under review

முதுமொழிக்காஞ்சி(பொதுவியல் திணை)

From Tamil Wiki
Revision as of 17:39, 22 November 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

முதுமொழிக்காஞ்சி பொதுவியல் திணையின் காஞ்சிப் பொதுவியல் என்னும் பிரிவில் அடங்கும் துறைகளில் ஒன்று. உலகியல் உண்மைகளை சான்றோரும், புலவர்களும் எடுத்துக் கூறுவது.

முதுமொழிக்காஞ்சி என்ற பெயரில் ஓர் பதினெண்கீழ்க்கணக்கு நூலும் உண்டு.

பார்க்க : முதுமொழிக்காஞ்சி(நூல்)

விளக்கம்

முதுமொழிக் காஞ்சி அறிவுரைக் கோவை என்று பொருள்படும். காஞ்சி என்பது மகளிர் இடையில் அணியும் ஒருவகை அணிகலக் கோவையையும் குறிக்கும். பலமணிகள் கோத்த காஞ்சி அணி போல முதுமொழிகள் பல கோற்பது முதுமொழிக் காஞ்சி எனப் பெயர் பெற்றது என்று கருதுவாரும் உண்டு. உலகியல் உண்மைகளைத் தெள்ளத் தெளிந்த புலவர் பெருமக்கள் எடுத்து இயம்புவது என்னும் இலக்கணம் 'முதுமொழிக்காஞ்சி' என்னும் நூற்பொருளுக்குப் பொருந்துவது.

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளு முதுமொழிக்காஞ்சியை

பலர்புகழ் புலவர் பன்னினர் தெரியும்
உலகியல் பொருள்முடி(பு) உணரக்கூ றின்று

என விளக்குகிறது. 'பலராலும் புகழப்படும் அறிவுடையோர் மாசற்ற அறம் முதலிய உறுதிப் பொருள்களின் இயல்பு இன்னதென ஆராய்ந்து கூறிய செய்திகளைக் கூறுதல்' என்பது பொருள்.

ஆற்றி னுணரி னருளறமா மாற்றார்க்குப்
போற்றார் வழங்கிற் பொருள் பொருளா - மாற்றிப்
புகலாதொழுகும் புரிவளையார் மென்றோ
ளகலா தளித்தொழுக லன்பு

'அருளுடைமையே அறம்; சேர்த்து வைக்காமல் வறியவர்களுக்குக் கொடுப்பதே செல்வம்; கணவன் விருப்பப்படி செயல்படும் கற்புடைய பெண்ணுடன் வாழ்வதே உண்மையான இன்பம்' என வெண்பா, சில உறுதிப் பொருள்களை எடுத்துக்காட்டுகிறது.

புறநானூறில் 18, 27, 28, 29, 74 எண்னுடைய பாடல்கள் முதுமொழிக்காஞ்சித்துறையில் அமைந்தவை.

எடுத்துக்காட்டு

புறநானூறு 27
  • திணை - பொதுவியல் துறை - முதுமொழிக்காஞ்சி.
  • பாடியவர்:உறையூர் முதுகண்ணன் சாத்தனார் பாடியது.
  • பாடப்பட்டவர் : சோழன் நலங்கிள்ளி

சேற்று வளர் தாமரை பயந்த, ஒண் கேழ்,
நூற்று இதழ் அலரின் நிரை கண்டன்ன,
வேற்றுமை இல்லா விழுத் திணைப் பிறந்து,
வீற்றிருந்தோரை எண்ணும்காலை,
உரையும் பாட்டும் உடையோர் சிலரே;
மரை இலை போல மாய்ந்திசினோர் பலரே;
'புலவர் பாடும் புகழுடையோர் விசும்பின்
வலவன் ஏவா வான ஊர்தி
எய்துப என்ப, தம் செய் வினை முடித்து' எனக்
கேட்பல்; எந்தை! சேட்சென்னி! நலங்கிள்ளி!
தேய்தல் உண்மையும், பெருகல் உண்மையும்,
மாய்தல் உண்மையும், பிறத்தல் உண்மையும்,
அறியாதோரையும் அறியக் காட்டி,
திங்கள் புத்தேள் திரிதரும் உலகத்து,
வல்லார் ஆயினும், வல்லுநர் ஆயினும்,
வருந்தி வந்தோர் மருங்கு நோக்கி,
அருள, வல்லை ஆகுமதி; அருள் இலர்
கொடாஅமை வல்லர் ஆகுக;
கெடாஅத துப்பின் நின் பகை எதிர்ந்தோரே (புறம் 27)

தேய்தலும் வளர்தலும்,இறத்தலும் பிறத்தலும் இயற்கை என்னும் உண்மை தெரியாதவர்களுக்குத் தெரியும்படி நிலாத்தெய்வம் தேய்ந்து வளர்ந்தும் காட்டிக்கொண்டிருக்கிறது. எனவே, வல்லவர் ஆயினும், வல்லவர் அல்லர் ஆயினும் வருந்தி வந்தோரின் நிலைமையைப் பார்த்து அருள் தருபவனாக விளங்குக! உன் பகைவர் கொடாத்தன்மை உடையவராகிக் கிடக்கட்டும்.

வருந்தி வந்தவர்க்கு பாகுபாடுகள் இல்லாமல் வழங்கும்படி அறிவுரை கூறுவதால் இது முதுமொழிக்காஞ்சி.

உசாத்துணை


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Jan-2025, 08:19:30 IST