being created

அன்னா சத்தியநாதன்

From Tamil Wiki
அன்னா (இளம் வயது ஓவியம்) Image Courtesy : Cadbury Research Library - University of Birmingham

அன்னா சத்தியநாதன், (அன்னா ஆரோக்கியம் சத்தியநாதன்;1832-1890) கல்வியாளர். கிறிஸ்தவப் பெண்களை ஒன்றிணைத்து சமூக நற்பணிகளை மேற்கொண்டவர். சென்னையிலும், திருநெல்வேலியிலும் பெண்களுக்கான பள்ளிகளை உருவாக்கி நடத்தியவர். ரெவரண்ட் ஜான் தேவசகாயத்தின் மகள். ரெவரண்ட் W.T. சத்தியநாதனின் மனைவி.

பிறப்பு, கல்வி

அன்னா, மயிலாடுதுறையில், ரெவரண்ட் ஜான் தேவசகாயம் அவர்களுக்கு 30 ஏப்ரல் 1832-ல் மகளாகப் பிறந்தார். தந்தையின் திருச்சபை ஊழியப் பணிக்காகக் குடும்பம் திருநெல்வேலியில் உள்ள பாளையங்கோட்டைக்குக் குடி பெயர்ந்தது. இளம் வயதிலேயே பைபிள் உள்ளிட்ட வேதாகம நூல்களை முழுமையாகக் கற்றுத் தேர்ந்தார் அன்னா. வீட்டிலேயே அவருக்குக் கல்வி போதிக்கப்பட்டது. தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் தேர்ந்தவரானார்.

மிஷனரியைச் சேர்ந்த மிஸ் கிப்ரினிடம் தனியாக ஆங்கிலம் பயின்றார் அன்னா. அந்தச் சிறு வயதிலேயே ஆங்கிலத்தில் நன்றாக எழுதுவது மட்டுமல்லாம,, நல்ல பள்ளியை எப்படி நடத்துவது என்பதையும் அன்னா, மிஸ் கிப்ரினிடம் இருந்து கற்றுக்கொண்டார்.

தனி வாழ்க்கை

அன்னா - சத்தியநாதன் இணையர்

பிப்ரவரி 11, 1849-ல், மாணவராக இருந்த W.T. சத்தியநாதனுடன் அன்னாவுக்குத் திருமணம் நிகழ்ந்தது. அன்னா, அன்னா சத்தியநாதன் ஆனார். 1857-ல்,  W.T. சத்தியநாதன் மேற்கல்விக்காக  சென்னைக்குச் செல்ல நேர்ந்தது. அன்னாவும் உடன் சென்றார். 1859-ல்,  W.T. சத்தியநாதன் திருச்சபைப் பணியாற்ற  திருநெல்வேலிக்கு அழைக்கப்பட்டார். அன்னாவும், தனது இரு குழந்தைகளுடன் திருநெல்வேலிக்குப் புறப்பட்டுச் சென்றார்.

W.T. சத்தியநாதன், ஸ்ரீவில்லிபுத்தூரில் பகுதிக்கு சுவிசேஷப் பிரசங்கியாக நியமிக்கப்பட்டார். அவ்வூரிலேயே ஒரு சிறு வாடகை வீட்டில் அவர்கள் வசித்தனர்.

கல்விப் பணிகள்

தனக்கான ஓய்வு நேரத்தில் அருகில் வசித்த சிறு பிள்ளைகளைக் கூட்டி அவர்களுக்கு அடிப்படைக் கல்வியைப் போதித்து வந்தார் அன்னா. பின் கிறிஸ்தவர் மற்றும் கிறிஸ்தவர் அல்லாதோருக்கான ஒரு சிறு பள்ளியை ஆரம்பித்து நடத்தினார். மிஸ் கிப்ரின் அன்னாவின் வாழ்க்கை ஒரு முன் மாதிரியாக, வழிகாட்டியாக இருந்தார். பெண்கள் எப்படிக் குடும்பத்தில் நடந்து கொள்ள வேண்டும், குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்பதையெல்லாம் விளக்கி ‘நல்ல தாய்’ என்ற சிறு பிரசுர நூலை வெளியிட்டார். சர்ச் மிஷன் கமிட்டியின் அழைப்பின் பேரில் 1863-ல் மீண்டும் அவர்கள் சென்னைக்குச் சென்றனர்.

