுடன் நிலை, ஒள்வாள் அமலை, தானை நிலை முதலான துறைகள் உள்ளன. ஒள்வாள் அமலை என்பது வாளைச் சுழற்றியபடி ஆடுவது. தொல்காப்பியம் ஒள்வாள் அமலையை 'அட்ட வேந்தன் வாளோராடு அமலையும்’ என்று கூறுகிறது. (தொல்காப்பியம். பொருளதிகாரம். 72) புறப்பொருள் வெண்பா மாலை ’வலிகெழுதோள் வாய்வயவர் ஒலிகழலான் உடன்ஆடின்று ’ என வரையறை செய்கிறது.

உசாத்துணை


✅Finalised Page