அரவிந்தர்
ஸ்ரீ அரவிந்தர் (அரவிந்த கோஷ்) (ஆகஸ்ட் 15, 1872 - டிசம்பர் 5, 1950) இந்திய தேசியவாதி, விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர், ஆன்மீகவாதி, கவிஞர், விமர்சகர். இந்திய விடுதலை போராட்டத்தில் இணைந்து சிறைசென்றவர் சிறையின் தனிமையில் ஏற்பட்ட மாற்றத்தால் விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி ஆன்மீக வாழ்வை மேற்கொண்டார்.
பிறப்பு, கல்வி
அரவிந்தர் ஆகஸ்ட் 15, 1872 அன்று காலை 4.52 மணிக்கு கல்கத்தாவில் (தற்போது கொல்கத்தா) கிருஷ்ண தன கோஷ், ஸ்வர்ணலதா தேவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். அரவிந்தரின் தந்தை கிருஷ்ண தன கோஷின் சொந்த ஊர் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கோனகர் கிராமம். கிருஷ்ண தன கோஷ் கோனகர் கிராமத்தில் செல்வந்தர் வீட்டில் பிறந்தவர். வெளிநாடு சென்று கல்வி முடித்துத் திரும்பியதால் இந்து சமுதாயம் கிருஷ்ண தன் கோஷை, “கடல் கடந்து சென்ற பாவத்தைப் போக்க பிராயசித்தம் செய்ய வேண்டும் இல்லையென்றால் சாதிப்பிரஷ்டம் செய்யப்படுவீர்” என எச்சரித்தனர். அதனால் தன் சொத்துக்களை விற்று கோனகர் ஊரை விட்டு வெளியேறினார்.
கிருஷ்ண தன கோஷ் பகல்பூர், ராம்பூர், குல்னா மாவட்டங்களில் சிவில் சர்ஜனாகப் பணியாற்றினார். கிருஷ்ண தன கோஷ் கல்கத்தாவில் பணியாற்றிய போது அரவிந்தர் பிறந்தார். அரவிந்தர் இவர்களின் மூன்றாவது மகன். அரவிந்தருடன் பிறந்தவர்கள் நான்கு பேர். விநயபூஷண், மனமோகன் என இரு அண்ணன்கள். தங்கை சரோஜினி, தம்பி பரீந்திரன்.
செல்வந்தராகப் பிறந்த அரவிந்தர் வீட்டில் ஆங்கிலம் பேசும் சூழலில் வளர்ந்தார். கிருஷ்ண தன கோஷ் குழந்தைகளைக் டாக்டர். கோஷ் மிஸ் பாகெட் (Miss Paggett) கவனித்துக் கொண்டார். பாகெட்டிடம் இருந்து அரவிந்தர் ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டார். அரவிந்தரின் ஐந்து வயதில் அவர் இரு அண்ணன்களுடன் டார்ஜிலிங்க் லோரொட்டோ கான்வென்ட் பள்ளியில் (Lorreto Convent School) சேர்ந்தார்.
1880-ஆம் ஆண்டு கிருஷ்ண தன கோஷ் அரவிந்தரை விநயபூஷண், மனமோகனுடன் இங்கிலாந்த் சென்று படிக்க விரும்பினார். கிருஷ்ண தன கோஷின் நண்பர் மிஸ்டர். கிளேசியரின் (Mr. Glazier) நெருங்கிய உறவினர் வில்லியம் ஹெச். ட்ருவெட் (Rev. William H. Drewett) வீட்டில் தங்கி அரவிந்தர் படித்தார். ஏழு வயதான அரவிந்தர் மான்செஸ்டர் நகரில் கல்வி பயிலும் வயதடையாதலால் வீட்டிலேயே ட்ருவெட் தம்பதியரிடம் கல்விக் கற்றார். மிஸ்டர். ட்ருவெட் அரவிந்தருக்கு லத்தீன், ஆங்கிலம் கற்பித்தார். ட்ருவெட்டின் மனைவி வரலாறு, புவியியல், கணிதம், பிரெஞ்ச் கற்பித்தார்.
