being created
under review

காடை கூட்டம்

From Tamil Wiki
Revision as of 07:05, 23 July 2022 by Madhusaml (talk | contribs) (category & stage updated)

காடைகுலம் :கொங்குவேளாளக் கவுண்டர் குலத்தவரின் உட்பிரிவுகளான கூட்டம் என்னும் அமைப்பில் ஒன்று. காடைக்கூட்டம், காடை குலம் என அழைக்கப்படுகிறது. கொங்குவேளாளர் கூட்டங்களில் இதுவே பெரியது. சாகாடன் நக்கன், சாகாடன் சிற்றன் போன்ற பெயர்கள் நடுகற்களில் காணப்படுகிறது. காடன் என்பது மூதாதை பெயராக இருக்க வாய்ப்புண்டு.

இது கொங்கு வேளார்களின் அறுபது கூட்டங்களில் ஒன்று. (பார்க்க கொங்குவேளாளர் கூட்டங்கள்)

பெயர்

காடைக் கூட்டம் காடை என்னும் பறவையின் பெயரால் அமைந்தது என்பது பொதுவான கூற்று. தமிழகத்தில் தொல்குடியினரின் குலங்களுக்கு குலக்குறி ( Totem)களாக பறவைகளும் மரங்களும் விலங்குகளும் இருப்பது வழக்கம். காடை என்பது ஓர் அடையாளம் மட்டுமே. மிக அரிதாகவே குலக்குறிகள் தெய்வங்களாக மாறி வழிபடப்படுகின்றன. காடைக்கூட்டம் என்பது சாகாடைக் கூட்டம் என்பதன் மருவு என்று சில நாட்டாரியல் ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது. கல்வெட்டுகளில் சாகாடன் நக்கன், சாகாடன் சிற்றன் போன்ற பெயர்கள் காணப்படுகின்றன. இடைக்காடர், பூங்காடர், காடந்தை போன்ற பெயர்கள் நூல்களிலும் உள்ளன. காட்டின் தலைவன் என்னும் பொருளில் காடந்தை (காடன் தந்தை ) பயன்படுத்தப்படுகிறது. காடன் என்னும் முதுமூதாதையில் இருந்து வந்த பெயர் என முனைவர் அரங்கசாமி கூறுகிறார்.

காடைகுலத்தைக் காடகுலம், காடர் குலம், காடான் குலம், காடன் குலம் என்று பலவாறாக அழைத்தாலும் தனிப்பாடல், இலக்கியம், காணிப்பாடல், கல்வெட்டு, செப்பேடு, ஓலைப்பட்டயம் ஆகிய எல்லா ஆவணங்களிலும் பெரும்பாலும் காடைகுலம் என்று மட்டுமே எழுதப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது.

வரலாறு

காடைக்கூட்டத்தவர் சோழர் ஆட்சிக்காலத்திலும் பின்னர் விஜயநகர ஆட்சிக்காலத்திலும் சிற்றரசுகளாக நீடித்திருந்தனர் என கல்வெட்டுகள் காட்டுகின்றன. ‘காடை குலாதிபன் பூந்துறை நாடன் கனகச் செல்வன்’ என்று கொங்குமண்டலச் சதகத்தில் குறிப்பிடப்படுகிறது. வாரணவாசி என்பான் அன்னக்கொடி கட்டி உணவளித்ததாக கல்வெட்டுகள் சொல்கின்றன. பூந்துறை  காடைக் குலத்துத் தலைவர் நன்னாவுடையார் பட்டம் பெற்றவர்.(நீதிநெறி திகழும் நாவுடையவர் என்று பொருள்) ‘புகழ் நாவேற்றும் பூந்துறை நன்னாவுடையர் நால்வருக்கும் மூவேந்தர் சூட்டும்முடி’ என்னும் பாடல் இதை உறுதிசெய்கிறது. இவர்களுக்கு மூவேந்தர் காலம் முதல் சிற்றரசர் உரிமை இருந்தது என அந்த வரி சொல்கிறது.

காணியூர்களை அடிப்படையாகக்கொண்டு

  • பூந்துறைக் காடை
  • மேலைசார் காடை
  • கீழைசார் காடை
  • எழுமாத்தூர் காடை
  • கீரனுர் காடை
  • அரசூர் காடை
  • பார்ப்பினிக் காடை
  • பவுதிரக் காடை
  • அன்னுர்க காடை
  • வையப்பமலைக் காடை
  • கூடச்சேரிக் காடை
  • ஆனங்கூர் காடை
  • பில்லூர் காடை
  • பெருந்துறைக் காடை
  • கோனுர்க் காடை
  • ஆத்தூர் காடை
  • தோளூர் காடை
  • வள்ளியறச்சல் காடை

என்னும் 18 பிரிவுகள் இவர்களுக்குள் உள்ளன.

