under review

நார்த்தாமலை விஷ்ணு குடைவரை கோவில்

From Tamil Wiki
Revision as of 13:02, 12 November 2024 by Madhusaml (talk | contribs)
நார்த்தாமலை விஷ்ணு குடைவரை கோவில் - முழுத்தோற்றம்
நார்த்தாமலை விஷ்ணு குடைவரை கோவில் - அதிஷ்டானம்

[நார்த்தாமலை விஷ்ணு குடைவரை கோவில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது. சமணர் குடகு, திருமேற் கோவில், பதினெண் பூமி விண்ணகரம் என பல்வேறு பெயர்களில் அறியப்படும் இக்கோவில் 7-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது.

கோவில் அறிமுகம்

நார்த்தாமலை விஷ்ணு குடைவரை கோவில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகாவில் அமைந்துள்ளது. 7-ஆம் நூற்றாண்டை சேர்ந்த இக்குடைவரையை அமைத்தவர் பற்றிய குறிப்புகள் அறியக் கிடைப்பதில்லை. கோயிலில் உள்ள கல்வெட்டுக்களைக் கொண்டு கோயிலின் அமைப்பும் வரலாறும் 20-ம் நூற்றாண்டில் ஆய்வு செய்யப்பட்டு எழுதப்பட்டுள்ளன. தற்போது இக்குடைவரை இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

கோவிலில் மூலவர் சிலை இல்லை. கோவிலின் ஆகம முறைகள், தலபுராணங்கள், இலக்கிய சான்றுகள் பற்றிய விவரங்கள் அறியக் கிடைக்கவில்லை.

இடம்

நார்த்தாமலை விஷ்ணு குடைவரை கோவில் புதுக்கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வடமேற்கே 19.5 கிலோமீட்டர் தொலைவிலும் திருச்சி ரயில் நிலையத்திலிருந்து தெற்கே 40 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ள நார்த்தாமலை என்ற ஊரில் அமைந்துள்ளது.

ஊரின் வடமேற்கே மேலமலை எனும் பாறைக்குன்று வடக்கிலிருந்து தெற்காக நீண்டுள்ளது. இந்த குன்றின் கிழக்குப் பகுதியில் விஷ்ணு குடைவரை கோவில் அமைந்துள்ளது.

கோவில் வரலாறு, பெயர்

நார்த்தாமலை விஷ்ணு குடைவரை கோவில் பற்றிய முதன்மையான வரலாற்று செய்திகள் கே.ஆர். வெங்கடராம ஐயர், எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் மற்றும் டி. தயாளன் ஆகிய வரலாற்று ஆய்வாளர்களால் தொகுக்கப்பட்டுள்ளது. இக்கோவிலுக்குள்ளும் நார்த்தாமலை ஊரிலும் காணப்படும் கல்வெட்டு சான்றுகளைக் கொண்டு கோவில் பற்றிய தகவல்கள் திரட்டப்பட்டுள்ளன.

ஊரின் தற்போதைய பெயரான நார்த்தாமலை என்பது 'நகரத்தார் மலை' என்னும் பெயரில் இருந்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது. 'நகரம்' என்பது இக்கிராமத்தில் வாழ்ந்த வணிகர்களின் கூட்டமைப்பு. இந்த அமைப்பு, கோவில் சொத்துக்களை நிர்வாகித்தல், நிலங்களுக்கு வரிவிலக்கு செய்தல், நிலம் கைமாறும் விவரங்களை சாசனமாக பதிவு செய்தல் போன்ற பொதுப்பணிகளை கவனிக்கும் உள்ளாட்சி அமைப்பாகவும் இருந்துள்ளது. இந்த அமைப்பின் உறுப்பினர்கள் 'நகரத்தார்' என அழைக்கப்பட்டனர்.[1]

கருவறை 7-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது. கோவிலின் மகாமண்டபமும் முகமண்டபமும் பிற்காலத்தியது.

