being created

வி.எஸ். ஶ்ரீனிவாச சாஸ்திரி

From Tamil Wiki
நன்றி: வலம் மின்னிதழ்

வி.எஸ். ஶ்ரீனிவாச சாஸ்திரி (V.S.Srinivasa Sastri) (வலங்கைமான் சங்கரநாராயண சீனிவாச சாஸ்திரி) (வி.எஸ். சீனிவாச சாஸ்திரி) இந்திய அரசியல்வாதி, நிர்வாகி, கல்வியாளர், சொற்பொழிவாளர். ஐந்தாம் ஜார்ஜ் சக்கரவர்த்தியால் (The Right Honourable) என்ற பட்டம் வழங்கப்பட்டவர். தமிழ், ஆங்கிலம் சம்ஸ்கிருதம் மூன்று மொழிகளிலும் புலமை பெற்றவர். 'Silver tongued orator' எனப் புகழப்பட்டவர். மகாத்மா காந்திக்கு நெருக்கமானவர், இந்தியாவின் முதல் தூதுவர். வெளிநாட்டில் வாழ்ந்த இந்தியர்களின் உரிமைக்காக போராடியவர். முற்போக்குவாத சர்வதேசியக் கொள்கையை முன்வைத்தவர். இந்திய கூட்டுறவு சங்கத்தின் முன்னோடி.

பிறப்பு, கல்வி

சீனிவாச சாஸ்திரி செப்டம்பர் 22, 1869-ல் வலங்கைமான் நகரில் பாலாம்பாள், சங்கரநாராயண சாஸ்திரி இணையருக்குப் பிறந்தார். தந்தை கோவிலில் பூசகராக இருந்தார். கும்பகோணத்தில் உள்ள நேடிவ் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி பயின்றார். 1887-ல் சென்னை பச்சையப்பா கல்லூரியில் ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருதத்தில் முதல் வகுப்பில் இளங்கலைப் பட்டம் பெற்றார். தனது ஆங்கிலப் புலமைக்குப் பரிசாக அக்காலத்தில் மிகப்பெரிய தொகையான ரூ.350/- பரிசு பெற்றார்.

தனி வாழ்க்கை

ஸ்ரீநிவாச சாஸ்திரிக்கு பட்டப்படிப்பு முடிந்ததும், மாயவரம் முனிசிபல் உயர்நிலைப் ப் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தார். 1891-ல் சென்னை சைதாப்பேடை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கல்வியியலில் பட்டம் பெற்றார்.

ஸ்ரீநிவாச சாஸ்திரி 1885 இல் பார்வதியை மணந்தார்.

அவரது பேத்திகள், பார்வதி நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பொது மேலாளர் ராமமூர்த்தியை மணந்தார். மற்றொரு கௌசல்யா சி,வி. ராமனின் மருமகனும், இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தின் முன்னாள் இயக்குனருமான ராமசேஷனை மணந்தார்.

கல்விப் பணிகள்

1893-ல் சாஸ்திரி சேலம் முனிசிபல் கல்லூரியில் ஆசிரியர் பணியில் சேர்ந்து ஒன்பது ஆண்டுகள் பணியாற்றினார். ‘தி இந்து’ பத்திரிகையில் பொது பிரச்சினைகளைப் பற்றி பற்றி பல கட்டுரைகள் எழுதியதால் ஆங்கிலேயே அரசு துறைரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டியது. பிறகு, சென்னையில் உள்ள பச்சையப்பன் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்.

1902-ல், ஸ்ரீனிவாச சாஸ்திரி திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியராகப் பணியேற்று எட்டு ஆண்டுகள் பணியாற்றினார். தன் ஆங்கிலப் புலமைக்காகவும், நிர்வாகத் திறனுக்காகவும் அறியப்பட்டார்.