குலதெய்வங்கள்

  • செல்லியம்மன், கொன்னயார்
  • மருத காளியம்மன், பழமலை கரூர்
  • செல்வநாயகி அம்மன், கீரனூர்
  • தங்க நாயகி அம்மன், அரசூர்
  • ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன், அவல்பூந்துறை
  • படைவெட்டி அம்மன், பிலூர்
  • ஸ்ரீ சொலியம்மன், ஆத்தூர், கரூர்
  • பெரியநாயகி அம்மன், பாப்பினி, காங்கேயம்
  • ஸ்ரீ கரிகாளி அம்மன், மொடகுறிச்சி, ஈரோடு

ஊர்கள்

காடைகுலத்தின் ஊர்களாக காணிப்பாடல் என்னும் செவிவழிப்பாடல்கள் வள்ளியறச்சல், பாப்பினி, ஆத்தூர், கீரனூர், ஆதியூர், பூந்துறை, பெருந்தொழு, பவித்திரம் வெள்ளியணை, கழனியூர், ஏழூர், தோழூர், கங்குப்பட்டி, முளையாம்பூண்டி, பில்லூர், வாழவந்தி, புன்னம், இளம்பிள்ளை, பட்டிலூர், சடையகுளம், மருதுறை ஆகி இருபத்தொரு ஊர்களைக் குறிப்பிடுகிறது.

பாடல் 1

கன்னல்உயர் வள்ளிநகர் புகழ்பெறும் பார்ப்பதி
கருணைபெறும் ஆத்தூருடன்
கனகமுயர் கீரனூர் ஆதியூர் நன்னகர்
காரணர் உறைந்தபதியும்
நன்னர்சேர் பூந்துறை பெருந்தொழு பவித்திரம்
நன்மைசெறி வெள்ளியணையும்
நலமான கழனியூர் ஏழுரு தோழூரு
நாட்டிலுயர் கங்குப்பட்டி
இன்னிலத் திலகுமுளை யாம்பூண்டி புல்லூரு
இயல்வாழ வந்திபுன்னம்
இளம்பிள்ளை பட்டிலூர் சடையகுளம் மருதுறை
இவைபதியில் அரசுபுரியும்
கல்வெட்டும் காணிப்பாடலும் கல்வெட்டும் காணிப்பாடலும்
பொன்னின்மே ழிக்கதிபர் செங்குவளை அணிமார்பர்
பூமிபா லகரானவர்
போதமிகு காடைகுல மகராசர் வாழ்கின்ற
புகழ்பெருகு காணியிவையே!

காடை குலத்திற்கு வேறு மூன்று காணிப்பாடல்களும் உள்ளன. அவற்றில் தூசியூர்,மாவிரட்டி, சேமந்தூர், வெண்ணந்தூர், மங்கலம், மோடமங்கலம், காகம், ஆலாம்பாடி, நசியனூர், வேம்பத்தி, கூடற்கரை, சிறுநல்லூர், பட்டாலி ஆகிய ஊர்களும் காடைகுலக் காணியூர்களாகக் குறிக்கப்பெறுகின்றன.

பாடல் 2

கன்னல்உயர் பூந்துறை பெருந்தொழு பவுத்திரம்
கருணைபெறும் ஆத்தூருடன்
கனகமுயர் வெள்ளியணை ஆதியூர் நன்னகர்
காரணர் உறைந்தபதியும்
இன்னிலத் தினியமுளை யாம்பூண்டி புல்லூரு
இயல்வாழ வந்திபுன்னம்
இளம்பிள்ளை பட்டிலூர் சடையகுளம் மருதுறையும்
ஏழூரு தோழூருடன்
சென்னெல்செறி கழனியூர் கீரனூர் ஆண்மைமிகு
திறமையுள கங்குப்பட்டி
செல்வமிகு வள்ளிநகர் காடைகுல வள்ளல்கள்
தீர்க்கஅர சாட்சிபுரியும்
மன்னர்பணி யும்பெரிய நாயகி மனோன்மணியின்
மலரடியை மறவாதவர்
வன்னிபூ பதிஉதவு செல்லயன் காடைகுல
மகராசர் காணியிதுவே!

பாடல் – 3

கன்னல்செறி தூசியூர் புல்லூர் தோழூர்
கனமான மாவிரட்டி
கதித்திடும் சேமந்தூர் வெண்ணந்தூர் மங்கலம்
கனிவாத்தூர் தேவர்தொகையும்
மன்னவர் புகழ்மோட மங்கலம் இவையுடன்
வளமைபெறும் பூந்துறையுமாம்
வண்மைசேர் காகம் ஆலாம்பாடி நசையனூர்
வளர் கூடக்கரையுமாம்.
சென்னெல்செறி புன்னம் பெருந்துறை வேம்பத்தி
சிறுநல் லூர்பட்டிலூர்
செயமான இளம்பிள்ளை கீரனூர் பட்டாலி
திறமான வள்ளிநகரும்
அன்னதரு வான பார்ப்பதி நகருக்கு
அதிபன்என வந்தசுமுகன்
அரசர்மனம் மகிழவரும் காடைகுல மேருவென
அவனிதனில் வருகாணியே!