முதலில் சமணர் குடைவரையாக (சமணர் குடகு) இருந்த இக்கோவில் முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் (பொ.யு. 1115) வைணவ கோவிலாக மாற்றப்பட்டு 'திருமேற்கோவில்' என அழைக்கப்பட்டது. மூலவராக கருமாணிக்க ஆழ்வார் வழிபடப்பட்டார். அதன்பின் 100 வருடங்கள் கழித்து மாறவர்ம சுந்தரபாண்டியனின் ஆட்சியில் (பொ.யு. 1228) மூலவர் சிலை 'பதினெண் பூமி விண்ணகரப் பெருமான்' என்ற பெயரில் மறுபிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்பட்டது. தற்போது இது விஷ்ணு குடைவரை என அழைக்கப்படுகிறது.

ஆய்வாளர்களின் கருத்துகள்
நார்த்தாமலை விஷ்ணு குடைவரை - கருவறை பீடம்
அர்த்தமண்டபத்தில் உள்ள விஷ்ணு புடைப்பு சிற்பங்கள்
அர்த்தமண்டபத்தில் உள்ள விஷ்ணு புடைப்பு சிற்பம்
வியாள வரி சிற்பங்கள் - யானை
வியாள வரி சிற்பங்கள் - யாளி, கல்வெட்டு
வியாள வரி சிற்பங்கள் - யானை மற்றும் யாளி, கல்வெட்டு
வியாள வரி சிற்பங்கள் - யாளி

எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம், மகாமண்டபத்தின் அதிஷ்டானத்தில் உள்ள முதலாம் குலோத்துங்க சோழனின் 45-ஆம் ஆட்சி ஆண்டு (பொ.யு. 1115) கல்வெட்டை படித்து பதிவு செய்துள்ளார். அதிஷ்டான உறுப்புகளின் குறுகிய இடைவெளிகளில் கல்வெட்டு அமைந்திருப்பதால், அதிஷ்டானம் கட்டுவதற்கு முன்பே கல்வெட்டை பொறித்திருக்க வேண்டும். இதன்படி கல்வெட்டு எழுதப்பட்ட காலமான பொ.யு. 1115-ஆம் ஆண்டையே மகாமண்டபம் அமைக்கப்பட்ட காலமாக எடுத்துக்கொள்ளலாம். ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்குப் பின் மாறவர்ம சுந்தரபாண்டியனின் ஆட்சியில் (பொ.யு. 1228) கோவில் சீரமைப்பு பணிகள் நடைபெற்றுள்ளன என்று எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் குறிப்பிடுகிறார்.

எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம் கருத்துப்படி முன்பு சமணர் குடைவரையாக இருந்த இக்கோவில் பொ.யு. 1115-ல் முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் விஷ்ணு குடைவரையாக மாற்றப்பட்டுள்ளது.

கே.ஆர். வெங்கடராம ஐயர், இதை சற்று மறுத்து, குலோத்துங்க சோழனின் ஆட்சியில் திருமேற்கோவில் என்பது வேறு ஒரு இடத்தில் இருந்திருக்க வேண்டும் எனவும் ஒரு நூற்றாண்டுக்குப் பின் அக்கோவில் சிதைவடைந்திருக்கலாம் எனவும் கருதுகிறார். மாறவர்ம சுந்தரபாண்டியனின் ஆட்சி காலத்தில் (பொ.யு. 1228) திருமேற்கோவிலின் சிதைந்த பகுதிகளை கொண்டு வந்து இங்குள்ள குடைவரைக்கு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. திருமேற்கோவிலின் மூலவரையும் இக்குடைவரையில் பிரதிஷ்டை செய்து பதினெண் பூமி விண்ணகர பெருமான் என்ற பெயரில் வழிபடபட்டிருக்க வேண்டும் என்று கே.ஆர். வெங்கடராம ஐயர் குறிப்பிடுகிறார். 'பதினெண் பூமி விண்ணகரம்' என்ற பெயர், 18 கிராமங்களில் வாழ்ந்த 'ஐந்நூறுவர்' என்ற வணிக கூட்டமைப்பை குறிப்பதாக இருக்கலாம். இந்த ஐந்நூறுவர் கூட்டமைப்பு நகரம் என்னும் உள்ளாட்சி அமைப்புடன் சேர்ந்து பணி புரிந்திருக்கலாம் எனவும் குறிப்பிடுகிறார்.

