under review

ஆர்மேனியன் சர்ச்

From Tamil Wiki
Revision as of 21:43, 8 January 2026 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Removed Category:Spc)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
ஆர்மீனிய திருச்சபை

To read the article in English: Armenian Church. ‎

ஆர்மீனிய சபை

ஆர்மேனியன் சர்ச் (ஆர்மேனிய திருச்சபை, புனித மாதா ஆலயம்) இந்தியாவிலுள்ள மிகப் பழங்கால திருச்சபைகளுள் ஒன்று. 1712-ம் ஆண்டு கட்டப்பட்ட ஆர்மேனியன் பழைய சர்ச் சென்னையிலுள்ள ஜார்ஜ் டவுன் ஆர்மேனியன் வீதியில் அமைந்துள்ளது. அதன் பின் அவ்வளாகம் 1772-ம் ஆண்டு மீண்டும் எடுத்துக் கட்டப்பட்டது. இதன் வளாகத்தில் அமைந்துள்ள மணி கோபுரம் (belfry) மற்றும் அதனுள் அமைந்துள்ள ஆறு மணிகள் என்னும் அமைப்பு வரலாற்று மற்றும் கலை முக்கியத்துவம் வாய்ந்தது.

ஆர்மேனியன் திருச்சபை

திருச்சபை

ஆர்மேனியன் திருச்சபை, தற்போது பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. ஆர்மேனியன் திருச்சபையின் வளாகத்தில் முன்னூற்று ஐம்பதிற்கும் மேலான ஆர்மேனியர்களின் கல்லறை உள்ளது. இந்த திருச்சபைக்கான நிதியை ஆர்மேனிய மக்களின் தேசிய திருச்சபை எனச் சொல்லப்படும் Armenian Apostolic Church வழங்குகிறது. இதன் பராமரிப்பு பணியை கொல்கத்தா, ஆர்மேனியன் திருச்சபை குழு பார்க்கிறது.

இந்த ஆர்மேனியன் திருச்சபையில் இரண்டு முக்கிய இடங்கள் உள்ளன,

  • உலகின் முதல் ஆர்மேனியன் பத்திரிகையின் ("அஸ்டரார் (Azdarar)") நிறுவனர் மற்றும் எடிட்டராக இருந்த ரெவரெண்ட் ஹரொவ்டியூன் ஷ்மாவோனியனின் (Reverend Haroutiun Shmavonian) உடலை இந்த திருச்சபையின் வளாகத்தில் அடக்கம் செய்தனர்.
  • இந்த ஆலயத்தின் வளாகத்தில் அமைந்திருக்கும் மணி கோபுரம் ஆறு மணிகளை தாங்கி இரண்டிரண்டாக ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கப்பட்டிருக்கிறது.

மணி கோபுரம்

ஆர்மேனியன் திருச்சபையின் மணி கோபுரம் 1754-ம் ஆண்டு கட்டப்பட்டது. இதனுள் அமைந்துள்ள ஆறு மணிகளும் இருபத்தொன்று முதல் இருபத்தாறு அங்குலம் அளவு வேறுபாடு கொண்டது. ஒவ்வொரு மணியும் நூற்றி ஐம்பது கிலோ எடை கொண்டது. இவையே சென்னையில் உள்ள சர்சுகளில் அளவில் பெரிய, மிகுந்த எடை கொண்ட மணிகள்.

திருச்சபை மணிகள்

ஒரு மணி 1754-ல் நிறுவப்பட்டதாக குறிப்பு உள்ளது. அதனை 1808-ம் ஆண்டு மறுசீரமைப்பு செய்ததற்கான குறிப்புகள் தமிழில் உள்ளது. மற்றொரு மணி நிறுவப்பட்ட ஆண்டு 1778 என்று அதன் மேல் குறிப்பு உள்ளது. இந்த இரண்டு மணிகளின் மேல் உள்ள குறிப்பை கொண்டு ஆய்வாளர்கள் அதனை எலியசார் சாவ்மியர் அவர்களின் நினைவாக கொடுக்கப்பட்டது என்கின்றனர். எலியசார் சாவ்மியர் (Eliazar Shawmier) அவரது பத்தொன்பது வயதில் இறந்ததும் ஆர்மேனியன் திருச்சபையின் வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டார். இவர் சென்னை ஆர்மேனிய வணிகர்களில் முக்கியஸ்தராக இருந்த ஒருவரின் மகன் எனக் குறிப்புகள் தெரிவிக்கின்றன. அவரின் தனிப்பட்ட தேவாலயத்தின் மேல் தற்போதைய திருச்சபை கட்டப்பட்டிருக்கிறது.

மற்ற இரண்டு மணிகளில் 1837-ம் ஆண்டு என்ற குறிப்பு உள்ளது. இதன் மேலுள்ள தாமஸ் மியர்ஸ், நிறுவனர், லண்டன் (Thomas Mears, Founder, London) என்னும் குறிப்பிலிருந்து, இதனை நிறுவியது பிற்காலத்தில் மியர்ஸ் & ஸ்டெயின்பாங்க் என்றழைக்கப்பட்ட Whitechapel Bell Foundry எனத் தெரிகிறது.

ஆர்மேனியர்கள்

ஆர்மேனியர்கள் வணிக குழுக்களாக அன்றைய மெட்ராஸ் மாகாணத்திற்குள் வந்தவர்கள். அவர்கள் ஆர்மேனியாவில் இருந்து ஹிந்துகுஷ் மலைகள் வழியாக சென்னை வந்ததாக நம்பப்படுகிறது. பிரிட்டிஷ் வணிகர்கள் பருத்தி துணிகளை விற்ற போது ஆர்மேனியர்கள் விலை மதிப்புள்ள பட்டுத் துணிகள் மற்றும் விலை உயர்ந்த ரத்தின கற்களை விற்றனர். அன்றைய மெட்ராஸ் மாகாணத்தில் குறைந்த அளவில் ஆர்மேனியர்கள் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. தற்போது ஆர்மேனியர்கள் யாரும் சென்னையில் இல்லை.

உசாத்துணை

வெளி இணைப்புகள்



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 12:06:51 IST