ஆத்மாநாம்
ஆத்மாநாம் [ஜனவரி 18, 1951 - ஜூலை 06, 1984] கவிஞர், மொழிபெயர்ப்பாளர், கட்டுரையாளர், விமர்சகர். 'ழ' என்ற கவிதை ஏட்டின் ஆசிரியர். தமிழ் நவீனக் கவிதைகளில் முதன்மை ஆளுமைகளில் ஒருவராகக் கருதப்படுகிறார்.
பிறப்பு, கல்வி
ஆத்மாநாம் சென்னையில் ஜனவரி 18, 1951-ல் பிறந்தார். இயற்பெயர் எஸ்.கே.மதுசூதன். அம்பத்தூர் சர் ராமசாமி முதலியார் உயர்நிலைப் பள்ளியிலும் அரும்பாக்கம் து.கோ.வைணவக் கல்லூரியிலும் (பிகாம்) பயின்றார்.
தனி வாழ்க்கை
ஆத்மாநாமின் தாய்மொழி கன்னடம். சதர்ன் சுவிட்ச் கியர்ஸ், கோரமண்டல் கார்மென்ட்ஸ், ரெங்கா அப்பாரெல்ஸ் ஆகிய கம்பெனிகளில் வேலைசெய்தார். டாப் டென் (1978) என்ற ரெடிமேட் ஆடை உற்பத்தி நிறுவனத்தைப் தொடங்கினார். அதை வெற்றிகரமாக நடத்தமுடியவில்லை.
இதழியல்
நவீனக் கவிதைக்காக, 'ழ’ என்ற ஒரு முன்னோடி இதழைத் தொடங்கி, 24 இதழ்களைக் கொண்டு வந்தார்.ழ' கவிதை இதழின் ஆசிரியராக இருந்தபோதே அவர் '2083 ஒரு அகால ஏடு' என்ற, ஒற்றைத் தாளில் அச்சிடப்பட்ட ஒரு இதழைத் துவக்கினார்.
இலக்கிய வாழ்க்கை
மொழியாக்கம்
பிரெஞ்சுக் கவிஞர் ஆர்தர் ரைம்போவின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை முழுமையாக்காது பென்சிலில் எழுதி வைத்திருந்தார் ஆத்மாநாம். 'எல்சால்வாடாரில் காணாமல் போன நினாவுக்கு’ என்ற லத்தீன் அமெரிக்கக் கவிதையை மொழி பெயர்த்துள்ளார். அவர் செய்ய நினைத்துத் தொடங்கிய வேறுசில ஐரோப்பியக் கவிஞர்களின் கவிதை மொழிபெயர்ப்புகளையும் முடிக்காமலே விட்டுவிட்டார். குறிப்பாக அவருக்குப் பிடித்த அரசியல் நிலைப்பாடு கொண்ட பெர்டோல்ட் ப்ரக்டின் கவிதைத் தேர்வொன்றிற்கு அவர் திட்டம் வைத்திருந்தார். ஆனால் அதில் ஒரு கவிதையை மாத்திரமே மொழிபெயர்த்து முடித்திருந்தார். அந்தோனின் பார்த்துஸெக் என்ற கிழக்கு ஐரோப்பியக் கவிஞரின் சில கவிதை மொழிபெயர்ப்புகளை செய்திருந்தார்.
