under review

அமலகுரு சதகம்: Difference between revisions

From Tamil Wiki
(Page Created: Para Added: Link Created: Proof Checked.)
 
(Link Added)
Line 124: Line 124:
== உசாத்துணை ==
== உசாத்துணை ==


* [https://www.tamilvu.org/ta/courses-degree-p202-p2024-html-p20243l5-29702 அமல குரு சதகம்]  
* [https://www.tamilvu.org/ta/courses-degree-p202-p2024-html-p20243l5-29702 அமல குரு சதகம்]
 
* சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-1: சதக இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: ஜூன் 2015.
{{Ready for review}}
{{Ready for review}}
[[Category:Tamil Content]]
[[Category:Tamil Content]]

Revision as of 23:52, 21 March 2024

அமலகுரு சதகம் (மறு பதிப்பு: 1982) கிறிஸ்தவ சமயம் சார்ந்த இலக்கிய நூல். குற்றமற்ற குருவாகிய இயேசு பெருமானிடம் விண்ணப்பங்களாக அளிக்கப்பட்ட நூறு பாடல்களின் தொகுப்பே அமலகுரு சதகம். இந்நூலை இயற்றியவர் ஜி.எஸ். வேதநாயகர்.

வெளியீடு

அமலகுரு சதகம் நூலின் முதல் பதிப்பு விவரங்களை அறிய இயலவில்லை. இதன் மறுபதிப்பை கிறிஸ்தவ இலக்கியச் சங்கம் 1982-ல் வெளியிட்டது.

ஆசிரியர் குறிப்பு

அமலகுரு சதகம் நூலை இயற்றியவர் ஜி.எஸ். வேதநாயகர். இவர், மதுரை அருகே உள்ள தேத்தாம்பட்டி என்னும் கிராமத்தில், 1868-ல் பிறந்தார். வாஷ்பன் துரையால் ஊக்குவிக்கப்பட்டார். மதுரையிலும், சென்னை சூளைமேட்டிலுள்ள அந்திரேயா ஆலயத்திலும் போதகராகப் பணியாற்றினார். இயேசு கிறிஸ்து மீது பல கீர்த்தனைகளை இயற்றினார். மாதர் கும்மி, ஆடவர் கும்மி, சற்குரு சதகம், நெஞ்சுவுரு கட்கம் உள்ளிட்ட பல நூல்களை இயற்றினார். 1929-ல், ஜி.எஸ். வேதநாயகர் காலமானார்.

ஜி.எஸ். வேதநாயகர் இயற்றிய நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்று. அமலகுரு சதகம்.

நூல் அமைப்பு

மலம் என்றால் குற்றம் என்பது பொருள். ‘அமல’ என்றால் குற்றமற்ற என்பது பொருள். குற்றமற்ற குருவான இயேசுநாதரின் மீது நூறு பாடல்களைக் கொண்டு பாடப்பட்ட சதக நூலே அமலகுரு சதகம்.

அமலகுரு சதகம் நூலின் தொடக்கத்தில் காப்புச் செய்யுள் இடம் பெற்றுள்ளது. இது விருத்தப் பாவினால் இயற்றப்பட்டது. தொடர்ந்து நூறு பாடல்கள் இடம் பெற்றுள்ளன. அவை ஏழு பிரிவாக அமைக்கப்பட்டுள்ளன. அவை,

  • சுத்த ஜீவியம்
  • குழந்தைக் கிறிஸ்தவர்கள்
  • ஆச்சரிய அன்பு
  • உபதேச மயக்கம்
  • தெளிதல்
  • சகோதர அன்பு
  • விசுவாச வாழ்க்கை

ஒவ்வொரு பாடலின் இறுதியிலும் இயேசு பெருமானை, ‘அமல குருவே’ என விளித்து ஆசிரியர் பாடியுள்ளார்.

உள்ளடக்கம்

அமலகுரு சதகம், இயேசு பெருமானின் அருளை வேண்டி இயற்றப்பட்டுள்ளது. நான் அனும் அகந்தையை அகற்றக் கோருதல், பிறர் நலனுக்காக உழைத்தல், இறைவனின் அருள் வேண்டல், இறைப் பணியில் தமக்குள்ள உறுதியை வெளிப்படுத்தல் ஆகியன பாடல்களாக இயற்றப்பட்டுள்ளன. திருச்சபையிலும் கிறித்தவர்களிடத்தும் காணப்படும் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டி, அவற்றை நீக்கும் நோக்கிலும் பல பாடல்கள் அமைந்துள்ளன. விவிலியக் கருத்துக்களை நேரடியாகப் பல பாடல்களில் பயன்படுத்தியுள்ளார். கிறிஸ்தவர்களுக்கு அறிவுரை கூறும் வகையில் பல பாடல்கள் இடம் பெற்றுள்ளன. இறைவனுடன் உரையாடும் வகையில் நூலைப் படைத்துள்ளார் ஆசிரியர் ஜி.எஸ். வேதநாயகர்.

