being created

வெண்முரசு

From Tamil Wiki


🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.

வெண்முரசு(தொடர் நாவல்)


வெண்முரசு ஒரு தொடர் நாவல். மொத்தம் 26 நாவல்கள். ஏறத்தாழ 25,000 பக்கங்கள். உலகில் உள்ள மிகப் பெரிய நாவல்களுள் இதுவும் ஒன்று. இது மகாபாரதத்தை நவீனச் செவ்வியல் தமிழில் மீட்டுருவாக்கம் செய்து எழுதப்பட்டது. இதனை எழுதியவர் எழுத்தாளர் ஜெயமோகன். ‘வெண்முரசு’ தொடர் நாவல்கள் ஒவ்வொன்றும் தன்னளவில் நிறைவும் நாவல் தொடரோடு கதையோட்ட இணைப்புக் கண்ணியையும் கொண்டுள்ளன. இந்த நாவல்கள் ஒவ்வொன்றும் மகாபாரதத்தின் மாபெரும் கதைமாந்தர்களை நுணுகி ஆராய்ந்துள்ளது. மகாபாரதத்தில் மிகக் குறுகிய இடத்தினைப் பெற்ற சிறிய கதைமாந்தர்களை அவர்களின் செயல்பாடுகள், எண்ணவோட்டங்கள் முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு விரிவாக்கம் செய்துள்ளது. மானுட பேரறத்தை முதன்மையாகக் கொண்டு, காலவேட்டத்தில் மானுடர் மனத்தில் எழுந்தடங்கும் உணர்ச்சிகளையும் தத்துவ மோதல்களையும் அகதரிசனங்களையும் விரிவாக எடுத்துக் கூறுகிறது. ‘புராணம்’ இன்றைய நவீன இலக்கியமாக அமைவுகொள்ளும் மாபெரும் புனைவுச்செயல்பாடு இது.

பதிப்பு

இணையப் பதிப்பு

பிற நாவல்களைப் போல் அல்லாமல் இந்த நாவல் எழுதப்படும் போதே முழுக்க முழுக்க இணையப் பதிப்பாகவே வெளியிடப்பட்டது. இது எழுத்தாளர் ஜெயமோகன் தன்னுடைய இணையதளத்தில் ஜனவரி 1, 2014முதல் ஒவ்வொரு நாளும் ஓர் அத்யாயம் என வெளியிடப்பட்டு ஜூலை 16, 2020 இல் நிறைவு பெற்றது. மொத்தம் 1932 அத்யாயங்கள். உலக உள்ள மிகப் பெரிய நாவல்களுள் வெண்முரசு தொடர் நாவல் மட்டுமே இணையத்தில் முற்றிலும் இலவசமாகப் படிக்கக் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இணையத்தில் மின்பதிப்பாகவும் விலைக்குக் கிடைக்கிறது.

அச்சுப் பதிப்பு

‘வெண்முரசு’ தொடர் நாவலின் முதல் நான்கு நாவல்களை மட்டும் நற்றிணை பதிப்பகம் அச்சுப் பதிப்பாக வெளியிட்டது. பின்னர், கிழக்கு பதிப்பகம் அனைத்து நாவல்களையும் வெளியிட்டது.

ஆசிரியர்

நவீனத் தமிழ் இலக்கியப் பெரும் பரப்பில் புதுமைப்பித்தன், ஜெயகாந்தன், சுந்தர ராமசாமி என்ற மாபெரும் ஆளுமைகளுக்கு அடுத்தபடியாக வைத்துச் சிறப்பிக்கப்படுபவர் எழுத்தாளர் ஜெயமோகன். இவர், 1980களில் இருந்து தொடர்ந்து நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புகளை உருவாக்கி வருகிறார். முழுநேர எழுத்தாளர். தமிழ், மலையாளத் திரையுலகங்களில் திரைக்கதை, வசனம் எழுதி வருகிறார். இவரின் முதல் நாவல் ரப்பர் (1988). இந்த நாவலுக்கு ‘சம்ஸ்கிருதி சம்மான் விருது’ கிடைத்தது. இவரின் மகத்தான படைப்பு ‘விஷ்ணுபுரம்’ நாவல். தமிழ்ப் படைப்புலகில் மிகுந்த அதிர்வை எழுப்பிய நாவல் இது. இவரின் பெரும் படைப்பு ‘வெண்முரசு’ தொடர் நாவல். இவரின் உச்சநிலை படைப்பு ‘குமரித்துறைவி’ நாவல். இவர் தான் எழுதிய அனைத்துப் படைப்புகளையும் தன்னுடைய இணையதளத்தில் பதிவேற்றி, அவற்றை வாசகர்கள் முற்றிலும் இலவசமாகப் படிக்குமாறு செய்துள்ளார். நடுவண் அரசு இவரின் இலக்கியச் சேவையைப் பாராட்டி ‘பத்மஸ்ரீ’ விருதினை நல்க முன்வந்தமை குறிப்பிடத்தக்கது.

