சாங்கியம்
சாங்கியம்: (சாங்க்யம்,ஸாங்க்யம்) இந்து சிந்தனை மரபின் ஆறு தரிசனங்களில் ஒன்று. இந்து மரபில் வேதத்தை முதன்மையாகக் கொள்ளாத அவைதிக மரபின் முதன்மைச் சிந்தனை.
தரிசனங்கள்
பிரபஞ்சத்தின் தோற்றம், பிரபஞ்சத்தின் செயல்பாடு, வாழ்க்கையின் அடிப்படைகள், துயரத்தில் இருந்து மீளும் வழி ஆகிய அடிப்படைகளை முன்வைக்கும் பார்வையை பொதுவாக தரிசனம் (தர்சனம்) என்று இந்திய தத்துவநூல்கள் சொல்கின்றன. அவ்வாறு முழுமையான பார்வை இல்லாமல் ஒரு குறிப்பிட்ட கோணத்தை மட்டுமே முன்வைப்பவை வாதம் (தர்க்கமுறை) எனப்படுகின்றன. இவற்றில் தனக்கென வழிபாட்டு முறையும், தெய்வங்களும், குருமரபு மற்றும் குலமரபுகளும் உள்ள தரிசனங்கள் காலப்போக்கில் மதம் ஆக மாறின. வைணவம், சைவம் ஆகியவை மதங்கள். அவ்வாறன்றி தரிசனமாகவே நின்றுவிட்டவை தொடர்ந்து தரிசனம் என்ற சொல்லால் குறிப்பிடப்பட்டன. அவற்றில் தொன்மையானது சாங்கியம்
இந்து மரபில் சாங்கியம், யோகம், வைசேஷிகம், நியாயம், பூர்வ மீமாம்ஸம், உத்தர மீமாம்ஸம் என ஆறு தரிசனங்கள் உண்டு என வேதாந்த நூல்கள் குறிப்பிடுகின்றன. இவை ஷட்தர்சன எனப்படுகின்றன. ஆறு மதங்கள் என்றும் இவை சில நூல்களில் கூறப்படுவதுண்டு.
சொற்பொருள்
சாங்கியம் என்னும் சொல் சங்கியா (எண்ணிக்கை) என்னும் சொல்லில் இருந்து வந்திருக்கக்கூடும் என ஊகிக்கப்படுகிறது. எண்ணிக்கை, கணிப்பு, தர்க்கம் ஆகிய பொருட்கள் இச்சொல்லுக்கு உண்டு. தொல்காலத்தில் நம்பிக்கைக்கு எதிரான தர்க்கநிலைபாடுகளில் இதற்கு முதலிடம் இருந்திருக்கிறது.
ஆசிரியர்
சாங்கிய தரிசனத்தின் ஆசிரியர் கபிலர் . இவர் வைதிக மரபுக்கு எதிரான தரப்பைச் சேர்ந்த ஞானி என்று பொதுவாக குறிப்பிடப்படுகிறார்.
தோற்றுவாய்
தொன்மையான சிந்தனைகளின் காலகட்டத்தை அறுதியாகக் கணிப்பது கடினமானது. அந்தச் சிந்தனைகளிம் மூலநூல் என பிற்காலத்தில் மதிப்பு பெற்ற நூல் உருவான காலகட்டத்தையே அவற்றின் தோற்றம் உருவான காலம் என பொதுவாகக் கணிக்கிறார்கள்.
சாங்கிய தரிசனம் இந்திய மரபின் மிகத்தொன்மையான தத்துவப்பார்வை என்று பொதுவாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ரிச்சர்ட் கார்பே “மானுடசிந்தனையில் முதல்முறையாக கபிலரின் தத்துவத்திலேயெ மானுட உள்ளத்தின் முழுமையான சுதந்திரமும் தன் சிந்தனையின் ஆற்றல் மீதான முழுமையான நம்பிக்கையும் வெளிப்படுகிறது’ என்று குறிப்பிடுகிறார்.
ஹென்றிச் ஸிம்மர் “கிட்டத்தட்ட வரலாறு தொடங்கும் காலகட்டத்திலேயே, இருபத்துநான்கு தீர்த்தங்காரர்களுக்கு முன்னரே, வேதங்கள் அல்லாத மரபில் இருந்து சாங்கியம் உருவாகி வந்திருக்கிறது” என்று கருதுகிறார்.
