being created

கலா நிலயம்

From Tamil Wiki
Revision as of 13:18, 10 July 2022 by ASN (talk | contribs) (Para Added, Image Added)
கலாநிலயம் இதழ்

வழக்குரைஞர்; கல்வியாளர்; சொற்பொழிவாளர்; நாடக இயக்குநர் என பல்துறைச் செயல்பாட்டாளராக இருந்தவர் டி.என். சேஷாசலம். இலக்கியத்தின் மீது கொண்ட ஆர்வத்தால் இவர் தோற்றுவித்த இதழ் ‘கலா நிலயம்’. 1928 தொடங்கி, 1935 வரை வெளி வந்தது இவ்விதழ்.

எழுத்து, பிரசுரம்

‘Madras Young Men's Association Night School’ என்ற இரவுப் பள்ளி மூலம், ஆர்வமுள்ள மாணவர்களுக்கும், படிப்பைப் பாதியில் கைவிட்டவர்களுக்கும் ஆங்கில மற்றும் தமிழ் இலக்கியத்தைப் போதித்து வந்தார் டி.என். சேஷாசலம். அவை இலக்கியத்தில் ஆர்வமுள்ள பிறருக்கும் பயன்பட வேண்டும் என்று நினைத்தார். அதன் காரணமாக ஜனவரி 5, 1928-ல், இவர் ஆரம்பித்த இதழ் தான் ‘கலா நிலையம்.’ கலா நிலையம் என்பது  டி.என். சேஷாசலம் நடத்தி வந்த நாடகக் குழுவின் பெயர். அவரது இல்லத்தின் பெயரும் அதுதான். அந்தப் பெயரையே தான் புதிதாக ஆரம்பித்த இதழுக்கும் சூட்டினார் சேஷாசலம்.

‘வியாழன் தோறும் வெளிவரும் வாரப் பத்திரிகை’ என்ற அறிவிப்புடன் கலா நிலயம் வெளியானது. இதழின் நோக்கங்களாகச் சேஷாசலம், தமிழைப் பிழையறக் கற்றுக் கொள்ளுதல், ஆங்காங்கு உள்ள தமிழ்ப் புலவர்களை ஒருங்கிணைத்து இதழுக்கு எழுத வைத்து இலக்கிய வளம் சேர்த்தல், ஆங்கில மொழியின் பெருமையை, சிறப்பை அனைவரும் அறியும் பொருட்டு சிறந்த படைப்புகளை மொழிபெயர்த்து அளித்தல் போன்றவற்றைக் குறிப்பிட்டிருக்கிறார்.

கலா நிலயம் தனிப்பிரதியின் விலை 3 அணா. உள்நாட்டு வருட சந்தா 7 ரூபாய் எட்டு அணா ; புற நாடு (இதழில் அவ்வாறே குறிக்கப்பட்டுள்ளது) 9 ரூபாய் எட்டு அணா. ஆரம்பத்தில் இருபது பக்கங்கள் கொண்டதாக இவ்விதழ் வெளியானது. பிற்காலத்தில் 16 பக்கங்களுடன் வெளிவந்தது.

பொதிகை நிகண்டு

உள்ளடக்கம்

ஆரம்ப காலக் கலா நிலய இதழ்களில் ‘நளவெண்பா’, ‘கம்பராமாயாணம்’ போன்றவை விளக்க உரைகளுடன் தொடர்களாக வெளியாகியுள்ளன. நளவெண்பாவை ‘தமிழ்ப்பாடம் - 1’ என்ற தலைப்பில் தொடராக எழுதியிருக்கிறார் சேஷாசலம். இக்கட்டுரையைப் பாடல், பதவுரை, கருத்து, விளக்கம் என்று அனைவருக்கும் புரியும் வண்ணம் எளிய தமிழில் தந்திருக்கிறார். அன்னம் - நளன் உரையாடலை ரோமியோ - ஜூலியட் உரையாடலுடன் தொடர்புப்படுத்தி எழுதியிருக்கிறார்.

