அலெக்ஸ் ஹேலி
அலெக்ஸ் ஹேலி கறுப்பின வம்சாவளியைச்சேர்ந்த ஒரு அமெரிக்க எழுத்தாளர். 1976-ம் ஆண்டு வெளியான ‘வேர்கள்’ (Roots: The Saga of an American Family) எனும் உலகப்புகழ்பெற்ற புதினத்தின் மூலம் அறியப்படுபவர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
அலெக்ஸாண்டர் முர்ரே பால்மர் ஹேலி ஆகஸ்ட் 11, 1921 அன்று அமெரிக்காவின் இதாக்கா நகரில் பிறந்தார். அவருடைய தந்தை சைமன் ஹேலி, உலகப் போர் வீரராகவும், வேளாண் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும் பணிபுரிந்தார். ஹேலியின் பிறந்த நேரத்தில், அவரது தந்தை கார்னெல் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மாணவராக இருந்தார். இதன் விளைவாக, ஹேலி அவரது தாயார் பெர்த்தா ஜார்ஜ் ஹெலி, தாய்வழி தாத்தா மற்றும் பாட்டியுடன் டென்னஸி மாகாணத்தில் உள்ள ஹென்னிங் என்னும் நகரில் வளர்ந்தார்.
மிசிசிபி மாகாணத்தில் உள்ள கருப்பின மக்களுக்கான அல்கார்ன் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால் ஓராண்டிலேயே அங்கிருந்து வெளியேறி வடக்கு காரோலினா மாகாணத்தின் எலிசபெத் நகரில் உள்ள கருப்பின மக்களுக்கான எலிசபெத் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அடுத்த ஆண்டே அங்கிருந்தும் வெளியேறினார். இதைப்பார்த்த ஹேலியின் தந்தை ஹேலியை இராணுவத்தில் சேர சம்மதிக்க வைத்தார். அதன் விளைவாக மே 24, 1939 அன்று அலெக்ஸ் ஹேலி அமெரிக்க கடலோர காவல்படையில் தனது 20 வருட வாழ்க்கையைத் துவங்கினார்.
இராணுவ வாழ்க்கை
ஆரம்பத்தில் கப்பல் படையில் உதவியாளராக சேர்ந்தார். இருப்பினும் கொஞ்சம் கொஞ்சமாக அடுத்தடுத்த பதவிகளில் முன்னேறினார். பசிபிக் கடல்பகுதியில் இரண்டாம் உலகப்போர் நிகழ்ந்துகொண்டிருந்த காலகட்டத்தில் தான் ஹேலி கதைகள் எழுதும் கலையை தானே கற்றுக்கொண்டார். மேலும், அவர் பணியில் சேர்ந்தபோது மற்ற மாலுமிகள் தங்கள் தோழிகளுக்கு காதல் கடிதங்கள் எழுத அவருக்கு பணம் கொடுத்தனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, ஹேலி தன்னை பத்திரிகைத் துறைக்கு மாற்றும்படி அமெரிக்க கடலோர காவல்படையிடம் மனு அளித்தார். இதன் விளைவாக1949-ம் ஆண்டு, அவர் பத்திரிகையாளர் மதிப்பீட்டில் ஒரு முதல் தர துணை அதிகாரியாக ஆனார். பின்னாளில் முதன்மை அதிகாரியாக பதவி உயர்வு பெற்று 1959-ல் கடலோர காவல்படையில் இருந்து ஓய்வு பெறும் வரை அப்பதவியை வகித்தார். கடலோரக் காவல்படையிலிருந்து தலைமைப் பத்திரிகையாளரான முதல் நபர் இவர் தான்.
ரீடர்ஸ் டைஜஸ்ட்
அமெரிக்க கடலோர காவல்படையில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, அலெக்ஸ் ஹேலி தனது பத்திரிகை வாழ்க்கையின் அடுத்த கட்டத்தைத் துவங்கினார். முடிவாக ரீடர்ஸ் டைஜஸ்ட் (Reader's Digest) இதழின் மூத்த ஆசிரியரானார். தெற்கத்திய சட்டப் பள்ளியில் முதல் கறுப்பின மாணவராக வெற்றி பெற்ற தனது சகோதரர் ஜார்ஜின் போராட்டங்களைப் பற்றி அலெக்ஸ் பத்திரிகைக்கு ஒரு கட்டுரை எழுதினார்.