தேபிப்பிரசாத் சட்டோபாத்யாய ‘சாங்கியம் தொன்மையான பழங்குடிகளின் மாந்த்ரீக- தாந்த்ரீகச் சடங்குகளில் இருந்து திரண்டு வந்த தத்துவக் கொள்கை. சாங்கியத்தில் உள்ள பிரகிருதி என்னும் கருதுகோள் தொன்மையான தாய்த்தெய்வ வழிபாடுகளில் இருந்தும், நிலவழிபாடுகளில் இருந்தும் உருவாகி வந்தது.’ என்று கருதுகிறார்.
வேதமரபும், சாங்கியமும்
சாங்கிய மரபு அடிப்படையில் வேதங்களின் ஒட்டுமொத்தமான பார்வைக்கு மாறானது. வேதமரபு வெவ்வேறு தெய்வ உருவகங்களினூடாக பிரம்மம் என்னும் மையக்கருதுகோள் நோக்கிச் செல்லும் தன்மை கொண்டது. பிரபஞ்சத்திற்கு பிரபஞ்சத்தைக் கடந்த ஒரு பரம்பொருளே காரணம் என்னும் நோக்கு கொண்டது. அப்படி ஒரு மையம் சாங்கியத்தில் இல்லை. சாங்கியம் பருப்பொருளாலான பிரபஞ்சத்திற்கு அப்பால் ஒரு காரணத்தை உருவகிக்கவுமில்லை.
மகாபாரதம் சாந்திபர்வத்தில் சாங்கியம் வேதங்களுக்கு மாற்றான தரிசனங்களாக சாங்கியம், யோகம் ஆகியவை குறிப்பிடப்படுகின்றன. அனைத்துக்கும் முதற்காரணம் பிரகிருதி என்னும் முதலியற்கை என்று அறிந்துகொள்பவனால் துயர்களைக் கடக்கமுடியும் என்று மகாபாரதம் குறிப்பிடுகிறது. சாங்கியத்திலுள்ள இருபத்துநான்கு தத்துவங்கள் எப்படி முதலியற்கையிலிருந்து உருவாகி வந்தன என்றும் மகாபாரதம் குறிப்பிடுகிறது. ரிச்சர்ட் கார்பே தன் நூலில் சாங்கியம் சாரம்சத்தில் இறைமறுப்பு நோக்கு கொண்டதும், வேத மறுப்பு நோக்கு கொண்டதுமான ஒரு தரிசனம் என்றும், அதன் வைதிகச்சார்புள்ள பகுதிகள் பின்னர் சேர்க்கப்பட்டவை என்றும் குறிப்பிடுகிறார்.
மூலநூல்கள்
சாங்கிய தரிசனத்திற்கு உரிய மூலநூல்களாக இன்று கருதப்படுபவை
- சாங்கிய சூத்திரங்கள் : கபிலர் எழுதிய முதன்மை நூல் இந்நூல் இன்று கிடைப்பதில்லை. இந்நூலுக்கான விளக்கக் குறிப்புகளாகவே வேறு நூல்கள் எழுதப்பட்டுள்ளன.
- சாங்கிய பிரவசன சூத்ரம்: இந்நூல் கபிலர் இயற்றியது என்று சொல்லப்பட்டது. அது பதினான்காம் நூற்றாண்டு வாக்கில் எழுதப்பட்டது என பின்னர் ஆய்வாளர் முடிவுசெய்தனர்.
- சாங்கிய காரிகை : ஈஸ்வரகிருஷ்ண சூரி இயற்றிய சாங்கிய காரிகை பொயு 3 முதல் 5 ஆம் நூற்றாண்டுக்குள் எழுதப்பட்டது. சாங்கிய தரிசனத்தின் மிகப்பழையதும் முழுமையானதும் நம்பத்தக்கதுமான நூல் இதுவே என கார்பே உள்ளிட்ட ஆய்வாளர் கருதுகிறார்கள்.
