சிவகிரி குமர சதகம்

From Tamil Wiki
Revision as of 07:50, 18 May 2024 by ASN (talk | contribs)

சிவகிரி குமர சதகம் (பதிப்பு: 1995), சிவகிரியில் உள்ள முருகனின் பெருமையைக் கூறும் சதக நூல். இதன் ஆசிரியர் பற்றிய விவரங்களை அறிய இயலவில்லை. மெய். சந்திரசேகரன் இந்நூலைப் பதிப்பித்தார்.

வெளியீடு

ஓலைச்சுவடியிலிருந்து பல்வேறு நூல்களைப் பதிப்பித்த உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மார்ச், 1995-ல் பதிப்பித்த நூல் சிவகிரி குமர சதகம். இந்நூலை இயற்றியவர் யார், நூலின் காலம் போன்ற விவரங்களை முழுமையாக அறிய இயலவில்லை. விருத்தாசலம் குமாரதேவர் மடத்தைச் சேர்ந்த இச்சுவடியை மெய். சந்திரசேகரன் பதிப்பித்தார்.

ஆசிரியர் குறிப்பு

சிவகிரி குமர சதகம் நூலின் மூல ஓலைச்சுவடிக் குறிப்பின் மூலம் குப்பய்யன் என்பது நூலாசிரியரது பெயராக இருக்கலாம் என்றும் வீர சைவ மடத்தைச் சேர்ந்தவர்; நூலின் காலம் 16-ம் நூற்றாண்டாக இருக்கலாம் என்றும் அறியப்படுகிறது. நித்திய பரிபூரணானந்த மெய்ஞான தேசிகராகிய அருணாசல சுவாமிகளின் வேண்டுகோளின்படி இந்நூல் இயற்றப்பட்டதாக சுவடியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நூலின் ஆசிரியர், கோவல் ஆதீனம் மரபு வழிவந்தவர் என்பதும் அறியப்படுகிறது.

நூல் அமைப்பு  

சிவகிரி குமர சதகம் நூலில் மொத்தம் 113 பாடல்கள் உள்ளன. அவை,

காப்பு - வெண்பா 2

பஞ்சரத்தினம் - பாடல் 5

சிவமயம் - பாடல் 3

சதகம் - பாடல் 102

வாழிப்பாடல் - 1

காப்பு வெண்பா இரண்டும் விநாயகனைப் பற்றியது. பஞ்சரத்தினம் என அழைக்கப்படும் பாடல்கள், சிவகிரி - தோத்திரம் பாயிரம் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. இவை பன்னிரு சீர் விருத்தமாக அமைந்துள்ளன. சிவமயம் பாடல் மூன்றும் முருகனின் பெருமையைப் பேசுவன. மூன்றில் முதல் பாடல் பன்னிருசீர் சந்த விருத்தமாகவும், ஏனைய இருபாடல்கள் எண்சீர் விருத்தமாகவும் உள்ளன. அடுத்து விநாயகர் பெருமையை விரிக்கும் ஒரு பாடலும் தொடர்ந்து சதக நூலும், இறுதியில் வாழிப்பாடலும் இடம்பெற்றுள்ளன. சதகம் பன்னிரு சீர் விருத்தமாக அமைந்துள்ளது.

உள்ளடக்கம்

சிவகிரி தலத்தில் எழுந்தருளியுள்ள முருகனின் பெருமை, சிறப்பு, அருள் திறம் ஆகியன சிவகிரி குமர சதகம் நூலில் விளக்கப்பட்டுள்ளன. சிவகுன்றம் என்பதே சிவகிரி என்று மருவியது. இக்குன்றம் திருக்கோவலூர் ஆதீனத்திற்குச் சொந்தமானது. முருகப் பெருமானைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு பாடப்பட்டிருப்பினும், இந்நூலில், சிவன், உமையம்மை, திருமால், பிரம்மா, கணபதி, சூரியன், சந்திரன், ரதி, மன்மதன், பைரவர், காளி, துர்க்கை போன்ற பல தெய்வங்களைப் பற்றிய குறிப்பும் காணப்படுகிறது.

முருகப்பெருமானுடன் போரிட்டுத் தோற்ற அசுரர்களின் பெயர்களும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை, அசுரர், அரிமுகன், அவுணர், ஆளிமுகமாசுரர், ஆனைமுகன், குஞ்சர முகன், கொடிதான சூரன், சிங்கமுகன், தாருகாசுரன், சூர், சூர் இருக்கை, சூரர், சூரபத்மன், சூரன், பானுகோபன் என்பன.

மேலும் முருகனின் கொடி, வாகனச் சிறப்பு, முருகனின் பல்வேறு பெயர்களின் சிறப்பு, தேவியரின் பெருமை, புராணப் பெருமைகள், முருகனின் படைக்கலன்களின் பெருமைகள், அணிகலன்கள், மணிவகைகள் போன்றவை பற்றிய குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

பாடல் நடை

வள்ளியின் அழகு

செம்பவள வதரமும் நளினமலர் வதனமுஞ்
செங்கயற் கண்ணுமொளிசேர்
திருநுதற் துடியுடையிங் காரளக பந்தியுஞ்
செங்காந்தள் பொருவுகரமும்
வம்பிலா மலர்ச்செண்டு நிகரான கொங்கையு
மாந்தளிரை நிகர்பாதமும்
வளமான தரளநிகர் வெண்பலு மிளநிலா
வாய்மூரல் சிலைபுருவமும்
அம்புய மடந்தை நிகரான குறவள்ளியும்
ஆயலோ வென்றுகூவி
அன்றுபுனங் காத்தவளை நன்றிமன மயலா
யணைந்துயித ழூறலுண்ட
கும்பகெஜர் தம்பியென் வந்துயெனை யாண்டவ
கோவனக ராறுமுகநற்
குரவனடி யார்களடி பரவசிவ கிரியில்வளர்
குமரசர வணமுருகனே

சூரன் மாய்கை

அண்டரொடு முனிவரும் புண்டரீ கத்திலுறை
யயனொடு மாலிந்திரன்
அனைவரையும் வென்றுபதி னாலுலக மெதிரிலா
வாண்டதொரு சூரபத்மன்
மண்டிகனல் போலவே வந்துசம ராடியும்
வாரிதனி லேயொளித்து
மரமாகி யேவளர்ந் தண்டரண் டங்களில்
மாமாயை கொண்டு பொருத
சண்டமா ருதவேக மாவிரத மேறியே
சத்துருசங் காரவேலால்
தானவனை யிருபிளவ தாகச்செய் திடுமகிமை
சாற்றுதற் கெளிதாகுமோ
கொண்டல்பொரு வாளரக் குறமங்கை நாதனே
கோவனக ராறுமுகநற்
குரவனடி மார்களடி பரவசிவ கிரியில்வளர்
குமரசர வணமுருகனே

மதிப்பீடு

சிவகிரி குமர சதகம் எளிய, இனிய நடையில், இலக்கியச் சுவையுடன் இயற்றப்பட்டதாகவும், முருகப்பெருமானின் பல்வேறு சிறப்புகளையும் பெருமைகளையும் கூறும் நூலாகவும் அறியப்படுகிறது. முருகப்பெருமான் மீது இயற்றப்பட்ட சதக நூல்களுள் குறிப்பிடத்தகுந்த சதக நூலாக சிவகிரி குமர சதகம் நூல் மதிப்பிடப்படுகிறது.

உசாத்துணை