அபி

From Tamil Wiki
Revision as of 19:35, 20 January 2022 by Navingssv (talk | contribs) (அபி)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

அபி (22-01-1942) - (ஹபிபுல்லா) தமிழின் முதன்மையான கவிஞர்களுள் ஒருவர். அருப கவிதையை தமிழில் எழுதிய முன்னோடி படைப்பாளிகளில் ஒருவர். இவரது முதல் கவிதை தொகுதியான ”மௌனத்தின் நாவுகள்” கலீல் ஜிப்ரான், தாகூர் பாதிப்பினால் வந்த படைப்புகள். தமிழில் இவரது அருப கவிதைகளுக்கு முன்னோடியாக கவிஞர் மௌனி இருந்தார். லா.ச.ரா மீதும் தீவிர ஈடுபாடு கொண்டிருந்த அபி தனது பி.ஹெச்.டி ஆய்வினை லா.ச.ரா வின் உரைநடையில் மேற்கொண்டார். இளமை வயது முதலிலே வெண்பா எழுதுவதில் தேர்ச்சி பெற்றிருந்ததும், சங்க இலக்கியம் மேல் கொண்ட பற்றும் இவரது கவிதையில் சொற்செறிவு, அடங்கிய தொனிக்கும், முன்-பின்களுக்கு நடுவில் சுடரும் அழகிற்கும் காரணமாகின.

கவிஞர் அபி

தனி வாழ்க்கை

அபி அவர்கள் முன்பு மதுரை மாவட்டத்தின் பகுதியாக இருந்த போடிநாயக்கனூரில் (தற்போது தேனி மாவட்டம்) 22 ஜனவரி 1942 ஆம் ஆண்டு பிறந்தார். இவரது தந்தை அ.கா. பீர்முகம்மது போடிநாயக்கனூரில் பலசரக்கு வியாபாரம் செய்தார். தாயார் பாத்திமா பீபி. அபியுடன் பிறந்தவர்கள் மொத்தம் எட்டு பேர். அபியின் சித்தப்பா தோப்புகளை குத்தகை எடுத்து விவசாயம் நடத்தினார். கூட்டு குடும்பமாக வளர்ந்த அபி மிக இளமை காலத்திலேயே தன் சித்தப்பாவுடன் வயலுக்கு செல்வதில் ஆர்வம் காட்டினார். தான் பின்னால் எழுதிய அருப கவிதைக்கு தூண்டுகோளாக அமைந்தது என்கிறார் அபி.

விக்டோரியா நினைவு உயர்நிலைப்பள்ளியில் பள்ளிப்படிப்பை முடித்தவர். பள்ளி நாட்களிலேயே வெண்பா எழுதுவதிலும், சங்க இலக்கியம், இலக்கணம் பயிவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். காரைக்குடியில் இருக்கும் அழகப்பா கல்லூரி இளங்கலை (1963) தமிழ் இலக்கியமும், மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் முதுகலை (1966) தமிழ் இலக்கியமும் பயின்றார். அபி தனது முனைவர் பட்டத்தை (1981) பகுதி நேரக்கல்வியில் எழுத்தாளர் லா.ச.ராவின் உரைநடையில் மேற்கொண்டார்.

அபி திருமதி பாரிசா அவர்களை (23-05-1971) அன்று திருமணம் செய்து கொண்டார். குழந்தைகள் பர்வின், பாத்திமா இரு மகள்கள், அஷ்ரப் அலி, ரியாஸ் அஹமது இரு மகன்கள். அபி அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றார்.

கர்நாடக சங்கீதத்திலும், ஹிந்துஸ்தானி சங்கீதத்திலும் நாட்டம் கொண்டவர்.

