under review

கு. சிவராமன்

From Tamil Wiki
Revision as of 13:49, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)

To read the article in English: Ku. Sivaraman. ‎

கு.சிவராமன்
கு.சிவராமன்
கு.சிவராமன், தாயுடன்

கு. சிவராமன் (பிறப்பு : ஏப்ரல் 30, 1970) தமிழகத்தில் புகழ்பெற்ற சித்த மருத்துவர். மாற்று மருத்துவம் மற்றும் மாற்று உணவுமுறை பற்றிய விழிப்புணர்வை உருவாக்கும் எழுத்தாளர்.

பிறப்பு, இளமை

கு. சிவராமன் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் ஏப்ரல் 30, 1970 அன்று பிறந்தார். பெற்றோர் சிவ. குருசாமி சே. வேலம்மாள். ஆரம்பப் பள்ளியை. சங்கரன்கோயில் கிராம சேனை பள்ளியிலும் பாளையங்கோட்டை செர்வைட் கான்வெண்டிலும் படித்தார். உயர்நிலைக்கல்வி தூய சவேரியார் மேல்நிலைப் பள்ளி. சித்தமருத்துவத்தில் இளங்கலைப் படிப்பை(BSMS) அரசு சித்த மருத்துவக்கல்லூரி, பாளையங்கோட்டையில் முடித்தார். தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஜெகதீசனின் வழிகாட்டலில் முனைவர் பட்டம்பெற்றார்

தனிவாழ்க்கை

சிவராமன் கு. இராசலட்சுமியை மே 19, 1995-ல் மணந்தார். சி. அர்ச்சனா, சி. மாதவ் ஆதித்யா என இரண்டு குழந்தைகள். மருத்துவம் செய்வதோடு சித்த மருத்துவப் பயிற்சியும் அளிக்கிறார்.

மருத்துவப் பணிகள்

கு. சிவராமன் சித்த மருத்துவத்தை நவீன அறிவியல்பார்வையுடன் அணுகுபவர். மிகைப்படுத்தாமலும் எளிமைப்படுத்தாமலும் சித்தமருத்துவத்தை ஆராய்ந்து அதன் பெறுமதியை விளக்கி வருகிறார். நவீன கால நோய்களில் பெரும்பாலானவை வாழ்க்கைமுறை சார்ந்தவை என்பதனால் உடலின் சக்தியை அதிகரித்து சிகிச்சை அளிக்கும் சித்தமருத்துவம் பெரிதும் பயனளிப்பது என்று கருதுகிறார். மருத்துவர், மருத்துவ ஆய்வாளர், மருத்துவ பயிற்றுநர் என பல தளங்களில் பணியாற்றி வருகிறார்

மருத்துவப் பணியில் பொறுப்புகள்
  • 2001 முதல் 2010 வரை 'ஹெல்த் இந்தியா' என்ற தன்னாார்வ அமைப்பின் இணை இயக்குநராக செயல்பட்டார்.
  • 2010 முதல் சென்னை ஆரோக்கியா சித்த மருத்துவமனையின் தலைமை மருத்துவராக உள்ளார்.
  • 2020 ஏப்ரலில் தமிழக அரசு கொரானா நோய்த் தடுப்புப் பணிக்காக நியமித்த நோய்தடுப்புக் குழுவின் 25 உறுப்பினர்களுள் இவரும் ஒருவர்.

எழுத்துப் பணிகள்

கு. சிவராமனின் முதல் படைப்பு டிசம்பர் 22, 1991-ல் எழுதி ஆனந்த விகடனில் வெளிவந்த சிவா 'மணிபாரதி' என்னும் சிறுகதை. சுஜாதா, பாலகுமாரன், வண்ணதாசன் போன்றவர்களை தன் முன்னோடிகளாகக் கொள்கிறார். தமிழன் எக்ஸ்பிரஸ் இதழில் எழுதிய ’வாங்க வாழலாம்’ என்னும் தொடர் சிவராமனை பரவலாக அறிமுகப்படுத்தியது. ஆனந்த விகடனில் தொடராக வந்த 'ஆறாம் திணை' என்னும் தொடர் அவரை புகழ்பெறச் செய்தது. சித்த மருத்துவத்தின் வாழ்க்கைநெறிகளையும் அடிப்படை மருத்துவக்கொள்கைகளையும் இன்றியமையாத அன்றாட மருந்துகளையும் மக்களிடையே பரவச் செய்யும் நோக்கம் கொண்ட கட்டுரைகள் இவை.

