வேள்வி நிலை
வேள்வி நிலை பாடாண் திணையின் துறைகளில் ஒன்று. அரசன் வேள்வி செய்வதைக் கூறுவது வேள்வி நிலை.
விளக்கம்
புறப்பொருள் வெண்பாமாலை
புறப்பொருள் வெண்பாமாலையின் கொளுப்பாடல் குறையாத புகழைக் கொண்ட அரசன், தேவர்களும் மனம் மகிழும்படி தீ வளர்த்து வேள்வி செய்த சிறப்பைக் கூறுதல் என்று இதன் இலக்கணத்தை வகுக்கிறது.
அந்தமில் புகழான் அமரரும் மகிழச்
செந்தீ வேட்ட சிறப்புரைத் தன்று(கொளு.15)
வெண்பா
கேள்வி மறையோர் கிளை மகிழ்தல் என் வியப்பாம்
வேள்வி விறல் வேந்தனை தான் வேட்ப - நீள் விசும்பின்
ஈர்ந்தார் இமையோரும் எய்தி அழல் வாயால்
ஆர்ந்தார் முறையால் அவி (203)
பொருள்:வேந்தன் வேள்வி செய்ததைத் தேவர் ஏற்றுக் கொண்டதை வெண்பா கூறுகிறது.புகழுடைய வேந்தன் வேள்வி செய்ய அந்தணர் மகிழ்தலே அன்றி, வானுலகில் உள்ள தேவர்களும் அக்னி தேவனைத் தம் வாயாகக் கொண்டு முறையாக அவியுணவை ஏற்றுக் கொண்டனர்
உசாத்துணை
பாடாண் திணை, தமிழ் இணைய கல்விக் கழகம்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி: 05-Mar-2025, 19:16:50 IST