புருஷன்

From Tamil Wiki

புருஷன் (புருடன்) இயற்கையின் பிரக்ஞைநிலை. இயற்கையின் உள்ளுறைந்துள்ள தன்னிலை. பிரகிருதியின் மறுநிலையாக அமைபவன். பிரகிருதி என்னும் இயற்கையை அறிபவன். அதன் வழியாக இயற்கையில் குணங்களை உருவாக்குபவன். இயற்கையை இயக்கம் கொள்ளச் செய்பவன். சாங்கியதரிசனம் புருஷன் என்னும் கருத்துருவை உருவாக்கியது. வேதாந்தம் உட்பட பிற தரிசனங்கள் அதை விரிவாக்கம் செய்துகொண்டன.

சொற்பொருள்

தொன்மையான சம்ஸ்கிருத அகராதியான யாஸ்கரின் நிருக்தம் புருஷ என்னும் சொல்லை புரு என்னும் வேர் கொண்டதாக வரையறை செய்கிறது. புரு என்றால் இருப்பது. புர என்றால் இருக்கும் இடம். புருஷ என்னும் சொல்லுக்கு உறைவது, இருந்துகொண்டிருப்பது, இருப்பை உணர்வது என்று பொருள்.

தோற்றுவாய்

புருஷன் என்னும் உருவகத்தின் தோற்றுவாய் கற்காலத்தைய நீத்தோர் வழிபாடு, மூத்தோர் வழிபாடு, உடல் வழிபாடு போன்ற தொடக்கநிலையில் இருந்தே உருவாகி வருவது. புதிய கற்காலம் மற்றும் பெருங்கற்கால பாறைக்குடைவு ஓவியங்களில் மிகப்பெரிய மானுட உருவங்கள் வரையப்பட்டுள்ளன. படுத்திருப்பதுபோலவோ நிற்பதுபோலவோ. சில ஓவியங்களில் அவை வான்முகில்களையோ மலைகளையோ சுமந்துகொண்டிருப்பதுபோல் வரையப்பட்டுள்ளன. அந்த மானுட உடல்களின் உள்ளே பல்வேறு விலங்குகளின் உருவங்கள் வரையப்பட்டுள்ளன.

இந்த உருவங்களுக்கு பலவகையான விளக்கங்கள் உள்ளன. ஒரு விளக்கம்., உயிர்நீத்த பெருந்தந்தைகள் அல்லது தலைவர்கள் அவ்வாறு வரையப்பட்டிருக்கலாம். அவர்களுக்காகவே நெடுங்கற்கள் நாட்டப்பட்டிருக்கின்றன. அவர்களை ஒரு சமூகமாக, ஒரு தொகையுருவமாக பார்ப்பதையே அந்த ஓவியங்களுக்குள் உள்ள உருவங்கள் காட்டுகின்றன. விலங்குகள் உள்ளிட்ட இயற்கையின் வடிவமாகவே அவர்கள் உருவகிக்கப்பட்டனர். இரண்டாவது விளக்கம், மனிதர்களை தெய்வசக்திகளுக்குப் பலிகொடுக்கும் வழக்கம் தொன்றுதொட்டே இருந்தது என பழங்குடிச் சடங்குகள் காட்டுகின்றன. அப்படிப் பலிகொடுக்கப்பட்டவர்கள் பல்வேறு பலிவிலங்குகளுக்கு நிகரானவர்கள். அவர்களின் உருவங்கள் அப்படிச் செதுக்கப்பட்டிருக்கலாம்.

உலகமெங்கும், மானுடனை, மானுட உடலை தெய்வ வடிவமாக வழிபடும் வழக்கம் உள்ளது. மானுட உடலை இயற்கையாகவும், பூமியாகவும் உருவகம் செய்துகொண்டிருந்தார்கள். இந்திய நிலத்தில் இருந்த அந்த உருவகங்களே பின்னர் புருஷன் என்னும் கருத்துருவமாக ஆயின.

வேதங்களில் புருஷன்

புருஷன் என்னும் உருவகம் முதன்முதலாக ரிக்வேதத்தில் கிடைக்கிறது. ரிக்வேதத்தில் சாதாரணமாக மனிதன் என்னும் பொருளிலும் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. மனித உடல் என்னும் பொருளிலும், மனித உடலுக்குள் உறையும் தன்னுணர்வு என்னும் பொருளிலும் பின்னர் பயன்படுத்தப்பட்டது. மெல்ல மெல்ல அவ்வுருவகம் அனைத்து மனிதர்களையும் இணைத்துக் கொண்ட ஒற்றை மனித உருவமாக வளர்வதை வேதங்கள் காட்டுகின்றன. கணம் அல்லது வேதகாலச் சமூகத்தின் அடையாளமாக ஒற்றைமனிதனை உருவகித்து அவனை புருஷன் என்றனர். பின்னர் பிரபஞ்சமனிதன் ஒருவனின் உருவகம் உருவாகி வந்தது. ரிக்வேதத்தின் இறுதியில், புருஷ சூக்தம் என்னும் பாடலில் இந்த பிரபஞ்சமானுடன் என்னும் புருஷ உருவகம் முழுமையடைந்தது.

புருஷசூக்தம்

வேதங்களில் உள்ள புருஷசூக்தம் (ரிக்வேதம் 10 - 90) பிரபஞ்ச மனிதன் ஒருவனை உருவகிப்பது. படைப்புக்கு முந்தைய, படைப்புக்குக் காரணமான, படைக்கப்பட்ட பிரபஞ்சமாகவும் நீடிக்கும் ஒரு மானுடப்பேருவவம் இப்பாடலில் வருகிறது. தொன்மையான பல கவித்துவ உருவகங்கள் பின்னிப்பிணைந்த இப்பாடல் பல்வேறு குறியீட்டுப்பொருட்களும் மறைஞான உள்ளடக்கமும் கொண்டதாகக் கருதப்படுகிறது ( பார்க்க புருஷ சூக்தம்)

ஆத்மசூக்தம்

வேதங்கள் கூறும் தொன்மையான ஆதிபுருஷனாக அல்லது கடவுளுருவாக தன்னை உருவகித்துக்கொள்ளும் வேதமந்திரம் இது. இதை பின்னர் வைகானஸ மரபு இறைச்சக்தியை ஒரு பூசகர் தன்னுள் வரவழைத்துக்கொள்ளும் சடங்குக்குப் பயன்படுத்திக் கொண்டது ( ஆத்ம சூக்தம்)

இருபறவைகள்

இணைப்பறவைகள் ஒரு மரக்கிளையில் அமர்ந்துள்ளன, ஒன்று பழம் உண்கிறது, இன்னொன்று பார்த்திருக்கிறது என்னும் உவமை ரிக்வேதத்தில் வருகிறது. இது புருஷனின் இயல்பைச் சொல்லும் உருவகமாக பின்னர் தைத்ரிய உபநிடதம் போன்றவற்றில் விரிவாக்கம் செய்யப்பட்டது. புருஷன் இயற்கையின் நுகர்வோன் (ஃபோக்தா) ஆகவும் வெறும் சாட்சியாகவும் ஒரே சமயம் திகழ்கிறான். (ரிக்வேதம் 1.164.20 )

உசாத்துணை

புருஷா: சொற்பொருள் Nathas Tradition