being created

அரவிந்தர்

From Tamil Wiki
Revision as of 15:59, 9 June 2022 by Navingssv (talk | contribs)

ஸ்ரீ அரவிந்தர் (அரவிந்த கோஷ்) (ஆகஸ்ட் 15, 1872 - டிசம்பர் 5, 1950) இந்திய தேசியவாதி, விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர், ஆன்மீகவாதி, கவிஞர், விமர்சகர். இந்திய விடுதலை போராட்டத்தில் இணைந்து சிறைசென்றவர் சிறையின் தனிமையில் ஏற்பட்ட மாற்றத்தால் விடுதலைப் போராட்டத்திலிருந்து விலகி ஆன்மீக வாழ்வை மேற்கொண்டார்.

பிறப்பு, கல்வி

அரவிந்தர் ஆகஸ்ட் 15, 1872 அன்று காலை 4.52 மணிக்கு கல்கத்தாவில் (தற்போது கொல்கத்தா) கிருஷ்ண தன கோஷ், ஸ்வர்ணலதா தேவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தார். அரவிந்தரின் தந்தை கிருஷ்ண தன கோஷின் சொந்த ஊர் ஹூக்ளி மாவட்டத்தில் உள்ள கோனகர் கிராமம். கிருஷ்ண தன கோஷ் கோனகர் கிராமத்தில் செல்வந்தர் வீட்டில் பிறந்தவர். வெளிநாடு சென்று கல்வி முடித்துத் திரும்பியதால் இந்து சமுதாயம் கிருஷ்ண தன் கோஷை, “கடல் கடந்து சென்ற பாவத்தைப் போக்க பிராயசித்தம் செய்ய வேண்டும் இல்லையென்றால் சாதிப்பிரஷ்டம் செய்யப்படுவீர்” என எச்சரித்தனர். அதனால் தன் சொத்துக்களை விற்று கோனகர் ஊரை விட்டு வெளியேறினார்.

கிருஷ்ண தன கோஷ் பகல்பூர், ராம்பூர், குல்னா மாவட்டங்களில் சிவில் சர்ஜனாகப் பணியாற்றினார். கிருஷ்ண தன கோஷ் கல்கத்தாவில் பணியாற்றிய போது அரவிந்தர் பிறந்தார். அரவிந்தர் இவர்களின் மூன்றாவது மகன். அரவிந்தருடன் பிறந்தவர்கள் நான்கு பேர். விநயபூஷண், மனமோகன் என இரு அண்ணன்கள். தங்கை சரோஜினி, தம்பி பரீந்திரன்.

செல்வந்தராகப் பிறந்த அரவிந்தர் வீட்டில் ஆங்கிலம் பேசும் சூழலில் வளர்ந்தார். கிருஷ்ண தன கோஷ் குழந்தைகளைக் டாக்டர். கோஷ் மிஸ் பாகெட் (Miss Paggett) கவனித்துக் கொண்டார். பாகெட்டிடம் இருந்து அரவிந்தர் ஆங்கிலத்தைக் கற்றுக் கொண்டார். அரவிந்தரின் ஐந்து வயதில் அவர் இரு அண்ணன்களுடன் டார்ஜிலிங்க் லோரொட்டோ கான்வென்ட் பள்ளியில் (Lorreto Convent School) சேர்ந்தார்.

1880-ஆம் ஆண்டு கிருஷ்ண தன கோஷ் அரவிந்தரை விநயபூஷண், மனமோகனுடன் இங்கிலாந்த் சென்று படிக்க விரும்பினார். கிருஷ்ண தன கோஷின் நண்பர் மிஸ்டர். கிளேசியரின் (Mr. Glazier) நெருங்கிய உறவினர் வில்லியம் ஹெச். ட்ருவெட் (Rev. William H. Drewett) வீட்டில் தங்கி அரவிந்தர் படித்தார். ஏழு வயதான அரவிந்தர் மான்செஸ்டர் நகரில் கல்வி பயிலும் வயதடையாதலால் வீட்டிலேயே ட்ருவெட் தம்பதியரிடம் கல்விக் கற்றார். மிஸ்டர். ட்ருவெட் அரவிந்தருக்கு லத்தீன், ஆங்கிலம் கற்பித்தார். ட்ருவெட்டின் மனைவி வரலாறு, புவியியல், கணிதம், பிரெஞ்ச் கற்பித்தார்.

இக்கல்வியின் மூலம் புத்தகம் வாசிக்கும் பழக்கம் ஏற்பட்டத்தால் அரவிந்தர் ஷேக்ஸ்பியர், ஷெல்லி, கீட்ஸ், பைபள் என மிக இளம் வயதிலேயே வாசிக்கத் தொடங்கினார்.