நூல்மதிப்புரைகள்
புத்தக விமர்சனங்களை எழுதுவதிலும், பொறுப்பும் ஈடுபாடும் ஆத்மாநாமுக்கு இருந்தது. விமலாதித்த மாமல்லனின் சிறுகதைத் தொகுப்பிற்கும், ஆனந்தின் 'இரண்டு சிகரங்களுக்கு இடையே' என்ற குறுநாவலுக்கும் அவர் எழுதிய மதிப்புரைகள் மீட்சி இதழில் வந்தன. '
கவிதைகள்
ஆத்மாநாம் எழுதியவையாக 156 கவிதைகள் கிடைத்துள்ளன. ஆத்மாநாம் 1981ல் காகிதத்தில் ஒரு கோடு என்னும் தலைப்பில் தன் 37 கவிதைகளை ழ வெளியீடாக கொண்டுவந்தார். 1989 ஆம் ஆண்டு பிரம்மராஜன் (தன்யா-பிரம்மா வெளியீடாக) ஆத்மாநாம் கவிதைகள் என்னும் தலைப்பில் எஞ்சிய கவிதைகளை தொகுத்து ஒரு முழுத்தொகுப்பை வெளியிட்டார். பின்னர் 2002ல் காலச்சுவடு வெளியீடாக ஆத்மாநாம் எழுதிய 156 கவிதைகள் ஒரு தொகுப்பாக வெளிவந்தன.
கவிஞர் ஆத்மாநாம் விருது
கவிஞர் ஆத்மாநாம் இலக்கியப் பங்களிப்புகளை நினைவூட்டும் வகையில் மெய்ப்பொருள் பதிப்பகம் 'கவிஞர் ஆத்மாநாம் அறக்கட்டளை’யைக் கடந்த 2015-ஆம் ஆண்டு தொடங்கி ஆண்டுதோறும் கவிஞர் ஆத்மாநாம் பெயரில் ரூ.25,000 பரிசுத்தொகையும் விருதும் வழங்கி வருகிறது.
மறைவு
ஆத்மாநாம், அஃபெக்ட்டிவ் டிஸார்டர் என்ற மனமுறிவு நோய்க்குள்ளாகி, 1979 முதல் மருத்துவ சிகிச்சை எடுத்துவந்தார் என்று அவர் நண்பர் ஸ்டெல்லா புரூஸ் சொல்கிறார். ஆத்மா நாம் நோய் முதிர்ந்து ஜூலை 06, 1984-ல் கிணற்றில் குதித்துத் தற்கொலை செய்துகொண்டார்.
இலக்கிய இடம்
தமிழ் நவீனக் கவிதையின் வளர்ச்சிக்காலகட்டமான 1970-களில் கவிதைகள், கவிதையியல் பற்றிய உரையாடல், கவிதைக்கென ஒரு பத்திரிகை, கவிதை மொழிபெயர்ப்பு எனப் பன்முகமான பங்களிபை வழங்கியவர் ஆத்மாநாம்.
பிறப்பு, வளர்ப்பு, தேசம், மொழி, ஜாதி, மதம் இவற்றின் குறுகல்கள் தாண்டிய முகம் இவருடையது. ஒரு தமிழ் நகரத்தில் வாழ்ந்த தமிழனின் நவீனக்கவிதைகளாக இவை இருக்கின்றன. இந்தக் கவிதைகளின் வேர் இந்த மண்ணில் இருக்கிறது. இந்த மண்ணின் வேதனை இந்தக் கவிதையிலும் இருக்கிறது." என்று எழுத்தாளர் சுந்தர ராமசாமி குறிப்பிடுகிறார்.
படைப்புகள்
- ஆத்மாநாம் படைப்புகள் (பதிப்பாசிரியர் பிரம்மராஜன்)
உசாத்துணை
- ஆத்மாநாம் கவிதைகள் - சுந்தர ராமசாமி
- ஆத்மாநாம் பிரம்மராஜன் உரையாடல்
- ஆத்மாநாம் கவிதைகள் பிரமிள் இணையப்பக்கம்
- ஆத்மாநாம் படைப்புகள், அழியாச்சுடர்கள்
- ஆத்மாநாம் படைப்புகள் பற்றி ஆத்மார்த்தி
- என் நண்பர் ஆத்மாநாம் ஸ்டெல்லா புரூஸ். சொல்வனம்
- ஆத்மாநாம் நினைவுகள் எஸ்.வைத்தீஸ்வரன்
- ஆத்மாநாம் கவிதைகள் விமர்சனக்குறிப்பு