கே.ஆர். வெங்கடராம ஐயர் கருத்துப்படி முன்பு சமணர் குடைவரையாக இருந்த இக்கோவில் பொ.யு. 1228-ல் மாறவர்ம சுந்தரபாண்டியனின் ஆட்சியில் விஷ்ணு குடைவரையாக மாற்றப்பட்டுள்ளது.

தொன்மம்

இலங்கையில் ராம - ராவண போரின் பொழுது படைவீரர்களின் காயங்களை குணப்படுத்த இமாலய உச்சியில் உள்ள சஞ்சீவி மலையை அனுமன் இலங்கைக்கு எடுத்துச் சென்றார். அந்த மலையை இலங்கையில் இருந்து திரும்ப கொண்டுவரும் பொழுது மலையில் இருந்து தவறி விழுந்த சிறு குன்றுகள் தான் நார்த்தாமலை கிராமத்தை சுற்றியுள்ள மலைகள் என்று நம்பப்படுகிறது. இம்மலைகள் மூலிகை செடிகள் நிறைந்ததாகவும் அதனால் வைத்தியர்கள் அடிக்கடி வரும் இடமாகவும் கருதப்படுகிறது.

பெருங்கலூர் தலபுராணம், இவ்வூரின் பெயர், நாரத முனிவர் பெயரிலிருந்து 'நாரதர் மலை' எனவும் பின்பு நார்த்தாமலை என மாறியுள்ளதாகவும் கூறுகிறது.

கோவில் தெய்வங்கள்

மூலவர்

கோவிலில் மூலவர் சிற்பம் இல்லை. அர்த்தமண்டபத்தில் விஷ்ணு சிற்பங்கள் காணப்படுகின்றன.

கோவில் கட்டிடக்கலை அமைப்பு

நார்த்தாமலை விஷ்ணு குடைவரை கோவிலின் கருவறை மற்றும் அர்த்தமண்டபம் பாறையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. கருவறை கிழக்கு நோக்கி உள்ளது. அர்த்தமண்டபத்தை தொடர்ந்து கருங்கல்லால் கட்டப்பட்ட மகாமண்டபம் உள்ளது.

இக்குடைவரையின் வலப்புறம் அதே பாறையில் பழியிலி ஈஸ்வரம் எனும் மற்றொரு குடைவரை கோவில் உள்ளது. இவ்விரு குடைவரைகளுக்கும் நேர் எதிரே விஜயாலய சோழீஸ்வரம் என்ற கருங்கல் கோவில் அமைந்துள்ளது.

கருவறை

பாறையை குடைந்து செய்யப்பட்ட கருவறை, 3.1 மீட்டர் நீளமும் 2.7 மீட்டர் அகலமும் கொண்ட செவ்வக வடிவமாக உள்ளது. கருவறையின் வாயில் 1.2 மீட்டர் அகலமும் 2 மீட்டர் உயரமும் கொண்டது.

உற்புறத்தில் மூலவர் இன்றி பீடம் மட்டுமே உள்ளது. அதே பாறையில் வெட்டப்பட்ட இந்த பீடம், 26 சென்டிமீட்டர் உயரம் கொண்ட சதுர வடிவமாக உள்ளது. பீடத்தின் மையத்தில் சிலை வைப்பதற்காக வட்ட வடிவமான பள்ளம் போன்ற அமைப்பு காணப்படுகிறது.

அர்த்தமண்டபம்

கருவறையை தொடர்ந்துள்ள அர்த்தமண்டபமும் பாறையை குடைந்து அமைக்கப்பட்டுள்ளது. அர்த்தமண்டபம், 11.5 மீட்டர் நீளமும் 1.8 மீட்டர் அகலமும் 3 மீட்டர் உயரமும் கொண்ட செவ்வக வடிவமாக உள்ளது.

