first review completed

பி.வி.ஆர்

From Tamil Wiki
Revision as of 07:38, 7 May 2024 by Madhusaml (talk | contribs) (Edited error in template)
எழுத்தாளர் பி.வி.ஆர்.

பி.வி.ஆர். (பி.வி. ராமகிருஷ்ணன்) (ஜூன் 22, 1927 - 2007) எழுத்தாளர், நாடக ஆசிரியர். பொது வாசிப்புக்குரிய பல நாவல்களையும் சிறுகதைகளையும் எழுதினார். சென்னை கணக்காளர் பொது அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றினார். சிறந்த நாவலுக்கான கலைமகள் நாராயணஸ்வாமி ஐயர் பரிசு உள்பட பல்வேறு பரிசுகளைப் பெற்றார்.

பிறப்பு, கல்வி

பி.வி. ராமகிருஷ்ணன் என்னும் பி.வி.ஆர்., கேரளாவின் கோழிக்கோட்டில், ஜூன் 22, 1927 அன்று பிறந்தார். பள்ளிக்கல்வியை சென்னையில் கற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இளம் அறிவியல் (பி.எஸ்ஸி.) பட்டம் பெற்றார்.

பி.வி. ராமகிருஷ்ணன் @ பி.வி.ஆர்.

தனி வாழ்க்கை

பி.வி.ஆர்., சென்னை கணக்காளர் பொது அலுவலகத்தில் அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றார். மணமானவர்.

பி.வி.ஆர். சிறுகதை
பி.வி.ஆர். நாவல்கள்

இலக்கிய வாழ்க்கை

பி.வி.ஆர்., சுதேசமித்திரன், கலைமகள், கல்கி, அமுதசுரபி, ஆனந்த விகடன், குமுதம், குங்குமம், தினமணி கதிர், தேவி போன்ற இதழ்களில் சிறுகதைகளை, தொடர்களை எழுதினார். கல்கி இதழில் 50-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும், சில நாவல் தொடர்களையும் எழுதினார். பல்வேறு நாவல், சிறுகதைப் போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் பெற்றார். பல சிறுகதை, நாவல் போட்டிகளின் நடுவராகச் செயல்பட்டார். மாலைமதி, குங்குமச் சிமிழ் போன்ற இதழ்களிலும் பி.வி.ஆரின் நாவல்கள் வெளியாகின. ஆனந்த விகடனில் பி.வி.ஆர். எழுதிய ‘குப்பத்து சாஸ்திரிகள்’ தொடர் மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இது பின்னர் தொலைக்காட்சித் தொடராகவும் வெளிவந்தது.

பி.வி.ஆர்., பாலக்காட்டுத் தமிழைப் பின்னணியாகக் கொண்டு சில படைப்புகளை எழுதினார். எண்பதுக்கும் மேற்பட்ட நாவல்களையும், 100-க்கும் மேற்பட்ட குறுநாவல்களையும், 300-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதினார்.

நாவல் உத்தி

பி.வி.ஆர்., ஒரு குறிப்பிட்ட இடத்தை மையமாக வைத்து, அங்கு உலாவும் மனிதர்களைக் கதாபாத்திரங்களாக்கி கதையை நகர்த்தும் உத்தியைத் தனது பல நாவல்களில் கையாண்டார். சென்ட்ரல் ரயில் நிலையத்தைப் பின்னணியாகக் கொண்டு பி.வி. ஆர். எழுதிய ‘சென்ட்ரல்’ நாவல், கல்கியில் வெளியாகி வாசக வரவேற்பைப் பெற்றது. சென்னை உயர்நீதிமன்றப் பின்னணியில் பி.வி.ஆர். எழுதிய நாவல் ‘மிலாட்’. 'ஜி.ஹெச்.' சென்னை அரசுப் பொது மருத்துவமனையை மையமாக வைத்து எழுதப்பட்டது.

'கிண்டி ஹோல்டான்', கிண்டி குதிரைப் பந்தயத்தைப் பின்னணியாகக் கொண்டது. ‘கூந்தலிலே ஒருமலர்’ பரம்பிக்குளம் ஆழியாறு அணைக்கட்டைப் பின்னணியாகக் கொண்டது. அரசியல் சீரழிவுகளை, ஊழல்களை, அதிகாரவர்க்கத்தின் அக்கிரமங்களைச் சாடிய ’பாரதமாதாவுக்கு ஜே!’ பி.வி.ஆரின் நாவல்களில் குறிப்பிடத்தகுந்த ஒன்று.

எழுத்து முறை

தன்னுடைய படைப்புகள் பற்றி பி.வி.ஆர்., “என்னுடைய சிறுகதைகளிலும் நாவல்களிலும் சம்பவங்கள் நிறையவோ, பெரிதாகவோ இருப்பதில்லை. இருக்க வேண்டிய அவசியமும் எனக்குத் தோன்றவில்லை. நான் முக்கியத்துவம் கொடுப்பது, ஜீவனுள்ள உரையாடல்களுக்கும், மனித உணர்ச்சிகளின் பிரதிபலிப்புகளுக்கும் தான். உரையாடல்களின் மூலம் பாத்திரங்களின் குணாதிசயங்களைக் கூறுவது தான் சிறந்த முறை என்று கருதுகிறேன்.[1]” என்று குறிப்பிட்டார்.

