under review

சேனாதிராய முதலியார்

From Tamil Wiki
Revision as of 13:46, 17 November 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Corrected Category:புலவர்கள் to Category:புலவர்)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
சேனாதிராய முதலியார்.jpg
நல்லைவெண்பா

சேனாதிராய முதலியார் (1750 - 1840) சேனாதிராச முதலியார். இருபாலை சேனாதிராய முதலியார். இலங்கை தமிழ், சைவ அறிஞர், ஈழத்து சிற்றிலக்கியப் புலவர், புராண விரிவுரையாளர், மற்றும் தமிழாசிரியர். மானிப்பாய் தமிழ் அகராதியை முதல்வராக இருந்து தொகுத்து வெளியிட்டது இவரின் முக்கியமான பணியாகும்.

பிறப்பு, கல்வி

இலங்கை யாழ்ப்பாணம் தென்னைக்கோவையில் இருபாலை எனும் ஊரில் 1750-ல் நெல்லைநாத முதலியார்-க்கு மகனாக சேனாதிராய முதலியார் பிறந்தார். முப்பத்திரண்டு கோயில்பற்றுகளில் ஒன்றான தெல்லிப்பழையில் புகழ்பெற்றிருந்த சைவ அறிஞரான அருளம்பல முதலியாரின் மரபில் வந்தவர் நெல்லைநாத முதலியார்.

தமது தந்தையாரிடத்திலும், கூழங்கைத் தம்பிரான், மாதகல் சிற்றம்பலப் புலவர் ஆகியோரிடத்திலும் இலக்கண இலக்கியங்களைக் கற்றுத் தேர்ந்தார். ஆங்கிலேயம், போர்த்துகீசிய மொழியில் புலமை உடையவர்.

தனிவாழ்க்கை

சேனாதிராய முதலியார் தென்கோவை பஞ்சாயுத முதலியாரின் மகளை மணந்தார். இவர்களுக்கு இராமலிங்க முதலியார், பர்வதவத்தினி என இரு பிள்ளைகள் பிறந்தனர்.

சேனாதிராய முதலியாரின் மகள்வழிப் பேரனான கந்தப்பிள்ளை சிறந்த தமிழாசிரியர். இவருடைய வழித்தோன்றல்கள் பலர் தமிழ் அறிஞர்களாக இருந்து தொண்டாற்றியவர்கள். நல்லூரில் நீதிமன்ற நீதவான் ( கிராம நீதிபதி) பணியாற்றினார்.

பணிகள்

சேனாதிராய முதலியார் கீழ்க்கண்ட பணிகள் புரிந்துள்ளார்.

  • நீதிமன்ற நியாயவாதி
  • மொழிபெயர்ப்பாளர்
  • மணியக்காரர்

ஆன்மிகம்

சேனாதிராய முதலியார் நல்லூர் முருகன் கோயில் புதுப்பிக்கப்பட்டு பெரிய ஆலயமாக மாற வழிவகுத்தார். நல்லூர் ஆலயத்தில் நாள்தோறும் கந்தபுராணச் சொற்பொழிவுகள் செய்து பெருந்திரளான மக்களை கவர்ந்தார்.

இருபாலையில் வினாயகர் ஆலயம் இவர் முயற்சியால் உருவானது.

இலக்கிய வாழ்க்கை

சேனாதிராய முதலியார் ஐரோப்பியர்களுக்கும் பலருக்கும் தமிழ் ஆசிரியராக இருந்தார். நல்லூர் கந்தசுவாமி கோயிலில் முதன்முதலில் புராண விரிவுரை செய்யத்தொடங்கினார். இவருக்குப்பின் வந்தவர்களே சரவணமுத்துப் புலவர், ஆறுமுக நாவலர், பொன்னம்பலப் பிள்ளை. சேனாதிராய முதலியார் ஆறுமுகநாவலரின் ஆசிரியராகவும் இருந்தார்.

மானிப்பாயில் ரைட் பாதிரியார் வெளியிட்ட தமிழின் இரண்டாவது அகராதிக்குழுவின் முதல்வர். தமிழ் அகராதியை தொகுத்து வெளியிட்டார். ‘தெல்லியம்பதியில் வரு நெல்லைநாதக் குரிசில் செய்தவமெனாவுதித்த சேனாதிராசனும்’ அந்த அகராதிப்பணியில் ஈடுபட்டதாக அதன் முன்னுரைப் பாயிரம் குறிப்பிடுகிறது

பிரபந்தங்கள்

சேனாதிராய முதலியார் நல்லூர் முருகன் மேல் பெரும் பக்தி கொண்டவர். நல்லை அந்தாதி, நல்லை கலிவெண்பா, நல்லை குறவஞ்சி,நல்லூர் ஊஞ்சல் பதிகம் ஆகிய நூல்களை எழுதியிருக்கிறார்.

மாவிட்டபுரம் சுப்ரமணியக்கடவுள் மீது ஊஞ்சல் பதிகம், நீராவிப் பிள்ளையார் கலிவெண்பா, , ஒகுல மலைக் குறவஞ்சி போன்ற சிற்றிலக்கிய நூல்களை இயற்றினார்.

1870-ல் இவரது மாணவரான அம்பலவணப் பண்டிதரால் நல்லை வெண்பா அச்சிடப்பட்டது. யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த தமிழ் மற்றும் சைவ மறுமலர்ச்சிக்கு இவரும் இவருடைய மாணவர்களும் முக்கியமான காரணம்.

மாணவர்கள்

மறைவு

இலங்கை யாழ்ப்பாணம் 1840-ல் தன் எழுபதாவது வயதில் சேனாதிராய முதலியார் காலமானார்.

இலக்கிய இடம்

யாழ்ப்பாண சைவ இலக்கிய மரபின் முதன்மை ஆளுமைகளில் சேனாதிராய முதலியாரும் ஒருவர். தமிழின் இரண்டாவது அகராதிப் பணியில் பங்களிப்பாற்றியவர். நல்லூர் ஆலயம் புகழ்பெறக் காரணமாக அமைந்தவர்.

நூல்கள்

அந்தாதி
  • நல்லை அந்தாதி
ஊசல்
  • நல்லூர் ஊஞ்சல் பதிகம்
  • மாவிட்டபுரம் சுப்ரமணிய ஊஞ்சல் பதிகம்
வெண்பா
  • நல்லை வெண்பா
  • நீராவிப் பிள்ளையார் கலிவெண்பா
குறவஞ்சி
  • ஒகுல மலைக் குறவஞ்சி
  • நல்லைக் குறவஞ்சி

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 21-May-2023, 09:01:00 IST