இக்கல்வியின் மூலம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டத்தால் அரவிந்தர் ஷேக்ஸ்பியர், ஷெல்லி, கீட்ஸ், பைபள் என மிக இளம் வயதிலேயே வாசிக்கத் தொடங்கினார்.
லத்தீன் மொழி அறிந்திருந்ததால் லண்டன் செயின்ட் பால் (St. Paul's) பள்ளியின் தலைமையாசிரியர் அரவிந்தருக்கு கிரேக்க மொழி கற்றுக் கொடுத்து மேல் வகுப்பில் சேர்த்தார். இங்கே கவிதைகளைப் படிக்கத் தொடங்கிய அரவிந்தர் சில கவிதைகளும் எழுதினார். செய்யுள் வடிவில் எழுதப்பட்ட அக்கவிதைகள் Fox's weekly பத்திரிகையில் வெளிவந்தன.
அரவிந்தர் செயின்ட் பால் பள்ளியில் இறுதியாண்டு படித்தபோது ஐ.சி.எஸ் வகுப்பில் மாணவராக சேர்ந்தார். ஐ.சி.எஸ் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேறிய அரவிந்தர் செயின்ட் பால் பள்ளியில் கல்வியை முடித்த போது சீனியர் கிளாசிகல் ஸ்காலர்ஷிப் பெற்றார். ஐ.சி.எஸ் தேர்ச்சி பெற்றதன் மூலம் சில உதவித்தொகை வந்தது. இதனைக் கொண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தன் கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். கிங்ஸ் கல்லூரியில் ஒராண்டில் கிரீக், லத்தீன் மொழியில் செய்யுள்கள் எழுதிப் பரிசுப் பெற்றார்.
ஆனால் கேம்பிரிட்ஜில் படிப்பை முடிப்பதற்குள் அரவிந்தரின் மனம் தேசிய விடுதலை நோக்கி திரும்பியது. அரவிந்தரின் தந்தை கிருஷ்ண தன கோஷ் பின்னாளில் இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். கிருஷ்ண தன கோஷ் வங்காளத்தில் வெளிவந்த ‘வங்காளி’ பத்திரிகையை அரவிந்தருக்கு அனுப்பினார். கிருஷ்ண தன கோஷ் அரவிந்தருக்கு தொடர்ந்து கடிதங்களும் எழுதினார். இதனால் அரவிந்தர் கல்லூரி படிப்பிலிருந்து விலக்கம் கொண்டார். அரவிந்தர் கேம்பிரிட்ஜில் பட்டம் பெறவில்லை (பட்டத்திற்காக விண்ணபித்திருந்தால் கிடைத்திருக்கும்). ஐ.சி.எஸ் பரீட்சையில் தேறிய போதும் குதிரைச் சவாரி பரீட்சைக்குப் போகாமலேயே இருந்துவிட்டார். இரண்டாவது முறையும் அதனைத் தவறவிட்டதால் ஆங்கில அரசு அரவிந்தரை ஐ.சி.எஸ் தேறியவர் பட்டியலில் சேர்க்கவில்லை.
தனி வாழ்க்கை
அரவிந்தர் 1893-ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பினார். இந்தியாவில் பரோடா சமஸ்தான மன்னரிடம் பணியில் சேர்ந்தார். சர் ஜேம்ஸ் காட்டன் பரிந்துரையில் அரவிந்தருக்கு வேலை கிடைத்தது. அரவிந்தர் முதலில் சர்வே செட்டில்மென்ட் டிப்பார்ட்மெண்டில் (Survey Settlements Department) வேலை செய்தார். அங்கே அவருடைய மாதச் சம்பளம் ரூ. 200. பரோடா மன்னர் எல்லாத் துறைகளிலும் வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டதன் பேரில் செட்டில்மென்ட் டிப்பார்ட்மெண்டிலிருந்து ரெவன்யூ டிப்பார்ட்மெண்டிற்கு மாறினார். பின் சிறிது காலம் வேறு சில துறைகளிலும், தலைமைச் செயலகத்திலும் வேலை செய்தார். இறுதியில் பரோடா கல்லூரியில் அரவிந்தருக்கு நிரந்தர வேலை வழங்கப்பட்டது.