ப்ளேபாய் இதழ்
அலெக்ஸ் ஹேலி பிளேபாய் (Playboy) இதழுக்காக தனது முதல் நேர்காணலை நடத்தினார். அதில் ஜாஸ் இசைக்கலைஞர் மைல்ஸ் டேவிஸுடன் ( Miles Davis) இனவெறி குறித்த தனது கருத்துக்களைப் பற்றி பேசினார். இந்த நேர்காணல் ஆரம்பத்தில் வேறொரு இதழுக்காக தொடங்கப்பட்டது, ஆனால் பிளேபாய் செப்டம்பர் 1962 இதழில் வெளியானது. இந்த நேர்காணல் பாணி பிளேபாய் பத்திரிகையின் முக்கிய அம்சமாக மாறியது.
1960களில், அலெக்ஸ் பிளேபாய் இதழுக்காக பல முக்கியமான நேர்காணல்களை மேற்கொண்டார். அதில் அமெரிக்க நாஜிக் கட்சியின் தலைவரான ஜார்ஜ் லிங்கன் ராக்வெல்லுடன் ஒரு நேர்காணலின் போது, “தான் யூதர் அல்ல” என்று அலெக்ஸ் உறுதியளித்த பிறகே ராக்வெல் அந்தப் பேட்டிக்கு ஒப்புக்கொண்டார். நேர்காணலின் போது, ராக்வெல் மேசையில் ஒரு துப்பாக்கியை வைத்திருந்தார். பின்னர் இந்த நேர்காணல், ஜேம்ஸ் ஏர்ல் ஜோன்ஸ் ஹேலியாகவும் மற்றும் மார்லன் பிராண்டோ ராக்வெல்லாகவும் நடித்த "ரூட்ஸ்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன்ஸ்" என்ற தொலைக்காட்சித் தொடரிலும் இடம்பெற்றது.
அலெக்ஸ் முகம்மது அலியையும் நேர்காணல் செய்தார். முகம்மது அலி தனது பெயரை கேசியஸ் கிளே என்பதிலிருந்து மாற்றியது தொடர்பாக நேர்காணலில் பேசினார். மேலும், ஜாக் ரூபியின் வழக்கறிஞர் மெல்வின் பெல்லி, பொழுதுபோக்கு கலைஞர் சம்மி டேவிஸ் ஜூனியர் (Sammy Davis, Jr.), கால்பந்து வீரர் ஜிம் பிரவுன் (Jim Brown), தொலைக்காட்சி தொகுப்பாளர் ஜானி கார்சன் (Johnny Carson) மற்றும் இசையமைப்பாளர் குயின்சி ஜோன்ஸ் (Quincy Jones) ஆகியோரையும் நேர்காணல் செய்தார் அலெக்ஸ்.
மால்கம் X
அலெக்ஸ் ஹேலியின் முதல் புத்தகம் "மால்கம் எக்ஸ் இன் சுயசரிதை" (The Autobiography of Malcolm X) 1965-ம் ஆண்டு வெளியானது. இந்த புத்தகம் சிறிய குற்றவாளியாக இருந்து நேஷன் ஆஃப் இஸ்லாமில் (Nation of Islam) ஒரு தேசியத் தலைவராக மாறி, இறுதியாக ஒரு சன்னி முஸ்லிமாக மாறிய மால்கம் எக்ஸின் கதையைச் சொல்கிறது. இது கருப்பின பெருமை, கருப்பு தேசியவாதம் மற்றும் பான்-ஆப்பிரிக்கனிசம் (Pan-Africanism) பற்றிய அவரது கருத்துக்களை விளக்குகிறது. நியூயார்க்கில் உள்ள ஆடுபோன் பால்ரூம் அரங்கில் அவர் படுகொலை செய்யப்பட்டது உட்பட மால்கம் எக்ஸின் வாழ்க்கையின் முடிவை சுருக்கமாகக் கூறும் ஒரு முன்னுரையையும் ஹேலி சேர்த்தார்.
1963 முதல் பிப்ரவரி 1965 மால்கம் எக்ஸ் படுகொலை செய்யப்பட்டதற்கு இடையில் மால்கம் எக்ஸுடனான ஐம்பதுக்கும் மேற்பட்ட விரிவான நேர்காணல்களின் அடிப்படையில் அலெக்ஸ் ஹேலி இந்த புத்தகத்தை எழுதினார். 1960-ம் ஆண்டில் ரீடர்ஸ் டைஜஸ்ட் இதழுக்காக நேஷன் ஆஃப் இஸ்லாம் பற்றிய ஒரு கட்டுரைக்காக அலெக்ஸும் மால்கமும் முதன்முதலில் சந்தித்தனர். பின்னர் பிளேபாய் நேர்காணலுக்காக மீண்டும் சந்தித்தனர்.
