under review

மறம் (யாப்பியல்)

From Tamil Wiki
Revision as of 09:40, 10 June 2024 by Logamadevi (talk | contribs)

மறம் கலம்பகத்தின் பதினெட்டு உறுப்புகளில் ஒன்று. மறக்குல மகளை ஒரு மன்னன் மணக்க வேண்டி தூதன் ஒருவனை அனுப்ப அத் திருமுகத்தை(தூது ஓலை) கொண்டு வந்த தூதனை, அம்மறச் சாதியின் தலைவன் சினந்து கூறுவது.

இலக்கணம்

மறம் தொல்காப்பியம் கூறும் புறத்துறை சார்ந்த உறுப்பு. மறம் என்றால் வீரம் என்று பொருள். புறத்துறைகளில் ஒன்று 'மகள் மறுத்து மொழிதல்'. மறவர் குலத்தில் பிறந்தவள் ஒரு பெண். அவளைத் திருமணம் செய்ய வேண்டும் என்று ஒரு மன்னன் விரும்புகின்றான். எனவே, மறவர்களிடம் ஒரு தூதுவனை அனுப்புகிறான். தூதுவன் மறவர்களிடம் சென்று மன்னன் கூறிய செய்தியைக் கூறுகின்றான். அதனைக் கேட்ட மறவர்கள் அந்தத் தூதுவனிடம் தங்கள் வீரத்தைச் சிறப்பித்தும், தூது அனுப்பிய மன்னனின் வீரத்தை இகழ்ந்தும் கூறுகின்றனர். இறுதியில் மன்னனுக்குத் தம் குலத்துப் பெண்ணைத் திருமணம் செய்து கொடுக்க மறுக்கின்றனர். இதுவே மகள் மறுத்து மொழிதல் என்ற துறையின் பொருள். மறவர்கள் தம் மறப் பண்பை அதாவது வீரத்தைப் புகழ்ந்து கூறுவதே மறம் என்ற கலம்பக உறுப்பு.

மறவர்களின் குடிப்பெருமையயும், மன்னனுக்கு அஞ்சாத தன்மையையும் மறம் என்னும் இவ்வுறுப்பு கூறுகிறது.

உதாரணப் பாடல்கள்

நந்திக் கலம்பகம்

அம்பொன்று வில்லொடிதல் நாணறுதல்
    நான்கிழவன் அசைந்தேன் என்றோ
வம்பு ஒன்று குழலாளை மணம் பேசி
    வரவிடுத்தார் மன்னர் தூதர்
செம் பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றில்
    நந்திபதம் சேரார் ஆனைக்
கொம்பு அன்றோ நம் குடிலில் குறுங்காலும்
    நெடுவளையும் குனிந்து பாரே

                   (நந்.கலம்பகம் - 82)

திருவரங்கக் கலம்பகம்

கொற்றவன்தன் திருமுகத்தைக் கொணர்ந்த தூத
குறைஉடலுக்கோ மறவர் கொம்பைக் கேட்டாய்?
அற்றவர்சேர் திருஅரங்கப் பெருமாள் தோழன்
அவதரித்த திருக்குலம் என்றுஅறியாய் போலும்
மற்றதுதான் திருமுகமாய் ஆனால், அந்த
வாய்செவிகண் மூக்குஎங்கே? மன்னர் மன்னன்
பெற்றஇளவரசு ஆனால், ஆலின் கொம்பைப்
பிறந்த குலத்தினுக்கு ஏற்பப் பேசுவாயே

மதுரைக் கலம்பகம்

தருமுகத்து நிமிர்குடுமி மாடமலி கூடல்
சவுந்தர பாண்டியர் குடியாம் சமரினிடைஆற்றாது
ஒரு முகத்தில் ஒரு கோடி மன்னர் மடிந் தொழிந்தார்
உனை விடுத்த மன்னர் யார்? உரைத்திடுவாய் தூதா!
மருமுகத்த நெறிக் குழல் எம்மறக்கொடியை வேட்பான்
மணம் பேசி வரவிடுத்த வார்த்தையது சொன்னாய்
திருமுகத்தில் எழுத்து இதுவேல் திருமுடியில் எழுத்தும்
தேர்ந்தறியக் கொண்டுவா சிகையினொடும் சென்றே.

உசாத்துணை


✅Finalised Page