சித்தர் அம்மணி அம்மாள்

From Tamil Wiki
Revision as of 23:01, 30 December 2022 by ASN (talk | contribs) (Page created; Para Added, Images Added,)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
அம்மணி அம்மாள் சமாதி
அம்மணி அம்மாள் சமாதி ஆலயம்

அம்மணி அம்மாள் (அருள்மொழி) (1735-1785) ஒரு பெண் சித்தர். திருவண்ணாமலை ஆலயத்தின் வடபுறத்தில் உள்ள கோபுரத்தை நிர்மாணித்தவர். அக்கோபுரம் அவர் பெயரால் ‘அம்மணி அம்மாள்’ கோபுரம் என்று அழைக்கப்படுகிறது. இவரது காலம் பதினேழாம் நூற்றாண்டின் முற்பகுதி.

பிறப்பு

அம்மணி அம்மாள், பொதுயுகம் 1735ல், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள சென்னசமுத்திரத்தில், கோபால் பிள்ளை-ஆயி தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தார். இயற்பெயர் அருள்மொழி.

சிவபக்தி

அம்மணி அம்மாள், இளம் வயதிலேயே மிகுந்த சிவபக்தி உடையவராக இருந்தார். தினந்தோறும் தேவாரம், திருவாசகம் போன்றவற்றை ஓதுவதையும், சிவாலயத்திற்கு சென்று வழிபடுவதையும் தனது வழக்கமாக வைத்திருந்தார். பெற்றோர்கள் திருமண ஏற்பாடு செய்தபோது அதனைப் புறக்கணித்தார்.

தொடர்ந்து பெற்றோர் வலியுறுத்தியதால் மன வேதனையுற்ற அம்மணி அம்மாள், சிவநாமத்தை உச்சரித்தவாறே அவ்வூரில் இருந்த குளத்துக்குள் குதித்தார். பதறிய ஊர் மக்கள் குளத்துக்குள் இறங்கிப் பல மணி நேரம் தேடியும் அவர் கிடைக்கவில்லை.

சித்து விளையாட்டு

மூன்று நாட்கள் கழிந்த பிறகு அதே குளத்தில் இருந்து எழுந்து வந்தார் அம்மணி அம்மாள். திகைத்த ஊர் மக்களும் பெற்றோரும் அவர் ஒரு சித்தர் என்பதை உணர்ந்துகொண்டனர். அது முதல் அவரது பணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருந்தனர்.

அம்மணி அம்மாள் பல்வேறு சித்துவேலைகளைச் செய்தார். மணலை எடுத்துக் குழந்தைகளுக்குக் கொடுக்க, அவை அவல் பொரியாகவும், இனிப்பு மிட்டாய்களாகவும் மாறிவிடும். பிறர் அறியாமலேயே அவர்கள் தங்கள் மனதில் நினைப்பதை, அவர்கள் வாழ்க்கையில்  நிகழ்ந்ததை அறியும் ஆற்றல் அவருக்கு இருந்தது. பிறரது நோய்களைப் பற்றி அறிந்து திருநீறை மருந்தாக அளித்து அந்நோய்களைக் குணமாக்கினார். தன்னை நாடி வந்த மக்களுக்குப் பல்வேறு நன்மைகளைச் செய்தார்.

அண்ணாமலையில்

நாளடைவில் திருவண்ணாமலை தலத்துக்கு வந்த அம்மணி அம்மாள் அங்கேயே தங்கி தனது வாழ்க்கையைத் தொடர்ந்தார். எப்போதும் சிவனையே வழிபட்டு தியானம் செய்து வந்தார். நாளடைவில் அவருக்குச் சிவ தரிசனமும் கிடைத்தது.

அம்மணி அம்மாள் கோபுரம்

ஆலயத் திருப்பணி

அண்ணாமலை ஆலயச் சீரமைப்புப் பணியை மன்னர்கள் உட்பட பலரும் மேற்கொண்டனர். ஆனால், ஆலயத்தின் வடபுறம் உள்ள கோபுரப் பணிகள் மட்டும் தொடர்ந்து தடைப்பட்ட வண்ணமாகவே இருந்தன. பல முயற்சிகளை மேற்கொண்டும் வடபுறம் கோபுரத்தை அமைக்க முடியாமல் இருந்தது.

