என். கே. ரகுநாதன்
- ரகுநாத என்ற பெயரில் உள்ள மற்ற பக்கங்களைப் பார்க்க: ரகுநாத (பெயர் பட்டியல்)
To read the article in English: N.K. Ragunathan.
என். கே. ரகுநாதன் (ஜூலை 9, 1929 - ஜூன் 11, 2018) ஈழத்தமிழ் எழுத்தாளர். சிறுகதை, நாவல், நாடகஙள் எழுதினார். இலங்கையில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த மக்களுக்காக போராடியவர்.
பிறப்பு,கல்வி
என். கே. ரகுநாதன் இலங்கையின் யாழ்ப்பாணம், வடமராட்சி, பருத்திதுறைப் பகுதியிலுள்ள வராத்துப்பளை என்னும் கிராமத்தில் ஜூலை 9, 1929-ல் பிறந்தார். அம்மா வள்ளியம்மை.
ஐந்து வயதில் வரத்துப்பளை மிஷன் பள்ளியில் படித்தார். பின்னர் சிவப்பிரகாச வித்தியாசாலையில் உயர்நிலைப் பள்ளிக் கல்வியை பயின்றார். ஆசிரியர் பயிற்சி பெற்றார்.
தனிவாழ்க்கை
என். கே. ரகுநாதன் கே.டானியலின் உடன்பிறந்த தங்கையைக் காதலித்துத் திருமணம் செய்தார். பிள்ளைகள் திலீபன், தமயந்தி, சஞ்சயன், ஜெயதேவன் கனடா, லண்டன், ஜெர்மனியில் வசிக்கிறார்கள். கடைசிப் பெண் ஜனனி இலங்கையில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார்.
அரசியல்
இலங்கையில் ஆசிரியராகப் பணியாற்றிய ரகுநாதன் இலங்கை ஆசிரியர் சங்கம் எச். என். பெர்னாண்டோ தலைமையில் இயங்கிய காலப்பகுதியில் சங்கத்தின் வடபிரதேசக்கிளையில் அங்கம் வகித்தார். அப்போது தனது தோழர்களுடனும் அடிநிலை மக்களுடனும் இணைந்து ஆலயப்பிரவேசப் போராட்டங்களிலும் தேநீர்க்கடை பிரவேசப்போராட்டங்களிலும் ஈடுபட்டார். அவர் ஈடுபட்ட போராட்டங்களில் மாவிட்டபுரம் கந்தசாமி கோவில் நுழைவு போராட்டம் குறிப்பிடத்தக்கது.
மு. கார்த்திகேசன், - பொன். கந்தையா ஆகியோரின் வழிகாட்டலில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தீவிர ஆதரவாளராகச் செயற்பட்ட ரகுநாதன் 1964-ம் ஆண்டளவில் இலங்கைக் ம்யூனிஸ்ட் கட்சி பிளவடைந்தபோது தோழர் என்.சண்முகதாசன் தலைமையிலான சீனச்சார்பு அணியில் இணைந்து செயல்பட்டார்.
இலக்கியப்பணி
தொடக்கம்
சிறுவயதில் இருந்து வாசிப்பில் ஆர்வம் கொண்ட ரகுநாதனுக்கு யாழ்ப்பாணக் கவிஞர் பசுபதி, சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் அ.ந. கந்தசாமி ஆகியோரால் இலக்கிய வாசிப்பில் ஈடுபாடு ஏற்பட்டது. ரகுநாதனின் முதல் சிறுகதை 'நிலவிலே பேசுவோம்’ 1948-ல், அவரது 19-வது வயதில். 'சுதந்திரன்' இதழில் 1951-ல் வெளிவந்தது.
சிறுகதைகள்
1951-ம் ஆண்டு 'எழிலன்' என்ற புனைபெயரில் ரகுநாதன் எழுதிய ’முந்திவிட்டாள்’ என்ற சிறுகதை இந்தியாவில் வெளிவந்த பொன்னி இதழில் அட்டைப் படத்துடன் வெளிவந்தது. 'நெருப்பு’ சிறுகதை 1961-ல் சரஸ்வதி இதழில் வெளியானது. 1983 ஜூலைக் கலவரத்தையொட்டி 'இலக்கியப் பாலம்’ என்ற தமிழக சிற்றேடு அதை மீள் பிரசுரம் செய்தது. கே.ஜி. அமரதாஸ் அதனை சிங்களத்தில் மொழிபெயர்த்து சாகித்திய வெளியீடான 'நவசம்ஸ் கிருத்ய’ (நவீன கலாச்சாரம்) என்னும் காலாண்டிதழில் வெளியிட்டார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான 'திசை' இதழில் (மார்ச் 1990) ’பஜகோவிந்தம்’ எனும் சிறுகதையை 'கார்த்திநேசன்' என்ற புனைப்பெயரில் எழுதினார். வெண்ணிலா, வரையண்ணல் ஆகிய புனைப்பெயர்களிலும் எழுதினார். ஈழகேசரி, பொன்னி, சுதந்திரன், தினகரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளில் சிறுகதைகள் வெளிவந்துள்ளன.