கதைச்சுருக்கம் / நூல்சுருக்கம்

வெண்முரசு தொடர் நாவல் - அறிவிப்புப் பதாகை.

கதை மாந்தர்

உருவாக்கம்

நூல் பின்புலம்

இலக்கிய இடம் / மதிப்பீடு

‘வெண்முரசு’ நாவல் தொடரின் தலைப்புகள்

1.   முதற்கனல்

அஸ்தினபுரியின் அரசனாகப் பொறுப்பேற்கவிருக்கும் விசித்திரவீரியனுக்காகக் காசிநாட்டு இளவரசிகளான அம்பை, அம்பிகை, அம்பாலிகை ஆகிய மூவரையும் பீஷ்மர் சிறையெடுத்து வருகிறார். விசித்திரவீரியனின் இறப்பும் பீஷ்மரை அம்பை சபிப்பதும் அம்பிகைக்குத் திருதராஷ்டிரரும் அம்பாலிகைக்குப் பாண்டுவும் பிறப்பது வரையிலான நிகழ்வுகள் இந்த ‘முதற்கனல்’ நாவலில் இடம்பெறுகின்றன.

2.  மழைப்பாடல்

திருதராஷ்டிரர் காந்தாரியை மணமுடிப்பதும் குந்தி பாண்டுவை மணப்பதும் இந்த நாவலில் இடம்பெறுகின்றன. பாண்டுவை மணப்பதற்கு முன் குந்திக்குக் கர்ணன் பிறப்பதும் மணமுடித்த பின்னர் குந்திக்கு யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் ஆகியோர் பிறப்பதும் மாத்ரிக்கு நகுலன்ஈ சகதேவர்கள் ஆகியோர் பிறப்பதும் திருதராஷ்டிரருக்குத் துரியோதனன் உள்ளிட்ட கௌரவர்கள் பிறப்பதும் நாவலில் வருகின்றன. பாண்டுவுடன் வனவாசம் சென்ற குந்தி சிறுவர்களான பாண்டவர்களை அழைத்துக்கொண்டு அஸ்தினபுரி வருவதுடன் இந்த ‘மழைப்பாடல்’ நாவல் நிறைவுபெறுகிறது.

3.  வண்ணக்கடல்

பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகியோரின் இளமைக்காலத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது. துரோணரைத் துருபதன் வஞ்சிக்கிறார். துரோணர் அர்ஜுனனுக்கு ஆசிரியராவதும் கௌரவர்கள் பீமனுக்கு நஞ்சூட்டுவதும் நிகழ்கின்றன. இந்த நாவல் ‘வண்ணக்கடல்’ இளநாகன் என்ற தமிழகப் பாணனின் வழியாகச் சொல்லப்படுகிறது.

4.  நீலம்

இந்த ‘நீலம்’ மகாபாரத வரிசையில் இருந்து விலகி, பாகவத மறு ஆக்கமாக அமைகிறது. கிருஷ்ணனின் இளமைக் காலத்தை ராதையின் வழியாகச் சொல்கிறது. கவித்துமான நடை கொண்ட ஆக்கம். ‘ராதாமாதவ’ மனநிலையைக் கொண்டாடும் படைப்பு இது.

5.  பிரயாகை

துரோணரின் ஆணைக்கிணங்க பாண்டவர்களும் கௌரவர்களும் துருபதனை வென்று, சிறைப் பிடிக்கின்றனர். கிருஷ்ணன் தன் நாட்டினை மீட்பதற்காகத் தன் அத்தையான குந்தியிடம் உதவி கேட்டு வருகிறான். துருபதன் தவம் இயற்றி திரௌபதியைப் பெறுகிறார். பாண்டவர்களை எரித்துக் கொல்ல வாரணவதத்தில் கௌரவர்கள் அரக்கு மாளிகையை அமைக்கின்றனர். அங்கிருந்து தப்பிச்செல்லும் பாண்டவர்கள் இடும்பவனத்திற்குள் நுழைகின்றனர். அங்குப் பீமன் இடும்பியை மணக்கிறான். திரௌபதியைப் பாண்டவர்கள் மணமுடிப்பதுடன் இந்த ‘பிரயாகை’ நிறைவுறுகிறது.

