second review completed

கோயில் திருப்பதிகம்

From Tamil Wiki
Revision as of 08:14, 30 April 2025 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)

கோயில் திருப்பதிகம் எட்டாம் திருமுறையான திருவாசகத்தின் 22-ம் பதிகம். மாணிக்கவாசகரின் இறையனுபவத்தைக் கூறுவது.

ஆசிரியர்

கோயில் திருப்பதிகம் சைவ சமயக் குரவர்களில் ஒருவரான மாணிக்கவாசகர் இயற்றிய திருவாசகத்தின் 22-ம் பதிகம். மாணிக்கவாசகர் வாதவூரார் என்றும் அழைக்கப்பட்டார். 9 -ஆம் நூற்றாண்டில் வரகுண பாண்டியனின் காலத்தைச் சேர்ந்தவர். அரிமர்த்தன பாண்டியனிடம் தலையமைச்சராகப் பணியாற்றினார். மாணிக்கவாசகர் இயற்றியவை திருவாசகமும், திருக்கோவையாரும்.

கோயில் திருப்பதிகம் தில்லையில் பாடப்பட்டது.

நூல் அமைப்பு

இப்பதிகம் தில்லையில் பாடப்பட்டமையால், 'கோயில் திருப்பதிகம்' எனப்பட்டது. 'அனுபோக இலக்கணம்' என்பது உப தலைப்பு. கோயில் என்பது சிதம்பரத்தைக் குறிக்கும்.. தில்லையில் எழுதப்பட்டாலும் பாடல்கள் திருப்பெருந்துறையில் உள்ள சிவனைக் குறித்தே பாடப்பட்டுள்ளன. திருப்பெருந்துறையில் சிவன் குருமணியாக வந்து ஆட்கொண்ட இறையனுபவத்தை தில்லையில் பாடுகிறார். ஒளிவடிவாக உள்ளத்துள் இருக்கும் இறைவனை, ஆதியும் அந்தமும் இல்லா தன்மையை, தன் உள்ளத்தின் இருளை நீக்கி ஆட்கொண்டஅருளையும் பாடுகிறார்.

கோயில் திருப்பதிகம் பத்து பாடல்களைக் கொண்டது (திருவாசகம் 388-397). பத்துப்பாடல்களில் எட்டுப்பாடல்கள் ஒளிக்காட்சியை வர்ணிக்கின்றன. நான்கு பாடல்களில் புறத்தே காணப்படும் ஒளியாகவும் அடுத்த நான்கு பாடல்களில் அகத்தே காணப்படும் ஒளியாகவும் இறைவன் பாடப்படுகிறான்.

இந்தப் பத்துப் பாடல்களில் "எழுபரஞ்சோதி”, "மெய்ச்சுடரே", "ஒளியே" ,'கொடுஞ்சுடர்க் குன்றே", "எழுகின்ற சோதியே" ,"எழுகின்ற ஞாயிறே", 'படர் ஒளிப் பரப்பே' "ஆனந்தம் ஆக்கும் என்சோதி", "சோதியாய் தோன்றும் உருவமே" என்று ஒளிவடிவமாகவே இறையைக் காண்கிறார்.

பாடல் நடை

தேறலின் தெளிவே சிவபெருமானே

மாறிநின்றென்னை மயக்கிடும் வஞ்சப்
புலனைந்தின் வழியடைத் தமுதே
ஊறிநின்றென்னுள் எழுபரஞ்சோதி
உள்ளவா காணவந்தருளாய்
தேறலின் தெளிவே சிவபெருமானே
திருப்பெருந்துறையுறை சிவனே
ஈறிலாப் பதங்கள் யாவையும் கடந்த
இன்பமே என்னுடை அன்பே.

மறையும் நீ, மறையின் பொருளும் நீ

குறைவு இலா நிறைவே! கோது இலா அமுதே!
 ஈறு இலாக் கொழும் சுடர்க் குன்றே!
மறையும் ஆய், மறையின் பொருளும் ஆய்,
வந்து என் மனத்திடை மன்னிய மன்னே!
சிறை பெறா நீர் போல், சிந்தைவாய்ப் பாயும்
 திருப்பெருந்துறை உறை சிவனே!
இறைவனே! நீ, என் உடல் இடம் கொண்டாய்;
 இனி, உன்னை என் இரக்கேனே?

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.