அது கண்டு மனம் வருந்திய அம்மணி அம்மாள், தானே முயன்று அதனைப் பூர்த்தி செய்வது என்று உறுதி பூண்டார். தியானத்தில் ஸ்ரீ அருணாசலேஸ்வரரின் அனுமதியைப் பெற்றுச் செயலில் இறங்கினார். கோபுரப் பணிகளுக்காக வசதியுள்ள ஒவ்வொருவரிடமும் சென்று அதற்கான பொருளைத் திரட்டினார். சிலர் அவரது சித்தாற்றலை உணர்ந்து அந்தப் பணிகளுக்கு உதவினர். சிலர் மட்டும், பணத்தை ஒளித்து வைத்து விட்டு இல்லை என்று பொய் கூறினர். தனது தவ ஆற்றலால் அதனை உணர்ந்த அம்மணி அம்மாள், “உள்ளே இந்தப் பெட்டியில், இந்தப் பையில், இந்த இடத்தில் இவ்வளவு பணம் இருக்கிறது. நகைகளாக இவ்வளவு பொருள்கள் இருக்கின்றன. இவ்வளவு இருந்தும் இல்லையென்று பொய் புகன்றால் அது நியாயமாகாது. ஆலயத் திருப்பணிக்கு உதவுவது உங்கள் கடமை. அது குடும்ப வளர்ச்சிக்கும் உதவும்” என்று கூறுவார்.

அவரது ஆற்றல் கண்டு வியந்த செல்வந்தர்கள், உடனடியாக தம்மால் இயன்ற பொருள்களைக் கொடுத்து உதவினர். பொது மக்கள், செல்வந்தர்கள், மைசூர் மன்னர் எனப் பலரது உதவியைப் பெற்ற அம்மணி அம்மாள் கோபுரப் பணியைத் தொடங்கினார்.

அம்மாள் செய்த அற்புதம்

தினந்தோறும் ஆலயத் திருப்பணிகள் முடிந்தவுடன் வேலையாட்களுக்கு கூலிக்கு பதிலாக விபூதியை அளித்தார் அம்மணி அம்மாள். அவர்கள் அதனைப் பெற்று, வீட்டிற்குச் சென்று பார்க்கும் போது, அவர்கள் வேலைக்கேற்ற கூலித் தொகையாய் அது மாறியிருந்தன. அந்த அளவிற்கு அற்புதமான ஆற்றல் பெற்றவராய் அவர் இருந்தார்.

அம்மணி அம்மாள் கோபுரம்

அம்மணி அம்மாள் கோபுரம்

அம்மணி அம்மாளின் அயராத முயற்சியின் விளைவால் கோபுரத்தின் 11 நிலைகளும் கட்டி முடிக்கப்பட்டன. 171 அடி உயரமுள்ள அந்தக் கோபுரம், கிழக்கில் உள்ள ராஜகோபுரத்துக்கு இணையானதாகக் கருதப்படுகிறது. காரணம், இரண்டு கோபுரங்களிலும்  தலா 13 கலசங்கள் இருக்கின்றன. தெற்கில் உள்ள திருமஞ்சனக் கோபுரமும் (157 அடி) மேற்கில் உள்ள மேற்குக் கோபுரமும் (144 அடி) அம்மணி அம்மாள் கோபுரத்தை விட உயரம் குறைந்ததாகும்.

தன்னந்தனியாக ஒரு பெண் செய்த திருப்பணியால் விளைந்த அக்கோபுரம் அவர் பெயராலேயே ‘அம்மணி அம்மாள் கோபுரம்’ என்று அழைக்கப்படுகிறது.

அம்மணி அம்மாள் சித்தர் பீடம் (சமாதி ஆலயம்)

சமாதி

வாழ்வாங்கு வாழ்ந்து நிறைவெய்திய அம்மணி அம்மாள், 1785 ஆம் ஆண்டு தைப்பூச தினத்தன்று, திருவண்ணாமலையில் மகாசமாதி ஆனார்.

சமாதி அமைவிடம்

அம்மணி அம்மாளின் ஜீவசமாதி, திருவண்ணாமலையில் அஷ்டலிங்கங்களில் ஒன்றான ஈசான்ய லிங்கம் எதிரே, ஈசான்ய ஞான தேசிகர் மடத்துக்கு அருகில் அமைந்துள்ளது.

உசாத்துணை