அர்த்தமண்டபத்தின் முன்புறத்தில் வெட்டு போதிகையுடன் இரண்டு பெரிய முழுத்தூண்களும் இரண்டு அரைத்தூண்களும் உள்ளன. தூண்கள் சதுரமாக உள்ளன. வடபகுதியில் உள்ள ஒரு தூணில் மட்டும் சதுரத்துடன் கட்டு அமைக்க முயன்றிருப்பதன் அடையாளங்கள் காணப்படுகின்றன.

அர்த்தமண்டத்தின் சுவரில் விஷ்ணு சிலைகள் புடைப்பு சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளன. கருவறை வாயிலின் இரு புறமும் உள்ள சுவரில் இடப்புறம் ஐந்தும் வலப்புறம் ஐந்துமாக 10 விஷ்ணு சிற்பங்களும், பக்க சுவர்களில் ஒன்றை ஒன்று நோக்கியவாறு 2 விஷ்ணு சிற்பங்களுமாக 12 சிற்பங்கள் உள்ளன. ஒரே மாதிரி உள்ள இந்த சிற்பங்கள், விஷ்ணுவின் 12 வடிவங்களான கேசவன், நாராயணன், மாதவன், கோவிந்தன், விஷ்ணு, மதுசூதனன், திரிவிக்ரமன், வாமனன், ஸ்ரீதரன், ரிஷிகேசன், பத்மநாபன் மற்றும் தாமோதரன் என கருதப்படுகிறது. சிற்ப அமைதியை கொண்டு இவை 8 அல்லது 9-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டிருக்கலாம் என டி. தயாளன் கூறுகிறார்.

அனைத்து விஷ்ணு சிலைகளும் 2 மீட்டர் உயரத்துடன் பத்ம பீடத்தின் மீது நான்கு கரங்களுடன் உள்ளன. சிற்பங்களின் முன்னிரு கைகள் அபய மற்றும் கடி ஹஸ்தமாக அமைந்துள்ளன. பின்னிரு கைகளில் கர்த்தரி ஹஸ்தத்தில் சங்கும் பிரயோக சக்கரமும் உள்ளன. தலையில் கிரீட மகுடத்துடன் மகர குண்டலம், கண்டிகை, சரப்பளி, உதர பந்தம், இடைக்கட்டு, கடகம் போன்ற அணிகலன்களுடன் காணப்படுகின்றன. விஷ்ணுவின் இடது தோளிலிருந்து, வலது இடை வழியாக செல்லும் பூணூல் (யக்ஞோபவீதம்), முத்துக்கள் கோர்க்கப்பட்ட சரங்களாக வேலைப்பாடுகளுடன் உள்ளது. தோள்வளையும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் நிறைந்து காணப்படுகிறது. விஷ்ணுவின் இடையிலிருந்து பாதம் வரை செல்லும் பட்டாடை, துல்லியமான மடிப்புகளுடன் அமைக்கப்பட்டுள்ளது.

மகாமண்டபம், முகமண்டபம்

கருங்கல்லால் கட்டப்பட்ட மகாமண்டபம் மற்றும் முகமண்டபத்தில் தற்போது அதிஷ்டானம் மட்டுமே உள்ளது. கல்வெட்டில் உள்ள குறிப்புகள் மற்றும் சிதைவடைந்த மற்ற பகுதிகளை வைத்து பார்க்கும் பொழுது முற்காலத்தில் இது முழு மண்டபமாக தூண்கள் மற்றும் கூரைப்பகுதியுடன் இருந்திருக்க வேண்டும். இந்த மண்டபங்கள் முதலாம் குலோத்துங்க சோழனின் ஆட்சியில் (பொ.யு. 1115) கட்டப்பட்டன. அதிஷ்டானத்தின் உயரம் 1.8 மீட்டர்.