விருதுகள்

  • 2004 - தமிழக அரசின் சிறந்த புத்தக்திற்கான விருது (வாங்க வாழலாம் புத்தகம்)
  • 2010 - எழுத்தாளர் சுஜாதா சிற்றிதழ் விருது, உயிர்மை - சுஜாதா அறக்கட்டளை
  • 2012 - சிறந்த மருத்துவர் விருது, தமிழ்நாடு டாக்டர் எம். ஜி. ஆர் மருத்துவ பல்கலைகழகம்
  • 2013 - சிறந்த எழுத்தாளர் விருது, சமூக மாற்றம் மற்றும் வளர்ச்சிக்கான பத்திரிக்கையாளர் சங்கம்
  • 2014 - தமிழகத்தின் சிறந்த பத்து மனிதர்கள் விருது, ஆனந்த விகடன் குழுமம்

பங்களிப்பு

கு. சிவராமன் சித்தமருத்துவத்தை நோய்களுக்கான மருத்துவமுறை என்னும் நிலையில் இருந்து நவீனச்சூழலுக்குரிய வாழ்க்கைமுறையை முன்வைக்கும் நலவாழ்வுக்கொள்கையாகவும் விரிவாக்கியவர் என மதிப்பிடப்படுகிறார். சித்தமருத்துவத்தை மீண்டும் மக்களிடையே பரப்பியதில் அவருடைய எழுத்தும் பேச்சுக்களும் முக்கியமான பங்களிப்பை ஆற்றின. சித்தமருத்துவத்தை அதைச்சார்ந்த மிகைநம்பிக்கைகளில் இருந்து விடுவித்து ஓர் அறிவியலாக முன்வைத்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்.

நூல்கள்

  • சித்த மருத்துவ தாவரங்களின் ஆண்டிமைக்ரோபியல் செயல்பாடு - 1995 (ஆங்கில நூல்)
  • வாங்க வாழலாம் - தமிழன் எக்ஸ்பிரஸ் என்ற பிரபலமான தமிழ் இதழில் எழுதப்பட்ட மருத்துவக்கட்டுரைகளின் தொகுப்பு - 2003
  • வேனிற் காலத்தில் வேண்டும் வழக்கங்கள் - ஆரோக்கியமான வாழ்க்கை நடைமுறைகளின் தொகுப்பு
  • அழகும் ஆரோக்கியமும்- தமிழ் புத்தகம் - 2009
  • ஏழாம் சுவை - மருத்துவச் செயல்பாட்டு மரபு உணவுகள் பற்றிய தமிழ் புத்தகம் - 2010
  • எது சிறந்த உணவு - உணவுகள் பற்றிய தமிழ் புத்தகம் - 2011
  • "மருந்தென வேண்டாவாம்" - ஆரோக்கியமான வாழ்க்கை குறித்த தமிழ் புத்தகம் - 2012
  • நறுமணமூட்டிகள் - மணமூட்டிகள் பற்றிய தமிழ் புத்தகம்- 2013
  • ஆறாம் திணை - தொகுதி - I (சென்னை புத்தக கண்காட்சி 2014 - சிறந்த மற்றும் நம்பர் 1 விற்பனையாளர்- மிகவும் பிரபலமான தமிழ் வார இதழான ஆனந்த விகடனின் வெளியான கட்டுரைகள்) – 2013
  • ஆறாம் திணை- தொகுதி - II – 2013
  • நலம் 360 - தமிழ் புத்தகம் – 2014
  • சுற்றமும் சூழலும் - நட்பும் - தமிழ் புத்தகம்- உடல்நலம் மற்றும் சுற்றுச்சூழல் பற்றி எழுதப்பட்டகட்டுரைகளின் தொகுப்பு – 2014
  • அஞ்சறை பெட்டியும் அறுசுவையும்- மக்கள் சார்ந்த மருத்துவத்திற்கான நாட்டுப்புற மற்றும் சித்தமருத்துவ சமையல் – 2015
  • நாட்டு மருந்து கடை- சில பொதுவான சித்த மூலிகைகள் பற்றிய தமிழ் விளக்க புத்தகம் – 2016
  • உயிர்பிழை- புற்றுநோயைப் பற்றிய முதல் தமிழ் புத்தகம் - தடுப்பு, மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்தமருத்துவ முயற்சி - 2016
  • நல்லுணவும் நலவாழ்வும் - 2017
  • உயிர் மெய் - கருவுறுதல் மற்றும் கருவுறாமை சிகிச்சையின் மருத்துவ, உடலியல் மற்றும் சமூகஅம்சங்களைப் பற்றிய பிரபலமான தொடர் - 2017
  • இன்னா நாற்பது - 2019
பயணக்கட்டுரை
  • அங்கொரு நிலம் அதிலொரு வானம் - 2022, பயணக்கட்டுரைகள்
கவிதை
  • கடைசி கூர்வரை எழுத முடியாத பென்சில் - 2022, கவிதை நூல்

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 15-Nov-2022, 13:32:21 IST