தொல்காப்பியர் காலம்
தொல்காப்பியர் காலம்: தொல்காப்பியரின் காலம் பற்றி தமிழ் இலக்கியச்சூழலில் தொடர் விவாதங்கள் நிகழ்ந்தபடி உள்ளன. தொல்காப்பியத்திற்கு பானம்பாரனார் எழுதிய சிறப்புப் பாயிரம் தவிர அந்நூலின் ஆசிரியர், அதன் வரலாறு சார்ந்த செய்திகள் ஏதுமில்லை. பானம்பாரனார் தொல்காப்பியரின் உடன் பயின்ற மாணவர் என்று கதைகள் சொல்கின்றன. ஆனால் இவை அனைத்துமே நூலாதாரம் இல்லாத கூற்றுகள்தான். பானம்பாரனார் பற்றியும் தெளிவான செய்திகள் ஏதுமில்லை.
தொல்காப்பியத்தின் காலத்தை கணிக்க அகச்சான்றுகள் மட்டுமே உள்ளன. இந்தியாவின் பிற இலக்கியங்களுடன் ஒப்பிட்டும், பழந்தமிழிலக்கியங்களின் சொல்லாட்சிகள் மற்றும் பேசுபொருட்களுடன் ஒப்பிட்டும் ஊகங்கள் செய்யப்படுகின்றன. இந்த ஊகங்களுக்கு பின்னணியில் அரசியல்நோக்கங்கள் உள்ளன. தங்கள் தொன்மையை பிற பண்பாடுகளுக்கும் முன்னர் கொண்டு செல்லும் திட்டத்துடன் செய்யப்பட்ட கணிப்புகள் உள்ளன. இக்காலக்கணிப்புகள் நிகழ்ந்த தொடக்க காலகட்டத்தில் வரலாற்றாய்வும் தொல்லியல் ஆய்வும் தொடக்கநிலையில் இருந்தன. ஆகவே காலக்கணிப்புகள் மிகத்தொன்மையான காலத்துக்குக்கூட செல்கின்றன. கீழ்க்கண்டவை புகழ்பெற்ற காலக்கணிப்புகள். இவற்றை மூன்று பிரிவுகளாக பிரிக்கலாம்
மிகத்தொல்காலம்
- க. வெள்ளை வாரணர் பொ.மு. 5320
- மறைமலையடிகள் பொ.மு. 3500
- கா.சுப்ரமணிய பிள்ளை பொ.மு. 2000
- ச. சோ. பாரதியார் பொ.மு. 1000
- க. நெடுஞ்செழியன் பொ.மு. 1400
- மா. கந்தசாமி பொ.மு. 1400
- ஞா. தேவநேயப் பாவாணர் பொ.மு. 700
- இரா. இளங்குமரனார் பொ.மு. 700
பொதுயுகத்திற்கு முந்தைய காலம்
- கே. கே. பிள்ளை: பொ.மு. 4-ஆம் நூற்றாண்டு
- மு. வரதராசனார்: பொ.மு. 5-ஆம் நூற்றாண்டு
- கே.ஜி. சங்கரையர்: பொ.மு. 3-ஆம் நூற்றாண்டு
- ரா.ராகவையங்கார்: பொ.மு.145-ஆம் நூற்றாண்டு
பொதுயுகத்துக்குப்பின்
- பி.டி.சீனிவாசையங்கார்: பொ.யு.1-ஆம் நூற்றாண்டு
- தெ.பொ.மீனாட்சிசுந்தரம் பிள்ளை: பொ.யு. 2-ம் நூற்றாண்டு
- பெரிடேல் கீத்: பொ.யு. 4-ஆம் நூற்றாண்டு
- எஸ். வையாபுரிப் பிள்ளை: பொ.யு. 4 அல்லது 5-ஆம் நூற்றாண்டு
- கே.ஏ.நீலகண்ட சாஸ்திரி: பொ.யு. 5-ஆம் நூற்றாண்டு
- கே.என். சிவராஜ பிள்ளை: பொ.யு. 6-ஆம் நூற்றாண்டு
இம்முடிவுகள் ஆய்வாளர்களின் பார்வையை ஒட்டி மாறுபடுகின்றன. சங்ககாலம் என அழைக்கப்படும் பொ.மு. 2 முதல் பொ.யு. 2 வரையிலான காலகட்டத்தில் தொல்காப்பியம் தோன்றியிருக்கலாம் என்பதே பொதுவாக பொருந்திவரும் முடிவு
உசாத்துணை
- பா. இளமாறன் (ஜெய்கணேஷ்): அறியப்பட வேண்டிய அரிய ஆவணங்கள் : தொல்காப்பிய முதல் முழுமைப்பதிப்பு (இ. சாமுவேல்பிள்ளை - 1858)
- தொல்காப்பியத்தின் காலம் - New Indian-Chennai News & More
🖒 First review completed
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.