ஆர். சண்முகசுந்தரம்
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.
ஆர். சண்முகசுந்தரம் ( ஆர். ஷண்முகசுந்தரம்) (1917-1977) தமிழின் நவீன எழுத்தாளர்களில் ஒருவர். தமிழ்நாட்டின் கொங்கு வட்டார மக்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இவர் எழுதிய நாவல்கள் தமிழிலக்கியத்தில் யதார்த்தவாத அழகியல் மரபை உருவாக்கிய முன்னோடிப்படைப்புகளாக கருதப்படுகின்றன.
தனிவாழ்க்கை
ஆர். சண்முகசுந்தரம் பழைய கோயம்புத்தூர் மாவட்டத்தில், [இன்றைய திருப்பூர்] உள்ள கீரனூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். தற்போது இந்த கிராமம் திருப்பூர் மாவட்டத்தின் பகுதியாக உள்ளது. இவர் கீரனூர் கிராமத்தில் செல்வாக்குமிக்க செங்குந்தர் கைக்கோள முதலியார் குடும்பம் ஒன்றில் பிறந்தவர். இவரது தாயார் ஜானகி அம்மாள், தந்தை பெயர் எம். இரத்தினாசல முதலியார். சண்முகசுந்தரத்தின் மனைவி பெயர் வள்ளியம்மாள். இவரது சிறு வயதிலேயே தாயார் இறந்துவிட்டார். பின் பாட்டியின் அரவணைப்பில் வளர்ந்தார். காந்தியக் கொள்கையில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர் தனது வாழ்க்கை முறையாக அதனை கடைபிடித்தார். 1977-ஆம் ஆண்டு தனது அறுபதாவது வயதில் இயற்கை எய்தினார்.
இலக்கிய வாழ்க்கை
ஆர். சண்முகசுந்தரத்தின் முதல் சிறுகதையான “பாறையருகே” பி.எஸ்.ராமையா ஆசிரியராக இருந்த மணிக்கொடி இதழில் 1937-ல் வெளியானது. “நந்தா விளக்கு” என்ற சிறுகதையும் மணிக்கொடி இதழில் வெளிவந்தது. பின்னர் இவர் தன் தம்பி ஆர். திருஞானசம்பந்தத்துடன் இணைந்து “வசந்தம்” என்னும் இதழை நடத்தினார். இருவரும் புதுமலர் நிலையம் என்னும் பதிப்பகம் மூலமாக பல நூல்களை வெளியிட்டார்கள். வசந்தம் இதழின் கௌரவ ஆசிரியராக பொருளாதார நிபுணர் ஆர்.கே. சண்முகம் செட்டியார் இருந்தார்.
1939-ல் நாகம்மாள் என்னும் முதல் நாவலை எழுதினார். அந்நாவல் 1942-ல்தான் வெளிவந்தது. இவர் மொத்தம் 18 நாவல்கள் எழுதியுள்ளார். “சட்டிசுட்டது” இவரது சிறந்த நாவல்களில் மற்றொன்று. சரத் சந்திரர், பங்கிம் சந்திரர், விபூதிபூஷன் பந்தோபாத்யாய, தாராசங்கர் பானர்ஜி முதலிய வங்க புதின ஆசிரியர்களின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். இவர் எழுதிய “ரோஜா ராணி” எனும் சிறுவர் நூல் 1968-ஆம் ஆண்டு வெளிவந்தது. ஒன்பது சிறுகதைகளை கொண்ட தொகுப்பு நூல் அது. ஆலோலம் என்ற புனைபெயரில் அரசியல் கட்டுரைகள் ‘சுதேசமித்திர’னிலும், ‘நவசக்தி’யிலும் எழுதினார்.
அமைப்புப்பணிகள்
1944-ல் முதலாக தமிழகத்தில் தொடங்கப்பட்ட தமிழ் எழுத்தாளர் சங்கத்தில் பெரும்பங்கு வகித்தார். கோவையில் முதலாவது தமிழ் எழுத்தாளர் மாநாட்டை நடத்தினார். தன் சகோதரர் ஆர். திருஞானசம்பந்தத்துடன் இணைந்து ‘வசந்தம்” என்ற இலக்கியப் பத்திரிகையை நடத்தினார். புதுமலர் நிலையம் என்ற பெயரில் பதிப்பகமும் நடத்தினார்.