லத்தீன் மொழி அறிந்திருந்ததால் லண்டன் செயின்ட் பால் (St. Paul's) பள்ளியின் தலைமையாசிரியர் அரவிந்தருக்கு கிரேக்க மொழி கற்றுக் கொடுத்து மேல் வகுப்பில் சேர்த்தார். இங்கே கவிதைகளைப் படிக்கத் தொடங்கிய அரவிந்தர் சில கவிதைகளும் எழுதினார். செய்யுள் வடிவில் எழுதப்பட்ட அக்கவிதைகள் Fox's weekly பத்திரிகையில் வெளிவந்தன.

அரவிந்தர் செயின்ட் பால் பள்ளியில் இறுதியாண்டு படித்தபோது ஐ.சி.எஸ் வகுப்பில் மாணவராக சேர்ந்தார். ஐ.சி.எஸ் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்று தேறிய அரவிந்தர் செயின்ட் பால் பள்ளியில் கல்வியை முடித்த போது சீனியர் கிளாசிகல் ஸ்காலர்ஷிப் பெற்றார். ஐ.சி.எஸ் தேர்ச்சி பெற்றதன் மூலம் சில உதவித்தொகை வந்தது. இதனைக் கொண்டு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தன் கல்லூரி படிப்பைத் தொடர்ந்தார். கிங்ஸ் கல்லூரியில் ஒராண்டில் கிரீக், லத்தீன் மொழியில் செய்யுள்கள் எழுதிப் பரிசுப் பெற்றார்.

ஆனால் கேம்பிரிட்ஜில் படிப்பை முடிப்பதற்குள் அரவிந்தரின் மனம் தேசிய விடுதலை நோக்கி திரும்பியது. அரவிந்தரின் தந்தை கிருஷ்ண தன கோஷ் பின்னாளில் இந்திய விடுதலை இயக்கத்தில் ஈடுபாடு கொண்டார். கிருஷ்ண தன கோஷ் வங்காளத்தில் வெளிவந்த ‘வங்காளி’ பத்திரிகையை அரவிந்தருக்கு அனுப்பினார். கிருஷ்ண தன கோஷ் அரவிந்தருக்கு தொடர்ந்து கடிதங்களும் எழுதினார். இதனால் அரவிந்தர் கல்லூரி படிப்பிலிருந்து விலக்கம் கொண்டார். அரவிந்தர் கேம்பிரிட்ஜில் பட்டம் பெறவில்லை (பட்டத்திற்காக விண்ணபித்திருந்தால் கிடைத்திருக்கும்). ஐ.சி.எஸ் பரீட்சையில் தேறிய போதும் குதிரைச் சவாரி பரீட்சைக்குப் போகாமலேயே இருந்துவிட்டார். இரண்டாவது முறையும் அதனைத் தவறவிட்டதால் ஆங்கில அரசு அரவிந்தரை ஐ.சி.எஸ் தேறியவர் பட்டியலில் சேர்க்கவில்லை.

தனி வாழ்க்கை

அரவிந்தர் 1893-ஆம் ஆண்டு இங்கிலாந்திலிருந்து இந்தியா திரும்பினார். இந்தியாவில் பரோடா சமஸ்தான மன்னரிடம் பணியில் சேர்ந்தார். சர் ஜேம்ஸ் காட்டன் பரிந்துரையில் அரவிந்தருக்கு வேலை கிடைத்தது. அரவிந்தர் முதலில் சர்வே செட்டில்மென்ட் டிப்பார்ட்மெண்டில் (Survey Settlements Department) வேலை செய்தார். அங்கே அவருடைய மாதச் சம்பளம் ரூ. 200. பரோடா மன்னர் எல்லாத் துறைகளிலும் வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டதன் பேரில் செட்டில்மென்ட் டிப்பார்ட்மெண்டிலிருந்து ரெவன்யூ டிப்பார்ட்மெண்டிற்கு மாறினார். பின் சிறிது காலம் வேறு சில துறைகளிலும், தலைமைச் செயலகத்திலும் வேலை செய்தார். இறுதியில் பரோடா கல்லூரியில் அரவிந்தருக்கு நிரந்தர வேலை வழங்கப்பட்டது.

