under review

ஏ.டபிள்யூ.பிரப்

From Tamil Wiki
அந்தோனி பிரப்

To read the article in English: A.W. Brough. ‎

ஏ.டபிள்யூ பிரப் (Anthony Watson Brough ) (1861- 1936) ஈரோட்டில் மதப்பணியும் கல்விப்பணியும் செய்த இங்கிலாந்தைச் சேர்ந்த லண்டன் மிஷன் சபை போதகர்

பிறப்பு, கல்வி

அந்தோணி வாட்ஸன் பிரப் 1861-ல் ஆஸ்திரேலியாவில் எஸ்ஸெக்ஸ் வட்டாரத்தில் லிட்டன்ஸ்டோன் ஊரில் அந்தோனி பிரப் - எம்மா லா இணையருக்கு பிறந்தார்

தனிவாழ்க்கை

அந்தோணி பிரப் ஆஸ்திரேலியா சிட்னியைச் சேர்ந்த ரோஸெட்டா ஜேன் ஜோலி (Rosetta Jane Jolly) மணந்தார். அவர்களுக்கு மூன்று குழந்தைகள். எம்மா மேரி பிரப், சார்ல்ஸ் அந்தோணி பிரப் ,ஹெர்பெர்ட் அந்தோணி பிரப் (ஹெர்பர்ட் முதல் உலகப்போரில் பிரான்ஸில் மறைந்தார்)

ரோசெட்டாவின் மறைவுக்குப்பின் பிரப் 1935-ல் ஜெஸ்ஸி வின்ஃப்ரட் (Jessie Winifred Inglis)ஐ மணந்தார்.

அந்தோனி பிரப் நாட்டிய அடிக்கல்

பொதுவாழ்க்கை

அந்தோனி பிரப் குடும்பம்
ரோஸெட்டா

1894-ல் இந்தியா வந்த முதலில் கோவையிலும் பின்னர் 1897 முதல் 1933 வரை ஈரோட்டிலும் லண்டன் மிஷன் சபையில் போதகராகவும் ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றினார். இவர் போதகர் எச்.ஏ.பாப்லியுடன் இணைந்து 94 பள்ளிகளை ஈரோடு வட்டாரத்தில் தொடங்கினார். ஈரோடு நகரபரிபாலன சபை தலைவராக 1904-ல் பணியாற்றினார்.

1909-ல் ஈரோட்டில் பிளேக் நோய் பரவியபோது வேலூரில் இருந்து டாக்டர் மைகன்ஸி ரீஸ் என்னும் பெண் மருத்துவரை அழைத்துவந்து மக்களுக்கு சிகிச்சை அளித்தார். மிஸ் ஹில்டா போலார்ட் என்னும் டாக்டர் தொடர்ந்து அங்கே மருத்துவப்பணி புரிந்தார். அதுவே ஈரோடு பிரப் சாலையில் அமைந்துள்ள கோஷ் சி.எஸ்.ஐ மருத்துவமனை. அக்டோபர் 28, 1912 அன்று மருத்துவமனைக்கு ஆட்சியர் ஆர்.ஹெமிங்வே அடிக்கல் நாட்டினார். 1917-ல் மருத்துவமனை முழுமை அடைந்தது.1937-ல் மின்சார இணைப்பு வந்தது. 1923-ல் மகப்பேறு பகுதி டபிள்யூ.டி.எம்.க்ளூஸ் ஆல் அமைக்கப்பட்டது 1933-ல் செவிலியர் பயிற்சி பள்ளி அமைக்கப்பட்டது

1927 முதல் 1933 வரை பிரப் தேவாலயம் என இன்று அழைக்கப்படும் தேவாலயத்தை கட்டினார். பிரப்பின் மனைவி ரோஸெட்டா கட்டுமானப் பணி நடைபெறுகையில் மேலிருந்து விழுந்து மறைந்தார். அவருடைய கல்லறை சி.எஸ்.ஐ பிரப் நினைவாலய வளாகத்தில் பராமரிக்கப்பட்டு வருகின்றது. பிரப் முழுமையாக ஆலயத்தினை கட்டிமுடித்தாலும் மனைவியின் நினைவாக ஆலயதின் பிரசங்க மேடை (புல்பிட்) அவர் பெயர் பொருத்தி அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு, கே.கே நகரில் அமைந்துள்ள ‘ரோஸ்ட்டா ஜேன் பிரப் நினைவாலயம்' அவருக்காக அமைக்கப்பட்டது. பிரப் முதல் உலகப்போரில் மறைந்த தன் மகன் ஹெர்பர்ட் நினைவாக சென்னிமலையில் ஒரு மருத்துவமனையை அமைத்தார். ஹெர்பர்ட் நினைவு மருத்துவமனையின் பெயர் பின்னாளி மாற்றப்பட்டது.

கலை ஆர்வலரான பிரப் ஈரோட்டில் இருக்கையில் ஏராளமான கலைப்பொருட்களைச் சேகரித்தார். அவருடைய சேகரிப்புகளில் 33 பொருட்கள் 2000-த்தில் இந்திய அரசுக்கு வழங்கப்பட்டு திரும்ப கொண்டுவரப்பட்டன. அவை எழும்பூர் அருங்கலைக் காட்சியகத்தில் உள்ளன. டபிள்யூ.டி.எம்.க்ளூஸ் இவர் பணிகளை முன்னெடுத்தார்.

பிரப் கட்டிய தேவாலயம் ஈரோடு

மறைவு

பிரப் 1934-ல் ஓய்வுபெற்றார். 1936 ஆஸ்திரேலியாவில் சாமர்செட் பகுதியில் நார்ட்டன் ஊரில் மறைந்தார். வெஸ்ட்பரியில் கான்ஃபோர்ட் இடுகாட்டில் (Canford Cemetery) அடக்கம் செய்யப்பட்டார்.

நினைவு

ஈரோட்டில் பிரப் நினைவாக மையச் சாலை ஒன்றுக்கு பிரப் சாலை என்று பெயரிடப்பட்டிருந்தது. நெடுங்காலம் அவர் நினைவாக புகழ்பெற்றிருந்த இச்சாலையின் பெயர் 12 மார்ச் 2019ல் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியால் மீனாட்சிசுந்தரம் சாலை என்று மாற்றம் செய்யப்பட்டது.

பங்களிப்பு

நவீன ஈரோட்டின் சிற்பிகளில் ஒருவர் பிரப். ஈரோடு மற்றும் சென்னிமலைப் பகுதிகளில் அவர் தொடங்கிய பள்ளிகள் நவீனக் கல்வியின் தொடக்கத்தை அமைத்தவை. ஈரோட்டில் பிரப் சாலை உட்பட இன்றுள்ள மையச்சாலைகள் அமையவும் அவர் முன்னோடி முயற்சிகள் செய்தார். ஈரோடு வட்டாரத்தில் காலரா , அம்மை தொற்றுநோய்களின் போது பிரப் தலைமையில் அவருடைய மதக்குழுவினர் அர்ப்பணிப்புள்ள பெரும்பணி ஆற்றியிருக்கின்றனர். நெடுங்காலம் அதன்பொருட்டு நாட்டார் வாய்மொழி மரபுகளில் போற்றப்பட்டும் உள்ளனர்.

உசாத்துணை

Erode museum to host exhibition on A.W. Brough - The Hindu ]


✅Finalised Page