மைசூர் எஸ்.ஸி. பேலூரய்யா
மைசூர் எஸ்.ஸி. பேலூரய்யா (ஆகஸ்ட் 27, 1900 - மார்ச் 7, 1971) ஒரு புகழ் பெற்ற நாதஸ்வரக் கலைஞர். நாதஸ்வரம் தவிர கிளாரினெட், வயலின், புல்லாங்குழல், ஹார்மோனியம், வீணை, கோட்டு வாத்தியம், மிருதங்கம், தபலா மற்றும் ஓபோ என்னும் மேலைநாட்டு இசைக்கருவி அனைத்திலும் திறமை மிக்கவர். நாடக நடிகர், பல இசைப்பள்ளிகளை உருவாக்கியவர். கர்நாடக மாநிலத்தின் சிறந்த இசைக்கலைஞர்களில் ஒருவர்.
இளமை, கல்வி
எஸ்.ஸி. பேலூரய்யா கர்நாடகத்தின் கிருஷ்ணராஜநகர் தாலுகாவில் சாலிக்கிராமம் என்ற கிராமத்தில் சன்னப்பா - புட்டம்மா இணையருக்கு ஆகஸ்ட் 27, 1900 அன்று பிறந்தார். இவரது முன்னோர் மைசூர் சமஸ்தானத்தில் ஆஸ்தான இசைக்கலைஞர்களாக இருந்தவர்கள்.
இளமையிலேயே பெற்றோரை இழந்த பேலூரய்யா பணவசதியின்மையால் பள்ளிக்கல்வியை விட வேண்டிய நிலை உருவானது. தன் மூத்த சகோதரர் கேசவய்யாவிடம் இசைப்பயிற்சியைத் தொடங்கினார். பின்னர் மைசூர் தொட்ட சீனப்பா என்பவரிடம் நாதஸ்வரப் பயிற்சி பெற்றார். கிளாரினெட் வாசிப்பதிலும் சிறந்த தேர்ச்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
1918ஆம் ஆண்டு ராமம்மா என்பவரை பேலூரய்யா மணந்தார். இவர்களுக்கு கேசவமூர்த்தி (வானொலி வாய்ப்பாட்டுக் கலைஞர்), சென்னகேசவதாஸ் என்ற இரு மகன்களும், சாரதாம்பா, காயத்ரம்மா என்ற இரு மகள்களும் பிறந்தனர்.