ப. தமிழ்மாறன்
ப.தமிழ்மாறன் ( ) மலேசியாவின் தமிழாய்வாளர். கல்லூரி ஆசிரியர். கூலிம் நவீன இலக்கியக் களம் அமைப்பின் செயல்பாட்டாளர்களில் ஒருவர்.
பிறப்பு, கல்வி
தமிழ்மாறன், கெடா மாநிலத்தின் பாடாங் செராய் பகுதியிலிருக்கும் விக்டோரியா தோட்டத்தில் 1961 ஆம் ஆண்டு ஜூலை திங்கள் 18 ஆம் தேதி திரு பல்ராம் திருமதி கமலா இணையரின் மூத்த மகனாகப் பிறந்தார்.
தமிழ்மாறன் விக்டோரியா தமிழ்ப்பள்ளியில் 1968 தொடங்கி 1973 வரை தொடக்கக்கல்வியைப் பயின்றார். பாடாங் செராய் இடைநிலைப்பள்ளியில் படிவம் மூன்று வரையிலும் கூலிம் இடைநிலைப்பள்ளியில் ஐந்தாம் படிவம் வரையிலும் பயின்றார். தன்னுடைய ஆறாம் படிவக் கல்வியைச் சுங்கைப்பட்டாணியிலிருக்கும் கிர் ஜொகாரி இடைநிலைப்பள்ளியில் 1979 ஆம் ஆண்டு நிறைவு செய்தார். ஸ்ரீ கோத்தா ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் வரலாற்றுப்பாடத்தை முதன்மைப்பாடமாக 1981 ஆம் ஆண்டு பயின்றார்.
தனிவாழ்க்கை
பேராக் மாநிலத்தின் லெங்கோங் தோட்டத் தமிழ்ப்பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரியத் தொடங்கினார். 1990 முதல் 2001 ஆம் ஆண்டு வரையில் கூலிம் கான்வெண்ட் இடைநிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 2001 ஆம் ஆண்டு தொடங்கி 2019 ஆம் ஆண்டு வரையில் சுங்கைப்பட்டாணி ஆசிரியர் கல்விக்கழகத்தின் தமிழ்த்துறை விரிவுரைஞராகப் பணியாற்றினார். 2020 ஆம் ஆண்டு தொடங்கி 2021 ஆம் ஆண்டு வரையில் பினாங்கு ஆசிரியர் கல்விக்கழகத்தில் விரிவுரைஞராகப் பணியாற்றி 2021 ஆம் ஆண்டு பணி நிறைவு பெற்றார்.
தமிழ்மாறன் – சரஸ்வதி இணையருக்கு சக்திபாரதி, பூர்ணபாரதி, சூர்யபாரதி ஆகிய மூன்று குழந்தைகள் இருக்கின்றனர்.
இலக்கியப்பணிகள்
மலேசியத் தமிழ் அறிவுச்சூழலில் பல முக்கியமான கருத்தரங்குகளில் கட்டுரைகளைப் படைத்திருக்கிறார் தமிழ்மாறன். உலகத் தமிழிலக்கிய மாநாடு, பன்னாட்டுத் தமிழ் இணைய மாநாடு என மலேசியத் தமிழ் அறிவுச்சூழலில் முக்கியமான பல கருத்தரங்குகளில் மிக விரிவான ஆய்வுக்கட்டுரைகளைப் படைத்திருக்கிறார். அத்துடன் தான் வாசிக்கும் நூல்கள் குறித்த மதிப்புரைகளையும் வழங்கியுள்ளார். மேலும், தலைமையாசிரியராகவும் பாரதி நெஞ்சராகவும் பல பணிகள் ஆற்றிய குழ.ஜெயசீலன் எனும் தமிழ்த்தொண்டரின் வாழ்வையும் செயற்பாடுகளையும் நூலாகத் தொகுத்து வெளியிட்டிருக்கிறார்.