பரோடா கல்லூரியில் வேறு அரசாங்கத் துறைகளில் பணி செய்துக் கொண்டே வாரத்தில் சில மணி நேரம் பிரெஞ்ச் கற்பித்தார். பிரெஞ்ச் விரிவுரையாளர் எனத் தொடங்கிய பணி படிப்படியாக வேறு கல்லூரி வேலைகளும் சேர்ந்தது. 1900-ல் கல்லூரி முதல்வர் மிஸ்டர் டெயிட் (Tait) மகாராஜாவிடம் அரவிந்தரை முழு நேர ஆங்கில பேராசிரியராக நியமிக்கும் படி கேட்டார். அரவிந்தரின் சம்பளம் ரூ.360 உயர்த்தப்பட்டு ஆங்கில பேராசிரியர் பணி கிடைத்தது. பரோடா கல்லூரியிலேயே துணை முதல்வராகப் பதவி உயர்வு பெற்றார். இங்கே சிறிது காலம் மாற்றாள் கல்லூரி முதல்வராகவும் அரவிந்தர் பணியாற்றினார். 1906-ஆம் ஆண்டு வரை இப்பணியில் இருந்தார். பின் கல்கத்தா தேசிய கல்லூரியில் முதல்வராகப் பணியாற்றினார். அகஸ்ட் 2, 1907 அன்று அரவந்தர் தேசிய கல்லூரி வேலையை ராஜனாமா செய்தார்.
1901-ல் பூபால் சந்திர போசின் மகள் ஸ்ரீமதி மிருணாளினி போசை மணம் செய்துகொண்டார். அப்போது மிருணாளினியின் வயது பதினான்கு.
பொது வாழ்க்கை
இங்கிலாந்தில் இந்திய விடுதலை
அரவிந்தர் கேம்பிரிட்ஜில் படித்த காலத்தில் இந்திய மாணவர்கள் ‘இந்தியன் மஜ்லிஸ்’ என்ற கழகத்தைத் தொடங்கினர். அரவிந்தர் அதன் செயலராக சில காலம் இருந்தார். மஜ்லிஸ் கூட்டங்களில் இந்தியாவின் பூரண விடுதலையை ஆதரித்துப் பேசினார். அரவிந்தர் மஜ்லிஸில் பேசியது ஒயிட் ஹாலில் (White Hall) இருந்த இந்தியன் சிவில் சர்வீஸ் கமிஷனுக்குப் போதன் பேரில் அவரை அரசாங்கம் ஐ.சி.எஸ் வேலைக்குத் தேர்ந்தெடுக்கவில்லை என்ற ஊகமும் உள்ளது.
அரவிந்தர் இங்கிலாந்தில் இருந்த கடைசி நாட்களில் இந்திய விடுதலைக்கான ரகசிய சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார்.
அரவிந்தரும் தேசிய காங்கிரஸும்
இங்கிலாந்தில் இருந்து பரோடா திரும்பிய போது அப்போதைய காங்கிராஸ் கட்சியின் மிதவாதம் மேல் அரவிந்தர் ஒவ்வாமைக் கொண்டிருந்தார். அரசாங்கப் பணிகளில் ஈடுபட்ட போது தேசிய தலைவர்களுடன் அரவிந்தருக்கு தொடர்பு ஏற்பட்டது. அரவிந்தர் அஸ்திவார பலமற்ற இந்திய தேசீயக் காங்கிரஸ் அமைப்பை உடைத்தெறிந்துவிட்டு அதனிடத்தில் இலட்சிய வேகங் கொண்ட தேசீயத்தின் அடிப்படையில் ஆழமான அரசியல் தத்துவத்தின் அடிப்படையிலும் ஒரு புதிய காங்கிரஸை உருவாக்கும் எண்ணம் கொண்டார்.
