standardised

பொ.திரிகூடசுந்தரம்

From Tamil Wiki
Revision as of 16:05, 18 April 2022 by Manobharathi (talk | contribs)
பொ.திரிகூடசுந்தரம்

பொ. திருகூடசுந்தரம் (1881-1969) இந்திய விடுதலைப் போராட்ட வீரர், தமிழ் எழுத்தாளர், வழக்கறிஞர், இதழாளர். வ.வே.சு.ஐயருடன் இணைந்து செயல்பட்டவர்.

பிறப்பு,கல்வி

பொ. திருகூடசுந்தரம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் (அன்றைய திருநெல்வேலி மாவட்டம்) ஸ்ரீவைகுண்டத்தில் பொன்னம்பலம் பிள்ளை – சொர்ணாம்பாள் இணையருக்கு 1891-ஆம் ஆண்டில் பிறந்தார். ஸ்ரீவைகுண்டத்திலேயே தொடக்கக்கல்வியும் திருநெல்வேலியில் பள்ளியிறுதியும் முடித்தார். திருநெல்வேலி ம.தி.தா இந்துக்கல்லூரியில் பி.ஏ பட்டம் பெற்ற பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் (Presidency College) எம்.ஏ படிப்பில் சென்னை பல்கலைக்கழகத்தின் தங்கப்பதக்கம் பெற்றார். சென்னை சட்டக் கல்லூரியில் பி.எல் பட்டம் பெற்றார்.

தனிவாழ்க்கை

பொ.திரிகூடசுந்தரம் கமலம் அம்மையாரை திருநெல்வேலி சிந்துபூந்துறையில் 1931, அக்டோபரில் சாதிமறுப்புத் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு பொன்னம்பலம் என்னும் மகனும் சொர்ணாம்பாள் என்னும் மகளும் பிறந்தனர்.

அரசியல்வாழ்க்கை

திருகூடசுந்தரம் திருநெல்வேலியில் வழக்கறிஞர் தொழில்புரிந்தார். 1921-ஆம் ஆண்டில் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபடுவதற்காக வழக்கறிஞர் தொழிலைக் கைவிட்டார். 1939-ஆம் ஆண்டில் வேதாரண்யத்தில் நடந்த உப்புச்சத்தியாகிரகத்தில் கலந்துகொண்டு சிறைசென்றார். திருநெல்வேலி மாவட்டத்திலும் இராமநாதபுரம் மாவட்டத்திலும் காந்திய இயக்கத்தை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டார். செட்டிநாட்டு இளைஞர்களைத் திரட்டி அப்பகுதியில் உள்ள ஊர்களை தூய்மைப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டார். அப்பணியைப் பாராட்டி குமரன் இதழின் ஆசிரியர் சொ. முருகப்பா, தோட்டி மகாத்மா என திருகூடசுந்தரத்தைப் புகழ்ந்து கட்டுரை எழுதினார். அந்தப்பணி உருவாக்கிய கேலிகளில் ஊழியன் இதழில் திருகூடசுந்தரம் எழுதினார். காந்தியின் அறைகூவலை ஏற்று, திருகூடசுந்தரமும் சாதிகடந்து திருமணம் செய்துகொண்டார். நாகர்கோவிலில் இவரும் இவர்தம் மனைவியாரும் தங்கி அப்பகுதியில் உள்ள கோயில்களில் தாழ்த்தப்பட்டவர்களின் ஆலய நுழைவுப் போராட்டங்களை நடத்தினர்.

பொறுப்புகள்

  • திருநெல்வேலி நகர சபையில் உறுப்பினர்.
  • தேவகோட்டை நகரசபையில் துணைத் தலைவர்.
  • சென்னைப் பல்கலைக் கழகத்தின் செனட் அவை உறுப்பினர்.
  • சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்ட தமிழ்க் கலைக் களஞ்சியத்தின் கூட்டாசிரியர்.

இதழியல்

காந்தி நடத்திய ஹரிஜன் இதழின் தமிழ்ப் பதிப்பான தமிழ் ஹரிஜன் என்னும் இதழுக்கு இவரும் நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளையும் ஆசிரியர்களாக இருந்தனர்.1946 முதல் 1948 வரை இவ்விதழ் வெளிவந்தது.

இலக்கிய வாழ்க்கை

திரிகூடசுந்தரம் பொதுவாக இதழியல்சார்ந்த எழுத்தையே எழுதியிருக்கிறார். பல்வேறு பொதுத்தலைப்புகளில் எழுதிய கட்டுரைகள் நூல்வடிவம் பெற்றன. நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை எழுதிய இலக்கிய இன்பம் என்னும் நூலுக்கு முன்னுரை எழுதினார்.காரைக்குடியில் இருந்து வெளிவந்த ஊழியன், குமரன் இதழ்களிலும் ,சுத்தானந்த பாரதியின் உதவியோடு வ.வே. சுப்ரமணிய ஐயர் நடத்திய பாலபாரதி இதழிலும் சுதேசமித்திரன் இதழிலும் எழுதி வந்தார். இந்தியா விடுதலைபெற்ற பின்னர், தமிழக அரசு தமிழில் கலைக்களஞ்சியத் தொகுதிகளை உருவாக்கும் பணியில் ஈடுபட்டபோது அதன் ஆசிரியராக பெரியசாமி தூரன் பொறுப்பேற்றார். திருகூடசுந்தரம் துணைப் பொறுப்பாசிரியராக இருந்தார்.

மறைவு

திருகூடசுந்தரம் தான் வாழ்ந்த சென்னை, தியாகராய நகர், கோவிந்து தெரு வீட்டில் 1969-ஆம் ஆண்டு மறைந்தார்.

நூல்கள்

1946-ஆம் ஆண்டில் வெளிவந்த அப்பாவும் மகனும் என்னும் நூலில் இவர் பத்து நூல்களை சொந்தமாக எழுதவும் பத்து நூல்களை மொழிபெயர்க்கவும் செய்திருக்கிறார் எனக் குறிப்பிடப்பட்டு உள்ளது. அவற்றுள் அறிய வந்துள்ள நூல்கள் வருமாறு:

  • விவாகமானவர்களுக்கு ஒரு யோசனை (1915)
  • குழந்தைகள் கேள்வியும் பதிலும் (1915)
  • அப்பாவும் மகனும் (1946)
  • தந்தையும் மகளும் (1946)
  • அண்ணனும் தங்கையும் (1946)
  • குழந்தை எப்படி பிறக்கிறது? (1946)
  • ஜவகர் கதை
  • விஞ்ஞானப் பெரியோர்கள்
  • எனது பூங்கா
  • இதய உணர்ச்சி
  • மந்தரை சூழ்ச்சி
  • அழியாச்செல்வம்
  • அமுத மொழி
  • அணையா விளக்கு
  • தாசியின் காதல்
  • பொழுது புலர்ந்தது
  • இனியசுவைகள்
  • பாஞ்சாலி சபதம்
  • சிலப்பதிகார சிந்தனை
  • சங்ககால வீரம்
  • மாதவியின் மாண்பு
  • ஆபரேஷனுக்கு அஞ்சவேண்டாம்
  • கொக்கோக விளக்கம்
  • அறிவுக்கனிகள்
  • விஞ்ஞானம் எதற்கு?
  • போரும் அமைதியும்
  • காந்திவழி
  • சத்யாக்கிரகம்
  • ஆங்கிலக் கவிதைமலர்கள்
  • பாபுஜி காட்டும் பாதை

உசாத்துணை



⨮ Standardised


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.