ஸ்ரீநிவாச சாஸ்திரி அவரது இறுதி ஆண்டுகளில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார். அவர் துணைவேந்தராக இருந்த காலத்தில், சமஸ்கிருதம் மற்றும் கீழைத்தேய இலக்கியத்தில் தனது புலமையை வெளிப்படுத்தினார். காளிதாசனின் அபிஞான சாகுந்தலத்தை தமிழில் மொழி பெயர்க்க, அப்போதைய தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவராக இருந்த மகாவித்வான் ரா. ராகவய்யங்காரை வேண்டிக்கொண்டார். இந்தக் கவிதை சந்த யாப்பில் மொழிபெயர்க்கப்பட்டு 1938 -ல் வெளியிடப்பட்டது. சாஸ்திரி கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கமலா சொற்பொழிவுகளில் [1](The Kamal Lectures) உரையாற்ற அழைக்கப்பட்டார்.

ஜூன் 1940 -ல், மதராஸ் அரசு ஸ்ரீனிவாச சாஸ்திரி தலைமையில் அறிவியல், தொழில்நுட்பக் கலைச்சொற்களை தமிழில் உருவாக்குவதற்காக ஒரு குழுவை அமைத்தது. அக்குழு மூன்று மாதங்களுக்குப் பிறகு வடமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ் கலைச்சொற்களை உருவாக்க வேன்டியதில்லை என்றும் அவற்றை அப்படியே பயன்படுத்தாலாம் என்றும் தன் முடிவைச் சமர்ப்பித்தது. குழுவின் முடிவு மிகுந்த எதிர்ப்பைச் சந்தித்தது. சாஸ்திரியின் மறைவுக்குப் பிறகு, மாகாணக் கல்வி அமைச்சர் டி.எஸ். அவினாசிலிங்கம் செட்டியாரால் குழு மாற்றியமைக்கப்பட்டது.

அரசியல் வாழ்க்கை

ஸ்ரீனிவாச சாஸ்திரி 17 ஆண்டுகளாக ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியராகப் பணியாற்றிய பிறகு, தனது 37-வது வயதில் 1907-ல் பொது வாழ்க்கைக்கு வந்தார்.திருவல்லிகேணி உயர்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியராக இருந்த போதே மெட்ராஸ் ஆசிரியர் சங்கத்தை (Madras Teacher's Guild) நிறுவினார்.

ஶ்ரீனிவாச சாஸ்திரி கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். இந்தியாவின் முதல் கூட்டுறவு சங்கமான டிரிப்ளிகேன் நகர்ப்புற கூட்டுறவு சங்கத்தை (Triplicane Urban Co-operative Society) 1904 -ல் தொடங்கினார்.

விடுதலைப் போராட்டம்

சீனிவாச சாஸ்திரி 1906-ல் முதல் முறையாக இந்திய சுதந்திர போராட்ட வீரர் கோபால கிருஷ்ண கோகலேயை சந்தித்தார். அவர் கோகலேவின் செர்வன்ட்ஸ் ஆஃப் இண்டியா சொசைடியில் (Servants of India society) உறுப்பினரானார். 1915-ல் அதன் தலைவராக ஆனார். 1908-ல் இந்திய தேசிய காங்கிரஸில் சேர்ந்தார். 1911-ல் சென்னை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் செயலாளராக ஆனார்.காங்கிரஸின் உறுப்பினராக, காங்கிரஸுக்கும் முஸ்லீம் லீக்கிற்கும் இடையே ஒரு உடன்படிக்கையை ஏற்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.

சீனிவாச சாஸ்திரி 1913-ல் மெட்ராஸ் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலுக்கும், 1916-ல் இந்திய இம்பீரியல் லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலுக்கும் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். பிரிட்டிஷ் அரசு விதித்த ரவுலட் சட்டத்தைக் கண்டித்து லெஜிஸ்லேட்டிவ் கவுன்சிலில் உரையாற்றினார். அவ்வுரை மிகுந்த கவனத்தையும், பாராட்டையும் பெற்றது. 1919 -ல், அவர் பிரைவி கவுன்சிலின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