துவக்கத்தில், நேர்காணல்கள் சற்று கடினமாக இருந்தன. மால்கம் எக்ஸ் தனது சொந்த வாழ்க்கைக்கு பதிலாக நேஷன் ஆஃப் இஸ்லாமின் (Nation of Islam) தலைவரான எலிஜா முஹம்மதுவைப் ( Elijah Muhammad) பற்றி அடிக்கடி பேசினார். அந்தப் புத்தகம் மால்கம் எக்ஸைப் பற்றியது என்று ஹாலே நினைவுபடுத்தியபோது மால்கம் கோபமடைந்தார். பல சந்திப்புகளுக்குப் பிறகு, மால்கம் எக்ஸை தனது தாயைப் பற்றி பேச ஹேலி கேட்டுக்கொண்டார். இது இறுதியாக மால்கம் எக்ஸ் தனது வாழ்க்கைக் கதையைப் பகிர்ந்து கொள்ள வழிவகுத்தது.
’மால்கம் எக்ஸின் சுயசரிதை’ வெளியிடப்பட்டதிலிருந்து இன்றளவும் சிறந்த விற்பனையான புத்தகமாக உள்ளது. 1977 வாக்கில், ஆறு மில்லியன் பிரதிகள் விற்று தீர்ந்தது. 1998-ம் ஆண்டில், டைம் இதழ் இந்நூலை 20-ம் நூற்றாண்டின் மிகவும் செல்வாக்கு மிக்க பத்து புனைகதை அல்லாத புத்தகங்களில் ஒன்றாக பட்டியலிட்டது.
மால்கம் எக்ஸின் சுயசரிதைக்காக 1966-ம் ஆண்டில், அனிஸ்ஃபீல்ட்-வுல்ஃப் (Anisfield-Wolf Book Award) புத்தக விருதைப் பெற்றார்அலெக்ஸ் ஹேலி.
சூப்பர் ஃப்ளை டி.என்.டி
1973-ம் ஆண்டில், அலெக்ஸ் 'சூப்பர் ஃப்ளை டி.என்.டி.’ (Super Fly T.N.T.) என்ற ஒரே படத்திற்கு மட்டும் திரைக்கதை எழுதினார். இப்படத்தை ரான் ஓ'நீல் (Ron O'Neal) இயக்கினார்.
வேர்கள் (Roots)
1976-ம் ஆண்டு, அலெக்ஸ் ஹேலி ”ரூட்ஸ்: தி சாகா ஆஃப் அன் அமெரிக்கன் ஃபேமிலி” (Roots: The Saga of an American Family) என்ற புத்தகத்தை வெளியிட்டார். இந்த புத்தகம் ஆப்பிரிக்க இன மக்களை அடிமைப்படுத்தும் காலகட்டத்தில் சிக்கிக்கொண்ட அவரது குடும்பத்தின் வரலாற்றைப் பற்றியது.
1767-ம் ஆண்டு கடத்தப்பட்டு மேரிலாந்தில் (Maryland) அடிமையாக விற்கப்பட்ட காம்பியாவைச் (Gambia) சேர்ந்த குந்தா கிண்டே (Kunta Kinte) என்ற நபருடன் கதை தொடங்குகிறது. தான் குந்தா கிண்டேவின் வம்சாவளி என்றும், இந்த புத்தகத்தை ஆராய்ச்சி செய்யவும், பயணம் செய்யவும், எழுதவும் 12 ஆண்டுகள் செலவிட்டதாகவும் அலெக்ஸ் கூறினார். குந்தா கிண்டே வாழ்ந்த ஜுஃபூர் கிராமத்திற்குச் சென்ற அவர், கிண்டே எவ்வாறு கைப்பற்றப்பட்டார் என்பதை ஒரு கதைசொல்லி விளக்குவதைக் கேட்டார். கின்டேவை அமெரிக்காவிற்கு கொண்டு வந்த தி லார்ட் லிகோனியர் என்ற கப்பலின் பதிவுகளையும் ஹேலி கண்டுபிடித்தார்.
