முத்தம்மாள் பழனிசாமி

From Tamil Wiki
Revision as of 17:13, 10 February 2022 by Navin Malaysia (talk | contribs) (முத்தம்மாள் பழனிசாமி)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
முத்தம்மாள் பழனிசாமி

முத்தம்மாள் பழனிசாமி ஓர் மலேசிய எழுத்தாளர். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளிலும் இவரது நூல் வெளியாகியுள்ளன. இவரது 'நாடு விட்டு நாடு' என்ற நூல் தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க சுய வரலாற்று நூல்.

தனி வாழ்க்கை

முத்தம்மாள் பழனிசாமி பிப்ரவரி 5, 1933இல் சித்தியவான் வட்டாரத்தில் அமைந்துள்ள செமாலுன் கம்பத்தில் பிறந்தார். இவரது தந்தையில் பெயர் பழனிசாமி. தாயாரின் பெயர் பழனியம்மாள். ஐந்து சகோதரிகள் இரு சகோதரர்கள் உள்ள குடும்பத்தில் இரண்டாவது பிள்ளையாகப் பிறந்தார். ஆரம்பக் கல்வியை வால்புரோக் தோட்ட தமிழ்ப்பள்ளியில் பயின்றவர் இடைநிலைக்கல்வியை தைப்பிங் நகரில் அமைந்துள்ள காண்வென்ட் பள்ளியில் தொடர்ந்தார். பின்னர் சித்தியவானில் அமைந்துள்ள ஏ.சி.எஸ் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டே ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் பயிற்சி பெற்றார்.  முப்பத்து ஐந்து வருடங்கள் பணியாற்றியவர்  1988ஆம் ஆண்டு தலைமை ஆசிரியராகப் பணி ஓய்வு பெற்றார். 1960இல் ஆங்கிலேயரைத் திருமணம் செய்துக்கொண்ட இவருக்கு நான்கு பிள்ளைகள். கணவரின் பெயர் Spence s/o RC Grant

இலக்கிய வாழ்க்கை

இந்தியன் மூவி நியூஸ் இதழில் 'கடல் கன்னி' எனும் சிறுகதையை 1950களில் எழுதி இலக்கிய உலகில் அறிமுகமானார். தொடர்ந்து இந்தியன் மூவி நியூஸில் படைப்புகளை எழுதினார். தமிழ் ஆங்கிலம் என ஆசிரியர் தொழில் குறித்து கட்டுரைகள் எழுதியுள்ளார். 2003இல் தன் பேரக்குழந்தைகளுக்குக் குடும்ப வரலாற்றைச் சொல்லும் பொருட்டு ஆங்கிலத்தில் இவர் எழுதிய நூல் 'From Shore to Shore'. பின்னர் 2005இல் அந்நூலை தமிழில் 'நாடு விட்டு நாடு' எனும் தலைப்பில் முதல் பாகத்தை வெளியிட்டார். 2006இல் விரிவான பதிப்பாக இந்நூல் வெளிவந்து கவனம் பெற்றது. 2008இல் 'நாட்டுப்புற பாடல்களில் என் பயணம்' என்ற தலைப்பில் மலேசிய நாட்டுப்புற பாடல்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டார்.

இலக்கிய இடம்

'நாடு விட்டு நாடு' எனும் இவரது  நூல் தமிழில் வந்த குறிப்பிடத்தக்க சுய வரலாற்று நூல் ஆகும். இந்நூல் வழி சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் கோயம்பத்தூரிலிருந்து சஞ்சிக்கூலியாக மலாயா வந்து முன்னேறிய குடும்பத்தின் கதையைப் பதிவு செய்துள்ளார். அதே சமயம் இவர் தொகுத்த 'நாட்டுப்புற பாடல்களில் என் பயணம்' முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.

கௌரவிப்பு

  • 2011இல் வல்லினம் இலக்கியக் குழு இவரது படைப்புலகம் குறித்த உரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தது.

நூல்கள்

  • From Shore to Shore - 2003
  • நாடு விட்டு நாடு (பாகம் 1) - 2005
  • நாடு விட்டு நாடு (பாகம் 2) - 2006
  • நாட்டுப்புற பாடல்களில் என் பயணம் - 2008

உசாத்துணை

  • மீண்டு நிலைத்த நிழல்கள் - ம.நவீன்

இணைய இணைப்பு