சமூகப் பணிகள்

சர்ச் மிஷன் சொசைட்டியில் உதவி தலைமைக் குருவாக இருந்தார் W.T. சத்தியநாதன். அவருக்கு உதவியாக இருந்தார் அன்னா சத்தியநாதன். சபை ஆராதனை வழிபாட்டில் பெண்களை ஒருங்கிணைத்து பல நற்பணிகளை மேற்கொண்டார் அன்னா ஆனாலும் பெண்களின் வருகை குறைவாகவே இருந்தது. இதனால் அப்பெண்களின் வீடுகளுக்கு அடிக்கடிச் சென்று அவர்களுடன் உரையாடியும், அவர்களுக்குத் தேவையான பல உதவிகளைச் செய்தும் தேவ ஊழியத்தில் அவர்களை ஈடுபடுத்தினார்.  ‘ஜெனானா போதனை’ என்ற அமைப்பை முதன் முதலில் ஏற்படுத்தினார். அதன் மூலம் கிறிஸ்தவர் அல்லாதவர்களுக்கான வீடுகளுக்குச் சென்று கிறிஸ்து, கிறிஸ்து மதம் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்..

வேதாகம வாசிப்பு, தையற் சங்கம், விடுமுறை நாள் பள்ளி போன்றவற்றை பெண்களை ஒருங்கிணைத்து மேற்கொண்டார். அவரது தொடர் முயற்சிகளால் சபைக்கு வருமானம் பெருகியது. அதன் மூலம் மேலும் பல நற்பணிகளை முன்னெடுக்க முடிந்தது.  ஆறு வருடக் கடும் உழைப்பிற்குப் பின் அன்னாவின் பணிகளை முன்னெடுக்க சர்ஷ் மிஷன் சொசைட்டி முன் வந்தது. அன்னாவையே அதற்குப் பொறுப்பாளராகவும் நிடமித்தது. இந்தப் பணிகள் அனைத்தையும் ஊதியமேதும் பெற்றுக்கொள்ளாமல் சேவைப் பணியாகவே செய்து வந்தார் அன்னா.

சபையின் ஏழை உறுப்பினர்களுக்கு தாய் போல் இருந்து அரவணைத்தார். அவர்களுக்கு உணவு, உடை , அவர்கள் குழந்தைகள் கல்வி பயிலப் புத்தகங்கள் என்று பல உதவிகளைச் செய்தார். இந்து விதவைகளை கிறிஸ்துவை ஏற்றுக் கொள்ளும்படியும், மீண்டும் மணம் செய்யும் கொள்ளும்படியும் இவர் செயல்பட்டார். அவர்கள் மேற்கல்வி பயில்வதற்கும் அன்னா உதவினார்.

சென்னையில் பள்ளிகள்

கிறிஸ்தவ மக்களுக்கு மட்டுமல்லாமல், கிறிஸ்துவை அறியாத இந்துக்களுக்கும் கிறிஸ்துவைப் பற்றி அறிமுகப்படுத்தும் முயற்சிகளை மேற்கொண்டார் அன்னா. 1864-ல், தன் வீட்டிலேயே ஒரு சிறிய பள்ளி ஒன்றை ஆரம்பித்தார். ஆரம்பத்தில் பத்து குழந்தைகள் மட்டுமே அதில் பயின்றனர். ஆனால், அன்னாவின் தொடர் முயற்சியினாலும், சர்ச் மிஷன் சொசைட்டி (CMS), சர்ச் ஆஃப் இங்கிலாந்து மிஷன் சங்கத்தார், கிழக்கில் பெண் கல்வியை மேம்படுத்துவதற்கான சொசைட்டி (The Society for Promoting Female Education in the East -SPFEE) போன்றோரின் உறுதுணையாலும் பள்ளி வளர்ந்து ஆறு பள்ளிகளாக ஆனது. அவற்றில் 500 பேர்களுக்கு மேல் கல்வி பயின்றனர். அவற்றில் 320 பேர் இந்துக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 106 இளம் பெண்களுக்கான வகுப்புகளை அன்னா சத்தியநாதன் மேற்பார்வையிட்டார். இந்தியாவில் பெண் கல்விக்கான அணுகுமுறைகளை மாற்றுவதில் அன்னா சத்தியநாதன் மிக முக்கியப் பங்காற்றினார்.