6.  வெண்முகில் நகரம்

பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் பகை முற்றுகிறது. அவர்களுக்கு இடையேயான பிரிவினை முற்றி ‘இந்திரபிரஸ்தம்’ என்ற நகரைப் பாண்டவர்கள் அமைக்கின்றனர். அந்த நகரைப் பற்றியும் கிருஷ்ணனின் துவாரகை நகரைக் குறித்தும் இந்த ‘வெண்முகில் நகரம்’ நாவல் விரிவாகக் கூறுகிறது.

7.   இந்திர நீலம்

இந்த நாவலும் நீலத்தைப் போலவே மகாபாரதக் கதையின் மையத்தை விட்டு விலகி கிருஷ்ணன் மணமுடிக்கும் எட்டு அரசியர்களைப் பற்றி விரிவாக உரைக்கிறது. வெண்முரசு தொடர் நாவல் முழுவதிலுமே கிருஷ்ணர் (இளைய யாதவர்)தான் மையமாக இருக்கிறார் என்றாலும்கூட ‘நீலம்’, ‘இந்திரநீலம்’ ஆகிய நாவல்களில் முழுவதுமாக அவரே இருக்கிறார். நீலத்தில் மாயக்கிருஷ்ணன்; இந்திர நீலத்தில் மானுடக்கிருஷ்ணன். அந்த வகையில் இந்த ‘இந்திரநீலம்’ நாவல் மகாபாரதத்தை எட்டிநின்று தொடுகிறது.

8.  காண்டீபம்

இந்திரபிரஸ்தம் அமைக்கப்பட்ட பின்னர் அர்ஜுனன் யாத்திரை மேற்கொள்வதை இந்த ‘காண்டீபம்’ நாவல் விவரிக்கிறது. உலூபி, சித்ராங்கதை ஆகியோரை அர்ஜுனன் மணப்பதையும் கிருஷ்ணனின் தங்கையான சுபத்திரையையும் மணப்பதையும் விளக்கி, நிறைவடைகிறது. சமண சமயத்தின் தோற்றம் குறித்த சித்தரிப்புகள் இந்த நாவலில் உள்ளன.

9.  வெய்யோன்

கர்ணனின் அங்கதேசத்தையும் அவன் மனைவியருடனான அவல வாழ்வு குறித்தும் இந்த ‘வெய்யோன்’ நாவல் பேசுகிறது. துரியோதனன் இந்திரபிரஸ்தத்தின் பளிங்கு மாளிகையில் மனத்தடுமாற்றம் கொள்வதும் அவன் பாண்டவர்களின் மீது வஞ்சம் கொள்வதும் இந்நாவலில் சித்தரிக்கப்படுகின்றன.

10. பன்னிருபடைக்களம்

சேதிநாட்டு அரசன் சிசுபாலன் கிருஷ்ணனராலும் மகதத்தின் அரசான் ஜராசந்தன் பீமனாலும் கொல்லப்படுவதைச் சொல்கிறது இந்தப் ‘பன்னிருபடைக்களம்’ நாவல். யுதிஷ்டிரன் நாற்கள விளையாட்டில் இந்திரபிரஸ்தத்தை இழக்கிறார். திரௌபதியின் துகிலுரிதலுடன் இந்த நாவல் நிறைவு பெறுகிறது.

11.  சொல்வளர்காடு

பாண்டவர்களின் வனவாசத்தின் தொடக்கத்தைச் சொல்லும் நாவல் இது. நச்சுப் பொய்கையில் நீரருந்தி பாண்டவர்கள் மாண்டு, பிழைப்பதுடனும் யுதிஷ்டிரன் தன் மெய்மையைக் கண்டடைவதுடன் இந்தச் ‘சொல்வளர்காடு’ நாவல் முடிகிறது.

