under review

இருபது வருஷங்கள்

From Tamil Wiki
Revision as of 21:44, 8 January 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed Category:Spc)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
இருபது வருஷங்கள்

இருபது வருஷங்கள் (1965) எம்.எஸ்.கல்யாணசுந்தரம் எழுதிய நாவல். கேசவராவ் என்னும் மருத்துவர் போரில் காயம்பட்டவர்களுக்கு உதவும் நோக்குடன் பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்ந்து, ஒரு தீவில் இருபது ஆண்டுகளை கழித்ததைப் பற்றிய கதை.

எழுத்து, வெளியீடு

1965-ல் எம்.எஸ்.கல்யாணசுந்தரம் இந்நாவலை எழுதினார். இதை கலைஞன் பதிப்பகம் வெளியிட்டது. நீண்ட இடைவேளைக்குப் பின் தமிழினி பதிப்பகம் 2003-ல் இந்நாவலை மறுபதிப்பு செய்தது.

கதைச்சுருக்கம்

'இருபது வருஷங்கள்' காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு தனது வாழ்வை சமூகத்துக்கு அர்ப்பணிக்கும் கேசவ் ராவ் எனும் மருத்துவரின் வாழ்க்கையை விவரிக்கும் நாவல். பெரியகுளத்தில் சாரண இயக்கத்தில் தொடங்கி, சமூக மருத்துவமனை, தொழுநோயாளிகளுக்கான மருத்துவமனை என்று சேவைகளை செய்துவரும் கேசவ ராவ் சாகச உணர்வாலும், மேலும் பெரிய பணிகளைச் செய்யவேண்டும் என்னும் நோக்குடனும் இரண்டாம் உலகப் போரில் பிரிட்டிஷ் வீரர்களுக்கு மருத்துவ சிகிச்சை செய்யும்பொருட்டு ராணுவத்தில் சேர்கிறார். மருத்துவராக ஆசியநாடு ஒன்றுக்குச் செல்லும் வழியில் ஜப்பானிடம் போர்க்கைதியாகி 'நியூ பிரிட்டன்' என்னும் தீவுக்கு கைதிகளுடன் அனுப்பப்படுகிறார். நாகரீகம் உருவாகாத அந்தத் தீவில் கைதிகளுக்கு சிகிச்சை அளிக்கிறார். பயிர் செய்யும் முறையை சொல்லித் தருகிறார். தென்னையின் பயன்பாடுகளைக் கற்பிக்கிறார். தீவின் பழங்குடிகளுடன் நட்புகொள்கிறார். போரில் ஜப்பான் வீழ்ந்தபின் நாடு திரும்புகிறார். குடும்பத்துடன் தன் சொந்த ஊரில் நிம்மதியான வாழ்வு அமைந்தாலும் அவர் உள்ளம் நிறைவடையாமல் அந்த இருபது ஆண்டுகளையே தன் வாழ்க்கையின் அர்த்தமுள்ள காலமாக எண்ணுகிறது.

இலக்கிய இடம்

"1930-களில் தொடங்கும் இந்த நாவல் சுதந்திரக்குப் பிந்தைய சில வருடங்களுடன் முடிவடைகிறது. இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜப்பானிய கைதியாக தனித் தீவில் வசிக்கும் நாட்களைச் சித்தரிக்கும் பகுதியே இந்த நாவலில் முக்கியமானது. தொண்டுள்ளம் படைத்த ஒருவனின் உள்ளம் எந்தவிதமான சூழலிலும் தன்னைப் பொருத்திக்கொண்டு அடுத்தவருக்காக இயன்றதைச் செய்யவே விரும்பும் என்பதை உரக்கச் சொல்லும் பகுதி இது. ஒரு சாகச நாவலுக்கு இணையான பகுதியாகவே எம்.எஸ்.கல்யாணசுந்தரம் இதனை எழுதியிருக்கிறார்" என்று விமர்சகர் எம். கோபாலகிருஷ்ணன் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை

எம்.எஸ்.கல்யாணசுந்தரம் - ஒரு லட்சியவாதியின் இலக்கியப் பயணம்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 04-Feb-2023, 20:51:04 IST