அன்னா சத்தியநாதனின் பணிகளைப் பார்த்து வியந்த, அப்போதைய சென்னை கவர்னர் நேப்பியரின் மனைவி நைனா நேப்பியர், நேப்பியர் பூங்காவில் தாங்கள் பொழுது போக்கக் கட்டியிருந்த கட்டிடத்தை, மாணவர்கள் கல்வி பயில்வதற்காக அன்னாவிடம் கையளித்தார். அங்கு ஒரு பள்ளி நிர்மாணிக்கப்பட்டது. ‘நேப்பியர் பார்க் ஹிந்து பாலிகா பாடசாலை’ என்று அப்பள்ளிக்குப் பெயர் சூட்டப்பட்டது. அன்னா சத்தியநாதனின் கல்விப் பணிகளுக்கு செல்வந்தர்களிடமிருந்து ஆதரவு பெருகியது. ஐரோப்பியர்கள் மட்டுமில்லாது தஞ்சாவூர் ராணி போன்றவர்களும் அன்னா சத்தியநாதன் மீது மிகுந்த மதிப்பு வைத்திருந்தனர். நைனா நேப்பியர் அன்னா சத்தியநாதனுக்குப் பல விதங்களிலும் உதவி செய்து வந்தார். நேப்பியருக்குப் பின் ஹோபார்ட் சென்னைக்குக் கவர்னராக நியமிக்கப்பட்டார். அவரது மனைவி அன்னாவின் பணிகளின் மீது மிகுந்த அக்கறை கொண்டிருந்தார். அன்னாவுக்குப் பல கடிதங்களை எழுதி, இந்துப் பெண்களின் கல்விக்கு அன்னா செய்து வரும் பணிகளைப் பாராட்டியதுடன், அவர்கள் மூலமாய்க் கல்வி அனைவருக்கும் பரவும் என்றும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இங்கிலாந்து பயணம்

W.T. சத்தியநாதன் - அன்னா சத்தியநாதன் இணையர் அழைப்பின் பேரில் இங்கிலாந்திற்குப் பயணப்பட்டர். மார்ச் 13, 1878-ல், அவர்கள் இங்கிலாந்திற்குக் கப்பலேறினர். ஆறு மாதங்கள் அவர்கள் இங்கிலாந்தில் தங்கியிருந்தனர். தங்கள் பணிகளுக்காக விக்டோரியா மகாராணி உள்ளிட்ட பலரால் பாராட்டப்பட்டனர். இளைய மகனான சாமுவேல் சத்தியநாதன், கேம்ப்ரிட்ஜில் மேற்கல்வி பயிலச் சேர்க்கப்பட்டார். அந்த அனுபவத்தை அன்னா சத்தியநாதன், ‘ஆங்கிலேய தேசத்தில் ஆறு மாத சஞ்சாரம்’ என்ற தலைப்பில் நூலாக எழுதினார். தமிழ்நாட்டுப் பெண்களின் நிலை மற்றும் அவர்களது தேவைகளை விவரிக்கும் ஒரு சிறிய புத்தகத்தையும் அவர் அங்கு வெளியிட்டார்

சத்தியநாதன் ஃபேமிலி ஆல்பம்

குடும்பம்

சாமுவேல் சத்தியநாதன் - அன்னா சத்தியநாதன் இணையருக்கு ஐந்து பெண்களும் இரண்டு ஆண்களும் என ஏழு குழந்தைகள் பிறந்தன. அவர்களில் முதல் இரண்டு பெண் குழந்தைகள் இருவரும் இளவயதிலேயே இறந்து விட்டனர். ஜோஹன்னா சத்தியநாதன், கதி சத்தியநாதன், அன்னி க்ளார்க் சத்தியநாதன் ஆகிய பெண்களும், ஜான் சத்தியநாதன், சாமுவேல் சத்தியநாதன் என்ற இரு ஆண்களும் உயிரோடு இருந்தனர். அன்னியின் கணவரான டபிள்யூ.டி. கிளார்க், ஜியான் தேவாலயத்தில் 16 வருடங்கள் (1892-1918) மத குருவாகப் பணியாற்றினார். ஜான் சத்தியநாதன் ஊழியக் கல்வி பயின்று சென்னையில் மத குருவாக இருந்தார். சாமுவேல் சத்தியநாதன் கேம்பிரிட்ஜில் பயின்று பட்டம் பெற்று சென்னையின் சிறந்த கல்வியாளராகத் திகழ்ந்தார்.

சாமுவேலின் மனைவியான கிருபா பாய் சத்தியநாதன், முதன் முதலில் ஆங்கிலத்தில் நாவல் எழுதிய பெண்ணாக மதிக்கப்படுகிறார். இவரது சகுணா, கமலா என்னும் நாவல்களை, W.T. சத்தியநாதனிடம் பயிற்சி பெற்ற சாமுவேல் பவுல் தமிழில் மொழிபெயர்த்தார். சாமுவேல் சத்தியநாதனின் இரண்டாவது மனைவியான கமலா சத்தியநாதன் சென்னை சர்வகலாசாலையின் (சென்னைப் பல்கலைக்கழகம்) முதல் முதுகலைப் பட்டதாரி. தமிழ்நாட்டிலிருந்து ஆங்கிலத்தில் பத்திரிகை ஆரம்பித்து நடத்திய (The Indian Ladies Magazine) முதல் பெண் பத்திரிகையாளர்.

