under review

குடைநாட் கோள்

From Tamil Wiki
Revision as of 12:29, 22 November 2025 by Madhusaml (talk | contribs) (→‎விளக்கம்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

குடைநாட் கோள் உழிஞைத் திணையின் துறைகளில் ஒன்று. நற்சகுனம் பார்த்துப் போருக்குப் புறப்படுவதன் முகமாக குடை, வாள், முரசு போன்ற அரச சின்னங்களை நல்ல நாளில் நல்ல, முழுத்தத்தில்(முகூர்த்தம்) புறவீடு செய்யும் வழக்க்ம் இருந்தது. குடையைப் புறவீடு செய்வதைக் கூறுவது குடைநாட் கோள்.

விளக்கம்

புறப்பொருள் வெண்பாமாலை

புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் உழிஞை வேந்தன், பகை மன்னனின் அரணைக் கைப்பற்றக் கருதி, தன் வெண்கொற்றக் குடையை நல்ல நாள் ஒன்றில் புறவீடு செய்தமையைச் சொல்வது என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.

செற்றடையார் மதில் கருதிக்
கொற்ற வேந்தன் குடைநாள் கொண்டன்று(கொளு 6.2)

வெண்பா

நெய்யணிக செவ்வேல் நெடுந்தேர் நிலைபுகுக
கொய்உளைமா கொல்களிறு பண்விடுக - வையகத்து
முற்றக் கடிஅரணம் எல்லாம் முரண் அவிந்த
கொற்றக் குடைநாள்கோள் (96)

பொருள்: உலகத்திலுள்ள அரண்கள் எல்லாம், உழிஞை மன்னன் தனது வெண்கொற்றக் குடையை நல்ல நாளில் புறவீடு செய்ததும், தமது பகைமையை முழுமையாகக் கைவிட்டன. இனி முற்றுகை வேண்டுவதில்லை. இது வரை செங்குருதியில் ஆடிய வேல், நெய் பூசிக் கொண்டு படைக்கலக் கொட்டிலில் கிடக்கலாம். தேர்கள் போரெனப் புறப்பட வேண்டுவதில்லை. உரிய நிலைகளுள் புகலாம். குதிரையும் களிறும் சாமரை, சேணம் முதலியவற்றால் ஒப்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை. ஒப்பனை செய்யப்பட்டிருப்பின், அவை அவற்றைக் களையலாம்.

உசாத்துணை

உழிஞைத்திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்


✅Finalised Page

முதலில் வெளியிடப்பட்ட தேதி: 03-Jul-2025, 10:33:30 IST