under review

மண்ணில் தெரியுது வானம்

From Tamil Wiki
Revision as of 14:10, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:நாவல்கள் to Category:நாவல்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
மண்ணில் தெரியுது வானம் முதல்பதிப்பு

மண்ணில் தெரியுது வானம் (1969) ந.சிதம்பர சுப்ரமணியன் எழுதிய நாவல். இந்நாவல் இந்திய சுதந்திரப்போராட்டப் பின்னணியில் ஒரு தனிமனிதனின் தேடலை முன்வைக்கிறது.

எழுத்து, பிரசுரம்

ந. சிதம்பரசுப்ரமணியன் இந்நாவலை 1969-ல் எழுதினார். லட்சுமி கிருஷ்ணமூர்த்தி நடத்திய வாசகர்வட்ட வெளியீடாக இது பிரசுரமாகியது. நூலின் முன்னுரையில் சிதம்பர சுப்ரமணியன் 1919-ல் காந்தியின் பெயரை முதன்முதலாக கேள்விப்பட்டதையும், ஒரு கதாகாலட்சேபத்தில் அவரைப்பற்றி பின்னர் விரிவாக அறிந்ததையும், காந்தியை காரைக்குடியில் நேரில் சந்தித்ததையும் விரிவாகப் பதிவுசெய்கிறார். 1969-ல் காந்தி நூற்றாண்டை ஒட்டி இந்நாவலை எழுதும் தூண்டுதல் பெற்றதாக சொல்கிறார்.

கதைச்சுருக்கம்

இந்நாவலின் கதை நிகழ்வுகளின் காலம் சுதந்திரப் போராட்ட காலம். கதைநாயகன் நடராஜன் பட்டப் படிப்பில் மாநிலத்தில் முதல்வனாக தேறுகிறான். ஐசிஎஸ் தேர்வு எழுதும்படி தந்தையால் கட்டாயப்படுத்தப்படுகிறான். செல்லும் வழியில் சட்டமறுப்பு போராட்ட கூட்டம் நடைபெறுவதை கண்டு அதில் ஈடுபடுகிறான். அரசாங்க ஊழியரான தந்தையால் புறக்கணிக்கப்பட்டு தடியடி சிறை அனுபவங்களை அடைகிறான். சரோஜாவை கலப்புமணம் செய்கிறான். இதழியலில் ஈடுபடுகிறான். நாட்டு விடுதலைக்குப்பின் பள்ளி ஆசிரியனாகிறான். இந்நாவலில் வரும் தி.ஜ. என்ற பாத்திரம் எழுத்தாளர், பத்திரிகையாளர் தி.ஜ.ர. (தி.ஜ. ரங்கநாதன்) என்றும் வீ.ர. என்ற பாத்திரம் வ.ரா. (வ. ராமஸ்வாமி ஐயங்கார்) என்றும் சொல்லப்படுவதுண்டு. காந்தியின் வாழ்க்கையும் நடராஜன் வாழ்க்கையும் ஒத்திருக்கிறது என்றும் விமர்சகர்கள் கூறுவார்கள்.

இலக்கிய இடம்

மண்ணில் தெரியுது வானம் சுதந்திரப்போராட்டத்தை விவரித்து , சுதந்திரம் கிடைத்தபின் உருவாகும் வெறுமையையும் கூறுகிறது. நடராஜன் உணரும் பொருளின்மை இருத்தலியல் சாயல்கொண்டது. தமிழில் காந்திய இலட்சியவாத யுகத்தின் முடிவைச் சொல்லும் முதல் நாவல் இது.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 02-Nov-2023, 08:46:52 IST