பரோடா கல்லூரியில் வேறு அரசாங்கத் துறைகளில் பணி செய்துக் கொண்டே வாரத்தில் சில மணி நேரம் பிரெஞ்ச் கற்பித்தார். பிரெஞ்ச் விரிவுரையாளர் எனத் தொடங்கிய பணி படிப்படியாக வேறு கல்லூரி வேலைகளும் சேர்ந்தது. 1900-ல் கல்லூரி முதல்வர் மிஸ்டர் டெயிட் (Tait) மகாராஜாவிடம் அரவிந்தரை முழு நேர ஆங்கில பேராசிரியராக நியமிக்கும் படி கேட்டார். அரவிந்தரின் சம்பளம் ரூ.360 உயர்த்தப்பட்டு ஆங்கில பேராசிரியர் பணி கிடைத்தது. பரோடா கல்லூரியிலேயே துணை முதல்வராகப் பதவி உயர்வு பெற்றார். இங்கே சிறிது காலம் மாற்றாள் கல்லூரி முதல்வராகவும் அரவிந்தர் பணியாற்றினார். 1906-ஆம் ஆண்டு வரை இப்பணியில் இருந்தார்.

1901-ல் பூபால் சந்திர போசின் மகள் ஸ்ரீமதி மிருணாளினி போசை மணம் செய்துகொண்டார். அப்போது மிருணாளினியின் வயது பதினான்கு.

பொது வாழ்க்கை

இங்கிலாந்தில் இந்திய விடுதலை

அரவிந்தர் கேம்பிரிட்ஜில் படித்த காலத்தில் இந்திய மாணவர்கள் ‘இந்தியன் மஜ்லிஸ்’ என்ற கழகத்தைத் தொடங்கினர். அரவிந்தர் அதன் செயலராக சில காலம் இருந்தார். மஜ்லிஸ் கூட்டங்களில் இந்தியாவின் பூரண விடுதலையை ஆதரித்துப் பேசினார். அரவிந்தர் மஜ்லிஸில் பேசியது ஒயிட் ஹாலில் (White Hall) இருந்த இந்தியன் சிவில் சர்வீஸ் கமிஷனுக்குப் போதன் பேரில் அவரை அரசாங்கம் ஐ.சி.எஸ் வேலைக்குத் தேர்ந்தெடுக்கவில்லை என்ற ஊகமும் உள்ளது.

அரவிந்தர் இங்கிலாந்தில் இருந்த கடைசி நாட்களில் இந்திய விடுதலைக்கான ரகசிய சங்கத்தில் உறுப்பினராகச் சேர்ந்தார்.

அரவிந்தரும் தேசிய காங்கிரஸும்

இங்கிலாந்தில் இருந்து பரோடா திரும்பிய போது அப்போதைய காங்கிராஸ் கட்சியின் மிதவாதம் மேல் அரவிந்தர் ஒவ்வாமைக் கொண்டிருந்தார். அரசாங்கப் பணிகளில் ஈடுபட்ட போது தேசிய தலைவர்களுடன் அரவிந்தருக்கு தொடர்பு ஏற்பட்டது. அரவிந்தர் அஸ்திவார பலமற்ற இந்திய தேசீயக் காங்கிரஸ் அமைப்பை உடைத்தெறிந்துவிட்டு அதனிடத்தில் இலட்சிய வேகங் கொண்ட தேசீயத்தின் அடிப்படையில் ஆழமான அரசியல் தத்துவத்தின் அடிப்படையிலும் ஒரு புதிய காங்கிரஸை உருவாக்கும் எண்ணம் கொண்டார்.

தேஷ்பாண்டே, திலகர், மாதவராவ் ஆகியோருடன் நட்புக் கொண்டார். அரவிந்தர் பரோடா வந்த ஆறு மாதத்தில் மாதவராவ் கேட்டுக் கொண்டதன் பெயரில் ’இந்துப் பிரகாஷ்’ பத்திரிகையில் காங்கிரஸ் கட்சியின் மிதவாதக் கொள்கைகளைக் கண்டித்து எழுதினார். இதனை வாசித்த மராட்டியத் தலைவர் மகாதேவ கோவிந்த ரண்டே பத்திரிகை உரிமையாளரிடம் அரசாங்கத்திற்கு விரோதமான அக்கட்டுரையை விமர்சித்தார். அவ்விமர்சனத்திற்கு பின் தேஷ்பாண்டே அரவிந்தரிடம் கேட்டுக் கொண்டதன் பேரில் செயல்பூர்வமான அரசியல் பற்றி எழுதாமல் அரசியல் தத்துவம் பற்றி எழுதத் தொடங்கினார். இக்கட்டுரைத் தொடருக்காக, ‘பழைய விளக்குகளுக்குப் பதிலாக புதிய விளக்குகள்’ என்ற தலைப்புக் கொடுத்தார்.

இந்த வகை கட்டுரைகள் மேல் அரவிந்தர் சில காலத்திலேயே விலக்கம் கொண்டாலும் இக்கட்டுரை தொடர் மூலம் தேசிய தலைவர்கள் மத்தியில் அறியப்பட்டார்.





🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.