under review

தந்திர பூமி

From Tamil Wiki
Revision as of 12:04, 13 June 2024 by Tamilwiki Bot 1 (talk | contribs) (Added First published date)
(diff) ← Older revision | Latest revision (diff) | Newer revision → (diff)
தந்திரபூமி

தந்திர பூமி (1967) இந்திரா பார்த்தசாரதி எழுதிய நாவல். இந்நாவல் டெல்லியையும் அதன் அதிகார வர்க்கத்தையும் கதைக்களமாகக் கொண்டது. டெல்லியின் அரசியல்சூழ்ச்சிகளையும் ஒழுக்கச்சிதைவுகளையும் விமர்சிக்கும் பகடித்தன்மை கொண்ட படைப்பு.

எழுத்து, வெளியீடு

இந்திரா பார்த்தசாரதி 1967-ல் தீபம் மாத இதழில் இந்நாவலை தொடராக எழுதினார். இது இந்திரா பார்த்தசாரதி எழுதிய முதல் நாவல்.1969-ல் தமிழ்ப்புத்தகாலயம் இதை நூலாக வெளியிட்டது. இந்நாவலுக்கு சுஜாதா முன்னுரை எழுதியிருந்தார். இதன் வெளியீடு பற்றி இந்திரா பார்த்தசாரதி இவ்வாறு சொல்கிறார். 1967-ல் தீபம் மாத இதழ் தொடங்கிய காலகட்டத்தில் டெல்லி வந்திருந்த நா. பார்த்தசாரதி அவர் டெல்லியை களமாக்கி தந்திர பூமி என ஒரு நாவல் எழுத திட்டமிட்டே வந்ததாகவும் ஆனால் அதை எழுத அவரால் இயலாது என்றும் இந்திரா பார்த்தசாரதியே அதை எழுதவேண்டும் என்றும் கோரினார். இந்திரா பார்த்தசாரதி தயங்கினாலும் நா.பா தீபம் இதழில் இந்திரா பார்த்தசாரதியின் நாவல் வெளிவரவிருப்பதாக விளம்பரம் கொடுத்தார். தீபம் அலுவலகத்திற்குச் சென்ற இந்திரா பார்த்தசாரதி அங்கு வைத்து முதல் அத்தியாயத்தை எழுதினார்.

பின்புலம்

இந்நாவல் 1964-ல் ஜவகர்லால் நேருவின் மறைவுக்குப்பின் டெல்லியில் உருவான புதியவகை அரசியல்சூழலை களமாகக் கொண்டது. காங்கிரஸின் பிளவும், அதையொட்டிய அரசியல்சூழ்ச்சிகளும், இந்திராகாந்தி பதவிக்கு வந்ததும், அந்த அரசியலில் வெவ்வேறு தொழிலதிபர்கள் பங்குவகித்ததும் டெல்லி அரசியலில் இருந்த இலட்சியவாத அம்சத்தை இல்லாமலாக்கின. 1965-க்குப் பின் இந்திய அரசியலொழுக்கம் பெரும் சரிவைச் சந்தித்தது. அந்தச் சரிவையே இந்நாவலில் இந்திரா பார்த்தசாரதி பேசுபொருளாகக் கொண்டிருக்கிறார்.

கதைச்சுருக்கம்

நியூடெல்லியில் பாட்டர்சன் கம்பெனியில் மக்கள்தொடர்பு அதிகாரியாக கஸ்தூரி பொறுப்பேற்று அதிகாரத்தின் நுட்பங்களை கற்று பதவியில் மேலேறுகிறான். மீனாவுடன் அவனுக்கு பாலுறவு உருவாகிறது. அனைவரிடமும் அவன் எச்சரிக்கையான தொலைவை கடைப்பிடிக்கிறான். அதிகார வர்க்கத்தின் ஊழல்களை திறம்பட பயன்படுத்திக் கொள்கிறான். ஒரு கட்டத்தில் வெற்றியின் போதையில் திளைக்கும் கஸ்தூரியை விட்டு மீனா விலக அவன் வேலையை உதறுகிறான். ஹிப்பிகளின் வாழ்க்கையில் ஊடுருவி ஓர் அதீத நிலையை அடைந்து தன்னைப்பற்றிய ஒரு பிரக்ஞையை அடைகிறான். மீண்டும் மீனாவை தேடிச்செல்கிறான். உச்சத்திலிருந்தபோது நட்சத்திர அந்தஸ்து பெற்ற உல்லாச ஹோட்டல்களில் தங்கி உயர்ந்தரக விருந்துண்ட அவன்இறுதியில் மீனாவிடம் வந்து உணவு கேட்கிறான். அங்கே தரையில் அயல்வீட்டுக்குழந்தை ஒன்று எந்தக் கவலையுமற்று ஆனந்தமாகஉறங்கிக்கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் தானும்அப்படிக் குழந்தையாகத்தானே இருந்திருப்பேன் எனஅவன் நினைக்கையில் நாவல் முடிகிறது.

இலக்கிய இடம்

இந்திரா பார்த்தசாரதியின் சிறந்த படைப்பு என இது விமர்சகர்களால் கருதப்படுகிறது. அறுபதுகளில் தொடங்கிய அரசியல் அறவீழ்ச்சி தனிமனித ஒழுக்கச் சீரழிவாக ஆகி இருத்தலியல் சிக்கலாக உருமாறி ஓர் உச்சநிலையை அடைவதை இந்நாவல் கூரிய பகடி வழியாகச் சித்தரிக்கிறது. தமிழில் பெருநகர் வாழ்க்கையையும், உயர்மட்ட வாழ்க்கையையும் சித்தரித்த முன்னோடி படைப்பு இது. பின்னர் ஆதவன், சுஜாதா போன்றவர்கள் இந்த வகையில் தொடர்ந்து எழுதினர்.

உசாத்துணை



✅Finalised Page


முதலில் வெளியிடப்பட்ட தேதி: 29-Nov-2022, 11:03:18 IST