மொழியாக்கப் படைப்புகள்
ஆர். சண்முகசுந்தரம் சரத்சந்திரர் எழுதிய ‘அசலா’ என்ற நாவலை வங்கத்தில் இருந்து மொழியாக்கம் செய்தார். ஆனால் அது நூல் வடிவில் வெளிவருவதற்கு முன்பே அடுத்து மொழிபெயர்த்த “சந்திரநாத்” என்ற நாவல் ஆனந்தவிகடனில் அதன் ஆசிரியர் கல்கியால் வெளியிடப்பட்டது. சக்தி வை. கோவிந்தன் தன் சக்தி பதிப்பகம் வழியாக வெளியிட்ட அசலா பெரும் வரவேற்பைப் பெற்றது. இந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து சரத்சந்திரர், பங்கிம் சந்திரர், ரமேஷ் சந்திரதத், தாராசங்கர் பானர்ஜி, தாகூரின் சிறுகதைகள் ஆகியவற்றை மொழியாக்கம் செய்திருக்கிறார்.
இலக்கிய இடம்
நாகம்மாள்தான் தமிழ் இலக்கியத்தின் முதல் இயல்புவாத நாவல் என திறனாய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்நாவலுக்கு கு.ப. ராஜகோபாலன் முன்னுரை எழுதினார். க.நா.சு. இந்நாவலை பற்றி, “நான் படித்துள்ள வரையில் பூரணப்பொலிவுடன் கலையம்சங்கள் சிறந்த ஒரு கிராமிய நாவல் என்று ஸ்ரீ ஆர். ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாளைத்தான் சொல்ல வேண்டும். கொங்கு நாட்டுக் கிராமத்து வாழ்க்கை அந்த நாவலிலே அப்படியே உருவம் பெற்றிருக்கிறது. அந்த வாழ்க்கையைப் போலவே ஷண்முகசுந்தரத்தின் நடையும் கொங்குநாட்டு மணத்தை அள்ளி வீசுகிறது. ஒரு சிறு நாவல் இது. கதையென்று சொல்லும்படியாகப் பெரிதாக ஒன்றுமில்லை. உள்ள வரையில் வெகுமிடுக்காக, நேராக நடக்கிறது. இந்த நாவலிலே வந்து நடமாடுகிற உயிருள்ள பாத்திரங்களும், அவர்கள் பேசுகிற உயிருள்ள தமிழும் தான் முக்கியம். இந்த இரண்டிலும் ஷண்முகசுந்தரத்தின் அளவு தமிழ் நாவலில் வெற்றி கண்டவர்கள் வேறு யாருமில்லை என்பது என் அபிப்பிராயம்” என்கிறார். சுந்தர ராமசாமி நாகம்மாள் நாவலை தமிழில் எழுதப்பட்ட சிறந்த நாவல்களில் ஒன்று என மதிப்பிடுகிறார்.
தமிழில் நவீன இலக்கியம் தோன்றிய காலகட்டத்தில் உருவான யதார்த்தவாதப் படைப்புகள் ’நாகம்மாள்‘, 'சட்டி சுட்டது’ ஆகியவை. அக்காலகட்டத்தில் இலட்சியவாத நோக்கிலும், வாசக ஈர்ப்பை கருதியும் மிகையான உணர்வுகளை உருவாக்குதல், கதாபாத்திரங்களை வார்ப்புருக்களாக அமைத்தல், பரபரப்பான நிகழ்வுகளைச் சேர்த்தல், கதைக்கு நடுவே கருத்துரைகளை புகுத்துதல் போன்ற பல எழுத்துமுறைகள் பரவலாக இருந்தன. அவை யதார்த்தவாத அழகியலுக்கு மாறானவை. அந்தவகையான எழுத்துக்குப் பழகிய பொது வாசகர்கள் யதார்த்தவாத எழுத்தை ரசிக்கும் உளநிலையிலும் இருக்கவில்லை. அச்சூழலில் கச்சிதமான மிகையற்ற யதார்த்தவாத எழுத்துக்களாக வெளிவந்த ஆர்.ஷண்முகசுந்தரத்தின் எழுத்துக்கள் மிகச்சிறந்த முன்னுதாரணங்களாக அமைந்தன. பின்னாளில் ஹெப்ஸிபா ஜேசுதாசன், கு.சின்னப்பபாரதி போன்றவர்கள் உருவாக்கிய யதார்த்தவாத எழுத்துக்கு அவையே முன்வடிவங்கள். அவ்வகையிலேயே க.நா.சுப்ரமணியம் ஆர். சண்முகசுந்தரத்தின் படைப்புக்களை முதன்மைப்படுத்தினார்.
ஆர். சண்முகசுந்தரம் யதார்த்தவாத எழுத்திலுள்ள ஆசிரியரின் தரப்பு கூட இல்லாமல் நேரடியாகவே புறவயமான யதார்த்தத்தை மட்டும் முன்வைத்தவர். ஆகவே அவருடைய எழுத்து இயல்புவாத [நேச்சுரலிசம்] எழுத்துக்கான தொடக்ககால உதாரணம் என்று குறிப்பிடலாம்.
