ஜெகதீஷ்குமார்
ஜெகதீஷ்குமார் (பிறப்பு: ஜூலை 9, 1975) எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர். தமிழிலிருந்து ஆங்கிலத்தில் மொழியாக்கங்கள் செய்து வருகிறார். சிறுகதைகள், கட்டுரைகள் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
ஜெகதீஷ்குமார் கோயம்புத்தூரில் கேசவன், லீலா இணையருக்கு ஜூலை 9, 1975-ல் பிறந்தார். உடன்பிறந்தவர்கள் ஒரு தம்பி, ஒரு தங்கை. கோயம்புத்தூர் குட்ஷெப்பர்ட் மேல்நிலைப்பள்ளி, அரியலூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, திருச்சி டால்மியா மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளில் பள்ளிக்கல்வி கற்றார். ஈரோடு வாசவி கல்லூரியில் வேதியியலில் இளங்கலைப்பட்டம் பெற்றார். தமிழ்நாடு ஆசிரியர் பயிற்சிப்பள்ளியில் பி.எட் பட்டம் பெற்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்தில் முதுகலைப்பட்டம் பெற்றார்.
ஜெகதீஷ் குமார் அமெரிக்காவின் தென் கரோலினா மாகாணத்திலுள்ள சிட்டாடெல் மிலிட்டரி கல்லூரியில் ஆசிரியர்களுக்கான முழு உதவித்தொகையுடன் கணிதம் மற்றும் அறிவியல் கல்வியியலில் முதுகலைப் பட்டம் (M Ed in STEM Education) பெற்றார். பென்சில்வேனியா மாகாணத்தில் உள்ள அர்ஷா வித்யா குருகுலத்தில் பத்து வருடங்களாக அத்வைத வேதாந்தம் கற்று வருகிறார். இவரது குரு சுவாமி குருபரானந்தா.
தனிவாழ்க்கை
ஜெகதீஷ் குமார் மாலத்தீவுகளில் ஹிதாடோ (Hithadhoo) தீவில் கணித ஆசிரியராகப் பத்து வருடங்கள் பணியாற்றினார். மாலத்தீவில் தன் உடன் கணித ஆசிரியராகப் பணியாற்றிய அனுஷாவை நவம்பர் 15, 2004-ல் மணந்தார்.
அமெரிக்கா தென் கரோலினா மாகாணத்திலுள்ள கோலிட்டன் கெளண்டி (Colleton County) உயர்நிலைப்பள்ளியில் கணிதவியல் துறைத்தலைவராகப் பணியாற்றுகிறார்.
அமைப்புப் பணிகள்
- அமெரிக்காவின் 'American Literary Translators Association' (ALTA)-ன் உறுப்பினர்
- அமெரிக்காவின் தென் கரோலினா மாநிலத்திலுள்ள 'Writer Who Write of Palmetto State Authors'-ன் உறுப்பினர்.
- அமெரிக்காவின் 'The National Society of Leadership and Success'-ன் தலைமை உறுப்பினர்.
இலக்கிய வாழ்க்கை
ஜெகதீஷ் குமார் தன் ஆதர்ச எழுத்தாளர்களாக அசோகமித்ரன், சுஜாதா, ஜெயமோகன், ஹெர்மன் ஹெஸ்ஸே, லியோ டால்ஸ்டாய், கசுவோ இஷிகுரோ, ஓரான் பாமுக், ஐயன் மேகிவான், கோர்மாக் மெக்கார்த்தி ஆகியோரைக் குறிப்பிடுகிறார். இவரின் முதல் மொழியாக்கம் 'Mountains' Dialogue' ('மூலம்:மலைகளின் உரையாடல்' -ஜெயமோகன்) 2021- ல் Prometheus வலைத்தளத்தில் வெளியானது.
எழுத்தாளர் ஜெயமோகனின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கம் 'A Fine Thread and Other Stories' என்ற பெயரில் 2024-ல் ரத்னா புக்ஸ் மூலம் வெளிவந்தது.
ஜெகதீஷ்குமாரின் முதல் சிறுகதைத் தொகுப்பு 'பொற்குகை ரகசியம்' 2024-ல் வம்சி வெளியீடாக வந்தது.
ஜெகதீஷ் குமார் தமிழிலும் ஆங்கிலத்திலும் சிறுகதைகளும், கட்டுரைகளும், கவிதைகளும் எழுதி வருகிறார்.
விருதுகள்
- Spillwords Press Awards க்கான பரிந்துரை
- 2023 - 'Over the Fire' ஜெயமோகனின் 'அனலுக்கு மேல்' சிறுகதையின் மொழியாக்கத்துக்காக
- 2024- 'Rope-Snake எழுத்தாளர் ஜெயமோகனின் 'கயிற்றரவு' சிறுகதையின் மொழியாக்கத்துக்காக
- ராபர்ட் நாய்ஸ் 'Learn to Lead scholarship' மூலம் தென் கலிஃபோர்னியாவின் சிடாடெல் ராணுவக் கல்லூரியில் இலவசமாக முதுகலை பயில்வதற்காக வாய்ப்பும், ஐம்பதாயிரம் டாலர் பரிசுத்தொகையும் வென்றார்.
நூல் பட்டியல்
மொழிபெயர்ப்பு
- A fine thread (and other stories) (Jeyamohan) (Ratna Books, 2024)
சிறுகதைத் தொகுப்பு
- பொற்குகை ரகசியம் (2024, வம்சி பதிப்பகம்)
இணைப்புகள்
- ஜெகதீஷ்குமார்: வலைதளம்: ஆங்கிலம்
- ஜெகதீஷ்குமார்: வலைதளம்: தமிழ்
- Mountains' Dialogue by Jeyamohan, in Prometheus Dreaming, 2021
- A Fine Thread and Other Stories: Review
- Interview: ஜெகதீஷ்குமார்
- Writer, Translator Jegadeesh Kumar on Translating 'A Fine Thread & other stories and 'The Writer Jeyamohan'
- SPOTLIGHT ON WRITERS - JEGADEESH KUMAR
- கதையாசிரியர்: ஜெகதீஷ் குமார்: sirukathaigal
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
29-Mar-2024, 22:24:00 IST