தேஷ்பாண்டே, திலகர், மாதவராவ் ஆகியோருடன் நட்புக் கொண்டார். அரவிந்தர் பரோடா வந்த ஆறு மாதத்தில் மாதவராவ் கேட்டுக் கொண்டதன் பெயரில் ’இந்துப் பிரகாஷ்’ பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியின் மிதவாதக் கொள்கைகளைக் கண்டித்து எழுதினார். இதனை வாசித்த மராட்டியத் தலைவர் மகாதேவ கோவிந்த ரண்டே பத்திரிகை உரிமையாளரிடம் அரசாங்கத்திற்கு விரோதமான அக்கட்டுரையை விமர்சித்தார். அவ்விமர்சனத்திற்கு பின் தேஷ்பாண்டே அரவிந்தரிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் செயல்பூர்வமான அரசியல் பற்றி எழுதாமல் அரசியல் தத்துவம் பற்றி எழுதத் தொடங்கினார். இக்கட்டுரைத் தொடருக்காக, ‘பழைய விளக்குகளுக்குப் பதிலாக புதிய விளக்குகள்’ என்ற தலைப்புக் கொடுத்தார்.
இந்த வகை கட்டுரைகள் மேல் அரவிந்தர் சில காலத்திலேயே விலக்கம் கொண்டாலும் இக்கட்டுரை தொடர் மூலம் தேசிய தலைவர்கள் மத்தியில் அறியப்பட்டார்.
வந்தே மாதரமும் விடுதலை போராட்டமும்
‘வந்தே மாதரம்’ பத்திரிகையை ஆக்ஸ்ட் 6, 1906 அன்று விபின் சந்திரபால் பதிவு செய்தார். ’வந்தே மாதரம்’ தினசரி பத்திரிகையாக வெளிவந்தது. விபின் சந்திரபால் அதன் துணையாசிரியராக உதவக் கேட்டதால் அரவிந்தர் இணைந்தார். அரவிந்தர் கல்கத்தா தேசியக் கட்சித் தலைவர்களின் தனிப்பட்டக் கூட்டம் ஒன்றைக் கூட்டினார். அவர்கள் ‘வந்தே மாதரத்தை’ கட்சிப் பத்திரிகையாக எடுத்தனர்.
பின்னாளில் பத்திரிகைக்கு வேண்டிய வருவாய்க்கு வகை செய்யும் பொருட்டு ‘வந்தே மாதரம்’ கம்பெனி தொடங்கினர். விபின் சந்திரபால் கட்சியின் நோக்கத்தையும் திட்டத்தைய்ம் பரப்ப பல மாவட்டங்கள் பயணம் செய்த போது அரவிந்தர் கம்பெனியின் நிர்வாகப் பொறுப்பினை ஏற்றுக் கொண்டார். பத்திரிகை தொடங்கி சில மாதங்களிலேயே விபின் சந்திரபால் சில்ஹெட்டிற்கும் வேறு சில இடங்களுக்கும் சென்றுவிட்டதால் அரவிந்தர் பத்திரிகையின் முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொண்டார். ஆனால் அவருடைய பெயரை ஆசிரியரெனப் போட அரவிந்தர் மறுத்துவிட்டார். பரோடாவில் வேலையில் இருந்தது ஒரு காரணமாக இருக்கலாம்.
1907 ஏப்ரல் 9 முதல் 23 வரை அரவிந்தர் சாத்வீக எதிர்ப்புப் பற்றி ‘வந்தே மாதரத்தில்’ சில கட்டுரைகள் எழுதினார். சாத்வீக போராட்டத்தைப் பற்றி அரவிந்தர் குறிப்பிடும் போது, “இன்று இந்தியாவில் நிலவுகின்ற சூழ்நிலையில் சாத்வீகப் போராட்டமே நமக்கு மிகவும் இயல்பான, பொருத்தமான ஆயுதமாகும். குறிப்பாக அந்நிய ஆட்சியானது நாட்டு மக்கள் அதை ஏற்றுக் கொண்டு தாமாகவே அதனுடன் ஒத்துழைக்க முன் வருவதையே முக்கியமாக நம்பி இருக்கிற நாடுகளுக்குச் சாத்வீகப் போராட்ட முறை பொறுத்தமாகும். சாத்வீகப் போராட்டத்தின் முதல் தத்துவம் பிரிட்டிஷ் வாணிபம் நமது நாட்டைச் சுரண்டுவதற்கும் பிரிட்டிஷ் அதிகார வர்க்கம் நாட்டை ஆள்வதற்கும் ஒத்துழைக்க மறுத்து அந்நிய நிர்வாகத்தை நடக்க முடியாமல் செய்வதாகும். ஒரே வார்த்தையில் அதற்குப் பெயர் பகிஷ்காரம்...” என எழுதினார்.
