under review

இரா. கவியரசு

From Tamil Wiki
இரா. கவியரசு.jpg

இரா.கவியரசு ( பிறப்பு: டிசம்பர் 25, 1986 ) தமிழ் புதுக்கவிவிஞர். இருத்தலிய சார்பு கொண்ட கவிதைகளை எழுதிவருகிறார்

பிறப்பு, கல்வி

இரா.கவியரசு, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகேயுள்ள உள்ளிக்கோட்டை எனும் கிராமத்தில் டிசம்பர் 25 ,1986 அன்று M.K.ராஜேந்திரன் - கலாவதி தம்பதியருக்கு இரண்டாவது மகனாகப் பிறந்தார். பன்னிரெண்டாம் வகுப்பு வரை உள்ளிக்கோட்டை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் மேனிலைப் பள்ளியில் படித்தார். மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசினர் கல்லூரியில் இளங்கலை மற்றும் முதுகலை கணிப்பொறி அறிவியல் பட்டம் பெற்றார். 2013 முதல் சென்னையில் அரசுப்பணியில் இருக்கிறார்.

தனி  வாழ்க்கை

இரா. கவியரசுவின் திருமணம் 2015-ஆம் ஆண்டு நடைபெற்றது. மனைவி: கீதா மகள்கள்: கண்மணி, மகிழ்மதி. தற்போது திருவள்ளூர் மாவட்டம், கடம்பத்தூரில் வசித்து வருகிறார்.

இலக்கிய வாழ்க்கை

இரா. கவியரசுவின் முதல் கவிதை கல்கி இதழில் 2005-ஆம் ஆண்டு வெளிவந்தது.2010-ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து கவிதைகள் எழுதி வருகிறார். இலக்கிய ஆக்கத்தில் சங்கக் கவிதைகள் மற்றும் சமகாலத்தில் நவீன கவிஞர்களின் கவிதைகள்  தனக்கு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியதாக குறிப்பிடுகிறார்.

இரா. கவியரசுவின் முதல் கவிதைத் தொகுப்பு " நாளை காணாமல் போகிறவர் " ஆகஸ்ட் 2020-ல் தேநீர் பதிப்பகம் வாயிலாக வெளிவந்தது.

தற்போது தனது இணையப்பக்கத்தில் தமிழின் நவீன கவிஞர்களின் கவிதைகள் குறித்து தன் வாழ்பனுபவங்களுடன் கட்டுரையாகத் தொடர்ந்து எழுதி வருகிறார்.

இலக்கிய இடம்

கவிஞர் வேல்கண்ணன், நாளை காணாமல் போகிறவர் நூலின் முன்னுரையில் "கவியரசு, எந்தக்  கேள்விகளையும் பதிலையும் வைத்துக் கொள்ளாமல் கவிதையென்னும் கால்பந்தை உருட்டி விளையாண்டு பார்த்திருக்கிறார். கோல் போடுவதெல்லாம் பிறகு பார்த்துக் கொள்ளலாம்,  முதலில் உருட்டி விளையாடுவோம் என்று முடிவெடுத்து இருக்கிறார் என்று தோன்றுகிறது. சில இடங்களில்  லாவகமாக சில இடங்களில் எளிமையாக தொட்டு இருக்கிறார். மரபு வழக்கை மெதுவாக திசை திருப்புகிறார் கவியரசு. பழைய வழியைத் தவிர்த்து அவர் அழைத்துச் செல்லும் இடம் கவித்துவமானது. தலைப்பு கவிதையான 'நாளை காணாமல் போகிறவர்'' என்பதில்  ஒரு மனிதனின் இருத்தலை  ஆதார் கார்டு, சிசிடிவி போன்ற எத்தனை தொழில் நுட்பம் கொண்டு இணைத்தாலும் தொலைந்து போவதற்கு  கடைத்தெரு முக்கம் போதும் என்கிறார்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

நூல் பட்டியல்

  • நாளை காணாமல் போகிறவர் (கவிதைத் தொகுப்பு) (2020)

விருதுகள்

  • திருப்பூர் தமிழ்ச்சங்கத்தின் கனவு இலக்கிய விருது (2021),
  • செங்கனி பதிப்பக விருது ( 2021 )
  • நாமக்கல் தமிழ்ச்சங்க அறக்கட்டளை விருது (2022)

இணையப்பக்கம்



✅Finalised Page