அதிஷ்டானம் உபானம், ஜகதி, விருத்த குமுதம், வியாள வரி, கண்டம், கம்பு மற்றும் பட்டிகை போன்ற உறுப்புகளை கொண்டுள்ளது. வியாள வரியில் சிங்கம், யானை, காமதேனு மற்றும் யாளி போன்ற சிற்பங்கள் உள்ளன. வியாள வரியின் ஓரப் பகுதிகளில் யாளியின் மீது வீரர்கள் அமர்ந்தவாறும் யாளியின் வாயிலிருந்து வீரர்கள் வருவது போன்றும் சிற்பங்கள் காணப்படுகின்றன. இந்த அதிஷ்டானம் பிரதிபந்த அதிஷ்டானமாக வகைப்படுத்தப்படுகிறது.

மகாமண்டபத்தை ஒட்டி அமைந்துள்ள சிறிய முகமண்டபம், மகாமண்டபத்தின் அதே உயரம் மற்றும் உறுப்புகளை கொண்டுள்ளது.

மகாமண்டபத்தில் உடைந்த சப்த மாதர், யானை முகம் கொண்ட தோரணம், தட்சிணாமூர்த்தி, துவார பாலர், சிம்மம், யானை போன்ற தனிச்சிற்பங்கள் வைக்கப்பட்டுள்ளன.

சிற்பங்கள் பட்டியல்

நார்த்தாமலை விஷ்ணு குடைவரை கோவிலில் துவார பாலர்கள், சப்த மாதர், தட்சிணாமூர்த்தி, சிம்மம், யானை போன்ற தனிச்சிற்பங்களும், புடைப்பு சிற்பமாக 12 விஷ்ணு சிற்பங்களும் உள்ளன.