1922 -ல், சாஸ்திரி ஒத்துழையாமை இயக்கம் குறித்து இந்திய தேசிய காங்கிரஸின் தலைமையுடன் கருத்து வேறுபாட்டால் தனது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். தேஜ் பகதூர் சப்ருவுடன் இணைந்து இந்திய லிபரல் கட்சியை நிறுவினார். இந்திய லிபரல் கூட்டமைப்பின் தலைவராக பணியாற்றினார். 1924-ல் அன்னி பெசன்ட் உடன் இங்கிலாந்துக்குச் சென்று தன்னாட்சிக்கான (ஹோம் ரூல்) கோரிக்கை விடுத்தார். முதல், இரண்டாம் வட்ட மேசை மாநாடுகளிலும் பங்கேற்றார். காந்தி இர்வின் ஒப்பந்தம் ஏற்படுவதற்கு முக்கியக் காரணங்களுள் ஒன்றாக இருந்தார். 1930-ல், சாஸ்திரி இந்தியாவில் ராயல் தொழிலாளர் கமிஷனின் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். ஶ்ரீனிவாச சாஸ்திரி இந்தியப் பிரிவினைக்கான முஸ்லீம் லீக்கின் கோரிக்கைகளை கடுமையாக எதிர்த்தார்.

காந்தியுடனான உறவு

அரசியல் கொள்கைகளில் மாறுபட்டாலும் மகாத்மா காந்தி , சாஸ்திரி இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தார்கள். காந்தி தன்னுடைய சகோதரர் என்றும் மனசாட்சி என்றும் சாஸ்திரியைக் கருதினார். இருவருக்கும் தொடர்ந்த கடிதப் போக்குவரத்து இருந்தது.

சாஸ்திரிக்கு எழுதிய ஒரு கடிதத்தில் காந்தி " உங்களுடைய விமரிசனங்களால் என் மனம் அமைதியடைகிறது. ஆனால் உன் மௌனம் என்னைக் கவலைக்குள்ளாக்குகிறது" எனக் குறிப்பிட்டார்.

Your criticism soothes me. Your silence makes me feel nervous-Gandhi. to Sastri[2]

வெளிநாட்டுத் தூதுகள்

சாஸ்திரி 1919 -ல் இந்திய மிதவாதிகளின் தூதுக்குழுவின் உறுப்பினராக இங்கிலாந்து சென்றார். இம்பீரியல் கான்பரன்ஸ் மற்றும் 1921-ல் நடந்த லீக் ஆஃப் நேஷன்ஸின் (League of Nations) இரண்டாவது அமர்விற்கான இந்திய பிரதிநிதிகளில் ஒருவராக இருந்தார். வாஷிங்டனில் நடைபெற்ற கடற்படை மாநாட்டில் பிரிட்டிஷ் வைஸ்ராயின் குழுவின் உறுப்பினராகப் பங்கேற்று ஐந்து வல்லரசுகளின் கடற்படை வலிமைக்குறைப்பு ஒப்பந்தத்தில் (Five Power Naval Disarmament Treaty) கையெழுத்திட்டார். 'இந்தியாவின் அரசியல் சூழல் என்ற தலைப்பில் அவர் ஆற்றிய உரையின் போது, அவர் ஒரு பிரிட்டிஷ் ஏஜென்ட் என்று குற்றம் சாட்டப்பட்டு ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். அதனால் காவல்துறையினரால் அழைத்துச் செல்லப்பட்டார்.

1944-ல் வின்ஸ்டன் சர்ச்சிலிடம் இந்தியாவிற்கு டொமினியன் (தன்னாட்சி) அந்தஸ்தை வழங்குமாறு வேண்டுகோள் விடுக்கச் சென்ற 15 பேர் குழுவின் உறுப்பினராக இருந்தார்.

புலம்பெயர்ந்த இந்தியர்களின் உரிமைக்கான செயல்பாடுகள்

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, கனடா ஆகிய நாடுகளில் வாழும் இந்தியர்களின் நிலைமைகளை ஆராயும் தூதுக்குழுவின் உறுப்பினராக 1922-ஆம் ஆண்டு அந்த நாடுகளுக்குச் சென்றார். அவரது முயற்சியின் காரணமாக, ஆஸ்திரேலிய அரசாங்கம் அங்கு வசிக்கும் பூர்விக இந்தியர்களின் ஓட்டுரிமையை விரிவுபடுத்தும் காமன்வெல்த் தேர்தல் சட்டத்தை நிறைவேற்றியது.