1906-7-ல் அரவிந்தர் பகிஷ்காரம், சுதேசி, ஒத்துழையாமை, சாத்வீகப் போராட்டம் பற்றி வந்தே மாதரம் மூலம் பேசினார். ஜூலை 30, 1907 ‘வந்தே மாதரம்’ பத்திரிகை அலுவலகம் சோதனையிடப்பட்டது. ‘யுகாந்தர்’ பத்திரிகையில் வெளியான சில கட்டுரைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை ‘வந்தே மாதரம்’ வெளியிட்டதால் அவை ராஜத் துரோகமாகக் கருதப்பட்டு ஆசிரியராக இருந்த அரவிந்தரை ஆகஸ்ட் 16 அன்று ஆங்கில அரசு கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. வாரண்டைப் பெற்றுக் கொண்ட அரவிந்தர் ஸ்டேஷனுக்குச் சென்று தன்னைக் கைது செய்ய ஒப்புக் கொடுத்தார். ஆனால் அவர் ஆசிரியர் என்பதற்கு எந்த சாட்சியும் இல்லாததால் சீக்கிரத்தில் விடுதலையானார். இந்த சிறைவாசம் சில நாட்களே நீடித்தாலும் இது அரவிந்தரை தேசிய விடுதலைத் தலைவர்களின் கவனத்திற்கு சீக்கிரமாகக் கொண்டு சென்றது. 1907 ஆகஸ்டில் மிட்னாப்பூர் மாகாண மாண்டாடு பற்றி எழுதிய ஆர்.சி. மஜூம்தார், “தேசியவாதிகளின் தலைவர் என்ற முறையில் அம்மாநாட்டில் கலந்துக் கொண்டார்” எனக் குறிப்பிட்டார்.
அலிப்பூர் சிறை
1908 மே மாதம் முஸபர்பூரில் வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு வெள்ளைக்காரப் பெண்கள் கொல்லப்பட்டனர். போலீஸ் கமிஷனர் இவ்வழக்கின் விசாரணையில் புரட்சி தேசியவாத இளைஞர்களின் வழிகாட்டியும், தலைவரும் அரவிந்தர் எனக் கருதினர். அரவிந்தர் தன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது அதிகாலை சுமார் ஐந்து மணிக்கு சூப்பிரன்டெண்டன்ட் கிரேகன் தலைமையில் ஒரு படை வீட்டினுள் சென்று அரவிந்தரைக் கைது செய்தது லால் பஜார் சிறையில் அடைத்தனர். விசாரணைக்கு பிறகு அரவிந்தர் நீதிபதி முன் ஆஜர்படுத்தபடாமலே எழுத்து வாரண்ட் மூலம் ஓராண்டு சிறைதண்டனை பெற்றார்.
இந்த ஓராண்டு சிறைவாசம் அரவிந்தரின் வாழ்வில் பல மாற்றத்தைக் கொண்டு வந்தன. குறிப்பாக அரவிந்தர் இளவயதிலிருந்து நம்பி வந்த யோக சாதனையை நோக்கி தன் வாழ்வை திரும்பினார். அரவிந்தர் பின்னாளில் இந்திய விடுதலை போராட்டத்திலிருந்து தன்னை முற்றிலுமாக விலக்கிக் கொண்டு ஆன்மிக பாதை நோக்கி தன் வாழ்வை மாற்றி இச்சிறைவாசம் காரணமாக அமைந்தது.
1909 மே 6 ஆம் தேதி அரவிந்தர் அலிப்பூர் செஷன்ஸ் நீதிபதி மிஸ்டர் பீச்கிராப்ட் அரவிந்தர் குற்றமற்றவர் எனக் கூறி அவரை விடுதலை செய்தார். சிறையிலிருந்து வெளிவந்த அரவிந்தர் போராட்டங்களை தொடர்ந்து நடத்தினார். கல்கத்தாவில் வாரந்தோறும் கூட்டம் நடத்தினார்.’