- சாங்கிய காரிகை பாஷ்யம். கௌடபாதர். பொயு எட்டாம் நூற்றாண்டு
- தத்வகௌமுதி : வாசஸ்பதி மிஸ்ரர் ஈஸ்வரகிருஷ்ண சூரியின் சாங்கிய காரிகைக்கு எழுதிய விளக்கம். பொயு 9 ஆம் நூற்றாண்டு
- சாங்கிய பிரவசன சூத்ர பாஷ்யம்: விக்ஞான பிக்ஷு. பொயு 16 ஆம் நூற்றாண்டு
சாங்கியத்தின் அடிப்படைகள்
சாங்கிய தரிசனத்தை மூன்று அலகுகளாகப் பிரிக்கலாம். தரிசனம், தத்துவம், பயிற்சிகள். சாங்கியத்தின் அடிப்படையான பார்வையே அதன் தரிசனம். அதன்பொருட்டு சாங்கியம் பல கொள்கைகளை உருவாக்கிக் கொண்டது. இவை பிற தத்துவங்களுடன் உரையாடி வளர்ந்தன. சாங்கியத்தின் செயல்முறை யோகம் (தரிசனம்) என்னும் தனி தரிசனமாக வளர்ந்தது.
தரிசனம்
சாங்கிய தரிசனம் முன்வைக்கும் முழுமையான பார்வையையே அதன் தரிசனம் என்று சொல்லப்படுகிறது.
துக்கநிவாரணம்
சாங்கிய காரிகையின் ஒன்றாம் காரிகையில் ‘மூவகை துயரங்களில் இருந்து விடுபட விரும்புபவர்களுக்கான பதில் இதில் உள்ளது’ என்று சொல்லப்படுகிறது. ஆத்யாத்மிகம் (மானுட இயல்புகளில் உருவாகும் துயரம்), ஆதி பௌதிரிகம் (பருப்பொருட்களால் உருவாகும் துயரம்), ஆதி தெய்விகம் (மனிதனை மீறிய பிரபஞ்ச சக்திகளால் உருவாகும் துயரம்) ஆகிய மூன்று துயர்கள் மானுடருக்கு உள்ளன. இம்மூன்று துயர்களில் இருந்தும் விடுதலை அடைவதற்காகவே சாங்கியம் வழிதேடுகிறது. சாங்கியக் கொள்கையின்படி இப்பிரபஞ்சம் என்பது மூலப்பிரகிருதியாலானது. அது சமநிலை குலைந்து தன்னை மீண்டும் ஒருங்கிணைக்கும்பொருட்டு தன்னை நிகழ்த்துகிறது. இயற்கையின் இயல்பை அறிவதே துயரிலிருந்து விடுபடும் வழியாகும்.
மூலப்பிரகிருதி
சாங்கியத்தின் முதன்மையானதும் தனித்துவம் கொண்டதுமான கொள்கை என்பது இயற்கையைப் பற்றியதாகும். இங்குள்ள இயற்கையையே சாங்கியம் தன் அறிதலின் அடிப்படையாகக் கொள்கிறது. அதை பிரகிருதி என வரையறுக்கிறது. அதைக்கொண்டு பிரபஞ்சம் முழுக்க நிறைந்திருக்கும் ஒட்டுமொத்தமான பருப்பொருள் தொகுப்பை உருவகிக்கிறது. அதை மூலப்பிரகிருதி என குறிப்பிடுகிறது. பிரகிருதி என்னும் சொல்லுக்கு தன்னைத்தானே உருவாக்கிக்கொண்டது என்று பொருள். இயற்கை பற்றிய சாங்கியத்தின் பார்வையை கீழ்க்கண்ட அடிப்படைகள் கொண்டது என வரையறை செய்யலாம்
- இயற்கை பருப்பொருட்களால் ஆனது. அப்பருப்பொருட்களை நிலம்,நீர்,தீ,காற்று, வானம் என்னும் ஐந்து அடிப்படைப்பொருட்களாகப் பிரிக்கலாம்.
- இயற்கை புலன்களால் அறியப்படத்தக்கது. உணரத்தக்க குணங்கள் கொண்டது. பார்வையாளன் அதை எப்படியும் பார்க்கலாம்,. ஆனால் அது தன்னியல்பில் மாறுபடுவதில்லை. பார்வையாளனுக்கு அப்பால் அது நிலைகொள்கிறது.