நாடகம்

பி.வி.ஆர். நாடகங்கள் சிலவற்றை எழுதினார். அவற்றில் சில வானொலியில் ஒலிபரப்பாகின. சில மேடைகளில் அரங்கேற்றம் செய்யப்பட்டன.

அமைப்புச் செயல்பாடுகள்

பி.வி.ஆர். விளம்பர நிறுவனம் ஒன்றை நிர்வகித்தார். அதன் மூலம் விளம்பர ‘ஜிங்கிள்ஸ்’ பணிகளைச் செய்தார்.

விருதுகள்

  • ’நீரோட்டம்’ நாவல் கலைமகள் நாராயணஸ்வாமி அய்யர் நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது.
  • ’மணக்கோலம்’ நாவல், கல்கி வெள்ளிவிழா நாவல் போட்டியில் மூன்றாவது பரிசு பெற்றது.
  • ’வானமெல்லாம் ஆசைக் காற்றாடி’ நாவல் அமுதசுரபி நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்றது.
  • "வெறி வந்தது, ஆனால்' என்ற சிறுகதை கல்கியில் முதல் பரிசுபெற்றது.
  • பல நாவல், சிறுகதைப் போட்டிகளில் பல பரிசுகள் பி.வி.ஆரின் படைப்புகளுக்குக் கிடைத்தன.

மறைவு

பி.வி.ஆர்., 2007-ல் காலமானார்.

மதிப்பீடு

பி.வி.ஆர். பொது வாசிப்புக்குரிய நாவல்களை எளிய நடையில், சுவாரஸ்யமான மொழியில் எழுதினார். துணிச்சலும், வாழ்வில் எதையும் எதிர்கொள்ளும் தன்மையும் மிக்க பெண் கதபாத்திரங்களைப் படைத்தார். ஒரு காலகட்டத்தின் பதிவுகளாக பி.வி.ஆரின் நாவல்கள்சில அமைந்தன. வணிக இலக்கியத்திற்கும் நவீன இலக்கியத்திற்கும் இடைப்பட இடை நிலை இலக்கியமாக பி.வி.ஆரின் எழுத்துக்கள் மதிப்பிடத்தக்கன.

பி.விஆரின் எழுத்து பற்றி ஜெயமோகன், “பி.விஆரின் படைப்புகள் வெறும் கேளிக்கை எழுத்துக்கள் அல்ல. அவற்றுக்குத் தீவிர இலக்கியத்தின் புனைவெழுச்சியும் வாழ்க்கை நோக்கும் இல்லை என்பது உண்மை. அதேசமயம் அக்காலகட்டத்தின் உணர்வுகளையும் வாழ்க்கையையும் பண்பாட்டுக்கூறுகளையும் அவை வெளிப்படுத்துகின்றன. அவருடைய ’மிலாட்’ ‘கிண்டி ஹோல்டான்’ ’ஜி.ஹெச்’ போன்ற நாவல்கள் சென்னை உயர்நீதிமன்றம், தலைமை மருத்துவமனை, கிண்டி குதிரைப்பந்தயம் போன்ற புலங்களில் எழுதப்பட்டவை. அவை இலக்கிய வாசகன் பொருட்படுத்த தக்கவை.” என்று மதிப்பிட்டார்.

நூல்கள்

நாவல்கள்
  • பூக்கோலம்
  • பாரதமாதாவுக்கு ஜே
  • மிலாட்
  • மணக்கோலம்
  • மதுரநாயகி
  • சென்ட்ரல்
  • மகாலட்சுமி
  • இளம் சருகுகள்
  • தாழம்பூ பங்களா
  • வானமெல்லாம் ஆசைக்காற்றாடி
  • என்னைத் தருகிறேன், உன்னை தா
  • எல்லாம் இன்பமயம்
  • டிவோர்ஸ்
  • பெண்ணே நீ ஏழடி நடந்தாய்
  • பொன் ஊஞ்சல்
  • பச்சை மண்
  • வர்ணஜாலம்
  • செந்தாமரை வாடாது
  • தேன்கிண்ணம்
  • ஆரத்தி
  • ஓடும் மேகங்கள்
  • கிண்டி ஹோல்டான்
  • குப்பத்து சாஸ்திரிகள்
  • ஆடாத ஊஞ்சல்
  • கோபுர தீபம்
  • இன்பமான பூகம்பம்
  • ஆலமர விழுதுகள்
  • அதிர்ஷ்ட தேவதை
  • ஸ்லீப்பர் கோச்
  • ஜி. ஹெச்
  • தொடுவானம்

மற்றும் பல

சிறுகதைத் தொகுப்பு

முதல் விளக்கு

உசாத்துணை

அடிக்குறிப்புகள்



🖒 First review completed

Please do not write any content below this line. This section is only for editing templates & categories.