பாடல் – 4

நன்னெறிசேர் பூந்துறை பெருந்துறை பவுத்திரம்
நன்மைசெறி வெள்ளியணையும்
நலமான கழனியூர் ஏழூரு தோழூரு
நாட்டிலுயர் கங்குப்பட்டி
இன்னிலத் திலகுமுளை யாம்பூண்டி புல்லூரு
இயல்வாழ வந்திபுன்னம்
இளம்பள்ளி பட்டிலூர் இவையெலாம் அதிபதி
என்வந்த காடைகுலனே
பன்னுதமிழ் வாணருக்கு ஐந்தரு வேநீலி
பழிகழு வியநிருபனே
பார்மீதில் உன்புகழ்க்கு இணையாக ஒருவரை
பகருதற் கெளிதாகுமோ
மன்னர்புகழ் பூந்துறைசை நாடாளும் அவிநாசி
மைந்தனே மகராசனே
மதனவா ரணவாசி ராசனே

இலக்கியக் குறிப்புகள்

பூந்துறைப் புராணத்தில் பூந்துறைக் காடை விநாயகருக்கு வணக்கம் கூறும் பகுதியில்

கோடைவிநாயகன் பெற்ற குமரவேள் முன்வந்து குலவும் தெய்வக்
காடைவிநாயகன் பதத்தை எமதுளத்தில் கண்டநலம் கனிந்து வாழ்வாம்

என்னும் வரி உள்ளது கொங்கு மண்ட சதகத்தில்

ஆடையும் முத்தும் அணிமார்ப சோழன் அகளங்கன்முன்
மேடை புகழ்ந்து வரும்புல வோரை விழந் தழைத்துக்
காடை குலாதிபன் பூந்துறை நாடன் கனகச் செல்வி
மாடையும் தெய்வ அமுதளித் தான்கொங்கு மண்டலமே

என்ற பாடலில் பூந்துறைக் காடை குலாதிபன் ஒருவர் புகழப்படுகிறார்.

கல்வெட்டுகள்

ஈரோடு பள்ளி கொண்டருளிய பெருமாள் கோயில் கல்வெட்டில் ‘பூந்துரையில் மேலைச் சாகாடைகளில் அப்பியான்’ என்ற தொடர் காணப்படுகிறது. பூந்துறை, ஈரோடு தொண்டீஸ்வரர் கோயில் கல்வெட்டுக்களிலும் காடைகுலம் என்ற தொடர் உள்ளது

குலதெய்வங்கள்

காடையூர் வெள்ளையம்மாள் இவர்களின் குலதெய்வங்களில் ஒன்று

செப்பேடுகள்

  • நாராணபுரம் செப்பேட்டில் ’பூந்துறைக் காடைகுலம் பொன்னக் கவுண்டன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
  • பாசூர்ச் செப்பேட்டில் ‘மேல்கரைப் பூந்துறை நாட்டில் காடை குலத்தில் சின்னாக் கவுண்டர்’ என்றும் ’பெருந்துறை சாகாடை கோத்திரம் செல்லப்ப கவுண்டர்’ என்றும் உள்ளது
  • குறுப்பு நாட்டுச் செப்பேட்டில் ‘பூந்துறை நாடு காடைகுலத்தில் அவனாசி முத்தணக் கவுண்டர்’ என்று குறிக்கப்பட்டுள்ளது

ஓலைச்சான்றுகள்

  • கொங்கு காணியான பட்டயம் ‘காடை குலத்தில் செங்காளியப்ப கவுண்டர்’
  • கத்தாங்கண்ணிப் பட்டயம் ‘சுந்தரபாண்டிய நல்லூர் காடை குலத்தில் முத்தய கவுண்டர்’
  • முடவாண்டி பட்டயம் ‘காவலன் ஆன காடை குலேசன் தாரணி மதிக்கும் தண்டிகைத் துரையாண்’
  • காங்கேய நாட்டு ஊர்த்தொகைப்பாடல் ‘சம்பர்மிகு கீரனூர் தன்னில்வளர் ஆதியை கவுபாக்கிய அந்துவ குலனை தளிரிலது கீரை நற் காடைபெரும் விலையனை தர்மமிகு தேவேந்திரனை’

உசாத்துணை


✅Finalised Page



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.