12. கிராம்

இந்திரனுக்கும் விருத்திரனுக்குமான போரினை ஓர் இழையாகவும் சைவ நெறிகளை மறு இழையாகவும் இந்த ‘கிராதம்’ நாவல் பின்னுகிறது. அர்ஜுனன் பாசுபதத்தை அடைவதுடன் இந்த நாவல் நிறைவுபெறுகிறது.

13. மாமலர்

பீமன் திரௌபதிக்காகக் கல்யாண சௌந்திக மலரை தேடிச் செல்லும் பயணம் இந்த ‘மாமலர்’ நாவலில் உள்ளது. அந்தப் பயணத்திற்கு இணையாக யயாதியின் கதை தேவயானி, சர்மிஷ்டை ஆகியோரின் வழியே சொல்லப்படுகிறது.

14. நீர்க்கோலம்

பாண்டவர்களும் திரௌபதியும் விராட தேசத்தில் தலைமறைவாக வாழ்வதை இந்த நாவல் சித்தரிக்கிறது. அந்தத் தலைமறைவு வாழ்க்கைக்கு இணையாக நளன், தமயந்தியின் கதை சொல்லப்படுகிறது. வெண்முரசு தொடர் நாவல்களில் பக்க எண்ணிக்கையில் இந்த ‘நீர்க்கோலம்’ நாவல்தான் பெரிய நாவல்.

15. எழுதழல்

உப பாண்டவர்கள், உப கௌரவர்கள் ஆகியோரைப் பற்றிய சித்தரிப்புகள் இந்த ‘எழுதழல்’ நாவலில் இடம்பெறுகின்றன. பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்குமான பகை மிகவும் முற்றிவிடுகிறது. அந்தப் பகை அவர்களைப் போரை நோக்கி, இட்டுச் செல்கிறது.

16. குருதிச்சாரல்

போரினைத் தடுப்பதற்காகப் பாண்டவர்கள் சார்பில் கிருஷ்ணன் (இளைய யாதவர்) துரியோதனனிடம் தூது சென்றதைப் பற்றி விரிவாகக் கூறுகிறது இநதக் ‘‘குருதிச்சாரல்’ நாவல். இந்தச் தூதுப் பயணத்தகவல்கள் அனைத்தும் பாண்டவர்கள், கௌரவர்கள் ஆகியோரின் மனைவியர்கள் வழியாகவே சொல்லப்படுகின்றன.

17. இமைக்கணம்

இந்த ‘இமைக்கணம்’ நாவல் கீதையின் மறு ஆக்கம். மகாபாரத மாந்தர்கள் ஒவ்வொருவரின் வழியாகக் கீதையின் ஒவ்வொரு யோகங்களும் விவரிக்கப்படுகின்றன. கீதையைப் போலவே இந்த நாவலும் ஒரு மாயவெளியில் நடைபெறுகிறது.

18. செந்நாவேங்கை

குருஷேத்திரப்போர் நடைபெறுவது உறுதியான பின்னர், பாண்டவர்களும் கௌரவர்களும் தத்தமது தரப்புக்கு வலுசேர்த்துக் கொள்வதற்காக ஈடுபடும் பேரங்கள் இந்தச் ‘செந்நாவேங்கை’ நாவலில் இடம்பெறுகின்றன. நாவலின் இறுதியில் குருஷேத்திரப்போர் தொடங்குகிறது.

19. திசைதேர்வெள்ளம்

குருஷேத்திரக் களத்தில் பீஷ்மர் தன் முழுத்திறனையும் வெளிப்படுத்தி, நிகழ்த்தும் அழிவுகளும் அவரது வீழ்ச்சியும் இந்தத் ‘திசைத்தேர்வெள்ளம்’ நாவலில் இடம்பெறுகிறது.

20. கார்கடல்

துரோணரின் மரணம் வரையிலான குருக்ஷேத்திரப் போர் இந்தக் ‘கார்கடல்’ நாவலில் இடம்பெறுகிறது.

21. இருட்கனி

துரோணரின் மரணத்துக்குப் பின்னர், கர்ணன் கௌரவரப்படைக்குத் தலைமை ஏற்பதும் கர்ணன் அர்ஜுனனால் கொல்லப்படுவது வரையிலான நிகழ்வுகளும் இந்த ‘இருட்கனி’ நாவலில் இடம்பெறுகின்றன.