கல்வெட்டுகள்

சோழர் கால கல்வெட்டு
  • முதலாம் குலோத்துங்க சோழனின் (பொ.யு. 1070 - 1118) நாற்பத்தி ஐந்தாம் ஆட்சியாண்டை (பொ.யு. 1115) சேர்ந்த கல்வெட்டு மகாமண்டபத்தின் அதிஷ்டான பகுதியில் காணப்படுகிறது. 54 வரிகள் கொண்ட சிதைந்த மற்றும் முழுமையடையாத இந்த தமிழ் கல்வெட்டு, ஸ்வஸ்தி ஸ்ரீ என்னும் மங்கலச் சொல்லுடன் துவங்குகின்றது. தெலுங்கு குலகாலபுரத்தின் 'நகரத்தார்', அவ்வூரை சேர்ந்த 'முடிகொண்ட சோழ தெலுங்கை அரையன்' என்ற வணிகருடன் செய்த உடன்படிக்கை பற்றி இக்கல்வெட்டு பேசுகிறது. இந்த உடன்படிக்கை, திருமேற்கோவிலின் மூலவரான கருமாணிக்க ஆழ்வாரின் தினசரி பிரசாதத்திற்கான உடன்படிக்கை. இதன்படி, முடிகொண்ட சோழ தெலுங்கை அரையன், அவர் சீரமைத்த நிலத்திலிருந்து வருடத்திற்கு 75 கலம் நெல் கோவிலுக்கு கொடுக்க வேண்டும். இந்நிலம் வரிவிலக்கு அளிக்கப்பட்டு குடிநீங்கா தேவதானமாக கருதப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: செம்பொன் வீரசிங்காசனத்து அவனி முழுதுடையாளொடு வீற்றிருந்தருளிய கோவி ராஜகேசரி பன்மரான திரிபுவன சக்கரவர்த்தி ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவர், இரட்டப்பாடி கொண்ட சோழவள நாட்டு அன்ன வாயில் கூற்றத்து தெலுங்கு குலகாலபுரத்து, திருமேற்கோவில், கருமாணிக்க ஆழ்வார், திருப்படி மாற்று, வியாபாரி தேவன் பெரியனான முடிகொண்ட சோழ தெலுங்கை அரையன், குடிக்காடு, குடிநீங்கா தேவதானமாக, கலம்.[2]
பாண்டியர் கால கல்வெட்டு
  • கோவிலின் வடபுறம் உள்ள பாறையில் மாறவர்ம சுந்தரபாண்டியனின் (பொ.யு. 1216 - 1238) பன்னிரண்டாம் ஆட்சியாண்டை (பொ.யு. 1228) சேர்ந்த கல்வெட்டு உள்ளது. 31 வரிகள் கொண்ட இந்த தமிழ் கல்வெட்டு, பதினெண் பூமி விண்ணகரப் பெருமானையும் அவரது தேவியரையும் திருமேற்கோவிலில் பிரதிஷ்டை செய்ததை பற்றி குறிப்பிடுகிறது. இக்கோவிலின் தினசரி பிரசாதம் மற்றும் பூஜைகளுக்காக தெலுங்கு குலகாலபுரத்தின் 'நகரத்தார்', 5 மா 3 காணி நிலம் வரிவிலக்குடன் தானமாக கொடுத்துள்ளனர். இந்நிலத்தின் எல்லைகள் மற்றும் இந்நிலத்திலிருந்து கோவிலுக்கு வழங்கப்பட வேண்டிய நெல் அளவு பற்றி இக்கல்வெட்டு விரிவாக பேசுகிறது. திருமணத்தின்போது கோவிலுக்கு தானமாக ஆண் வீட்டார் 180 காசும் பெண் வீட்டார் 200 காசும் கொடுக்க வேண்டும் எனவும் மணப்பெண் கணவன் வீட்டிற்கு செல்லும் போது மீண்டும் 120 காசு கோவிலுக்கு அளிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. நிலம், நெல், கலம் போன்றவற்றை குறிக்க குறியீடுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • கல்வெட்டில் காணப்படும் முக்கிய குறிப்புகள்: சோணாடு வழங்கியருளிய ஸ்ரீ சுந்தரபாண்டிய தேவர், இரட்டப்பாடி கொண்ட சோழவள நாட்டு தெலிங்க குலகாலபுரமான குலோத்துங்கசோழ பட்டினத்து, இந்நகரத்து, பதின்எண் பூமி விண்ணகர எம்பெருமானையும், திருப்பொனகத்துக்கு, குடிநீங்கா திருவுடையாட்டமாக, சமையவல்லவர், முக்காணி, இரண்டு மாக்காணி, முருக்கூருடையார், மாவரைக்காணி, இருபத்திரு கலமும், காஞ்சிரங்குடையான், உலகளந்த சோழச்சில செட்டி, நகரத்தார், பொய்யா மொழிச்செட்டி, மனவாண்டார் குடிக்காட்டு குளமும் வயலும், இறைகுடிமை, திருப்பணிக்குடலாக வைத்துக் கொடுத்த பரிசாவது, கண்ணாலத்துக்கு, ஆடு, கிடாயுள், ஆடைக்காசு எண்பது கிடாய் காசு நூறும், பெண் பிள்ளைகள், அணுக்கசிலை செட்டி, மருங்கல நாட்டு, அழகிய பாண்டிய சிலை செட்டி, வல்லநாட்டு, செயங்கொண்ட சிலை செட்டி (கல்வெட்டு எண்: 281).

தொடர்புடைய ஆளுமைகள்

  • நார்த்தாமலை விஷ்ணு குடைவரை கோவில் கல்வெட்டுகளின் வாயிலாக கோவிலைக் கட்டி திருப்பணிகள் செய்தவர்களாக 'நகரத்தார்' என்ற உள்ளாட்சி அமைப்பின் உறுப்பினர்கள் அறியப்படுகின்றனர்.
  • நார்த்தாமலை விஷ்ணு குடைவரை கோவில் பற்றி நவீன காலகட்டத்தில் வரலாற்றாய்வுகளை தொகுத்தவர்கள் எஸ்.ஆர். பாலசுப்ரமண்யம், கே. வெங்கடரங்க ராஜு, கே.ஆர். வெங்கடராம ஐயர் மற்றும் டி. தயாளன்.

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. Narttamali and Its Temples by by S.R. Balasubrahmanyam and K. Venkataranga Raju : Journal of Oriental Research - VII - Page 351 to 358
  2. Narttamali and Its Temples by by S.R. Balasubrahmanyam and K. Venkataranga Raju : Journal of Oriental Research - VII - Page 351 to 358


✅Finalised Page