under review

துயரப்பாதை

From Tamil Wiki
Revision as of 13:51, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:நாவல்கள் to Category:நாவல்Corrected Category:மலேசிய படைப்புகள் to Category:மலேசிய படைப்பு)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
துயரப்பாதை.jpg

துயரப்பாதை மலேசிய எழுத்தாளரான கா. பெருமாள் எழுதிய நாவல். தோட்டங்களில் கள் பானம் விற்பனை செய்யப்பட்ட சூழலையும் அதை ஒட்டி உருவான தோட்ட மக்களின் வாழ்வியல் முறைகளையும் பின்னணியாகக் கொண்டு இந்நாவல் எழுதப்பட்டுள்ளது.

பதிப்பு

கா. பெருமாள் எழுதிய இந்நாவல் 1958-ல் சங்கமணி நாளிதழில் தொடர்கதையாக வெளிவந்த இந்நாவல் 1978-ல் நாவலாக பதிப்பானது.

பின்புலம்

மலேசியாவில் இந்தியர்களின் வரலாற்றில் தோட்டப்புறச் சூழலில் வாழ்ந்த காலகட்டத்தில் கள் விற்பனை, கங்காணியின் ஆதிக்கம், துரையின் பேராசை, கள் போன்ற போதை தரும் பானங்களின் விற்பனை போன்றவற்றால் இந்தியர்கள் பல துன்பங்களைச் சந்தித்தனர். இந்நாவல் அவற்றை மையமாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது.

கதை சுருக்கம்

கா. பெருமாள்

முத்துக்கருப்பன் எனும் நற்பண்புகளும் போராட்ட குணமும் கொண்ட இளைஞன் தோட்டத்தில் கள் விற்பனையைத் தடுக்க நினைக்கிறான். ஆனால் கங்காணிக்கு கள் விற்பனை நடப்பது அவசியமாக உள்ளது. எனவே அதைத் தடுக்கும் முத்துக்கருப்பனை தோட்டத்தை விட்டு விரட்டுகிறார். இதற்கிடையில் பொன்னம்மா என்ற பெண்ணை அவள் தாய்மாமன் முனியனும் கங்காணி மகன் மாணிக்கமும் காதலிக்கின்றனர். ஆனால் பொன்னம்மா முத்துக்கருப்பனை விரும்புகிறாள். இறுதியில் காதல் கைகூடுகிறது.

கதை மாந்தர்கள்

  • முத்துக்கருப்பன் - நாவலின் மையப்பாத்திரம். தோட்டத்தில் கள் விற்பனையை எதிர்ப்பவன்
  • பொன்னம்மா - நாவலின் நாயகி.
  • முனியன் - பொன்னம்மாளின் தாய்மாமன்
  • மாணிக்கம் - கங்காணி நாகனின் மகன்
  • கங்காணி நாகன் - கங்காணி. எதிர்க்கதாபாத்திரம்

இலக்கிய இடம்

எழுத்தாளர் ரெ. கார்த்திகேசு இந்நாவலை மலேசியாவில் செவ்வியல் நாவல் எனக் குறிப்பிடுகிறார். அன்றைக்குத் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில், இலக்கியவாதிகளின் மத்தியில், கல்வியாளர்கள் மத்தியில் பாராட்டப்பட்ட நாவலாக இருந்தாலும், அதனை மீள்மதிப்பீடு செய்யும்போது இந்நாவல் அழுத்தமற்ற கதாபாத்திரங்களாலும் காரணமற்ற சம்பவச் சித்தரிப்புகளாலும் நோக்கற்ற வசனங்களாலும் சிக்கலை வலுவாக்கும் காட்சி போதாமையாலும் நாவல் வடிவத்தை முழுமையாக அடையவில்லை என்று ம. நவீன் குறிப்பிடுகிறார்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:39:09 IST