முதல் இதழிலேயே ‘காந்திமதி என்னும் காந்தார நாட்டுக் கண்ணழகி’ என்ற நாவல் தொடரை ஆரம்பித்திருக்கிறார். ஷேக்ஸ்பியரின் ஜூலியஸ் சீசர் உள்ளிட்ட நாடகங்களும் இதழில் வெளியாகியுள்ளன. ‘டெம்படஸ்’ என்பதை ‘காற்றுமழை’ என்ற தலைப்பில் தந்துள்ளார். ‘ஜூலியஸ் சீசர்’, ‘புயல்’, ‘ஒத்தெல்லோ’ போன்ற ஷேக்ஸ்பியரின் நாடகங்களைத் தமிழில் மொழிபெயர்த்துத் தொடராக வெளியிட்டுள்ளார்.

கே. ராஜகோபாலாச்சாரியார் ‘நம்மாழ்வார் வைபவம்’ என்ற தலைப்பில் ஆழ்வாரது பாடல்களின் சிறப்பை விளக்கி இதழ்தோறும் எழுதியிருக்கிறார். பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியாரின் தொடர் ஒன்றும் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு வார இதழிலும் சேஷாசலம் எழுதியிருக்கும் தலையங்கங்கள் இடம் பெற்றுள்ளன. குறுக்கெழுத்துப் போட்டி ‘சொல்லூடாட்டம்’ என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ளது. ‘தேவகி’ என்ற தலைப்பில் நாவல் ஒன்று தொடராக வெளியாகியுள்ளது. மனம் மற்றும் அதன் உணர்வு, செயல்பாடுகள் பற்றிய மிக விரிவான சிந்தனைகளை தனது ‘மானத சாத்திரம்’ எனும் தொடரில் முன் வைத்திருக்கிறார் தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை. தமிழின் ஆரம்ப காலத்தில் வெளிவந்த உளவியல் தொடர் இது.

‘சூரியன்’ பற்றிய அறிவியல் தொடரும், ‘வான சாஸ்திரம்’ பற்றிய தொடரும் இடம்பெற்றுள்ளன. நளவெண்பா, நைடதம், கம்பராமாயணம், சூளாமணி போன்றவற்றிற்கு உரையெழுதியுள்ளார் டி.என். சேஷாசலம். சூளாமணி உரையை ஏனோ அவர் பாதியில் நிறுத்திவிட, தெ.பொ.மீ. அதனைத் தொடர்ந்து எழுதியிருக்கிறார். ‘வர்த்தமானம்’ என்ற தலைப்பில் அக்காலத்து நிகழ்வுகள் தொகுத்தளிக்கப்பட்டுள்ளன. தர்மம் வளர்ப்பதற்காக ஜான்ராக்பெல்லர் கொடுத்திருக்கும் 300 கோடி, புதுச்சேரியில் நிலவரி குறைக்கப்பட்டது, இந்திய ராஜப்பிரதிநிதி விடுதலை இயக்கங்களை அடக்குவதற்காக இயற்றியிருக்கும் மூன்று அவசரச் சட்டங்கள், சந்திரபோஸ் ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகைமீது தொடுத்த மானநஷ்ட வழக்கு, சென்னையில் ‘மர்க்காரா’ என்ற கப்பல் எரிந்தது, பாரதி நூல்கள் பறிமுதல் செய்யப்பட்டது என பல்வேறு செய்திகள் கலா நிலைம் இதழ்களில் காணக் கிடைக்கின்றன.