பாடல்கள்

இறைவனிடம் வேண்டுதல்

கேடு ஒன்றும் செய்யாத அரசே நீர் தரித்த முள்

கிரீடத்தில் பங்கு வேண்டும்

கீணர் உன் முகத்தினில் உமிழ்ந்த கொடுமையிலும் பங்கு

கிடைக்கவும் அதிர்ஷ்டம் வேண்டும்.


உனில் உறும் கொடியாக உன்சாரம் பெற்று என்றும்

உன்னதக் கனி பெருகவும்

உடைத்து என்தன் இதயத்தை உன் சித்தப்படி வரைந்து

உருவாக்கும் அமலகுருவே.

மன்னிப்பும் நற்செயல்களும்

பாவங்கள் மன்னிக்க அதிகார முண்டு என்று

படியோர்க்கு நிரூபிக்கவே

படுக்கைதூக் கிச்செலச் சரீரபலன் ஈந்தனீர்

பாவிஎன் உடல்உறாதோ?


பாவமன்னிப்புற்ற பலபேரைப் பார்த்துஇனிப்

பாவஞ்செய் யாதே என்றீர்

பலம் அவர்க்கு ஈயாமல் இக்கட்ட ளைதரப்

பயித்தியம் உமக்கு இல்லையே


பாவியாம் ஸ்திரீக்குச் சமாதானம் தந்தீர் அது

பாவத்திற்குச் சமாதானமோ?

பரிசுத்த நீதியின் கிரியைசமா தானமாய்ப்

பகருதே சத்தியவேதம்


மாஅலகைக் கிரியைகள் செய்துகொண் டேதங்கள்

மன்னிப்புப் பெற்றோம்எனும்

மயரிகள் உமைப்பாவ வர்த்தகன் என்றுமே

மதிக்கிறார் அமலகுருவே

நல்லதும் தீயதும்

மலைப்பிர சங்கத்தைப் பாராமல் பொழிகிறார்

மாகாணிக் கிரியை இல்லை;

வல்லமை மிகுந்தவர் எம்கடவுள் என்கிறார்

மனமாற்றத் திறமை இல்லை;


நிலைபெற்ற உபதேசம் கண்டிட்டோம் என்கிறார்

நிழல்போல மாறி விடுவார்;

நேற்றுள்ள உற்சாகம் இன்றைக்குப் பறந்துவிட

நெடுஞ்சவுல் போல நிற்பார்;


தலைதூக்கி அஞ்ஞானி கட்குப்பிர சங்கிப்பார்

தாங்களனு பவத்தில் கொள்ளார்;

தட்டிக்கேட் டால்எங்கள் கிரியையைப் பாராமல்

சத்யஉரை பாரும் என்பார்.


புலம்அற்ற குருடர்கதை போல்இவர்கள் உன்மகிமை

புகல்வதால் உபயோ கமென்ன?

பூமிக்கு ஒளிகிறிஸ் தவர்என்று போதித்த

போதகா! அமல குருவே!

மதிப்பீடு

அமல குரு சதகம் நூலில் இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கைச் சம்பவங்களுடன், கிறிஸ்தவர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும், எப்படி நடந்து கொள்ளக் கூடாது போன்ற விளக்கங்களும் இடம்பெற்றுள்ளன. கிறிஸ்தவ சதகச் சிற்றிலக்கிய நூல்களுள் குறிப்பிடத்தகுந்த ஒன்றாகவும், ஜி.எஸ். வேதநாயகர் எழுதிய நூல்களில் அதிகம் வரவேற்பைப் பெற்ற நூலாகவும் அமல குரு சதகம் நூல் அறியப்படுகிறது.

உசாத்துணை

  • சிற்றிலக்கியக் களஞ்சியம் தொகுதி-1: சதக இலக்கியங்கள், பதிப்பாசிரியர் ச.வே. சுப்பிரமணியன், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம். முதல் பதிப்பு: ஜூன் 2015.


Ready for review


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.