22. தீயின் எடை

துரியோதனனின் மரணமும் அஸ்வத்தாமன், கிருபர் மற்றும் கிருதவர்மனால் பாண்டவ மைந்தர்கள் தீயிட்டுக் கொல்லப்படுவதும் இந்த நாவலில் சொல்லப்பட்டுள்ளன. இந்தத் ‘தீயின் எடை’ நாவலுடன் பாரதப்போர் நிறைவடைகிறது.

23. நீர்ச்சுடர்

உப பாண்டவர்கள் இறந்த பின்னர் கௌரவர்களுக்கும் தங்கள் மைந்தர்களுக்கும் நீர்க்கடன் செய்வது வரையிலான நிகழ்வுகள் இந்த ‘நீர்ச்சுடர்’ நாவலில் சொல்லப்பட்டுள்ளன.

24. களிற்றியானைநிரை

பாரதப்போரில் வெற்றிபெற்ற பின்னர் அஸ்தினபுரி மெல்ல மெல்ல தன்னிலைக்குத் திரும்புவதையும் பாரதவர்ஷத்தின் மிகப் பெரிய நாடாக அஸ்தினபுரி உருவெடுப்பதையும் இந்தக் ‘களிற்றியானைநிரை’ நாவல் சித்தரிக்கிறது.

25. கல்பொருசிறுநுரை

கிருஷ்ணனின் மைந்தர்கள் தங்களுக்குள்ளாகப் போரிட்டு அழிவதையும் துவாரகையின் வீழ்ச்சியையும் சொல்கிறது. கிருஷ்ணரின் மரணத்துடன் இந்தக் ‘கல்பொருசிறுநுரை’ நாவல் முடிகிறது.

26. முதலாவிண்  

வெண்முரசு தொடர் நாவலின் இறுதி நாவல் ‘முதலாவிண்’. பாண்டவர்களின் வானப்பிரஸ்தத்தை இந்த நாவல் சித்தரிக்கிறது. வெண்முரசு தொடர் நாவல்களில் பக்க எண்ணிக்கையில் இந்த நாவல்தான் சிறிய நாவல்.

பிற வடிவங்கள்

வெண்முரசு தொடர் நாவலின் நான்காவது நாவல் ‘நீலம்’. சுபஸ்ரீ அதனை முழுவதுமாகத் தன் குரலால் ஒலிப்பதிவு செய்து, ஒலிக்கோப்பாக இணையத்தில் வெளியிட்டுள்ளார்.

சிறப்புகள்

வெண்முரசு தொடர் நாவலுக்காக ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாவலுக்காக ஆவணப்படம் தயாரிப்பது என்பது தமிழில் இதுவே முதல்முறை. இந்த ஆவணப்படத்தை அமெரிக்க விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் தயாரித்துள்ளது. இந்த ஆவணப்படம் அமெரிக்காவின் பல நகரங்களிலும் கனடாவிலும் திரையிடப்பட்டது.

வெண்முரசு தொடர் நாவலுக்காக இசைக்கோவை தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரு நாவலுக்காக இசைக்கோவை தயாரிப்பது என்பது தமிழில் இதுவே முதல்முறை. 'A Musical Tribute to Venmurasu' என்ற இந்த இசைக்கோவையை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்-அமெரிக்க கிளை தயாரித்துள்ளது. இசையமைப்பாளர் ராஜன் சோமசுந்தரம் இசையமைத்துள்ளார். இதில் நடிகர் கமல்ஹாசன், பாடகர்கள் ஸ்ரீராம் பார்த்தசாரதி, சைந்தவி ஆகியோர் பாடியுள்ளனர். இந்த இசைக்கோவை வெளியிடும் நிகழ்ச்சி அக்டோபர் 9, 2021இல் இணையத்தில் நேரலையாக ஒளிபரப்பப்பட்டது. இந்த இசைக்கோவையை இயக்குநர் மணிரத்னம் வெளியிட்டார். இந்த நிகழ்ச்சி பற்றிய செய்திக்குறிப்புகள் சிகாகோ Daily Herald, பிட்ஸ்பர்க் post-gazette, நியூயார்க் Buffalow News  என முக்கிய பத்திரிகைகளில் வெளிவந்தன.

மொழியாக்கம்

வெண்முரசு தொடர்பானவை

உசாத்துணை

http://sureshezhuthu.blogspot.com/2020/07/blog-post_19.html


== [[Category:Tamil Content]] ==