இலக்கிய வாழ்க்கை

அபியின் முதல் கவிதை தொகுதியான “மௌனத்தின் நாவுகள்” 1974 கவிஞர் மீரா நடத்திய அன்னம் பதிப்பகத்தின் வெளியீடாக வந்தது. கவிஞர் மீராவின் முயற்சியால் “மௌனத்தின் நாவுகள்” தொகுப்பு வெளி வருவதற்கு முன் அபி பற்றிய அறிமுகம் தேவை எனச் சொல்லி கண்ணதாசன் பதிப்பகத்தில் “நீலாம்பரி” என்னும் கவிதையை வெளியிட்டார். இதுவே இதழில் வெளிவந்த அபியின் முதல் கவிதை. இவர் எழுதிய முதல் கவிதையான “இன்னொரு நான்” 1967 இல் எழுதப்பட்டது.

லா.ச.ராவுடன் அபி

கவிஞர் அப்துல் ரகுமான் மற்றும் கவிஞர் மீராவின் முயற்சியில் “மௌனத்தின் நாவுகள்” தொகுப்பை பிற பதிப்பகங்களில் வெளிவர முயற்சி செய்தனர். புது கவிஞர் என்ற காரணத்தினால் பிற பதிப்பகங்கள் அபியின் கவிதையை வெளியிட மறுத்ததால் கவிஞர் மீரா தானே முன்வந்து ஒரு பதிப்பகத்தை தொடங்கும் யோசனையை சொன்னார். மீராவும் மற்ற நண்பர்களும் சேர்ந்து பணம் திரட்டி அன்னம் பதிப்பகத்தை தொடங்கினர். அதன் முன் புத்தகமாக அபியின் “மௌனத்தின் நாவுகள்” வெளிவந்தது.

அபியின் பிற தொகுதிகளான “அந்தர நடை” 1979 ஆம் ஆண்டு அன்னம் பதிப்பகத்தின் வெளீயிடாக வந்தது. மூன்றாம் தொகுதி “என்ற ஒன்று” 1988 இல் அன்னம் பதிப்பகத்தின் வெளீயிடாக வந்தது. இது அன்னம் பதிப்பகத்தின் நூறாவது புத்தகமாக வெளிவந்தது.

அபி தனது ஆரம்ப கால கவிதைகளில் கலீல் ஜிப்ரான், தாகூர் பாதிப்பு இருந்தது. தமிழில் தன் இயல்பிற்கு பொருந்திய அக நோக்கிற்கு முன்னோடியாக இருந்தவர்கள் லா.ச.ரா மற்றும் மௌனி என்கிறார்.

பின்னர் ஐரோப்பா கவிஞர்களில் வாஸ்கோ போபா, பால் செலான் விரும்பி படித்தார்.

இலக்கிய இடம்

தமிழிலில் அருப கவிதைகளை தனி அழகியலாக முன்னெடுத்து புதிய பாய்ச்சலை தமிழ் கவிதை சூழலில் உருவாக்கிய முன்னோடிகளுள் ஒருவர்.

அபி பி.ஏ பட்டமளிப்பு விழா 1963

விருதுகள்

  • கவிக்கோ விருது (2004)
  • கவிக்கணம் விருது (2004)
  • கவிஞர் தேவமகன் அறக்கட்டளை விருது (2008)
  • சிற்பி அறக்கட்டளை விருது (2011)
  • விஷ்ணுபுரம் இலக்கிய விருது (2019)
  • பொற்கிழி விருது (2021)

நூல்பட்டியல்

  • மௌனத்தின் நாவுகள் (1974 - அன்னம் பதிப்பகம்)
  • அந்தர நடை (1979 - அன்னம் பதிப்பகம்)
  • என்ற ஒன்று (1988 - அன்னம் பதிப்பகம்)
  • மாலை மற்றும் சில கவிதைகள் என்னும் தொகுப்பை உள்ளடக்கிய ‘அபி கவிதைகள்’ (2003 - கலைஞன் பதிப்பகம்)

பிற நூலகள்

  • லா.ச.ரா படைப்புலகம் - பதிப்பாசிரியர் (கலைஞன் பதிப்பகம்)

அரசியல் செயல்பாடுகள்

  • 1965 இல் கல்லூரி மாணவனாக இருந்த போது மதுரையில் இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்
  • கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய போது ஆசிரியர் இயக்க போராட்டங்களில் பங்கு கொண்டு சிறை சென்றிருக்கிறார்.

உசாத்துணை