‘மதுகரம்’, ‘சபரி’ போன்ற புனைபெயர்களிலும் பல கட்டுரைகளை சேஷாசலம் எழுதியுள்ளார். சிறுகதைகள் சிலவும் அவ்வப்போது வெளியாகியுள்ளன. பல ஆங்கிலக் கட்டுரைகள், நூல்கள், கதைகள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியாகியுள்ளன. இரவீந்திரநாத் தாகூரின் பல கட்டுரைகள் மொழியாக்கம் செய்யப்பட்டு வெளியாகியிருக்கின்றன. மதுரைக் கோவை, தினகர வெண்பா, மாறன் பாப்பாவினம், களவியல் காரிகை, எஸ். வையாபுரிப் பிள்ளை அவர்கள் தொகுத்த ‘பொதிகை நிகண்டு’ போன்ற இலக்கிய நூல்கள் முதன் முதலில் உரை விளக்கமாக கலா நிலயம் இதழில் தான் அச்சேறியிருக்கின்றன.

இதழ்களில், இலக்கிய நூல்களின் விற்பனை, வெளியீடு பற்றிய அறிவிப்புகள், விளம்பரங்கள் வெளியாகியுள்ளன. அவை தவிர்த்து ‘நஞ்சன்கூடு பல்பொடி’, ‘ ‘பவுண்டரி விளம்பரம்’, ‘இன்ஸ்யூரன்ஸ் விளம்பரம்’ போன்ற விளம்பரங்களும் வெளியாகியுள்ளன. ஆண்டாண்டு வெளியாகும் இதழ்கள் தொகுக்கப்பட்டு முதல் வால்யூம், இரண்டாவது வால்யூம், மூன்றாவது வால்யூம் என்றெல்லாம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.

மதிப்புரை - அறிவிப்பு

பிறர் படைப்புகளின் மதிப்புரை ’கலா நிலயம்’ இதழில் வெளியாக வேண்டுமென்றால், மதிப்புரைக் கட்டணம் ரு. 10/- கட்ட வேண்டும் என்ற அறிவிப்பையும் கலா நிலயம் வெளியிட்டுள்ளது.

பங்களிப்பாளர்கள்

டி.என். சேஷாசலம்

கே. ராஜகோபாலாச்சாரியார்

எஸ். வையாபுரிப் பிள்ளை

பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராச்சாரியார்

தெ.பொ.மீனாட்சி சுந்தரம் பிள்ளை

அ. சீனிவாசராகவன்

கே. ராமரத்னம்

கே. ராஜகோபாலன்

ஏ. ராமலிங்கம்

பி.ராமாநுஜன்

டி.ஏ.கனகசபாபதி முதலியார்

கோவிந்தசாமி ராஜூ

கி.வெங்கடசாமி ரெட்டியார்

திம்மப்பா ஐயர்

எம்.சோமசுந்தரம் பிள்ளை

ஈ.என். தணிகாசல முதலியார்

டி.எஸ். நடராஜப் பிள்ளை

ம.வீ. வேணுகோபாலப் பிள்ளை

சுப்பராயச் செட்டியார்

அருணாசலம் பிள்ளை

ஈ.த. ராஜேஸ்வரி அம்மாள்

கே.என்.சுந்தரேசன்

மற்றும் பலர்

இதழ் நிறுத்தம்

மிகக் கடுமையான பணச்சிக்கலை இதழ் எதிர்கொள்ள நேரிட்ட போதும் மனம் தளராமல் இதழை நடத்தி வந்தார் சேஷாசலம். நாடகங்கள் பலவற்றைத் தன் குழுவினர் மூலம் மேடையேற்றி, அதில் கிடைத்த வருவாயை இதழின் வளர்ச்சிக்குச் செலவிட்டார். ஆகஸ்ட் 1, 1935 இறுதி இதழ் வெளிவந்தது. அதன் பின் பணச்சிக்கலால் இதழ் நின்று விட்டது.

ஆவணம்

தமிழ் இணைய நூலகத்தில் ‘கலா நிலயம்’ இதழ்ப் பிரதிகள் சில ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

வரலாற்றிடம்

தமிழாய்ந்த புலவர்களிடையே அக்காலத்தில் செல்வாக்குப் பெற்ற இதழாக ‘கலாநிலயம்’ இருந்தது.

உசாத்துணை :

கலா நிலையம் இதழ்கள் - தமிழ் இணைய நூலகம்

தென்றல் இதழ் கட்டுரை





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.