செப்டம்பர் 29, 1967 அவருக்கு மிகவும் உணர்ச்சிகரமான தருணங்களில் ஒன்று. அவரது மூதாதையர் 200 ஆண்டுகளுக்கு முன்பு சங்கிலிகளில் வந்த மேரிலாந்தின் அனாபோலிஸை வந்தடைந்தார். இப்போது அனாபோலிஸில் உள்ள ஒரு நினைவுச்சின்னம் அலெக்ஸ் குழந்தைகளுக்கு ஒரு கதையைப் படித்துக் காட்டுவதைக் காட்டுகிறது.
’ரூட்ஸ்’ 37 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு 1977-ல் சிறப்பு புலிட்சர் பரிசை வென்றது. அதே ஆண்டில், இது 130 மில்லியன் மக்களால் பார்க்கப்பட்ட மிகவும் பிரபலமான தொலைக்காட்சி குறுந்தொடராக மாறியது.
1979-ம் ஆண்டில், ஏபிசி ’ரூட்ஸ்: தி நெக்ஸ்ட் ஜெனரேஷன்ஸ்’ (Roots: The Next Generations) என்ற குறுந்தொடரின் தொடர்ச்சியை உருவாக்கியது. இது குந்தா கிண்டேவின் சந்ததியினரின் கதையைத் தொடர்ந்தது. 2016-ம் ஆண்டில், குறுந்தொடரின் புதிய பதிப்பு ஹிஸ்டரி சேனலால் (History Channel) உருவாக்கப்பட்டது. இந்த ரீமேக்கில் ஹேலி கதாபாத்திரத்தில் 'மேட்ரிக்ஸ்’ (Matrix) புகழ் லாரன்ஸ் ஃபிஷ்பர்ன் (Laurence Fishburne) நடித்தார்.
விமர்சனங்கள்
அலெக்ஸ் ஹேலியின் புகழ்பெற்ற புத்தகமான 'ரூட்ஸ்’, கருத்துத் திருட்டு மற்றும் பதிப்புரிமை மீறலுக்காக இரண்டு வழக்குகளை எதிர்கொண்டது. அலெக்ஸ் மீது மார்கரெட் வாக்கர் (Margaret Walker) தொடுத்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால் ஹரோல்ட் கோர்லாண்டரின் (Harold Courlander) வழக்கு வெற்றி பெற்றது. கோர்லாண்டரின் 'தி அப்பிரிக்கன்’ (The African) புத்தகம் ஆப்பிரிக்க அடிமை வியாபாரிகளால் அமெரிக்காவிற்கு அழைத்துச் செல்லப்பட்ட ஒரு ஆப்பிரிக்க சிறுவனின் கதையைச் சொல்கிறது. அந்த புத்தகத்தின் சில பகுதிகள் தனது ’ரூட்ஸ்’ புத்தகத்தில் தோன்றியதாக அலெக்ஸ் ஹேலி ஒப்புக்கொண்டார். மேலும் 1978-ம் ஆண்டு, அவர் கோர்லாண்டருக்கு 650,000 டாலர்களை (இன்றைய மதிப்பில் சுமார் 3 மில்லியன் டாலருக்கு சமம்) செலுத்தி வழக்கைத் முடிவுக்கு கொண்டுவந்தார்.
ரூட்ஸில் ஹேலியின் ஆராய்ச்சி குறித்து சில வல்லுநர்கள் ”அவர் குறிப்பிட்ட காம்பியாவைச்சேர்ந்த குந்தா கிண்டே எனும் கதைசொல்லி உண்மையானவர் அல்ல. மேலும் குந்தா கிண்டேவின் கதை ஹேலியின் சொந்த கற்பனையிலிருந்து வந்திருக்கலாம். வர்ஜீனியா மற்றும் வட கரோலினாவில் எழுதப்பட்ட பதிவுகள் உள்நாட்டுப் போர் முடியும் வரை ரூட்ஸ் கதையுடன் பொருந்தவில்லை. ஹேலியின் குடும்பக் கதையின் சில பகுதிகள் உண்மை. ஆனால் உண்மையான வம்சாவளி அவர் விவரித்ததிலிருந்து வேறுபட்டிருக்கலாம்” என கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிறந்த விற்பனையான எழுத்தாளராக இருந்தபோதிலும், அலெக்ஸ் ஹேலியும் அவரது படைப்புகளும் ஆப்பிரிக்க-அமெரிக்க இலக்கியத்தின் நார்டன் தொகுப்பில் (Norton Anthology of African-American Literature) சேர்க்கப்படவில்லை. ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஹென்றி லூயிஸ் கேட்ஸ், ஜூனியர், இந்த விலக்கு சர்ச்சைகளால் அல்ல என்றும் ”அலெக்ஸ் உண்மையில் தனது மூதாதையர்கள் தோன்றிய கிராமத்தை கண்டுபிடித்திருப்பார் என்று நம்மில் பெரும்பாலோர் நினைக்கிறோம். ரூட்ஸ் வரலாற்றுப் புலமையைக் காட்டிலும் கற்பனையின் படைப்பு.”
