வடுவூர் கே.துரைசாமி ஐயங்காரின் சமய ஆராய்ச்சி

From Tamil Wiki
Revision as of 12:05, 2 July 2022 by ASN (talk | contribs) (Para Added)

நாவலாசிரியர் வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் நாவல் எழுதுவது மட்டுமின்றி சமயம் சார்ந்த ஆராய்ச்சி ஒன்றிலும் ஈடுபட்டிருந்தார். பல்லாண்டுகால தனது ஆராய்ச்சியின் விளைவை ஆங்கிலத்திலும் தமிழிலும் நூல்களாக எழுதி வெளியிட்டார்.

ஆங்கில நூல் : Long Missing Links,

வடுவூர். கே. துரைசாமி ஐயங்காரின் பல்லாண்டு கால ஆராய்ச்சி ஆங்கிலத்தில் ‘Long Missing Links, Or, The Marvelous Discoveries about the Aryans, Jesus Christ and Allah - Volume 1’ என்ற தலைப்பில் ஒரு நூலாக வெளியானது. இந்த ஆராய்ச்சியைப் பற்றி தனது ‘இலக்கியச் சாதனையாளர்கள்’ நூலில், க.நா.சுப்ரமண்யன், “அவர் பேசிய விஷயங்களிலே முக்கியமானதாக ஒன்று நினைவுக்கு வருகிறது. எகிப்தில் தலைமுறை தலைமுறையாக ஃபாரோக்கள் என்கிற பெயருடன் அரசாண்ட மன்னர்கள் தென்னாட்டிலிருந்து எகிப்து என்ற மிசிர தேசத்துக்குச் சென்ற வடகலை ஐயங்கார்கள்தான் என்று அசைக்க முடியாத ருசு இருப்பதாகவும், அதையெல்லாம் சொல்லித் தான் ஒரு நூல் எழுதிக் கொண்டிருப்பதாகவும் சொன்னார்” என்கிறார்.

அதில் உள்ள விவரங்களைத் தமிழில் ‘சமய ஆராய்ச்சி’, ‘ஜோதிட ஆராய்ச்சி’ போன்ற தலைப்புகளில் நூலாக எழுதி, தனது சொந்தப் பதிப்பகமான ’ஓரியண்டல் ஹோம் யூனிவர்ஸிட்டி’ மூலம் வெளியிட்டார்.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்காரின் சமய ஆராய்ச்சி நூல்.

சமய ஆராய்ச்சி

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார் தனது ‘சமய ஆராய்ச்சி’ என்னும் அந்த நூலில், “சில வருஷ காலத்திற்கு முன்னர், நான் தமிழ் நாவல்கள் எழுதுவதை நிறுத்திவிட்டு, தேச சரித்திரங்கள், சமய நூல்கள், பாஷைகள் முதலியவற்றை ஆராய்வதற்கென்றே ‘ஓரியண்டல் ஹோம் யூனிவர்ஸிட்டி’ என்ற ஸ்தாபனத்தை அமைத்து, சுமார் மூன்று வருஷம் உழைத்து, நான் தெரிந்துகொண்ட புதிய விஷயங்களில் சிலவற்றைத் திரட்டி, ‘லாங் மிஸ்ஸிங் லிங்ஸ்’ அல்லது, ‘ஆரியர்கள், கிறிஸ்து, அல்லாஹ் என்பனவற்றைப் பற்றிய ஆச்சரியகரமான புதுமை வெளியீடுகள் (முதல் பாகம்)’ என்னும் பெயரில் ஒரு பெரிய நூலை வெளியிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், ““இந்நூலைப் பெரும்பாலோர் வாங்கிப் படிக்காது அசட்டையாய் இருந்து விட்டதனால், இந்த ஆராய்ச்சியினாலும், இந்நூலை வெளியிட்டு, இதுபற்றி பத்திரிகைகளில் விளம்பரங்கள் வெளியிட்டதனாலும் எனக்கு சுமார் பதினைந்தாயிரம் ரூபாய் வரையில் கடன் ஏற்பட, அதைத் தீர்க்கும் பொருட்டு சகலவிதமான நாவல் காப்பிரைட்டுகளையும், புஸ்தகங்களையும், சுமார் இருபதாயிரம் ரூபாய்ச் செலவில் கட்டப்பட்ட மூன்றடுக்கு மாடி வீட்டையும் விற்று நான் மாத்திரம் மீள வேண்டியவனானேன். ஆயினும் நான் எடுத்துக்கொண்ட விஷயம் உலகத்திலுள்ள எல்லாச் சமயங்களுக்கும் உள்ள நெருங்கிய சம்பந்தங்களைக் காட்டி சமரஸத் தன்மையை உண்டாக்க வேண்டுமென்னும் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டதாகையால் எப்பாடுபட்டாயினும் என்னாலியன்ற வரையில் என் கருத்தை நிறைவேற்றியே தீரவேண்டுமென்ற உறுதியான தீர்மானம் என்னைவிட்டு அகலாமல் இன்னமும் இருப்பதனால் நான் நாவல் வெளியீட்டோடு இந்தத் தொண்டையும் சிறிதளவு கலந்து செய்ய வேண்டுமென்பதே என் கருத்து” என்று சொல்லியிருக்கிறார்.