இவர்கள் அனைவரது படைப்புகளிலிருந்து தேர்ந்தெடுத்த சில படைப்புகளை ‘Eunice de Souza, The Satthianadhan Family Album’ என்ற தலைப்பில் தொகுத்துள்ளார். சாகித்ய அகாதமி நிறுவனம் இந்நூலை வெளியிட்டுள்ளது.

மறைவு

அன்னா சத்தியநாதன் உடல் நலக்குறைவால் அக்டோபர் 24, 1890-ல் காலமானார்.

அன்னா சத்தியநாதன் வாழ்க்கை வரலாறு

ஆவணம்

அன்னா சத்தியநாதன் வாழ்க்கை குறித்து சாமுவேல் சத்தியநாதன் ‘Sketches of Indian Christians’ என்ற நூலில் எழுதியுள்ளார். அன்னா சத்தியநாதனின் மகள் அன்னி க்ளார்க் ‘அன்னாள் சத்தியநாதன் அம்மாளின் ஜீவிய விர்த்தாந்தம்’ என்ற தலைப்பில் அன்னா சத்தியநாதனின் வாழ்க்கையை ஆவணப்படுத்தியுள்ளார்.

வரலாற்று இடம்

அன்னா சத்தியநாதன் இறப்பு குறித்து அக்காலத்தில் வெளியான ‘மாதர் மித்திரி’ இதழ் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளது. “சென்னையிலுள்ள சிறுமியர்க்கெல்லாம் அன்னைபோலிருந்து, அரும்புகழ்பெற்ற 'அன்னாள் சத்தியநாதன்' அம்மாள், சென்ற மாதம் இருபத்துநாலாம் தேதி பாக்கியமான மரணமடைந்தார்கள் என்னும் துக்க செய்தியை நமது சிநேகிதர்களுக்கு மிகுந்த விசனத்துடன் தெரிவிக்கின்றோம். சர்ச் மிஷன் சங்கத்து சுதேச குருவாகச் சென்னையில் வேலைபார்த்து வரும் சத்தியநாதன் ஐயரின் அருமை மனைவியாகிய இவர்கள், 1832-ம் வருடம் மாயவரம் பட்டணத்தில் பிறந்து, பதினேழாம் வயதில் விவாகம்செய்து, தனது கணவரோடு சென்னைக்கு வருமட்டும் திருநெல்வேலியில் திரு ஊழியம் செய்துவந்தார்கள். சென்னைக்கு வந்தபின், ‘ஜெனானா’ என்னும் சிறந்த வேலையை முந்த முந்த ஸ்தாபித்த சுதேச ஸ்திரீ என்று சென்றவிடமெங்கும் சிறப்புப் பெற்றார்கள். சென்னையின் பற்பல பாகங்களில் இந்துகுலப் பெண்களுக்கும் பகிரங்க பாடசாலைகளை ஏற்படுத்தினார்கள்.

இவர்கள் 1878-ம் வருடம் ஆங்கிலேய தேசத்துக்குப் போய், ஆறு மாதகாலம் இருந்து, அங்குள்ள அநேக சீமாட்டிகளை இந்தியாவிலுள்ள சகோதரிகளுக்கு உதவிசெய்யும்பொருட்டு எழுப்பி விட்டார்கள். இந்த நல்நோக்கத்துக்கிசைவாக இந்து ஸ்திரீகளின் நிர்ப்பந்த நிலைமையைக்குறித்து ஒரு சிறு நூலை இங்கிலீஷில் பிரசுரம் செய்தார்கள். அநேக ஸ்திரீகளால் நாளது வரையில் ஆவலோடு வாசிக்கப்பட்டு வரும் ‘நல்ல தாய்’ என்னும் அரிய நூலை எழுதினவர்களும் இவர்களே.”

நூல்கள்

The Good Mother

A Brief Account of Zenana Work in Madras

உசாத்துணை

அன்னா சத்தியநாதன் வாழ்க்கை வரலாறு : அன்னி கிளார்க்

அன்னா சத்தியநாதன் வாழ்க்கைக் குறிப்பு : சாமுவேல் சத்தியநாதன், ஆர்கைவ் தளம்



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.