மலாயா

ஸ்ரீநிவாசா சாஸ்திரி 1937-ல் மலாய் கூட்டாட்சி மாநிலங்களில் வசிக்கும் இந்தியத் தொழிலாளர்களில் நிலையை ஆராயும் தூதுக்குழுவின் உறுப்பினராகச் சென்றார். 'மலாயாவில் இந்திய தொழிலாளர்களின் நிலை' என்ற தூதுக்குழுவின் அறிக்கை மெட்ராசிலும், கோலாலம்பூரிலும் வெளியானது. ஸ்ரீனிவாச சாஸ்திரி இந்திய தேசியவாதிகளால் அறிக்கையின் ஆசிரியராக மலாயாவில் உள்ள இந்தியர்களின் அரசியல் மற்றும் சமூக நிலை குறித்து விவரமான கருத்தைத் தெரிவிக்கத் தயங்கியதாக விமர்சிக்கப்பட்டார்.

தென்னாப்பிரிக்காவில்

1919 -ல், தென்னாப்பிரிக்க அரசாங்கத்துடன் கேப் டவுன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட தூதுக்குழுவின் உறுப்பினராக ஸ்ரீநிவாச சாஸ்திரி சர்.பெஞ்சமின் ராபர்ட்சனுடன் தென்னாப்பிரிக்கா சென்றார். இந்த ஒப்பந்தத்தின் விளைவாக, தென்னாப்பிரிக்க அரசு தென்னாப்பிரிக்காவில் உள்ள இந்தியர்களிடம் பாகுபாடு காட்டும் நோக்கம் கொண்ட மசோதாவைக் கைவிட்டது. தென்னாப்பிரிக்காவின் பிரதம மந்திரி ஜான் ஸ்மட்ஸ், ஐரோப்பிய பிரதிநிதிகளுக்கு இணையாக சீனிவாச சாஸ்திரியை நடத்த மறுத்தார். இருப்பினும், ஸ்ரீநிவாச சாஸ்திரி 1928-ல் இந்தியாவின் முகவராக தென்னாப்பிரிக்காவிலிருந்து வெளியேறியபோது, ஸ்மட்ஸ் சாஸ்திரியை 'தென் ஆப்பிரிக்காவில் மிகவும் மதிக்கப்படும் மனிதர்' என்று அங்கீகரித்தார்.

மே 27, 1927 அன்று, மகாத்மா காந்தியின் உத்தரவின் பேரில், இந்தியாவின் வைஸ்ராய் இர்வின், தென்னாப்பிரிக்காவிற்கு இந்தியாவின் முதல் முகவராக(தூதர்) ஸ்ரீநிவாச சாஸ்திரியை நியமித்தார். ஶ்ரீனிவாச சாஸ்திரி ஜூன் 1927 முதல் ஜனவரி 1929 வரை இந்தியாவின் முகவராகப் பணியாற்றினார். அவரது முயற்சியால், இந்தியக் கல்விக்கான நடால் கமிஷன் நவம்பர் 17, 1927 அன்று நியமிக்கப்பட்டது. சாஸ்திரியின் ஆதரவு மற்றும் ஊக்கத்துடன், டிசம்பர் 18, 1927 அன்று டிரான்ஸ்வால் இந்திய காங்கிரஸ்(டிஐசி) நிறுவப்பட்டது TBIA பின்னர் தென்னாப்பிரிக்க இந்திய காங்கிரஸுடன் இணைந்தது. இந்தியர்கள் மதுபானம் விற்க உரிமம் பெற்ற வளாகத்திற்குள் நுழைவதைத் தடை செய்யும் மதுபான மசோதாவின் பிரிவு 104 திரும்பப் பெறப்பட்டது. டர்பன் மற்றும் அதைச் சுற்றியுள்ள இந்தியர்களின் சுகாதாரச் சூழலை ஆராய்வதற்காக 1928-ல் தோர்ன்டன் குழு நிறுவப்பட்டது. சாஸ்திரி தென்னாப்பிரிக்காவின் இந்தியர்கள் சந்தித்த இனப்பாகுபாட்டுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தார். அவரது முயற்சியால் பல தொழிற்சங்கங்கள் நிறுவப்பட்டன. சாஸ்திரி ஜனவரி 1929 -ல் இந்தியாவுக்குத் திரும்பினார்.