பிற்கால வாழ்வு & இறப்பு
1980 களின் முற்பகுதியில், அலெக்ஸ் ஹேலி வால்ட் டிஸ்னி நிறுவனத்துடன் இணைந்து எப்காட் மையத்திற்காக பூமத்திய ரேகை ஆப்பிரிக்கா பெவிலியனை உருவாக்கினார். எப்காட்டின் தொடக்க நாளின் போது அவர் சிபிஎஸ்-ல் தோன்றினார், தொகுப்பாளர் டேனி கேயுடன் திட்டங்கள் மற்றும் கருத்து கலையைக் காட்டினார். இருப்பினும், அரசியல் மற்றும் நிதி சிக்கல்கள் காரணமாக பெவிலியன் கட்டப்படவில்லை.
1970 களின் பிற்பகுதியில், அலெக்ஸ் தனது குடும்பத்தின் மற்றொரு பகுதியைப் பற்றி ஒரு வரலாற்று நாவலை எழுதத் தொடங்கினார், இது அவரது பாட்டி ராணியை மையமாகக் கொண்டது. அவள் ஒரு கறுப்பின அடிமைக்கும் அவளுடைய வெள்ளை எஜமானனுக்கும் பிறந்த மகள். பிப்ரவரி 10, 1992 அன்று வாஷிங்டனின் சியாட்டிலில் மாரடைப்பால் இறக்கும் போது அலெக்ஸ் அந்த புத்தகத்தை முடிக்கவில்லை. அவர் டென்னசியின் ஹென்னிங்கில் உள்ள தனது மகன் வீட்டிற்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டார்.
இறப்பதற்கு முன்பு, அலெக்ஸ் ஹேலி டேவிட் ஸ்டீவன்ஸை (David Stevens) நாவலை முடிக்கச் சொன்னார். இந்நூல் 1993-ம் ஆண்டு ’அலெக்ஸ் ஹேலியின் குயின்’ (Alex Haley's Queen) என்ற பெயரில் வெளியிடப்பட்டது மற்றும் அதே ஆண்டில் ஒரு குறுந்தொடராகவும் மாறியது.
அலெக்ஸ் ஹேலி தனது பிற்கால ஆண்டுகளில், டென்னசி மாகாணத்தில் உள்ள கிளின்டன் எனும் ஊரில் ஒரு சிறிய பண்ணையை வாங்கினார். அவரது மரணத்திற்குப் பிறகு குழந்தைகள் பாதுகாப்பு நிதி அந்த நிலத்தை வாங்கி அதற்கு அலெக்ஸ் ஹேலி பண்ணை என்று பெயரிட்டது. அவர்கள் அதை ஒரு பயிற்சி மையமாகவும் பயன்படுத்துகிறார்கள். கட்டிடக் கலைஞர் 'மாயா லின்’ (Maya Lin) பண்ணையில் ஒரு பாரம்பரிய களஞ்சியத்தை வடிவமைத்தார். இப்போது அந்த அமைப்பின் நூலகமாக செயல்பட்டு வருகிறது.
உசாத்துணை
- https://www.nytimes.com/2021/12/17/books/review/alex-haley-hamilton-college-autobiography-of-malcolm-x-roots.html
- http://blogs-it.cgaux.org/member_news.php?title=chief-journalist-alex-haley-continues-to-inspire-uscg-auxiliary-public-affairs&more=1&c=1&tb=1&pb=1
இந்த பக்கம் தற்பொழுது மெய்ப்பு பார்க்கப்படுகிறது. மாற்றம் எதுவும் செய்ய வேண்டாம்
Ready for review
Please do not write any content below this line. This section is only for editing templates & categories.