ஈழத்துப் பூதந்தேவனார்

From Tamil Wiki

ஈழத்துப் பூதந்தேவனார் சங்ககாலத்தைச் சேர்ந்த ஈழத்து புலவர். இலங்கைத் தமிழ் இலக்கிய வரலாற்றை ஈழத்துப் பூதந்தேவனாருடன் தொடங்குவது மரபாக உள்ளது. சங்கத்தொகைப்பாடல்களில் இவர் பாடிய ஏழு பாடல்கள் உள்ளன.

வாழ்க்கைக் குறிப்பு

ஈழத்துப் பூதந்தேவனார் இலங்கையில் ஈழத்துப் பூதனுக்கு மகனாகப் பிறந்தார். ஈழநாட்டிலிருந்து பாண்டியநாடு சென்று மதுரைச் சங்கத்தில் புலவராக இருந்தார். இவர் தனது தந்தையாகிய ஈழத்துப் பூதனோடு மதுரை சென்று, கற்றுப் புலவரானார் என்றும் நம்பப்படுகிறது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் 1998-ல் நிகழ்ந்த நினைவுப் பேருரை ஒன்றில் பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை ஈழநாட்டைச் சேர்ந்த புலவரான ஈழத்துப் பூதந்தேவனார் பொயு 3ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர் என பல சான்றுகளை முன்வைத்து எடுத்துக்காட்டினார்.

இலக்கிய வாழ்க்கை

ஈழத்து பூதந்தேவனார் பாடிய பாடல்கள் நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு ஆகியவற்றில் உள்ளன.

பாடல்கள்
  • அகநானூறு (88, 231, 307)
  • குறுந்தொகை (189, 343, 360)
  • நற்றிணை (366)

பாடல் நடை

  • அகநானூறு 88

முதைச் சுவற் கலித்த மூரிச் செந்தினை
ஓங்கு வணர்ப் பெருங் குரல் உணீஇய, பாங்கர்ப்
பகுவாய்ப் பல்லிப் பாடு ஓர்த்து, குறுகும்
புருவைப் பன்றி வரு திறம் நோக்கி,
கடுங் கைக் கானவன் கழுதுமிசைக் கொளீஇய
நெடுஞ் சுடர் விளக்கம் நோக்கி, வந்து, நம்
நடுங்கு துயர் களைந்த நன்னராளன்

  • குறுந்தொகை 189

இன்றே சென்று வருவது நாளைக்
குன்றிழி அருவியின் வெண்டேர் முடுக
இளம்பிறை யன்ன விளங்குசுடர் நேமி
விசும்புவீழ் கொள்ளியிற் பைம்பயிர் துமிப்பக்
காலியற் செலவின் மாலை எய்திச்
சின்னிரை வால்வளைக் குறுமகள்
பன்மா ணாக மணந்துவக் கும்மே.

  • நற்றிணை 366

அரவுக் கிளர்ந்தன்ன விரவுறு பல் காழ்
வீடுறு நுண் துகில் ஊடு வந்து இமைக்கும்
திருந்துஇழை அல்குல், பெருந் தோட் குறுமகள்
மணி ஏர் ஐம்பால் மாசு அறக் கழீஇ

உசாத்துணை