இதழ்கள்
கர்மயோகி
அரவிந்தர் ஜூன் 19, 1909 அன்று ‘கர்மயோகி’ என்னும் ஆங்கில வார இதழைத் தொடங்கினார். அதில் தேசியம், சமயம், இலக்கியம், அறிவியல், தத்துவம் என பல துறைகளில் கட்டுரை கர்மயோகியில் வெளிவந்தன.
அரவிந்தர் சிறையிலிருந்து மீண்ட பின் தேசியக் கட்சி சிறு சிறு கூட்டுகளாகப் பிரிந்திருந்தது. இந்நாட்களில் ஆங்கில அரசாங்கம் கடுமையான அடக்குமுறையைக் கையில் எடுத்தது. அரவிந்தரை அந்தமானுக்கு அனுப்ப முயற்சித்தனர். அது முடியாத காரணத்தினால் அவரை நாடு கடத்த முடிவு செய்தனர்.
இதை அறிந்த சகோதரி நிவேதிதை அதனை அரவிந்தரிடம் சொன்ன போது அவர் பணி தடைப்பட்டுவிடாமல் இருக்க தன் கையொப்பமிட்ட கட்டுரை ஒன்றை கர்மயோகியில் வெளியிட்டார். அதில் தம்மை நாடு கடத்துவதற்கான யோசனையைப் பற்றிக் குறிப்பிட்டுவிட்டு நாட்டுக்கு என் கடைசிச் சாசனம் என்று அரசியல் சாசனம் ஒன்றை அறிவித்தார். இந்த அறிவிப்பு நாடு கடத்துவதை முற்றிபுள்ளி வைக்கும் என்று அரவிந்தர் நம்பியது நடந்தது.
தர்மா
ஆகஸ்ட் 23, 1909 அன்று ‘தர்மா’ என்ற வங்காள வார இதழைத் தொடங்கினார். அதன் தலையங்கத்தின் மேல் கீதையின் புகழ்பெற்ற வசனமான, “தர்மம் மங்கி அதர்மம் ஒங்கும்போது நான் பிறவி யெடுக்கிறேன்” இடம்பெற்றிருந்தது.
அரவிந்தர் தொடர்ந்து கர்மயோகியிலும் தர்மா இதழிலும் பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் மீண்டும் நாடு கடத்தல் பற்றிய வதந்திகள் கிளம்பத் தொடங்கின. முன்பு செய்தது போலவே, “என் நாட்டு மக்களுக்கு” என்ற தலைப்பில் டிசம்பர் 25, 1909 அன்று கர்மயோகியில் கட்டுரை எழுதி வெளியிட்டார். மீண்டும் ஜனவரி 8, 1910-ல் ‘நாடு கடத்தும் ஆபத்து’ என ‘கர்மயோகியில்’ எழுதினார்.
வங்காள வெளியேற்றம்
ஜனவரி 24, 1910 அன்று துப்பறியும் துறை உதவி சூப்பரிண்டெண்ட ஹாம்சுல் ஆலம் உயர் நீதிமன்றத்தில் இருபது வயது இளைஞன் ஒருவனால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனைப் பற்றி அரவிந்தர் கர்மயோகியில் எழுதினார். அரசாங்கத்தின் பெரிய துப்பறியும் அதிகாரியை நீதிமன்ற வளாகத்திலேயே கொலை செய்தது அரசாங்கத்தை அரவிந்தரின் நாடு கடத்தல் பற்றி மேலும் தீவிரமாக யோசிக்கத் தூண்டியது.
இதன் காரணமாக அரவிந்தர் வங்காளத்தை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது. கல்கத்தாவிலிருந்து படகு மூலம் சந்திரநாகூர் செல்ல ஏற்பாடாகியது. அங்கிருந்து ஏப்ரல் 4, 1910 அன்று பாண்டிசேரி வந்தடைந்தார்.
🔏Being Created
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.