மறைவு
ஆர். சண்முகசுந்தரம் தன் அறுபதாவது வயதில் 1977-ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
ஆய்வுகள்
ஆர். சண்முகசுந்தரம் பற்றி வந்துள்ள முக்கிய நூல்கள் வருமாறு:
- கொங்கு மணம் கமழும் நாவல்கள் - டி.சி. ராமசாமி
- ஆர். சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை - பெருமாள்முருகன்
- இலக்கியச் சிற்பிகள் வரிசை: ஆர். சண்முகசுந்தரம் - சிற்பி பாலசுப்பிரமணியன்
படைப்புகள்
நாவல்கள்
- நாகம்மாள் (1942)
- பூவும் பிஞ்சும் (1944)
- பனித்துளி (1945)
- அறுவடை (1960)
- இதயதாகம் (1961)
- எண்ணம் போல் வாழ்வு, விரிந்த மலர் (1963)
- அழியாக்கோலம் (1965)
- சட்டி சுட்டது (1965)
- மாலினி (1965)
- காணாச்சுனை (1965)
- மாயத்தாகம் (1966)
- அதுவா இதுவா (1966)
- ஆசையும் நேசமும் (1967)
- தனிவழி (1967)
- மனநிழல் (1967)
- உதயதாரகை (1969)
- மூன்று அழைப்பு (1969)
- வரவேற்பு (1969)
சிறுகதைகள்
- நந்தா விளக்கு (சிறுகதைத் தொகுப்பு)
- மனமயக்கம் (சிறுகதைத் தொகுப்பு)
நாடகங்கள்
- புதுப்புனல் (நாடகத் தொகுப்பு)
சிறார் நூல்கள்
- ரோஜா ராணி (தொகுப்பு - 1968)
மொழிபெயர்ப்புகள்
- பதேர்பாஞ்சாலி – (மூலம்: விபூதிபூஷன் பந்தோபாத்யாய)
- கவி (தாரசங்கர் பானர்ஜி]
- சந்திரநாத் - (மூலம்: சரத் சந்திரர்)
- பாடகி
- அபலையின் கண்ணீர்
- தூய உள்ளம்
- இந்திய மொழிக் கதைகள் (1964)
உசாத்துணை
- https://senguntharmudaliarhistory.blogs pot.com/2020/10/blog-post_16.ht
- ஆர் சண்முகசுந்தரம்- தினமணி
- ஓலைச்சுவடி கட்டுரை
- ஆர்.சண்முகசுந்தரம்- வாழ்க்கை வரலாறு
- http://vjpremalatha.blogspot.com/2020/04/blog-post_7.html
- நூலகம் இதழ் பேட்டி நூலகம், மார்ச் 1971
- தமிழ்நாவல் 50 - (தி.க. சிவசங்கரன் நாகம்மாள் என்னும் தலைப்பில் கட்டுரை) பத்தினிக்கோட்டப்பதிப்பகம்
- தமிழ்நாவல்கள் ஒரு மதிப்பீடு (சண்முகசுந்தரத்தின் நாவல்கள் - தா.வே. வீராசாமி) என்.சி.பி.ஹெச்.
- ஆர். சண்முகசுந்தரம் படைப்புகள் குறித்து 'ஆர். ஷண்முகசுந்தரத்தின் கிராமங்கள்' என்னும் தலைப்பில் சுந்தர ராமசாமி கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.
- தமிழியல் (சண்முகசுந்தரத்தின் நாவல்களில் சமூக மாற்றம், தா.வே. வீராசாமி)
- பெண்ணியம் (நாகம்மாள் என்னும் தலைப்பில் ஜ. பிரேமலதா எழுதிய கட்டுரை) கலைஞன் பதிப்பகம்
முனைவர் பட்ட ஆய்வுகள்:
- ஆர். சண்முகசுந்தரத்தின் மொழிநடை - இ. முத்தையா - மதுரைப்பல்கலைக்கழகம்
- ஆர். சண்முகசுந்தரத்தின் நாவல்கள் ஓர் ஆய்வு - மு. ஜான்சிராணி - சென்னைப்பல்கலைக்கழகம்
- ஆர். சண்முகசுந்தரத்தின் படைப்பாளுமை - பெருமாள்முருகன் - சென்னைப்பல்கலைக்கழகம்
- கொங்கு வட்டார நாவல்கள் - ப.வே. பாலசுப்ரமணியன் - சென்னைப்பல்கலைக்கழகம்
- ஆர். சண்முகசுந்தரத்தின் புதினங்களில் மகளிர் நிலை - ஒரு பெண்ணிய நோக்கு - ஜ. பிரேமலதா - அன்னை தெரசாபல்கலைக்கழகம்