அசோக் ராம்ராஜ்
அசோக் ராம்ராஜ் (பிறப்பு: பெப்ரவரி 03, 1988) எழுத்தாளர், சிறுகதையாசிரியர். கல்குதிரை, சிலேட், இடைவெளி, ஓலைச்சுவடி சிற்றிதழ்களில் கதைகள் எழுதி வருகிறார்.
பிறப்பு, கல்வி
அசோக் ராம்ராஜ் பெப்ரவரி 03, 1988 அன்று சங்கரன்கோவிலில் ராம்ராஜ், உமா தம்பதியருக்குப் பிறந்தார். உடன்பிறந்தவர் ஒரு சகோதரி அசோக் தன் பள்ளிக் கல்வியை சங்கரன்கோவில் ஶ்ரீ வையாபுரி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கற்றார். இளங்கலை தொழில்நுட்பக் கல்வியை சென்னை எஸ்.எஸ்.என் கல்லூரியில் பயின்று சென்னையில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றி வருகிறார்.
தனி வாழ்க்கை
அசோக் ராம்ராஜ் 2016-ம் ஆண்டு சங்கீதாவை திருமணம் செய்துக் கொண்டார். அசோக், சங்கீதா இணையருக்கு சஹானா, சம்யுக்தா என இரண்டு பெண் குழந்தைகள். அசோக் தற்போது குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இலக்கிய வாழ்க்கை
அசோக் ராம்ராஜின் முதல் சிறுகதை ரித்னாபூரின் மழை 2015 ஆம் ஆண்டு எழுத்தாளர் கோணங்கியின் கல்குதிரை இதழில் வெளிவந்தது. தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். அசோக் ராம்ராஜின் முதல் சிறுகதை தொகுப்பு 'ரித்னாபூரின் மழை' 2021 ஆம் ஆண்டு வெளிவந்தது. இரண்டாவது தொகுப்பான கடைசி அர்மேனியன் 2025 ஆம் ஆண்டு வெளிவந்தது. அசோக் இன் சிறுகதைகள் கல்குதிரை, சிலேட், இடைவெளி, ஓலைச்சுவடி, தனிமைவெளி, வனம் இதழில் . சிறுகதைகள், கட்டுரைகள் கல்குதிரை இதழில் மொழிபெயர்த்து வருகிறார். அசோக் கோணங்கியை, போர்ஹெ இருவரையும் தன் இலக்கிய ஆதர்சமாக குறிப்பிடுகிறார்.
இலக்கிய இடம்
"அசோக் ராம்ராஜின் கதைகூறல் முறை காஃப்கா, கமூய் கதைகூறல் முறையை ஒத்திருக்கிறது. எப்போதும் சோகம் ததும்பும், புனைவின் மையத்தை தொடாமல் சுற்றியே வரும் மொழி நடை. படைப்பின் உள்ளடக்கத்தைவிட வடிவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் பாணி. வடிவம் குறித்து கவலை கொள்வதனாலேயே உள்ளடகத்தின் வீச்சை பிரம்மாண்டமாக ஆக்குவதற்கு வடிவத்தை மாற்றி பயன்படுத்துகிறார். ஆனால் வீச்சு குறைந்து குறுநாவலாகாமல் சிறுகதையாக மாறியுள்ளன. சில கதைகள் நாவலுக்குரிய களங்களை கொண்டிருப்பவை." என எழுத்தாளர் கே.ஜே. அசோக்குமார் ரித்னாபூரின் மழை நூலை மதிப்பிடுகிறார்.
"அசோக் ராம்ராஜ் தான் வாழ்ந்த நிலப்பரப்பின் கனவுகளையும், நம்பிக்கைகளையும் ஒரு சரித்திர சாயலோடு சுழற்வட்ட பாதையில் புனைவாக்கியுள்ளார். சிதறுண்ட மனநிலையிலிருந்து அலை அலையாய் எழும் கானல் நீர் போன்ற அகப்படாத வெளியை தன் மொழி விளையாட்டுகள் மூலம் சிறந்த படைப்பாற்றலை வெளிப்படுத்துகிறார்." என ரித்னாபூரின் மழை தொகுப்பின் முன்னுரையில் ஆம்பூர் சுரேஷ் குறிப்பிடுகிறார்.
நூல்கள்
சிறுகதைத் தொகுப்பு
- ரித்னாபூரின் மழை (ஜனவரி 2021, நூல்வனம் வெளியீடு)
- கடைசி அர்மேனியன் (ஜனவரி 2025, நூல்வனம் வெளியீடு)
வெளி இணைப்புகள்
- பெரும் வீழ்ச்சியின் கதைகள்: ரித்னாபூரின் மழை - அசோக் ராம்ராஜ், கே.ஜே. அசோக்குமார், சொல்வனம்
- புராதன நினைவுகளின் உறைவிடத்தில் உயிர்த்தெழுந்த புனைவு மிருகம், கார்த்திக் பிரகாசம்,
- அசோக் ராம்ராஜ் சிறுகதைகள், ஓலைச்சுவடி
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.