- இயற்கை படைப்பப்பட்டது அல்ல. அழிந்து மறையக்கூடியதும் அல்ல. அது முதல்முடிவற்ற இருப்பு கொண்டது
- இயற்கை தன் விதிகளின் அடிப்படையில் தன்னைத்தானே படைத்து உருமாற்றி இயங்கிக்கொண்டிருப்பது.
இக்காரணங்களால் எம்.என்.ராய், தேபிப்பிரசாத் சட்டோபாத்யாய போன்ற இந்தியவியல் அறிஞர்கள் சாங்கியம் பொருள்முதல்வாத பார்வை கொண்ட தரிசனம் என வரையறை செய்கிறார்கள். சாங்கியம் இந்த இயற்கை பற்றிய கொள்கையை தொன்மையான பழங்குடிச் சமூகங்களின் நிலவழிபாட்டில் இருந்து எடுத்துக்கொண்டிருக்கலாம். பிரகிருதி என்னும் சொல் சாங்கியம் உருவாக்கிய பொருளிலேயே பின்னர் வந்த எல்லா தத்துவங்களிலும் பயன்படுத்தப்படுகிறது (பார்க்க: பிரகிருதி)
முக்குணங்கள்
இயற்கையில் பல இயல்புகள் (குணங்கள்) வெளிப்படுகின்றன. அவற்றை அறுதியாக மூன்று அடிப்படைக் குணங்களாகப் பிரிக்கலாம். அவை
- சத்வம்: ஆக்கநிலை. சமநிலை.
- தமோ குணம்: எதிர்மறைப் பண்பு. தேக்கநிலை.
- ரஜோ குணம்: நேர்நிலைப் பண்பு. செயலூக்க நிலை
இயற்கை என நாம் நினைப்பது இந்த மூன்று குணங்களும் உருவாக்கிக் கொள்ளூம் ஒரு சமரசப்புள்ளியைத்தான். இயற்கையின் ஒரு தருணத்தில், ஓர் இடத்தில் ஒரு குணம் ஓங்கிக் காணப்படலாம். அப்போது அது செயலூக்கம் கொண்டதாகவோ, தேக்கநிலை கொண்டதாகவோ, ஆக்கநிலை கொண்டதாகவோ இருக்கலாம்.
இயற்கையின் இந்த முக்குணங்கள் அடிப்படையில் சாங்கியத்தின் கொள்கைகள். இவற்றை மிக விரிவாக சாங்கியம் விளக்குகிறது, சாங்கியத்திற்கு பிறகு வந்த தத்துவங்கள் மேலும் வளர்த்தெடுத்துள்ளன . (பார்க்க முக்குணங்கள்)
பிரபஞ்ச உருவாக்கம்
முதலியற்கையே பிரபஞ்சம் ஆக மாறுகிறது என்பது சாங்கியத்தின் கொள்கை., “இயற்கையில் இருந்து மஹத் என்னும் தத்துவமும், மஹத்தில் இருந்து அகங்காரமும் , அஹங்காரத்தில் இருந்து 16 குணங்களும் (ஷோடசகுணம்) அவற்றிலுள்ள ஐந்து தன்மாத்திரைகளில் இருந்து ஐந்து பருப்பொருட்களும் உருவாயின’’ என்று சாங்கிய காரிகை குறிப்பிடுகிறது (சாங்கிய காரிகை 22) .
இந்த பிரபஞ்ச உருவாக்கம் எந்த வெளிச்சக்தியின் தூண்டுதலும் இல்லாமல் இயற்கையின் பருப்பொருட்களின் இயல்பில் இருந்தே உருவானதாகும். ’பாலில் இருந்து தயிர் உருவாவதுபோல’ இயல்பாக முதல்முடிவற்ற முதலியற்கையில் இருந்து இவையெல்லாம் உருவாயின என்று சாங்கியம் குறிப்பிடுகிறது.
உசாத்துணை
- The Philosophy Of Ancient India by Garbe, Richard
- Philosophy of India by Heinrich Zimmer
- Lokayata A Study In Ancient Indian Materialism Debiprasad Chattopadhyaya
- Sankhya-sutra-vritti-transltn-Richard Garbe
- Sankhya Sutra Sankhya Pravachana Bhashya Of Vigyana Bhikshu
- Sankhya Sutra Ram Shankar Bhattacharya
- Samkhya-Sutra
- Sankhya Prabachan Sutra
- Orgin and Developement of Samkhya System