இறப்பு

Vss stamp.jpg

சீனிவாச சாஸ்திரியின் உடல்நிலை 1946-ன் தொடக்கத்தில் மோசமடைந்தது. ஏப்ரல் 17 , 1946 அன்று தனது 76-வது வயதில் காலமானார்.

நினைவேந்தல்

சீனிவாச சாஸ்திரியின் அரசியல் காரியதரிசி பி. கோதண்ட ராவ எழுதிய சாஸ்திரியின் வாழ்கை வரலாறு 'The Right Honourable V.S. Srinivasa Sastri: A Political Biography (1963)', அமெரிக்காவில் பதிப்பிக்கப்படும் இந்திய வரலாற்று நூல்களுக்கான வாட்முல் (Wattmull memorial Prize) நினைவுப் பரிசைப் பெற்றது(1966).

இலக்கிய வாழ்க்கை

சாஸ்திரி தனது வாழ்க்கையின் அனுபவங்களை சுதேசமித்திரன் வாரப் பத்திரிக்கையில் ஆகஸ்ட் 1941 முதல் தொடர்ந்து எழுதினார். சாஸ்திரி எழுதிய தொடர் கட்டுரைகள் அனைத்தும் ‘மீண்டும் வாழ்ந்தால்’ என்ற தலைப்பில் புத்தகமாக 1944-ல் கலைமகள் காரியாலயத்தால் வெளியிடப்பட்டது.

ஸ்ரீனிவாச சாஸ்திரி 1944-ல் ஆற்றிய, ராமாயணம் பற்றிய முப்பது உரைகள் 1949-ல் தொகுக்கப்பட்டு புத்தகமாக வெளிவந்தன. சாஸ்திரி ராமாயணத்தை ‘It is essentially a human document’ என்று மதிப்பிட்டார்.

விருதுகள், பரிசுகள்

  • பிரிட்டனின் பிரைவி கௌன்ஸிலின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டர் (1921)
  • பிரிட்டன் அரசின் Companion of Honor (1931)
  • விக்டோரியா அரசியின் Knight Commander of the Order of the Star of India(1928)-நிராகரிக்கப்பட்டது
  • மதராஸ் ஆளுநர் அவரை தற்காலிக முதலமச்சராகத் தேர்ந்தெடுத்தார். ஆனால் சாஸ்திரி அதை நிராகரித்தார்
  • Secretary of State for India குழுவின் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதை நிராகரித்தார்
  • லண்டன் நகரின் கௌரவ, சுதந்திரக் குடிமகன் (Freedom of the City of London )
  • எடின்பரோ நகரின் கௌரவ, சுதந்திரக் குடிமகன் (Freedom of the City of Edinburg ) (1931

வரலாற்று இடம்

First diplomat.jpg

நவீன இந்தியாவின் முதல் சர்வதேசத் தூதர் சாஸ்திரி என்று ஆராய்ச்சியாளர் முனைவர் வினீத் தாகூர் கூறியுள்ளார். புலம் பெயர்ந்த இந்தியர்களின் உரிமைகளுக்காகப் போராடிய முன்னோடி.


காந்தியின் மிக நெருங்கிய தோழராக இருந்தார்.

நூல்கள்

உசாத்துணை

அடிக்குறிப்புகள்

  1. கமலா சொற்பொழிவுகள் (The Kamala Lectures) கல்கத்தா பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் ஆஷுதோஷ் முகர்ஜி தன் மகள் கமலாவின் நினைவாக ஏற்படுத்திய அறக்கட்டளை சொற்பொழிவுகள்.
  2. P. Rajeswar Rao (1991). The Great Indian Patriots Vol 1. Mittal Publications.



🔏Being Created


Please do not write any content below this line. This section is only for editing templates & categories.