ரகுநாதனின் புகழ்பெற்ற சிறுகதையான 'நிலவிலே பேசுவோம்' எனெஅ பெயரிலேயே முதல் சிறுகதைத்தொகுதி 1962-ல் தமிழகத்தில் பாரி பதிப்பகத்தின் விற்பனை உரிமையுடன் வெளியாகியது. அதற்கு 34 வருடங்களுக்குப் பிறகு இரண்டாவது சிறுகதைத் தொகுப்பான 'தசமங்கலம்' (1996) வெளிவந்தது.
'நிலவில் பேசுவோம்', 'நெருப்பு', 'குடை' போன்ற கதைகள் ஏ.ஜே.கனகரத்னாவால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன
நாடகம்
மாவிட்டபுர போராட்ட காலத்தில் 1969-ல் 'கந்தன் கருணை’ என்ற நாடகத்தை எழுதினார், ரகுநாதனின் நண்பர் இளைய பத்மநாதன் 'கந்தன் கருணை’ நாடகத்தை காத்தான்கூத்து பாணிக்கு மாற்றி நெறிப்படுத்தி வடஇலங்கைப் பிரதேசம் முழுவதும் மேடையேற்றினார். 'கந்தன் கருணை’ 1999-ல் நூலாக வெளிவந்தது.
நாவல்
என்.கே.ரகுநாதன் புலம்பெயர்ந்தபின் தன் ஊரின் சாதிப்பிரச்சினைகளை விரிவாகப்பேசும் ஒரு பனஞ்சோலை கிராமத்தின் எழுச்சி என்ற நாவலை எழுதினார். இது தன் வரலாற்றுத்தன்மை கொண்ட நாவல்.
விருது
இலங்கை சாகித்ய விருது 1996 (தசமங்கலம்)
மறைவு
ரகுநாதன் கனடா நாட்டில் டொரொண்டோ நகரில் ஜூன் 11, 2018 அன்று மறைந்தார்.
ஆவணம்
ரகுநாதனின் சிறுகதைகள், நாடகங்கள், நாவல், கவிதைகள், கடிதங்கள், நேர்காணல்கள், அவருடன் பழகியவர்களின் நினைவுக்குறிப்புகள், அவரது மறைவுக்குப் பின் எழுதப்பட்ட அஞ்சலிக் கட்டுரைகள் என அனைத்தையும் இணைத்து முழுத்தொகுப்பாக ’என்.கே.ரகுநாதம்’ என்னும் நூல் வெளியிடப்பட்டுள்ளது.
இலக்கிய இடம்
'வாழ்க்கைக்கும் எழுத்துக்கும் தொடர்பு இருக்க வேண்டும், நான் என் அனுபவங்களை எழுதுகிறேன்' எனச் சொல்லும் என்.கே. ரகுநாதனின் எழுத்து ஈழத்தில் நிலவிய சாதியத்துக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளுக்கும் எதிரான இயக்கமாக இருந்தது. ரகுநாதனின் ’ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி’ கதை ஒரு இலட்சியவாத சிந்தனை. சாதிக்குள் நிகழும் கொடூரத்தின் ஒரு பகுதியை அடையாளம் காட்டுகிறது. இலங்கையின் முற்போக்கு இலக்கியத்தின் முகமாக ரகுநாதன் மதிப்பிடப்படுகிறார்.
நூல்கள்
- நிலவிலே பேசுவோம் - சிறுகதைத் தொகுப்பு, பாரி நிலையம், 1962
- கந்தன் கருணை(ஓரங்க நாடகம்), 1999 - தன் பதிப்பு
- தச மங்கலம் - சிறுகதைத் தொகுப்பு, ஜெயசக்தி பிரசுரம், 1996
- ஒரு பனஞ்சோலைக் கிராமத்தின் எழுச்சி - நாவல், இரண்டாம் பதிப்பு, கருப்புப் பிரதிகள் வெளியீடு, 2014
உசாத்துணை
- என். கே. ரகுநாதன் – தினக்குரல் பேட்டி
- ஈழச் சிறுகதைகள் ஒரு மீட்டுணர்வு... 6 - கே. பாலமுருகன்
- என்.கே. ரகுநாதன் (1929-2018) நினைவுகள்! - முருகபூபதி
- என்.கே.ரகுநாதன் வாழ்க்கைக்குறிப்பு
- என்.கே ரகுநாதன் படைப்புகள் மின்னூலகம்
- என்.கே.ரகுநாதன் மறைவுச்செய்தி
- நிலவிலே பேசுவோம். அ.ந.கந்தசாமி முன்னுரை
- என்.கே.ரகுநாதன் - ஷோபாசக்தி பேட்டி
- என்.கே.ரகுநாதன் காணொளி பேட்டி
- ஒரு பழைய கலகக்காரனின் கதைகள் : ஆர். காளிப்பிரஸாத், அகழ் இணைய இதழ், நவம்பர்-டிசம்பர் 2021
வெளி இணைப்புகள்
✅Finalised Page
முதலில் வெளியிடப்பட்ட தேதி:
18-Jul-2023, 13:19:19 IST