கொங்கு மலர் (இதழ்)
கொங்கு மலர் (1934) கோவைத் தமிழ்ச் சங்க வெளியீடாக வெளிவந்த மாத இதழ். சி.எம் . இராமச்சந்திர செட்டியார் இதன் ஆசிரியர்.
வெளியீடு
மதுரைத் தமிழ்ச் சங்கத்திற்கு முன்னர் தோன்றிய தமிழ்ச் சங்கமாக அறியப்படும் கோவைத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட மாத இதழ் கொங்கு மலர். ஏப்ரல் 1934 முதல் வெளிவந்த இவ்விதழின் ஆசிரியர் கோவைக்கிழார் என்னும் சி.எம் . இராமச்சந்திர செட்டியார்.
இதழ் அமைப்பு
கொங்கு மலர் இதழின் முகப்புப் பக்கத்தில் 'கொங்கு மலர்' எனும் இதழின் தலைப்பின் கீழ் 'கோவைத் தமிழ்ச்சங்கத் திங்கள் வெளியீடு' என்ற குறிப்பு இடம்பெற்றது. இதழின் ஆண்டைக் குறிக்க மலர் என்பதையும், மாதத்தைக் குறிக்க 'இதழ்' என்பதையும் கொங்கு மலர் பின்பற்றியது. 36 பக்கங்களில் வெளியான கொங்கு மலர் இதழின் ஆண்டுச்சந்தா, ஒரு ரூபாய், எட்டணா. தனிப்பிரதி விலை இரண்டணா. கட்டணங்களுடன் கூடிய விளம்பரங்கள் இவ்விதழில் வெளியாகின.
உள்ளடக்கம்
கொங்கு மலர் இதழ் கீழ்க்காணும் ஆறு பகுதிகளைக் கொண்டது.
- செய்யுள் பகுதி
- சரிதப் பகுதி
- கலைப் பகுதி
- சமயப் பகுதி
- ஆராய்ச்சிப் பகுதி
- ஒழிபு
கொங்குமலரின் மூன்றாம் இதழில் பின்வரும் அறிவிப்பு இடம் பெற்றது. "ஒழிபு என்னும் பகுதியில் இனிமேல் நாட்டு நடப்பு, திங்கள் விசேஷங்கள், கல்வி சம்பந்தமான பிரகடனங்கள் இவை வரும். முக்கியமாகக் கொங்கு நாட்டில் நடைபெறும் உற்சவாதிகள் குறிக்கப்பெறும். உபாத்தியாயர்களுக்கு அனுகூலமான செய்திகள் பிரசுரிக்கப்பெறும். வாரந்தோறும் (திங்கள் ) ஒரு கதை அல்லது இரண்டு கதைகள் எழுதப்பெறும். இன்னமும் பொது ஜனங்களுக்கு அனுகூலமான பல கட்டுரைகள் வெளிவரும்".
கொங்கு மலர் இதழின் செய்யுள் பகுதியில் கடவுள் வணக்கம் மற்றும் பல பாடல்கள் இடம்பெற்றன. மொழிபெயர்ப்புப் பாடல்களும் இப்பகுதியில் வெளியாகின. சரிதப் பகுதியில் பண்டைய சரித்திரம் என்ற பெயரில் வரலாற்று ஆராய்ச்சித் தகவல்கள் இடம்பெற்றன. பவானிப் புராணம், பழனிப்புராணம் போன்ற புராணங்களிலிருந்து சில பகுதிகள் இடம்பெற்றன. வித்வான் வாசுதேவ முதலியாரின் வரலாறு, தொடராக கொங்குமலரில் வெளியானது. கலைப்பகுதியில் மருத்துவம் சார்ந்த கட்டுரைகளும், செய்திகளும், சமயப்பகுதியில் சமயம் சார்ந்த கட்டுரைகளும், வரலாறுகளும் இடம்பெற்றன.
'ஆனந்தரங்கன் கோவை', 'தென்சேரி மாலை' ஆகிய இரண்டு குறைச்சுவடிப்பதிப்புகள் இவ்விதழில் வெளிவந்தன. நூல்களின் மதிப்புரைகள் இடம்பெற்றன. இதழின் உள்ளே ஆலயம் குறித்த புகைப்படங்கள் சில இடம் பெற்றன. புதுவை அனந்தரங்கப் பிள்ளை பற்றிய ஆராய்ச்சிக்கட்டுரை தொடராக வெளியானது.
பங்களிப்பாளர்கள்
- கோவைக்கிழார்
- சி.கே. சுப்பிரமணிய முதலியார்
- ந. பலராம ஐயர்
- ஆர்.ஏ. சுப்பிரமணியன்
- எஸ். ஆறுமுக முதலியார்
- எஸ். நடராஜன் பி.ஏ.
- சி.கு. நாராயணசாமி முதலியார்
- துடிசைக்கிழார் சிதம்பரனார்
- அ. துரைசாமிப் பிள்ளை
- பண்டிதர் எஸ். ஐயாசாமி பிள்ளை
- வித்வான் எஸ். ஆறுமுக முதலியார்
- கே. சதாசிவம் பிள்ளை
- ஆர். சதாசிவம் பிள்ளை
- சி.எஸ். சொக்கலிங்கம் பிள்ளை
- டி.ஏ. இராமலிங்கஞ் செட்டியார்
இதழ் நிறுத்தம்
நான்கு ஆண்டுகள் வெளிவந்த கொங்கு மலர் பின் நின்று போனது.
ஆவணம்
கொங்கு மலர் இதழின் சில பிரதிகள் தமிழ் இணைய மின்னூலகத்தில் சேகரிக்கப்பட்டுள்ளன.
மதிப்பீடு
கொங்கு மலர் இதழ் கொங்குப் பகுதி சார்ந்த வரலாற்றுத் தகவல்களுக்கு முக்கியத்துவம் அளித்து வெளியிட்டது. தமிழில் வெளிவந்த குறிப்பிடத்தகுந்த ஆய்விதழ்களுள் ஒன்றாகவும், தமிழ்ச்சங்க இதழ்களுள் ஒன்றாகவும் 'கொங்கு மலர்' இதழ் அறியப்படுகிறது.
உசாத்துணை
- கொங்கு மலர் இதழ்கள், தமிழ் இணைய மின்னூலகம்
- கொங்கு மலர் இதழ்க் குறிப்பு, முனைவர் மோ.கோ. கோவைமணி, பருவ இதழ்ச் சுவடிப்பதிப்பு வரலாறு, தமிழ் இணைய மின்னூலகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 20-Jul-2024, 09:13:34 IST