second review completed

சிவபெருமான் திருவந்தாதி(பரணதேவ நாயனார்)

From Tamil Wiki
Revision as of 06:14, 10 December 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected typo errors;)

பரணதேவ நாயனார் இயற்றிய சிவபெருமான் திருவந்தாதி பதினொன்றாம் திருமுறையில் 23-வது திருமுறையாக இடம்பெரும் அந்தாதி நூல். கபிலதேவ நாயனார் இயற்றிய மற்றொரு சிவபெருமான் திருவந்தாதியும் பதினொன்றாம் திருமுறையில் இடம்பெறுகிறது.

ஆசிரியர்

சிவபெருமான் திருவந்தாதியை இயற்றியவர் பரணதேவ நாயனார். இவர் சங்க காலத்தில் இருந்த பரணர் அல்லர். பக்தி இயக்கக் காலத்தில் களப்பிரர் ஆட்சிக் காலத்தில் இருந்த நக்கீரதேவ நாயனார், கல்லாட தேவநாயனார், கபிலதேவநாயனாரைப் போலவே இந்தப் பரண தேவநாயனாரும் பொ.யு. 9 அல்லது 10-ம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது. சிவபெருமான் திருவந்தாதியின் 101-ம் பாடல் மூலம் இதை இயற்றியவர் பெயர் அறிய வருகிறது.

ஒன்றைப் பரணர் உரைத்த அந்தாதிபல
ஒன்றைப் பகரில் ஒருகோடி - ஒன்றைத்
தவிரா துரைப்பார் தளரார் உலகில்
தவிரார் சிவலோகந் தான். (101)

நூல் அமைப்பு

பரணதேவ நாயனார் இயற்றிய சிவபெருமான் நூற்றந்தாதி அந்தாதித் தொடையில் அமைந்த நூறு வெண்பாக்களால் ஆனது. கபில தேவ நாயனார் பாடிய சிவபெருமான் திருவந்தாதியை அடியொற்றி பரணதேவ நாயனார் பாடிய சிவபெருமான் திருவந்தாதியும் 'ஒன்றுரைப்பீர்' என ஒன்று முதலாகத் தொடங்கி 'ஓரைந்துரைக்க வல்லார்க்கு ஒன்று என ஒன்றீறாக மண்டலித்து முடிகிறது.

பரணதேவ நாயனார் இயற்றிய அந்தாதியில் 5, 14, 42 ஆகிய பாடல்கள் அடியும் தொடருமாகச் சிதைவுற்றுள்ளன. அந்தாதியில் திருக்கயிலை (13), ஆனைக்கா (26), திருஆலவாய் (27), கழிப்பாலை (34, 63), சோற்றுத்துறை (39), கடல்நாகைக்காரோணம் (35), அண்ணாமலை (38), சிராமலை (44, பூவணம் (45), வெண்காடு (46), கோளலி (49), ஆலங்காடு (50), மறைக்காடு (51, வலஞ்சுழி (53), ஏகம்பம் (56), கழுமலம் (62), திருமீச்சூர் (70), கானப்பேர் (73), திருச்சாய்க்காடு (92), ஈங்கோய்மலை (96), ஒற்றியூர் (99) ஆகிய திருப்பதிகள் பற்றிய குறிப்புகள் இடம் பெற்றுள்ளன.

முழுமுதற் கடவுளாகிய சிவபெருமானது இறைமைத் தன்மையும், கோயில் கொண்ட தலங்களும், அடியார்களுக்கு அருளும் தன்மையும், அம்மையப்பனாகிய இறைவனை வழிபடும் நெறிமுறைகளும் அங்ஙனம் வழிபடுதலால் இவ்வுலக மக்கள் பெறக்கூடிய இம்மை மறுமை பயன்களும் விரித்துரைக்கப் பட்டுள்ளன.

பாடல் நடை

ஒன்றுரைப்பீர் போலப் பலஉரைத்திட் டோயாதே
ஒன்றுரைப்பீர் ஆயின்
  உறுதுணையாம் - ஒன்றுரைத்துப்
பேரரவம் பூண்டு பெருந்தலையில் உண்டுழலும்
பேரரவம் பூணும் பிரான். 1

நானுடைய மாடேஎன் ஞானச் சுடர்விளக்கே
நானுடைய குன்றமே
  நான்மறையாய் - நானுடைய
காடுடையாய் காலங்கள்
  ஆனாய் கனலாடும்
காடுடையாய் காலமா னாய். 47

உசாத்துணை



✔ Second review completed


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.